Announcement

Collapse
No announcement yet.

தாத்பர்யம் என்ன?-பாகம்-7

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தாத்பர்யம் என்ன?-பாகம்-7

    வேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன?-பாகம்-7

    "அநுவாதம்"என்றால் என்ன?நமக்குத் தெரியாததை முடிவாகச் சொல்வதற்காகவே, நமக்குத் தெரிந்த ஒன்றில் வேத் ஆரம்பித்து, அதையும் விவரித்துக் கொண்டு போகும். புதிசாக ஒரு விதியை அல்லது தத்வத்தைச் சொல்லாமல், சில இடங்களில் ஏற்கெனவே நமக்குத் தெரிந்ததைத் திரும்பவும் சொல்லும். அதாவது வேதப் பிராமாண்யம் தேவைப் படாமல் நமக்கே நடைமுறையில் பிரத்யக்ஷப் பிரமாணம் முதலானதுகளால் தெரிய வருகிற விஷயங்களையும் சில இடங்களில் வேதம் சொல்ல வேண்டியதாகும். இதுதான் "அநுவாதம்" என்பது.

    அநுவாதமும், அர்த்தவாதமும் முக்யமானவை அல்ல. அவை வேதத்தின் முடிவான உத்தேசத்தைச் சொல்ல வந்தவை அல்ல. நமக்கு மற்ற எந்தப் பிரமாணங்களாலும் தெரியாததை வேதம் சொன்னால், அதுதான் விதி;அதுதான் முக்யமான வாதம். அதுதான் ஸத்யமான தத்வம். அதுதான் வேதத்தின் உத்தேசம், உபதேசம் எல்லாம்.

    அதாவது இதர கருவிகளைக் கொண்டு தெரிந்து கொள்ளக் கூடியதை வேதமும் சொன்னால், அது மறுக்க முடியாத வேதப் பிரமாணமாகி விடாது. தெரியாததைத் தெரிவிக்க ஏற்பட்டதுதான் வேதம். அது நமக்குத் தெரிந்ததையும் சொல்லி, தெரியாததையும் சொல்லிற்று என்றால், தெரியாதது தான் அதன் பரமதாத்பரியம் என்றே அர்த்தமாகும். நமக்குத் தெரிந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்ற கருணையாலேயே தெரிந்ததையும் சொல்கிறது. ஆனால் இதுவே ஸத்ய தத்வம் என்றால் தெரியாததைச் சொல்லவேண்டிய அவசியமே இல்லை!"நமக்குத் தெரியாத ஒரு தத்துவத்தை வேதம் நீள நெடுகச்சொல்லியிருக்கு மானால் அப்போது அதைத் தள்ளிவிடுங்கள்:தெரிந்ததையே வைத்துக் கொள்ளுங்கள்"என்று சொன்னால் அது பரிஹாஸத்துக்கு இடமாக அல்லவா ஆகும்? இதற்கு ஏன் தெரியாததை நீட்டி முழக்கி சொல்லியிருக்க வேண்டும்?சொல்லாமல் விட்டிருக்கலாமே!

    சரி நமக்குத் தெரிந்தது என்ன?தெரியாதது என்ன?உலக வஸ்துக்களின் விஷயத்தில் இரண்டு விதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. நமக்குத் தெரிகிற இத்தனை வஸ்துக்களும் ஒரே பொருளா, வேறு வேறா என்ற ஸந்தேஹம் ஏற்பட்டு இரண்டு பிரிவாகப் பிரிகிறது. நாம் பிரத்யக்ஷப் பார்வையை மட்டும் வைத்துக் கொண்டு, வஸ்துக்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று வேறே வேறேதான் என்கிறோம். அப்படி வேற வேறேயாக வைததுக் கொண்டால்தான், நமக்குக் காரியம் சரியாக நடக்கிறது. நமக்கு ஜலம் வேறே, எண்ணெய் வேறேதான்.

    தீபம் வேண்டுமானால் எண்ணெய் விட்டால்தான் எரியும். ஜலத்தை விட்டுப் பிரயோஜனமில்லை. அதே தீபம் பெரிசாக எரிந்து நெருப்புப் பிடித்துக் கொண்டுவிட்டால், அப்போது ஜலத்தை விட்டுத்தான் அணைக்க வேண்டும். எண்ணெய் விட்டால் இன்னம் பெரிசாக ஜ்வாலை விடும். இப்படியே எந்தக் காரியமானாலும், வஸ்துக்களிடையே வித்யாஸம் பார்த்து, அவை வேறே வேறே என்று வைத்துக் கொண்டு செய்தால்தான் காரியம் நடக்கிறது.

    இப்படி வேறே வேறேயாகவே வைத்துக் கொள்கிறது தான் த்வைதம். வேதத்தில் அநேக கர்மாங்கள், உபாஸனைகளைச் சொல்லியிருப்பதெல்லாம் இப்படிப்பட்ட த்வைத அடிப்படையிலேதான். அதனால், இங்கெல்லாம் வேதம் த்வைதமாக இருக்கிறது என்றுதான் ஏற்படுகிறது. இதை அத்வைதிகள் என்பதற்காக நாம் யாரும் ஆக்ஷேபித்துப் பேச வேண்டாம்.

