Announcement

Collapse
No announcement yet.

பக்தையை காப்பாற்றிய மரிக்கொழுந்து – மகாப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பக்தையை காப்பாற்றிய மரிக்கொழுந்து – மகாப

    அன்று வைகாசி அனுஷம். மகா பெரியவாவின் அவதார ஜெயந்தி. பெரியவா, தான் வாழ்ந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய, நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை. தனது ஞான திருஷ்டியினால் எத்தனையோ முறை பக்தர்களை வரவிருக்கும் ஆபத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார். அத்தகைய அற்புதங்களுள் சுவாரஸ்யமான ஒன்றை பார்ப்போம்.

    அபார கருணாஸிந்தும் ஞானதம் ஸாந்தரூபிணம்!
    ஸ்ரீ சந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்!!

    அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமா இருக்கும் எடுத்துக்கோ!

    பெரியவாளை பார்க்க வரும் கூட்டம் பெரும்பாலும் நிரந்தரமானது. யார், யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் பெரியவா நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள்.

    அன்று கூட்டத்தில் ஒரு மூதாட்டி, பெரியவாவின் அருட்கடாட்சத்திற்காக நின்று கொண்டிருந்தார். சேவை முடிந்ததும் ஒரு தட்டில் சில பழங்களை வைத்து, அந்த அம்மையாரை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார் Maha Periyava.




    மிகவும் திருதியாகப் பழங்களை எடுத்துக்கொண்ட அந்த அம்மையார், பழத்தோடு சேர்த்து வந்த மெல்லிய மரிக்கொழுந்து காம்பு ஒன்றை எடுத்து கீழே போட்டு விட்டு பழங்களை எடுத்து பையில் போட்டுக்கொண்டார்.

    “அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமா இருக்கும். எடுத்துக்கோ!” என்றார் சிரித்தவாறே.

    பெரியவா சொல்லிவிட்டாரே என்பதற்காக அந்த அம்மையாரும் மரிக்கொழுந்து காம்பை எடுத்துத் தனது பையில் போட்டு பத்திரப்படுத்திக்கொண்டார்.

    “ஏன் இதை பத்திரமாக எடுத்துப் போகச் சொன்னார்?” என்றெல்லாம் அந்த அம்மாள் அப்போது யோசிக்கவில்லை. மகானிடம் கேட்கவுமில்லை.

    தன் ஊருக்கு போக அம்மையார் பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டார். பஸ் புறப்பட்டதும் அப்படியொரு தூக்கம். அருகில் இருந்த பெண், அம்மையாரின் பணப்பையை திருடிக் கொண்டாள்.

    கண்டக்டர் வந்தார். டிக்கெட் எடுக்க வேண்டுமல்லவா? குரல் கேட்டு விழித்தெழுந்த அம்மையார், பையில் பணப்பையை தேடினார். அது அங்கே இல்லை. பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் இருந்தது.

    (இப்போதெல்லாம் திருடிவிட்டால், உடனே பஸ்ஸில் இருந்து இறங்கிவிடுகிறார்கள்.)

    ” அது என் பர்ஸ்!” என்று அம்மையார் பதற்றத்தில் கதற… “இல்லை… இல்லை…. இது என்னுடையது தான்!” என்று பக்கத்திலிருந்த பெண் சொல்ல, அங்கே களேபரம் ஆகிவிட்டது.

    பர்ஸில் எவ்வளவு `பணம்’ இருக்கிறதென்று அந்த பெண் எடுத்தவுடன் உடனே எண்ணியும் விட்டாள். எனவே இவ்வளவு பணம் தான் இருக்கிறது. இது என்னுடைய பர்ஸ் என்று அடித்து கூறினாள்.

    கண்டக்டருக்கு யாரை நம்புவது என்று தெரியவில்லை. தத்தளிக்கிறார்.

