Announcement

Collapse
No announcement yet.

அன்னையே வருக அருளாசி தருக!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அன்னையே வருக அருளாசி தருக!

    தவறு செய்யும் குழந்தையை தந்தை கண்டிப்பார்; தாய் அணைத்து ஆறுதல் சொல்வாள். இதே போல் தான் இறை நிலையிலும்!
    மனிதர்களாகிய நாம், அறிந்தும், அறியாமலும் பல பாவங்களை செய்கிறோம். அதனால், உயிர்களுக்கு தந்தையான சிவன், நாம் பாவம் செய்வதை தடுக்க, பல்வேறு சோதனைகளைத் தருவார். அப்போது மனிதர்கள் படாதபாடு பட்டு, 'அம்மா... காப்பாற்று...' என அம்மனைச் சரணடைவர்.
    உயிர்களின் தாயான பார்வதி, தன் பிள்ளைகள் படும்பாடு பொறுக்காது, 'அந்தப் பிள்ளைக்கு கொடுத்த சோதனை போதாதா... விட்டு விடுங்களேன்...' என கெஞ்சுவார். அத்தகைய கருணை மிக்க தாயான அம்பிகையை வணங்குவதற்கு சிறந்த மாதம் ஆடி!
    இம்மாதத்தின், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் அம்மனை வணங்க ஏற்ற நாட்கள். மேலும், இம்மாதத்தின் கடைசி செவ்வாய் அன்று, பெண்கள், பராசக்தி விரதம் மேற்கொள்வர். இவ்விரதத்தால் எண்ணியது நிறைவேறும்; தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
    இவ்விரதத்தை அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்க வேண்டும். விநாயகருக்கு பூஜை செய்த பின், பார்வதியின் அம்சமான மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்களை சிகப்பு நிற மலர்களாலும், லட்சுமி தாயாரின் படத்தை செந்தாமரை மலர்களாலும் அலங்கரித்து விளக்கேற்ற வேண்டும். பால், பழம், வெற்றிலை பாக்கு, இளநீர் மற்றும் இனிப்பு போன்றவற்றை படைத்து, மதியம், ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இரவில் கோவிலுக்குச் சென்று அம்மன் சன்னிதியில் தீபமேற்றி வழிபட வேண்டும்.
    ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால், மனம் குளிர்ந்து அருள்புரிவாள் அம்மன். பச்சரிசியை ஊற வைத்து, இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்தூள் சேர்த்து, காமாட்சி விளக்கு செய்து, மாரி, காளி, துர்க்கை சன்னிதிகளில் விளக்கேற்ற வேண்டும். இதனால், நோய் நொடி நீங்கி ஆரோக்கிய வாழ்வு உண்டாகும்.
    செவ்வாய் மற்றும் வெள்ளியன்று மாரியம்மனுக்கு கூழ் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மன் அருளால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இந்நாட்களில் அங்கப்பிரதட்சணம் செய்வதும் உண்டு. அம்மனுக்கும், அவள் வாகனமான சிம்மத்திற்கும், மஞ்சள் பால் அபிஷேகம் செய்வர். மஞ்சள் கலந்த தண்ணீரையே, 'மஞ்சள் பால்' என்பர். கன்னிப்பெண்கள் இதைச் செய்தால், விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
    கார்த்தவீரியன் என்பவனால் கொல்லப்பட்டார் ஜமதக்னி முனிவர். இதனால், அவரது மனைவி ரேணுகா, தீயில் விழுந்தாள். ஆனால், பெரு மழை கொட்டி, சிதை அணைந்தது. மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒதுங்கினாள் ரேணுகா. சிதையில் பட்ட தீயால் அவள் உடலில் காயங்கள் இருந்தன. மயக்கம் தெளிந்து எழுந்தவள், வேப்ப இலைகளை ஆடைகளாக அணிந்து கொண்டாள். தீக்காயம் குணமாக மஞ்சளைப் பூசி, குளிர்ச்சிக்காக கூழைப் பருகினாள்.
    பின், சிவபார்வதியை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தாள். அவளின் தவத்திற்கு இரங்கிய அம்பிகை, தன் அம்சத்தை அவளுக்கு வழங்கி அருள்புரிந்தாள். அவளே, 'மாரியம்மன்' என போற்றப் படுகிறாள். இதன் காரணமாகவே, வெப்பு நோய்களான அம்மை, வயிற்றுவலி போன்றவற்றுக்கு மாரியம்மனை வழிபடும் பழக்கம் ஏற்பட்டது. நோயில் இருந்து விடுபட்டவர்கள் வேப்பிலை ஆடை கட்டியும், கூழ் வார்த்தும், அக்னி மிதித்தும் அம்பிகையை வழிபடும் வழக்கம் வந்தது.
    ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு, அருளாசி பெறுங்கள்.


    தி.செல்லப்பா
Working...
X