Announcement

Collapse
No announcement yet.

"மைத்ரீம் பஜத” - ரா.கணபதி அண்ணாவின் புத்தகĪ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • "மைத்ரீம் பஜத” - ரா.கணபதி அண்ணாவின் புத்தகĪ

    Maha Periyava and Children - Part 6


    ஸ்ரீசரணர் ஸ்ரீசரணம் நிலம் தோயக் காசி யாத்திரை செய்த காலம். 1934 ஜனவரி இறுதி. ஸ்ரீசரணர்களின் ஸ்ரீசைல முகாம். சந்திர கிரஹணம் நிகழ்கிறது. பாதாள கங்கையில் நீராடி, பக்கத்திலேயே ‘எமெர்ஜென்ஸி’ப் பர்ணசாலை அமைத்துப் பெளர்ணமி பூஜை செய்யப் புறப்படுகிறார். இரவும் அங்கு தங்கி, மறுநாள் காலை நீராடித் திரும்ப உத்தேசம்.


    வேத பாடசாலைச் சிறார் சிலரும் இந்த யாத்திரையின்போது உடன் வர ஸ்ரீசரணர் அநுமதித்திருந்தார். குழந்தைகளிடம் அவருக்கிருந்த உபரிப் பரிவு அப்போது பல விதங்களில் வெளிப்பட்டது. ஏனைய பரிவாரத்தினர் காட்டு வழி, மேட்டு வழியில் தம்மோடு கால் நடையாகவும், தாமின்றி விதவித ஊர்திகளிலும் வருவதற்கு அநுமதித்தாலும், குழந்தைகளை மாத்திரம் மிகப் பெரும்பாலும், சுற்று வழியாயினும் பரவாயில்லை என்று தக்க துணையுடன் ரயில் மார்க்கமாகவே சென்றடையக் கூடிய ஊர்களுக்கு அனுப்பிவைத்து அங்கிருந்து முடிந்தவரை செளகரியமாகத் தமது முகாம்களுக்கு வண்டிகளில் வரவழைத்துக் கொள்வார்.

    சுருக்கமாகக் காலை முதற் கால பூஜை முடித்து, அது ஆனவுடனேயே அவர்களுக்கு உணவும் இட்டுவிடச் செய்வார்.

    கடினமான காட்டுவழி தவிர வேறேதும் அந்நாட்களில் ஸ்ரீசைலத்திற்கு இல்லை. என்றாலும் பசங்கள் அதற்குப் பெரிய்வாளுடன் செல்ல ஆசைப்பட்டன. பெரியவாளுக்கும் அவர்கள் அந்த மஹா சிவ க்ஷேத்ரத்தில் தரிசித்து, வேதமோதிப் புண்யம் பெற வேண்டுமென்று ஆசை. ஆகவே, அநுமதித்தார்.

    அப்போதுதான் பாதாள கங்கைக்கருகே பூர்ணிமைப் பூஜைக்கும், இரவு தங்கவும் ஏற்பாடாயிற்று. வேத வித்யார்த்திகளான சிறார் அவருடன்வர மிகவும் ஆர்வமாயிருந்தனர். ஐயனும் அவர்களது ஆர்வத்துக்கு அணை போடாமல் ஒப்புதல் அளித்தார்.
    அதே சமயம், ‘அம் மலைப் பிரதேசத்தில், ‘எமர்ஜென்ஸி’க் கொட்டகையில் இரவு எத்தனை கடுங்குளிராக இருக்கும்?’ என்பதையும் கருதினார். பழுத்த கனபாடிகளுக்கே வழங்கப்படும் சால்வைகளை அந்தப் பிஞ்சு வித்யார்த்திகளுக்கு வழங்கச் செய்தார். அதுகளுக்குக் கொள்ளை சந்தோஷம்!

    பாதாள கங்கை சென்றனர்.

    அங்கே ஒரு பழுத்த கனபாடிகளே வந்துவிட்டார். தரிசனம் முடித்தவுடன் புறப்படவேண்டிய அவசரத்தில் அவர் வந்திருந்தார்.
    பெரியவாள் ஸ்ரீமடத்து மானேஜரிடம் அவரை ஸம்மானிக்கச் சால்வை கொண்டுவரச் சொன்னார்.

