Announcement

Collapse
No announcement yet.

இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இப்படியும் ஒரு மனிதர் இந்த பூமியில் இருக

    வெற்றிகரமான வாழ்க்கை என்பது உண்மையில் என்ன? இந்த வி.வி.ஐ.பி. சொல்றதை கேளுங்களேன்!
    தொடர்கிறது



    பூனையை நண்பர் காப்பாற்றிய சம்பவத்தை கூறியவுடன், அந்த வி.வி.ஐ.பி. பதிலுக்கு கூறிய கதை ஒன்றை அடுத்த பகுதியில் கூறுவதாக கூறியிருந்தேன் அல்லவா?
    அதற்கு முன்பு அவர் யார் என்று பார்ப்போமா??


    —————————————————————————————
    * இரு கண்களையும் பிறவியில் இருந்தே இழந்து பார்வையற்ற சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட்டு, மிகப் பெரிய சாதனைகளை அனாயசமாக செய்திருக்கும் திரு. இளங்கோவை சந்தித்த பின்பு என் அறிவுக் கண்கள் திறக்காமல் இருக்குமா? அப்படி திறக்கவில்லை என்றால் நான் அல்லவா மிகப் பெரிய குருடன்?
    * பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லாட்டரி விற்பது முதல் டூ-வீலர் மெக்கானிக் ஷாப் வரை பல வேலைகளை பார்த்து பின்னர் ப்ரைவேட்டாக எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ என எழுதி இறுதியில் ஐ.ஏ.எஸ். தேர்வில் மாநிலத்திலேயே முதலாவது வந்த திரு.நந்தகுமார் அவர்களை சந்தித்து உரையாடிய பின்பு அவரது நட்பு கிட்டிய பிறகு… என்னுடைய தோல்விகளுக்கு விதியின் மீது பழி போடும் எண்ணம் எனக்கு வருமா? அப்படி வந்தால் நானும் ஒரு மனிதனா?
    * சொந்தக்காரர்களின் வீட்டிலேயே பெற்ற தாய் பத்து பாத்திரம் தேய்த்து அதன் மூலம் படிக்க வைத்து, வளரும் காலத்தில், உத்தியோகம் சென்ற இடத்தில் என, எங்கும் அவமானம் எதிலும் அவமரியாதை, சூழ்ச்சிகள், துரோகங்கள் என்று சந்தித்த நிலையிலும் இறை நம்பிக்கை கொண்டு அவற்றை தூள் தூளாக்கி இன்று மிகப் பெரிய ஒரு வணிக குழுமத்தின் தலைவராக இருக்கும் ‘மதுரை அப்பு க்ரூப் ஆஃப் ரெஸ்டாரண்ட்ஸ்’ திரு.R.சந்திரசேகரன் அவர்களை பார்த்த பிறகு எனக்கு ஏற்பட்ட அவமானங்களை பற்றி நான் கவலைப்படுவேனா?
    இப்படி நான் சந்தித்த ஒவ்வொரு சாதனையாளர்களும் இந்த களிமண்ணை செதுக்கியதால் தான் இன்று ஒரு பிம்பத்துடன் உங்கள் முன் நிற்கிறேன். இல்லையெனில் என் வாழ்வில் அடித்த சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகி என்றோ மண்ணோடு மண்ணாகியிருப்பேன்.
    சாதனையாளர்களை தொடர்ந்து சந்திக்கும் ஆவல், அவர்கள் நட்பு + அறிமுகம் வேண்டும் என்கிற தாகம், நாமும் வாழ்ந்துக் காட்ட வேண்டும் என்கிற வெறி இதன் மூலம் தான் எனக்கு தொடர்ந்து ஏற்பட்டது.
    அண்மையில் கோவை சென்று 4000 பேருக்கும் மேல் வேலை கொடுத்திருக்கும் ஒரு முன்னணி வணிகக் குழுமத்தின் நிறுவனரை நம் தளத்திற்காக பேட்டி எடுத்து வந்தேன். மிகப் பெரிய விஷயங்களின் தொடக்கம் எத்தனை எளிமையாக, சிறியதாக இருந்திருக்கிறது என்று மற்றுமுறை அனுபவப் பூர்வமாக தெரிந்துகொண்டேன்.
    அடுத்த சில நாட்களில் இங்கே சென்னையில் சாதனையாளர்களுக்கெல்லாம் சிகரமாக திகழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.
    என்ன சொல்வது எப்படி சொல்வது?
    என்ன சொல்வது எப்படி சொல்வது? என்னிடம் மிச்ச மீதியிருந்த அழுக்குகளை எல்லாம் துடைத்து எறிந்து என்னை மேலும் பக்குவப் படுத்திவிட்டார் இந்த மனிதர். இவருடன் பேசப் பேச சில இடங்களில் வெட்கப்பட்டேன். பல இடங்களில் வியப்பின் எல்லைக்கே சென்று கைகளை தட்டி மகிழ்ந்தேன். (அடுத்தடுத்த பதிவுகளை படிக்கும்போது அந்த இடங்களில் நீங்களும் கைதட்டுவீங்க. அப்போ புரியும் நான் சொல்வது துளியும் மிகையல்ல என்பது!)
    அண்ணல் காந்தியை பற்றி ஐன்ஸ்டீன் அவர்கள் சொன்னபோது, “இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக பூமியில் வாழ்ந்தார் என்பதையே வருங்கால சந்ததியினர் நம்ப மறுப்பார்கள்” என்றார்.
    அதே வார்த்தைகள் இவருக்கும் 100% பொருந்தும். என்ன ஒரு சின்ன திருத்தம். இவரை பற்றி கூறினால் இப்படி ஒரு மனிதர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று நிகழ் காலத்திலேயே நம்ப மறுப்பார்கள்.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல். (குறள் 664)
    உபதேசம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் செய்யும் உபதேசப்படி வாழ்வது என்பது அரிதினும் அரிய குணம். இவர் வாழ்ந்து காட்டி வருகிறார்.