    ஆனால், இப்படி நமக்குத் தெரிந்த த்வைதத்தோடு வேதம் நின்றுவிட்டதா என்று பார்க்கலாம். அப்படி நின்று விட்டால் த்வைதந்தான் வேத தாத்பரியம் என்று சொல்லி விடலாம். ஆனால் வேதத்திலே என்ன பார்க்கிறோம்?ஸம்ஹிதையிலே ஆங்காங்கும், கடைசியில் உபநிஷத்தில் ஏகப்பட்டதாகவும், பிரத்யக்ஷத்தில் நமக்குத் தெரியாத அத்வைதத்தைச் சொல்லியிருக்கிறதே!வஸ்துக்கள் வேறு வேறு இல்லை - எல்லாம் ஒரே ஆத்மாவின் வெளித்தோற்றங்கள் தான் - என்ற அபிப்ராயத்துக்குக் கொண்டு விடுகிறதே!

    நம்முடைய மதப் புஸ்தகங்களில் 'பூர்வபக்ஷம்', 'ஸித்தாந்தம்'என்று இரண்டு உண்டு. முதலில், பூர்வபக்ஷம் என்பதில் புஸ்தகத்தின் கொள்கைக்கு மாறுபட்டவர்களின் கொள்கையைச் (opposite point of view) சொல்லியிருக்கும். அதை மட்டும் பார்த்தால் புஸ்தகத்தின் அபிப்ராயத்தையே நாம் நேர்மாறாகப் புரிந்து கொண்டு விடுவோம்.

    இப்படி எதற்கு பூர்வபக்ஷம் பண்ணியிருக்கிறதென்றால் அப்புறம் ஸித்தாந்தம் செய்வதற்காகத்தான். அதாவது எதிர்வாதங்களை வென்று புஸ்தகத்தின் கொள்கையான சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்கே, முதலில் அந்த எதிர்வாதங்களைச் சொல்லியிருக்கும். அப்புறம் ஸித்தாந்தம் என்ற பாகத்தில், அந்த வாதங்களுக்கெல்லாம் பதில் சொல்லி நிராகரித்து விட்டுத் தன் கொள்கையையே கெட்டியாக நிலை நாட்டியிருக்கும்.

    எதிராளியின் அபிப்ராயத்தையும் மறைக்காமல் சொல்லி, அதற்கு இப்படி நம் தரிசனங்களில் ('தரிசனம்' என்றால் தத்வ சாஸ்திரங்கள் என்று அர்த்தம்) பதில் சொல்லியிருப்பதைப் பிறதேசத்து அறிஞர்களும் கொண்டாடுகிறார்கள்.
    இதை எதற்கு சொன்னேன் என்றால், 'வேதத்தின் அத்வைபத்தைச் சொன்னது, இப்படிப் பூர்வபக்ஷமாக அநதக் கருத்தைச் சொல்லி அப்புறம் அது சரியில்லை என்று நிர்த்தாரணம் பண்ணுவதற்காக?'என்று பார்த்தால், இப்படி இல்லை.

    அத்வைதத்தை விசேஷமாகச் சொல்கிற உபநிஷத்துக்கள் தான் ஸித்தாந்தம் மாதிரி 'ஞானகாண்டம்'என்று கடைசியில் வருகிறது. த்வைதத்தை சொல்லும் 'கர்மகாண்டம்' பூர்வ பக்ஷம் மாதிரி இதற்கு முந்தியே வந்து விடுகிறது. ஆகவே நமக்குத் தெரிந்த த்வைதத்தையும் வேதம் முதல் நிலையிலே சொல்லி, தெரியாத அத்வைதத்தையும் வேதம் முதல் நிலையிலே சொல்லி, தெரியாத அத்வைதத்தையும் முடிவிலே சொல்கிறது என்றால், அந்த அத்வைதந்தான் வேதம் சொல்ல வந்த லக்ஷ்யம், அதுவே வேதத்தின் பரம தாத்பரியம் என்றுதான் அர்த்தம்.

    ஆனாலும் பூர்வபக்ஷத்தைக் கண்டிக்கிற மாதிரி வேதத்தில் த்வைதத்தைக் கண்டிக்கவில்லை. ஏனென்றால், காரணம் சொல்கிறேன். த்வைதத்தை வைத்துக் கொண்டு செய்கிற கர்மா, உபாஸனை ஆகியன அத்வைதாநுபவத்துக்குப் போவதற்கு விரோதமில்லை. மாறாக அதற்கு உபாயமே இவை. அதனால் பூர்வபக்ஷத்தில் எதிர்க்கட்சிக்காரன் என்று ஒருத்தனை வைத்து அப்புறம் அவனைக் கண்டித்த மாதிரி, இங்கே த்வைதமான அபிப்ராயங்களையும், கர்மாக்களையும் விரோத பாவத்துடன் எதிர்க்கட்சி என்று வைக்கவில்லை. விரோத பாவத்துடன் எதிர்க்கட்சி என்று வைக்கவில்லை. ஆகையால், அவற்றை அப்புறம் கண்டிக்கவுமில்லை.

