Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    253.இரத்தமும்சீயும்
    253திருப்பெருந்துறை
    தனத்த தந்தன தானன தந்தத்
    தனத்த தந்தன தானன தந்தத்
    தனத்த தந்தன தானன தந்தத் தனதான
    இரத்த முஞ்சீயு மூளையெ லும்புட்
    டசைப்ப சுங்குடல் நாடுபு னைந்திட்
    டிறுக்கு மண்சல வீடுபு குந்திட் டதில்மேவி
    இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
    டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
    டெருட்ட வுந்தளியாது ப றந்திட் டிடமாயா
    பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
    துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
    பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் தடிமேலாய்ப்
    பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
    குலுத்தெ னும்படி கூனிய டங்கிப்
    பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் சடமாமோ
    தரி த்த னந்தன தானன தந்தக்
    திமித்தி மிந்திமி தீதக திந்தத்
    தடுட்டு டுண்டுடு டுடுடி மிண்டிட் டியல்தளம்
    தனத்த குந்தகு தானன தந்தக்
    கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
    சலத்து டன்கிரி து|ள்படெ றிந்திட் டிடும்வேலா
    சிரத்து டன்கர மேடுபொ ழிந்திட்
    டிரைத்து வந்தம ரோர்கள் படிந்துச்
    சிரத்தி னுங்கமழ் மாலைம ணம்பொற் சரணோனே
    செகத்தி னின்குரு வாகிய தந்தைக்
    களித்தி டுங்குரு ஞானப்ர சங்கத்
    திருப்பெ ருந்துறை மேவிய கந்தப் பெருமாளே.



    பதம் பிரித்து உரை

    இரத்தமும் சீயும் மூளை எலும்பு உள்
    தசை பசும் குடல் நாடி புனைந்திட்டு
    இறுக்கு மண் சல வீடு புகுந்திட்டு அதில் மேவி
    இரத்தமும் சீயும் = இரத்தமும் சீழும் மூளை எலும்பு = மூளை, எலும்பு உள் = உள்ளே இருக்கும் தசை = மாமிசம் பசும் குடல் = பசிய குடல் நாடி = நாடிகள் புனைந்திட்டு = இவைகளைக்கொண்டுஆக்கப்பட்டு இறுக்கும் = அழுத்தமாகக் கட்டப்பட்டு மண் சலவீடு = மண்ணாலும், நீராலும் ஆன வீடாகிய உடலில் புகுந்திட்டு = நுழைவு பெற்று அதில் மேவி = அதில் இருந்து.
    இதத்துடன் புகல் சூது மிகுந்திட்டு
    அகைத்திடும் பொருள் ஆசை எனும் புள்
    தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட மாயா
    இதத்துடன் = இன்பகரமாக. புகல் சூது = பேசும் சூதான மொழிகள் மிகுந்திட்டு = அதிகமாய் அகைத்திடும் = கிளைத்து எழுகின்ற. பொருள் ஆசை எனும் = பொருளாசை என்கின்ற புள் = பறவை தெருட்டவும் = பிறர் தெளிவு பெறச் சொன்னாலும் தெளியாது = தெளியாமல் பறந்திட்டிட = மேலும் மேலும் பறப்பதாயிருக்க
    பிரத்தம் வந்து அடு வாத சுரம் பித்தம்
    உளைப்புடன் பல வாயுவும் மிஞ்சி
    பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கி தடி மேலாய்
    மாயா பிரத்தம் வந்து = உலக மாயை அதிகரித்து அடு = உண்டாகின்ற வாத சுரம் பித்தம் = வாதம், சுரம், பித்தம் இவைகளின் உளைப்புடன் = வேதனைகளோடு பல வாயு மிஞ்சி = பல வகையான வாயுக்களும் அதிகரித்து பெலத்தையும் = இருக்கின்ற உடல் வலிமையையும் சில் நாளுள் ஒடுங்கி = சில தினங்களுக்குள் ஒடுக்கி தடி மேலாயப் பிடித்திடும் = தடி மேல் கை ஊன்றுவதாகி.
    பிடித்துடும் பல நாள் கொடு மந்தி
    குலுத்து எனும்படி கூனி அடங்கி
    பிசக்கு வந்திடும் போது பின் அஞ்சி சடம் ஆமோ
    பல நாள் கொடு = பல நாட்கள் செல்ல மந்திக் குலத்து எனும்படி = குரங்கு கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக கூனி அடங்கி = உடல் கூனி, சத்துக்கள் அடங்கி பிசக்கு வந்திடும் போது = பிசகு (மரணம்) வந்திடும் சமயத்தில் பின் அஞ்சி = பின்பு பயப்படுவதான சடம் ஆமோ = இந்த உடல் ஆகுமோ.
    தரித்த னந்தன.......
    ........................... ....இயல் தாளம்
    தனத்த ..................................
    கொதித்து வந்திடு சூர் உடல் சிந்த
    சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா
    தரித்த....இயல் தாளம் = என்று ஒலிக்கின்ற தாளத்துடன் தனத்த.. .கொதித்து = தனத்த என்று கோபித்து வந்திடு சூர் உடல் = எழுந்து வந்த சூரனுடைய உடல் சிந்த = அழியவும் சலத்துடன் = கடல் வற்றிப் போவதுடன் கிரி தூள்பட = கிரௌஞ்ச மலை பொடி படவும் எறிந்திட்டிடும் வேலா = வேலாயுதத்தை எறிந்த வேலனே.
    சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு
    இரைத்து வந்து அமரோர்கள் படிந்து
    சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன் சரணோனே
    சிரத்துடன் கரம்=தலை வணக்கத்துடன் கை ஏடு பொழிந்திட்டு= மலர்களைப் பெழிந்து இரைத்து வந்த = போற்றி செய்யும் அமரோர்கள் = தேவர்கள் படிந்து = வணங்கி சிரத்தினும் கமழும் = அவர்களுடைய தலையில் மணக் கின்ற மாலை மணம் = மாலைகளின் நறுணத்தைப் பெற்ற பொன் = அழகிய சரணோனே = திருவடிகளை உடையவனே.
    செகத்தினில் குருவாகிய தந்தைக்கு
    அளித்திடும் குரு ஞான ப்ரசங்க
    திருப் பெறுந்துறை மேவிய கந்த பெருமாளே.
    செகத்தினில் குருவாகிய தந்தைக்கு = உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு அளித்திடும் குரு = உபதேசம் அளித்த குருவே ஞான ப்ரசங்கம் = (உன் தந்தை) ஞான சொற் பொழிவு செய்த தலமாகிய திருப்பெருந்துறை மேவிய = திருப்பெருந் துறையில் விரும்பி வீற்றிருக்கும். கந்தப் பெருமாளே = கந்தப் பெருமாளே.