    அப்போது தான் அந்த அம்மையாருக்கு பெரியவா மரிக்கொழுந்து காம்பை எடுத்துக் கொண்டு போகச் சொன்னது ‘பளிச்’ என்று நினைவுக்கு வந்தது.

    “கண்டக்டர் சார்… அந்த பர்ஸில் வேறொரு வஸ்து இருக்கிறது. அது என்னவென்று இந்த பெண்ணை சொல்லச் சொல்லுங்கள்!” என்று கம்பீரமாக இவர் கூற, திருடியவளிடமிருந்து இதற்கு எப்படி பதில் வரும்?

    “நான் சொல்கிறேன். மரிக்கொழுந்தின் சிறிய காம்பு ஒன்று உள்ளே இருக்கிறது. வாசனை உள்ளது மரிக்கொழுந்து. வேண்டுமானால் பர்ஸை திறந்து பாருங்கள்.. தெரியும்” என்று கூற, கண்டக்டர் அந்த பக்கத்து சீட்டு பெண்ணிடம் இருந்து பர்ஸை வாங்கி பார்க்க, உள்ளே மரிக்கொழுந்து காம்பு பத்திரமாக இருந்தது.

    பிறகென்ன, திருடியவள் தன் தவறை ஒப்புக்கொண்டாள். அம்மையாரின் வேண்டுகோளுக்கிணங்க அவள் மன்னித்து விடப்பட்டாள்.

    தன் பக்தர்களுக்கு வரும் இடர்களை முன்கூட்டியே உணர்ந்து அதற்கு நிவர்த்தியுடன் அனுப்பும், அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்?

    (நன்றி : ரா.வேங்கடசாமி எழுதிய ‘காஞ்சி மகானின் கருணை நிழலில்’ | தட்டச்சு : www.rightmantra.com)

    ============================================================

    நம்முடைய துன்பமே பெரிதென்று எண்ணக்கூடாது!

    * பலனை எதிர்பார்க்காமல் உங்களால் முடிந்த நல்லதைச் செய்து கொண்டிருங்கள். பலன் கொடுக்க வேண்டியது கடவுளின் வேலை.

    * நம்முடைய துன்பத்தை மலை போல நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருப்பது கூடாது. நம்மால் உலகம் சிறிது நன்மை பெறும் என்று தெரிந்தாலும் கூட, அதற்காக நாம் கடுமையாகப் பாடுபட வேண்டும்.

    * கருணையில் கடவுள் கடலுக்குச் சமமானவர். நதிகளைப் போல தன்னை நாடி வரும் பக்தர்களை ஏற்றுக் கொண்டு அவர் அருள்புரிகிறார்.

    * புத்திக்குத் தெரிந்தும் ஒரு தவறைச் செய்யும்போது அது பாவமாகிறது. புத்தி தங்கள் வசத்தில் இல்லாமல் இருப்பவர்கள் செய்யும் எந்தச் செயலும் பாவமாகாது.

    * எதைச் செய்வது நல்லது என்று தோன்றுகிறதோ அது புண்ணியம். எதைச் செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அது பாவம்.

    * உலகில் பிறந்த அனைவரும் புண்ணியம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், நூற்றுக்கு எண்பது பங்கு பாவத்தையே செய்கிறார்கள்.

    * வாயாலும், மனத்தாலும், உடலாலும், பணத்தாலும் நாம் பலவித பாவங்களை அன்றாடம் செய்து கொண்டே இருக்கிறோம்.

    * கயிற்றை எப்படி சுற்றினோமோ, அப்படியே தான் அவிழ்க்க வேண்டும். அதுபோல, பாவச்செயல்களின் பலனைக் கழிக்க, புண்ணிய செயல்களில் ஈடுபடுவதே வழி.

    * மனம்,வாக்கு, உடல், பணம் என எல்லாவற்றாலும் நற்செயல்களில் ஈடுபட்டு புண்ணியத்தை தேடிக் கொள்ள முயல வேண்டும்.

    - காஞ்சிப்பெரியவர்
    - See more at: http://rightmantra.com/?
Working...
X