    முதலிலே பூ இருந்து, அப்புறம் அந்தப் பூ உதிர்ந்து பழமாகிற மாதிரி, முதலில் த்வைதமாக இருந்தே, நாம் அப்புறம் அதை விட்டு அத்வைதமாக வேண்டியிருக்கிறது. பூவுக்கும் பழத்துக்கும் விரோதமா என்ன?பழந்தான் முற்றிய நிலை என்பதற்காகப் பூவைக் கண்டிப்பதில்லையல்லவா? மற்ற எல்லாமும் அதது இருக்கவேண்டிய லெவலில் இருந்தால், அவற்றை அத்வைதத்தில் கண்டிக்க வேண்டியதேயில்லை. லெவலை மீறுகிற போதுதான் கண்டிக்க வேண்டியிருக்கிறது. இப்படித்தான் (சங்கர பகவத்பாத) ஆசார்யாளும், மற்ற அத்வைத கிரந்த கர்த்தாக்களும் இதர ஸித்தாந்திகளைக் கண்டனம் பண்ணி எழுதினது.

    ஈச்வர கிருபையால், விஞ்ஞான வளர்ச்சியானது ஆத்மிகத்துக்குக் கெடுதலைப் பண்ணாமல், இதுவரைக்கும் வேதத்தால் அன்றித் தெரிந்து கொள்ள முடியாதிருந்த அத்வைதத்துக்கும் கிட்டே கிட்டே கொண்டு போவதாகவே 'மாடர்ன் ஸயன்ஸி'ல் ஏற்பட்டிருக்கிறது. ஸயன்ஸில் ஏற்பட்டிருக்கிறது. ஸயன்ஸில் ஆரம்பத்தில் பார்த்தால் உலகத்திலுள்ள வஸ்துக்கள் எல்லாம் வேறு வேறு என்றே நினைத்தார்கள். பிறகு எல்லாவற்றுக்கும் மூலமாக 72 எலிமென்ட்களே இருக்கின்றன என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

    அந்த 72ம் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று பல தினுசில் சேருவதால்தான் இத்தனை கோடி வஸ்துக்களும் வந்தன என்றார்கள். அப்புறம் Atomic Science (அணு விஞ்ஞானம்) என்பதில் ஆராய்ந்து கொண்டே போனதில், இந்த 72 பதார்த்தங்களுக்கும் மூலம் ஒன்றே ஒன்றேதான், ஒரே எனர்ஜி (சக்தி) தான் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

    ஆத்ம தத்வத்தை விசாரித்து, ஸத்யத்தைத் தெரிந்து கொண்டவர்கள், அந்த ஸத்யம் அறிவு மயமானதே என்று சொல்லி, இந்த அறிவுக்குள்ளேயே ஜட வஸ்துக்களை மட்டுமில்லாமல் அறிவோடு (சைதன்யத்தோடு) இருக்கபட்ட ஜீவாத்மாவையும் சேர்த்து அத்வைதமாகச் சொல்கிறார்கள்.


    ஒரே எனர்ஜி என்றாலும் சரி, ஏக சைதன்யம் என்றாலும் சரி, விஞ்ஞானிகளும் ஞானிகளும் சொல்கிற அந்த ஒன்றேயான வஸ்து நமக்குப் பிரத்யக்ஷத்தில் தெரியவில்லை. அதன் வேஷமான பல பல வஸ்துக்கள்தான் வேறே வேறே மாதிரி 'த்வைதமாக'த் தெரிகின்றன. இந்த த்வைதமே ஸத்யமானால், அதற்கு வேதத்தைப் பார்க்க வேண்டுமென்பதே இல்லை. நம்முடைய கண்ணுக்கும் புத்திக்கும் தெரிந்ததைச் சொல்ல வேதம் எதற்கு?நமக்குத் தெரியாததாகவும், தெரிந்த இடத்திலிருந்து ஆரம்பித்து நாம் போகக்கூடியதாகவும், கடைசியிலே முடிவான விஷயமாகவும் வேதம் ஒன்றைச் சொல்லுமானால், அதுதான் வேதங்கள் அத்தனைக்கும் முடிவான தாத்பர்யம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

    இப்படியிருப்பது 'ஜீவாத்மா தன்னுடைய நிஜ நிலையைப் பெற வேண்டுமானால் பரமாத்மாவில் அத்வைதமாகக் கரைந்து பிரம்மமாகி விட வேண்டும். என்ற தத்வம்தான்.

    -Subham-
    Jaya Jaya Shankara Hara Hara Shankara.

    Source:subadra

Working...
X