    சுருக்க உரை

    விளக்கக் குறிப்புகள்

    1. ஞானப்ரசங்கம்.....
    மாணிக்க வாசகர் குதிரை வாங்கச் சென்ற போது திருப் பெருந் துறையில் சிவனே குருமூர்த்தியாக இருந்து அடியார்களுக்கு ஞான உபதேசம் செய்வதைக் கண்டுத் தாமும் இழுக்கப்பட்டு அவ்வடியர்களுடன் உபதேசம் பெற்றனர். அதனால் ஞானப்ரசங்கத் திருப் பெருந் துறை எனப்பட்டது.
    மாணிக்கவாசகர் பற்றிய மற்ற பாடல்கள்–
    1 வாசி வாணிகன் என குதிரை விற்று மகிழ்
    வாத ஊரன் அடிமை கொளு க்ருபை கடவுள் .
    ..... பாடல் ஆசைநாலு
    2 பரி என்ப நரிகள் தமை நடனம் கொண்டு ஒரு வழுதி
    பரி துஞ்ச வரும் மதுரை நடராஜன் –.
    ...................பாடல் திரைவஞ்ச
    3 குருவின் உரு என அருள் செய் துறையினில்
    குதிரை கொள வரு நிறை தவசி தலை
    கொற்ற பொன் பதம் வைத்திட்டு அற்புதம்
    எற்றி பொன் பொருள் இட்டு கை கொள்ளும் முதல்வர் ......
    குருவாய்த் தோன்றிஅருள் பாலித்த. திருப் பெருந்துறையில் குதிரை வாங்க வந்த. நிறை செல்வத் தவத்தினரான (மாணிக்க வாசகரின் தலையில். வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டி. அற்புதக்கோலத்தை வெளிப்படுத்தி ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து ஆண்டு கொண்டருளிய முதன்மையரான சிவ பெருமான்..
    ............................ ..பாடல். .மருவுகடல்முகி.
    4 வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என
    ஞான பாதம் வெளி இட்டு நரியின் குழுவை
    வாசியாம் என நடத்து உவகை உற்று அரசன் அன்பு காண
    மாணிக்கவாசகரைக் குறிக் கொண்டு ஒரு குரு மூர்த்தியாக நின்று. (முத்திக்கு வழிகளான சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்து நரிகளின் கூட்டத்தை குதிரைகளாகும்படி திருவளையாடலில் மகிழ்ச்சி பூண்டுபாண்டிய மன்னன் தனது அன்பு தோன்ற
    ........ ..........................பாடல் சீத வாசனை
    மாணிக வாசகர் வரலாறு விளக்கத்தில் பார்க்கலாம்
    2. சிரத்தினுங் கமழ் மாலை மணம் பொன் சரணோனே....
    சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
    சூடும் படிதந் ததுசொல் லுமதோ
    வீடுஞ் சுரர்ம முடிவே தமும்வெங்
    காடும் புனமும் கமழுங் கழலே------------- கந்தர் அனுபூதி
    மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை, இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ் பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு, தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது.
    அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் நல்ல பரிகளை வாங்கி வர அனுப்பி வைத்தான். அவ்வாறே வதவுரார் சோழ நட்டு துறைமுக நகரம் செல்ல பயணித்தார்.
    வழியில் திருபெருந்துறை அடைந்த வதவுரார், சற்று இளைப்பாரினார். அப்போது அங்கே அற்புதம் நிகழ்ந்தது - ஒரு மரத்தடியில் ஈசன் போதனை செய்து கொண்டு அவருக்கு காட்சி தந்தார். வாதவூரார் பொன்னோரு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று வாதவூரார் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று வாதவூரார் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார். ‘சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்’ என்றார் பக்குவமடைந்திருந்த வாதவூரார். சிவஞானத்தை அவருக்கு போதித்து, திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான்.
    தன் மந்திரிக் கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற வாதவூராரை, ஆண்டவன் ஆணை இட்ட பின் அரசன் ஆணையை மறந்து - பரிகளை வாங்க வைத்திருந்த பொன் அனைத்தையும் திருபெருந்துறை கோயிலை கட்ட செலவிட்டார் .அதனால் என்ன நடந்தது?
