Announcement

Collapse
No announcement yet.

ரப்பர் ஸ்டாம்பின் ரப்பர் ஸ்டாம்புகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ரப்பர் ஸ்டாம்பின் ரப்பர் ஸ்டாம்புகள்

    இங்கிலாந்தில் இருந்து வியாபாரம் செய்திட வந்த, கிழக்கிந்திய கம்பெனி, கோல்கட்டாவில், 'வில்லியம் கோட்டை'யை கட்டிய பின், இந்தியாவில் தங்கள் பிரதிநிதி வேண்டும் என்பதற்காக, கவர்னர் என்னும் ஏஜன்ட்டை நியமித்தனர். பின், கிழக்கிந்திய கம்பெனி, பல பிராந்தியங்களில், வரி வசூல் கட்டுப்பாட்டை கொண்டு வந்து விட்டதால், பிராந்திய அளவில், இந்தியாவில் கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த பிராந்திய கவர்னர்களுக்கு தலைவராக, கோல்கட்டாவில் கவர்னர் - ஜெனரல் நியமிக்கப்பட்டார்.

    கடந்த, 1858ல் இந்தியா, இங்கிலாந்தின் நேரடி ஆட்சியின் கீழ் வந்த பின், கவர்னர் ஜெனரலுடன், வைஸ்ராய் என்னும் பதவியும் ஒட்டிக் கொண்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றிய பின், கவர்னர் - ஜெனரல் பதவிக்கு, ஜனாதிபதி என்று பெயர் சூட்டப்பட்டது. மாநில அளவில் கவர்னரை நியமிக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் தரப்பட்டது.இன்று, இந்தியாவில், 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசம் என்று, 29 கவர்னர்களும் 7 லெப்டினன்ட் கவர்னர்களும் உள்ளனர்.கடந்த, 1977ல் ஜனதா அரசு, மத்தியில் ஆட்சி அமைத்த பின், கவர்னர்களை பந்தாடத் துவங்கினர். இதே வழியினை, 1980ம் ஆண்டு, மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்த இந்திராவும் செய்தார்.எமர்ஜென்சியை எதிர்த்து போராடிய பிரபு தாஸ் பட்வாரி, 1977ல் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். 1980ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த இந்திரா, தமிழக கவர்னரை மாற்றினார்.ஜனதா ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த பா.ராமச்சந்திரன், மீண்டும் காங்கிரசில் இணைந்ததால், சென்னை, 'சத்திய மூர்த்தி' பவனும் காங்கிரசிற்கு போய்விட்டது. எனவே, அதற்கு அன்பளிப்பாக, பா.ராமச்சந்திரன், கேரள கவர்னராக நியமிக்கப்பட்டார்.ஒருவர், அவர் சார்ந்துள்ள கட்சிக்கு, மிகவும், ரொம்ப நல்லவனாக இருந்தால், அவரின் அந்திம காலத்தில் தரப்படும், 'வெகுமதி' தான் கவர்னர் பதவி. இதில் எந்த கட்சியும் பாகுபாடு இல்லாமல் பணியாற்றியுள்ளன.

    கடந்த, 2009ல் சி.பி.ஐ., இயக்குனராக இருந்த அஸ்வின் குமார், இத்தாலி இடைத்தரகன் 'கோத்ரெச்சி' மீது இருந்த, 'ரெட் கார்னர்' நோட்டீசை வாபஸ் பெற்றார். எனவே, காங்கிரசின், இத்தாலிய பெண்மணி அவரை, நாகாலாந்து கவர்னராக நியமித்து விட்டார்.அது போல, தனக்கு ஊழலில் உறுதுணையாக நின்றவர்களை, காங்கிரஸ் தலைமை கவர்னராக்கி, அழகு பார்த்துள்ளது.
    'ராஜ்பவன்' என்னும் கவர்னர் மாளிகையில், கவர்னருக்கே சரியாக வேலையில்லை. ஆனால், கவர்னருக்காக உயர் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை, ஒவ்வொரு ராஜ்பவனிலும், 200 பேர் பணியாற்றுகின்றனர். இந்தியாவில், 40 ராஜ்பவன்கள் உள்ளன; தமிழகத்தில் கவர்னர் தங்க, ஊட்டியிலும், கேரளாவில் கவர்னருக்கு தேவி குளத்திலும் ராஜ்பவன் உள்ளன. இவர்களுக்கு சம்பளம் என்று கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது.கவர்னருக்கே வேலை இல்லை என்னும் போது, இவர்கள் என்ன செய்கின்றனர் என்று தெரியவில்லை. எனவே தான், ஆந்திராவில் என்.டி.திவாரி, இளம் பெண்களுடன் 'மஜா' வேலையில் ஈடுபட்டார்.

    மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்த விஜய லட்சுமி பண்டிட், கவர்னர் பதவியே தேவையற்ற ஒன்று என்று, கூறி இருந்தார். ஒரு கவர்னருக்கு தானே தெரியும், கவர்னர் பதவி வேலை என்னவென்று.இந்தியாவை நான்கு மண்டலங்களாக பிரித்து, மொத்தம் நான்கு கவர்னர்களை நியமித்தாலே போதும்.கவர்னரின் சில அதிகாரத்தை, அந்த மாநிலத்தின் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியிடமே கொடுத்து விடலாம். காரணம் கவர்னரும், வெளி மாநிலத்தவராகவே உள்ளார்.அது போல, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், வெளி மாநிலத்தை சார்ந்தவராகவே உள்ளார். கவர்னருக்கு தலைமை நீதிபதி தான் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.நான்கு மண்டலங்களாக பிரித்து, டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னையில் மட்டும் ராஜ்பவன்களை வைத்துக்கொண்டு, மீதியுள்ள ராஜ்பவன்களை, 'எயிம்ஸ்' போன்ற பல்நோக்கு மருத்துவமனையோ அல்லது ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் தேசிய சட்ட பள்ளிகளையோ நிறுவி, மக்களுக்கு பயன்படுமாறு செய்யலாம்.

    இந்திய அரசியலமைப்புச்சட்டம், ஷரத்து 153ன் படி, ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு கவர்னர் வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், 7வது சட்டத்திருத்தம், 1956ன் படி ஒரே நபர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு கவர்னராக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்திய அளவில், நான்கு ராஜ்பவன்களில், நான்கு கவர்னர்களை நியமித்தாலே போதும்.
    இன்று தொலைத்தொடர்பு நன்கு வளர்ந்து விட்ட நிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' முதல், பல தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எனவே, நான்கே கவர்னர்கள், இந்திய அளவில் தாராளமாக போதும்.கட்டடங்களை திறந்து வைக்கவும், பட்டம் வழங்கவும், பலர் உள்ளனர். தமிழகம் போன்ற மாநிலத்திற்கு மட்டும், மாதம் ஒரு முறை, மந்திரிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது தான், ஆளுனருக்கு அலைச்சலாக இருக்கும்.இளம் வயது அல்லது உடல் ஆரோக்கியமாக உள்ளவர்கள், கவர்னராக நியமிக்கப்பட வேண்டும். தள்ளாத வயதில், தடியூன்றி நடக்கும் போது தரப்படும் இந்த பதவியால், பல மாநிலங்களுக்கு ஒருவரே கவர்னராக பணியாற்ற முடியாது போய் விடுகிறது.

    'நான் அவர்கள் (கவர்னர்) இடத்தில் இருந்திருந்தால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனே பதவியிலிருந்து விலகியிருப்பேன்' என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொல்வதிலிருந்து, கவர்னர் பதவி என்பது, அரசுத்தரப்பு வழக்கறிஞர் தொழில் போல் போய் விட்டது.உட்கட்சி பூசலை தடுக்கவும், தள்ளாத வயதில் ஓய்வு எடுக்கவும், ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஓர் பதவித்தரப்படுகிறது என்றால், அது கவர்னர் பதவி தான்.ஜனாதிபதி பதவியே, 'ரப்பர் ஸ்டாம்பு' என்று அழைக்கப்படும் போது, ஜனாதிபதியின் கீழ்உள்ள இவர்கள், ஒரு ரப்பர் ஸ்டாம்புக்கு, துணையாக பல ரப்பர் ஸ்டாம்புகளாக உள்ளனர். அதை நான்கு ரப்பர் ஸ்டாம்பாக மாற்றிட வேண்டும்.
    e-mail: asussusi@gmail.com

    - எஸ்.ஏ. சுந்தரமூர்த்தி- -
    வழக்கறிஞர்
Working...
X