    எளிமை என்பதற்கு பொருளாக அகராதியில் இவர் பெயரை சேர்த்துவிடலாம். அதனால் அகராதிக்கே பெருமை சேரும்.
    இவரது கொடைத்தன்மை பற்றி கேள்விப்பட்ட தருணம்… கேள்விப்பட்டவர்களுக்கு தோன்றும் பாடல் இதுவாகத் தான் இருக்கும்.
    கர்ணன் அறிமுக பாடல்


    *நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கிய ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
    *மக்கள் வரிப் பணத்தில் அரசு தரும் சம்பளம் வாங்கிக்கொண்டு அலுவலகத்துக்கு செல்லாமல், வேறு பசையான தொழில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பலர் வாழும் இந்த உலகில், அரசு தரும் ஓய்வூதியம் முழுவதையுமே பொது நலனுக்காக செலவிடுகிறார் என்பது தெரியுமா?
    *35 ஆண்டுகள் பணி செய்த இவர் ஒரு நாள் ஊதியத்தை கூட தனக்காக இவர் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தெரியுமா?
    *மாதம் ரூ.20,000/- சம்பளம் வாங்கிய போதிலும், அனைத்தையும் பொதுக் காரியங்களுக்கு கொடுத்துவிட்டு தனது வாழ்விற்கு தேவையானதை திருநெல்வேலியில் ஓட்டல் ஆர்யாஸில் மாலை நேரத்தில் சர்வராக வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டவர் என்பது தெரியுமா? (ஓவராயிருக்கே…. என்று தானே நினைக்கிறீங்க ? இதுக்கு காரணத்தை அப்புறம் சொல்றேன்!)
    *1969 இல் இவரது குடும்ப சொத்துக்களை பாகம் பிரித்த போது இவருக்கு கிடைத்த ரூ.5 லட்சம் மதிப்புடைய சொத்தை உடனடியாக தானம் செய்துவிட்டார். (1969ல் 5 லட்சம் என்றால் இப்போ அதன் மதிப்பு எத்தனை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்…!)
    *இவரது கண்கள் உள்ளிட்ட அனைத்து உடலுறுப்புக்களையும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு தானம் கொடுத்துவிட்டார். அதுவும் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே.
    *பொதுவாழ்க்கைக்கு மண வாழ்க்கை இடையூறாக இருக்கக் கூடாதென்று திருமணமே செய்துகொள்ளவில்லை இவர்.
    *சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் இவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர்.
    *ஏழை எளிய மக்கள் படும் துன்பங்களை நேரடியாக அறிந்துகொள்ள அவர்களுடனே சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேல் நடை பாதை வாசியாகவே வாழ்ந்திருக்கிறார்.
    *ஆந்திர புயல், குஜராத் பூகம்பம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்களின்போது பல லட்ச ரூபாய்களை நன்கொடையாக திரட்டி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளித்தவர்.
    *1963 ல் இந்தியா – சீனா யுத்த நிதிக்காக காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.
    *தன் பெயருக்கு பின்னால் M.A. (Lit), M.S. (His)., M.A., (GT), B.Lib.Sc., D.G.T., D.R.T., D.M.T.I.F. & C.W.D.S. என பட்டங்களை பெற்றுள்ள இவர் அனைத்திலும் கோல்ட் மெடல் வாங்கிய முதல் மாணவர்.
    *வாழ்நாள் முழுதும் தன பெயரில் ஒரு சென்ட் நிலமோ அல்லது ஒரு ஒலைக்குடியாசையோ அல்லது பணமோ இருக்கக் கூடாது என்ற கொள்கையுடையவர்.
    *ஐந்தாவது ஊதியக் குழுவில் விடுபட்ட ஊதியத்தை 14 ஆண்டுகள் முன் தேதியுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்தையும் தனது 70 வது பிறந்த நாளில் மக்களுக்கு அளித்தார்.
    *ஆறாவது ஊதியக் குழுவில் பயன்பெறும் ரூ.5 லட்சத்தை ஏழைக் குழந்தைகளின் குழந்தைக்காக எழுதி வைத்துவிட்டார்.