    மானேஜரோ அந்தக் குறுகிய நேர முகாமுக்குச் சால்வை எதுவும் கொண்டுவரவில்லை. ஆனால் அவருக்குச் சட்டென்று அன்றுதான் பாடசாலைப் பசங்களுக்குப் புதுச் சால்வைகள் கொடுத்திருந்தது நினைவு வந்தது. எனவே பெரியவாளிடம் அதைப் பிரஸ்தாவிக்காமல், காதும் காதும் வைத்தாற்போல ஒரு பையனிடமிருந்து சால்வையைத் திரும்பப் பெற்றுவந்து கனபாடிகளுக்கு கொடுத்துவிட்டார்.

    இரவு ஏமாற்றத்துடனேயே, கையை காலை முடக்கிக் கொண்டு அந்தப் பையன் படுத்து - சிறு வயசானதால் சிறிது போதிலேயே – தூங்கியும் விட்டான்.

    காலை எழுந்திருக்கையில் அதி சொகுசும், கதகதப்பும் தன்னை ஆர அணைந்திருப்பதில் அதிசயித்தான்.
    அவன் இழந்ததைவிட உயர் ரகமான ஒரு சால்வை அவன்மீது போர்த்தப்பட்டிருந்ததே அந்த ஸுகத்துக்குக் காரணம்!

    போர்வை வந்துதாடா?” என்ற மானேஜசின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை ஓரளவு புரிவித்தது. அப்புறம் முழு உண்மையும் தெரிந்து கொண்டான்.

    கூர்த்த திருஷ்டி பெற்ற ஸ்ரீசரணர், கனபாடிகளுக்குப் போர்த்த சால்வை, முன்னதாகப் பாடசாலா வித்யார்த்திக்கு ஈந்ததுதான் என்று கண்டுபிடித்து விட்டார். ஆனினும் அப்போது மாலை அநுஷ்டானத்திற்கும் பூஜைக்கும் நேரமாகிவிட்டதால் அது பற்றி விசாரிக்கவில்லை. அப்புறம் அநுஷ்டானம், விஸ்தார பூஜை, அதன்பின் முழு நிலாவைப் பார்த்தவாறே லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம் இவை ஆன பின் தான் – அதாவது ஏறக்குறைய நள்ளிரவுதான் – பெரியவாள் அவ்வுலகிலிருந்து இவ்வுலகுக்கு வந்தார்! வந்தவுடன் மானேஜரைக் கூப்பிட்டு விசாரித்தார்.

    நெருக்கடி நிலையை மானேஜர் சமாளித்த விதத்தில் பெரியவாளுக்கு அதிருப்தியில்லை. ஆயினும், குழந்தைகள் குளிரை விசேஷமாகப் பொருட்படுத்தா என்றாலும், தான் பெற்ற ஒன்றை இழந்தோம் என்பதிலும், அதோடு, ஏனைய சகாக்களுக்குத் தக்கி நின்ற ஒன்று தனக்குத் தக்கவில்லையே என்பதிலும் ஒரு பிஞ்சு உள்ளம் எப்படி வருத்தப்படும் என்பதையும் அவர் உணர்ந்து, மானேஜருக்குக் கூறினார்.

    அடுத்து அவர் தம் சால்வையையே அப்பையனுக்குக் கொடுத்துவிடுவாரென்று மானேஜர் பயந்தார். எனவே தாம் முந்திக்கொண்டு, “எனக்குப் போர்த்திக்கொள்ள நல்ல கம்பளிப் போர்வை இருக்கிறது. ஆகையால் என் போர்வையை அந்தப் பையனுக்குக் கொடுத்துவிடுகிறேன்” என்றார்.

    “தூங்கிண்டிருந்தா எழுப்பாதே! நைஸா மேலே போத்திட்டு நீயும் போய் விச்ராந்தி பண்ணிக்கோ!” என்றார் அனைவருக்கும் அருளாளர்.

    ‘நைஸ்’ இதயத்தால், அதி நைஸ் போர்வை பாலனுக்குக் கிடைத்தது.

    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!


Working...
X