வேதம் – தசோபநிஷத்துக்கள் _ Part 6

இப்படிச் சொன்னதால், முக்கியமாக அன்னமய சரீரத்தோடேயே நின்றுவிடுகிற யதார்த்த லோக வாழ்க்கையை இந்த உபநிஷத் தள்ளிவிடுகிறது என்று அர்த்தமில்லை. லோகத்தில் இருந்து கொண்டே உத்தமமான ஸத்யத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த லோக வாழ்க்கையே தர்மமாக நடத்தி, உபாயமாக்கிக் கொள்ள வேண்டும்.

அதனால்தான் இங்கே ஆனந்தமய கோசத்துக்குப் போனபின், மறுபடி'அன்னத்தை இகழாதே'அன்னத்தை எறியாதே, நிறைய அன்னத்தை விளைவியுங்கள்'என்றெல்லாம் உபதேசிக்கப்படுகிறது. சர்க்காரில் கூட உணவு அபிவிருத்தி இயக்கத்தில் (G row More Food Campaign ல்) இந்த மந்திரங்களைப் பிரசாரப் படுத்தினார்கள். ஞானியானவன், "அன்னம், அதை உண்பவன், அன்னத்துக்கும் உண்பவனுக்கும் சம்பந்தம் உண்டாக்கியவன் ஆகிய எல்லாமும் நானே"என்று ஈச்வரனோடு ஈச்வரனாகத் தன்னை உணர்ந்து ஆனந்தமாக கானம் பண்ணிக் கொண்டிருப்பான் ͺ ன்று முடிகிறது.

ரிக் வேதத்தின் ஐதரேய ஆரண்யகத்தில் வருகிற ஐதரேய உபநிஷத் அடுத்ததாக இருக்கிறது. ஐதரேயர் என்ற ரிஷியின் மூலம் இது பிரசாரத்துக்கு வந்ததால் இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஜீவன் பிதாவிடமிருந்து மாதா கர்ப்பத்தில் புகுவது, பிறகு லோகத்தில் பிறப்பது, புண்ய பாபங்களால் மறுபடி மறுபடி பல லோகங்களில் ஜன்மா எடுப்பது முதலான விஷயங்களைச் சொல்லி, ஆத்மாவைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஜன்மாவிலிருந்து, ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை பெறுவதை இந்த உபநிஷத் சொல்கிறது.

கர்ப்பத்திலிருக்கிற காலத்திலேயே வாமதேவர் என்ற KS சகல ஜன்மாக்களைப் பற்றியும் தெரிந்து கொண்டு, அத்தனை கோட்டைகளையும் கடந்து ஆகாசத்தின் உச்சியில் பறக்கிற பருந்து மாதிரி விடுதலையை நோக்கிக் கிளம்பிவிட்டதாக இந்த உபநிஷத்தில் சொல்கிறார். இதிலே ஆத்மாவைப் பற்றிய பிரத்யக்ஷ ஞானமான பிரஜ்ஞானத்தை சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. அந்த ஞானத்தினால் பிரம்மம் பெறப்படுகிறது என்பதுகூடச் சரியில்லை. அந்த பிரஜ்ஞானமேதான் பிரம்மம் என்று முடிகிறது. இதுவே ரிக்வேக மஹாவாக்யம்.

பத்தில் கடைசி இரண்டான "சாந்தோக்ய உபநிஷத்"தும், "பிருஹதாரண்யக உபநிஷத்"தும் ரொம்பவும் பெரியவை. மற்ற எட்டு உபநிஷத்துக்களையும் சேர்த்தால் எவ்வளவு ஆகுமோ அதைவிட இவை பெரியவை. சாந்தோக்ய உபநிஷத் என்பது ஸாம்வேதத்தில் சாந்தோக்ய ப்ராம்மணத்தில் இருப்பது. சந்தோக என்பதைக் குறித்தது சாந்தோக்யம். சந்தோகன் என்றால் ஸாம கானம் செய்கிறவன் என்று அர்த்தம். 'சந்தோகன் காண்' என்று தேவாரத்தில்கூடப் பரமேச்வரனைச் சொல்லியிருக்கிறது. சந்தோக அவஸ்தா என்பதே Zend - Avesta என்றாகிப் பார்ஸியர்களின் மதநூலாக இருக்கிறது.