    *கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்கு கிட்டாத உணவையோ அல்லது உடையையோ இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர்.
    *இவரது ஆடை சாதாரண கதராடை தான். செருப்பு ரப்பர் செருப்பு தான்.
    *தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை பற்றி கூறுகையில் : “எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்.” என்கிறார்.
    *நூலகத் துறையில் இவரது சேவையை பாராட்டி நமது இந்திய அரசாங்கம் இவருக்கு “இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்” என்ற பட்டத்தை அளித்தது. “உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்” என்ற புகழ் பெற்றார்.
    *உலக பயோகிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் – உலகத்தின் சிறந்த மனிதாபிமானி – என்று கெளரவித்தது.
    *ஐக்கிய நாட்டுச் சபை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்வு செய்து, பாராட்டியது.
    இவரை சேவைகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரை கௌரவிக்கும் வகையில் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து $ 6.5 Million வழங்கியது. (சுமார் 30 கோடி ரூபாய்). அந்த நிதியை கூட அந்த விழா மேடையிலேயே சர்வதேச குழந்தைகள் நல அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.
    *இவர் சேவைகளை பற்றி கேள்விப்பட்ட அமெரிக்க நிறுவனம் ஒன்று இவரை கௌரவிக்கும் வகையில் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதராக – Man of the Millenium – இவரை தேர்ந்தெடுத்து $ 6.5 Million வழங்கியது. (சுமார் 30 கோடி ரூபாய்). அந்த நிதியை கூட அந்த விழா மேடையிலேயே சர்வதேச குழந்தைகள் நல அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார்.
    *சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கேள்விப்பட்டு ஒரு விழாவில் “இவரை தந்தையாக” தத்து எடுத்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார். அங்கு அவரால் சில மாதங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. மூன்றடுக்கு பாதுகாப்பு மிகுந்த அந்த சூழல் தன்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கும் உதவி கோரி வருபவர்களுக்கும் கடினமாக இருக்கிறது என்றும் அவரது சுதந்திரமான குணத்திற்கும் எளிமைக்கும் அந்த சூழல் ஒத்துவரவில்லை என்றும் கூறி அதை அன்புடன் மறுத்து வெளியே வந்துவிட்டார். (இது பற்றிய விரிவான நெகிழ்ச்சியான தகவல்களை நம்மிடம் கூறியிருக்கிறார் இவர். அது தனிப் பதிவாக வரும்.)
    இவருடைய பொது சேவைகள்:
    1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்
    2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்
    3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.
    4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.
    இவரின் கொள்கைகள் என இவரது விசிட்டிங் கார்டின் பின்னால் காணப்படும் வாசகங்கள் :
    என்றும் இன்பமுடன் இனிது வாழ எதன் மீதும் பேராசை கொள்ளாது இருப்போம்! பத்தில் ஒன்றை தானம் செய்வோம்!! தினமும் ஒரு உயிருக்கு நன்மை செய்வோம்!!!
    பணம் மட்டுமே உலகம் என்றெண்ணி இயந்திர வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு இவரின் வாழ்க்கை ஒரு பாடம்.
    இத்தனை பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்… ஐயா திரு.பாலம் கலியாண சுந்தரம்.
    இவரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன்.