    நரியை பரியாய் மாற்றிய கதை
    அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் வாதவூரார். பாண்டியன் பரிகள் வாங்கி வராதைக் கண்டு ஒற்றர்களிடம் ஆணை தாங்கிய ஓலை கொடுத்துக் கையோடு வாதவூராரை அழைத்துவரக் கட்டளையிட்டான். ‘குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்’ என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார்.
    சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் ‘எங்குமே குதிரைகள் தென்படவில்லை’ என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை.அவரை சிறையில் அடைத்தார். வாதவூரார் சிவனை தியானித்தார்.
    உடனே சிவபெருமானின் சிவகணங்களை குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான். குதிரைப் அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, ‘இவை உன்னுடையவை’ என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கி, குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின.
    இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று மணலில் வெய்யில் நேரத்தில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். சிவபெருமானுக்கு பக்தனின் துயரம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். ஒரே ஒரு வந்திக் கிழவி, பிட்டு சுட்டு விற்பவள், மட்டும் தனிக்கட்டை. எவ்வளவு சொல்லியும் பாண்டியனின் வீரர்கள் கிழவியை விடவில்லை, அவள் வீட்டில் இருந்தும் ஒருவர் வரவேண்டும். நீ இல்லை என்றால் வேறு ஆளை அமர்து என்று கூறுகின்றனர்
    அவள் வீட்டில் இளைஞர்கள் யாரும் இல்லை. என்ன செய்வது என்று யோசிக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து அவள் சார்பாக வேலை செய்யட்டுமா என்று கேட்கிறார். செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன் என்று வந்தி கூறுகிறாள். அதற்குச் சம்மதித்த சிவபெருமான் தனது ‘வேலையைத்’ தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது.கோபம் கொண்ட அரசன் அவனைப் பிரம்பால் அடித்தான்.
    கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி அண்ட சராசரங்களின் அனைத்து உயிர்களின்மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் கேட்டது, ‘மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்’ என்று அக்குரல் சொல்லிற்று.
    மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்தவண்ணம் இருந்தார். அரிமர்த்தன பாண்டியன் மீண்டும் அமைச்சராகத் தன்னிடம் இருக்கக் கோரியும் அதனை விரும்பாத திருவாதவூரார் சிவத்தலங்களைத் தரிசித்தவாறு திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கும் சிவபிரான் அவர்முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார்.'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார்.'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர், வாதவூரார் சொல்லச் சொல்லச் செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார்.
    முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டு, திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த தில்லைவாழ் அந்தணர் ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும், திருக்கோவையாரும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனமகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார். - நன்றி விக்கி
    உபதேசம் ஞானம் திருப்பெருந்துறை
Working...
X