கீதையில் கடோபநிஷத் வெகுவாகக் கையாளப்படுவதுபோல் பிரம்மஸ¨த்ரத்துக்கு நிரம்ப ஆதாரமாக சந்தோக்யோபநிஷத் மந்திரங்களே இருக்கின்றன என்று சொல்வதுண்டு.
சாந்தோக்யம், பிருஹதாரண்யகம் ஆகிய இரண்டு உபநிஷத்துக்களிலும் பல ரிஷிகளின் உபதேசங்களைச் சேர்த்து கொடுத்திருக்கிறது.

சாந்தோக்ய ஆரம்பத்தில் ஒம்காரத்துக்கு உத்கீதம் என்று பேர் சொல்லி, அதன் உபாஸனையை விவரித்திருக்கிறது.

இந்த உபநிஷத்தில் அக் வித்தை, ஆகாச வித்தை, மது வித்தை, சாண்டில்ய வித்தை, பிராண வித்தை, பஞ்சாக்னி வித்தை போன்ற பல வித்தைகளைச் சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் அத்வைதமான பரமாத்ம தத்வத்தைப் பல வழிகளில் சென்று தெரிந்துகொள்வதற்கு உதவுகிற த்வைதமான உபாஸனைகள். இவற்றுக்கு உச்சியிலே வருவது தஹரவித்தை. அகண்ட ஆகாசமாக இருக்கிற பரம்பொருளை ஜீவனானவன் தன் உளளத்துக்குள்ளே இருக்கிற சின்னஞ்சிறிய ஆகாசத்தில் கண்டுகொள்வதுதான் தஹர வித்தை.

இந்த உபநிஷத்திலே, சுவாரஸ்யமான பல கதைகளைச் சொல்லி, அதன் வழியே தத்வங்கள் உபதேசிக்கப்படுகின்றன. வெளிப்பார்வைக்கு விசித்திரமாகத் தோன்றும் பிரம்ம ஞானியின் போக்கு ரைக்வர் என்பவரின் கதையில் தெரிகிறது. தன்னுடைய கோத்திரத்தைத் தெரிந்து கொள்ளாத ஸத்யகாமன் என்ற ஒரு சிறுவன் அதை ஒளிக்காமல் சொன்னதாலேயே அவனை நல்ல பிராமணனாகக் கொண்ட அதை சாந்தோக்யத்தில்தான் வருகிறது.

'சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' என்ற திருக்குறளுக்குக் கதா ரூபமாக இது இருக்கிறது. ஸத்யகாமனுக்கு உபதேசம் பண்ணுவதற்கு முந்தி குருவானவர் நிரம்ப சோதனைகள் வைக்கிறார். அவருடைய பத்னியே ஸத்யகாமனுக்கு நேரெதிராக வித்யா கர்வத்தோடு இருந்த ச்வேதகேது என்ற பிரம்மச்சாரிக்கு அவனுடைய தகப்பனாரான உத்தாலக ஆருணி அடக்கத்தை உண்டுபண்ணி, கடைசியில் ஜீவப்பிரம்ம அபேதத்தைச் சொல்லும் தத்-த்வமஸி உபதேசம் செய்வதுதான் ஸாம வேதத்துக்கே உயிர்நிலையாக மஹா வாக்யத்தைச் சொல்லும் இடம்.

ச்வேதகேதுவைப் போலில்லாமல் ஸகல வித்தைகளையும் கசடறக் கற்றிருந்தும், இவற்றால் ஆத்மாவைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்று பரிதவித்துக் கொண்டிருந்த நாரத மஹரிஷிக்கு ஸனத்குமாரர் செய்கிற உபதேசமும் இந்த உபநிஷத்தில்தான் வருகிறது. "தைத்திரீயத்" தில் அன்ன மயத்தில் ஆரம்பித்து மேலே மேலே கொண்டு போன மாதிரியே, ஸனத்குமாரரும் ஆகார சுத்தியில் ஆரம்பித்து அந்த ஃகரண சுத்திக்குக் கொண்டு போய், அப்போதுதான் கட்டுக்கள் எல்லாம் தெறித்து ஆத்மானந்தம் ஸித்திக்கும் என்கிறார்.

Contd…7…
Source: subadra