    >>ஐயா திரு.பாலம் கலியாண சுந்தரம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு குமரகுருபரர் கலைக்கல்லூரியில் 35 ஆண்டுகள் நூலகராக பணிபுரிந்தார்.
    >>1995 இல் ‘இந்தியாவின் சிறந்த நூலகர்’ என்கிற பட்டத்தை ‘கோவா பல்கலைக்கழகம்’ இவருக்கு வழங்கியது.
    >>1996 இல் உலகின் பத்து சிறந்த நூலகர்களுள் ஒருவர் என்கிற பட்டத்தை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது.
    >>உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அடங்கிய சபை உலகின் சிறந்த பண்பாளர்களில் ஒருவர் என்ற கௌரவத்தையும் அப்போது அளித்தனர்
    >>புதுமையான நூலக நூற்பட்டியை இவர் கல்லூரியிலேயே ஆறு மாத காலம் தங்கியிருந்து தயாரித்தார். அந்த ஆராய்ச்சி முடியும் வரை அவர் வீட்டிற்க்கே செல்லவில்லை. இம்முறையில் நூல்பட்டி தயாரித்தால் ஒரு நூலின் தலைப்பையும் ஆசிரியரின் பெயரையும் சொன்னால் உடனடியாக அந்த நூலின் புத்தக எண்ணை சொல்லிவிடலாம்.
    >>மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இவரது ஆராய்ச்சியை பாராட்டி அதை ஏல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியது. ஏல் பல்கலைக்கழக அதற்கு தகுதி சான்றிதழ் (மெரிட் சர்டிஃபிகேட்) வழங்கியதுடன் அதை கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது.
    >>கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் ‘A most notable intellectual’ பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபிள் பரிசு இருந்தால் அதை பெற தகுதி இதற்க்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
    >>தனது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் மட்டுமின்றி மாத ஊதிய வர்கத்தினர் அனைவருக்கும் கௌரவத்தை தேடித் தந்தவர் பாலம் கலியாணசுந்தரம் ஐயா.
    இவரை சந்தித்ததையும் இவருடன் பேசியதையும் இவரது நட்பு கிடைத்ததையும் மிகப் பெரிய பாக்கியமாக கௌரவமாக கருதுகிறேன். இவருடன் எடுத்த புகைப்படத்தை பொக்கிஷமாக கருதுகிறேன்.

    இவர் ஏதோ சமூக சேவகர், அனைத்தையும் அள்ளி வழங்கிய வள்ளல் மட்டுமல்ல. மிகப் பெரிய ஆத்ம ஞானி. ஆன்மீகவாதி. சைவத் திருமுறைகள், பக்தி இலக்கியங்கள், பைபிள், திருக்குர்-ரான் என அனைத்தையும் படித்து மெய்யறிவில் பூரணத்துவம் பெற்றவர்.
    வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்படும் பல சந்தேகம் பலவற்றுக்கு இவர் மிக மிக அனாயசமாக விடை தருகிறார்.

    அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
    நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு!
Working...
X