பல லட்சம் செலவில் உடற்பயிற்சி சாதனங்கள் எல்லாம் வாங்கத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தாலே போதும். ஆரோக்கியமான உடலமைப்பை தந்துவிடும். நடைப்பயிற்சி என்பது இயற்கையானது மட்டுமல்ல, பிற உடற்பயிற்சியை விட எளிதானதும், செலவில்லாததும் ஆகும்.

இதய நாளங்களுக்கு உரிய வேலை கொடுத்து தேவையான உந்து சக்தியை ஏற்படுத்தி இதயத்தில் உள்ள கொழுப்பை வெளியேற்ற நடைப்பயிற்சி உதவுவது எல்லோருக்கும் தெரிந்திருக்காது. நமது உடலில் மிகப்பெரிய தசை காலில்தான் உள்ளது. நடைப்பயிற்சியானது அந்த தசைகளை வலுவுள்ளதாகவும் உறுதியானதாகவும் ஆக்குகிறது.

சாதாரணமான நேரங்களில் கை தசைகளுக்கு வேலை இருக்காது. ஆனால் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது நம்மை அறியாமல் கைகளை அசைப்பதால் கை தசைகளும் முறுக்கேறுகின்றன. உடலில் வீணாக சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரல் சுறுசுறுப்படைகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. நிம்மதியான உறக்கத்தை கொடுக்கிறது. இதயநோயுடன் உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் தர நீரிழிவு நோய், பித்தகற்கள், ஆஸ்டியோ போரோசிஸ் பாதித்த நோயாளிகளுக்கு நடைப்பயிற்சி மிகவும் நல்லது.

வயதானவர்களுக்கு ஏரோபிக்ஸ், சைக்கிளிங், ஓட்டப்பயிற்சி ஆகியவை உகந்ததல்ல. ஆனால் அனைத்து வயதினருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது. நடைப்பயிற்சியே மனிதனுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது என்றால் அது பொய்யில்லை.