Srimad Bhagavatam skanda 3 adhyaya 16 in tamil
Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 3 அத்தியாயம் 16


அத்தியாயம் 16
அவர்களுடைய துதிகளால் மகிழ்ந்த பகவான் கூறினார்.


" இந்த என்னுடைய சேவகர்களால் உங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கு இந்த தண்டனை வேண்டியதுதான். அவர்கள் செய்ததை நானே செய்ததாகக் கருதுகிறேன் அதனால் உங்கள் மன்னிப்பை கோருகிறேன். சேவகர் செய்த தவறு எஜமானனைத்தான் சேரும்.,


யே மே தனூன் த்விஜவரான் துஹதீர்மதீயா
பூதான்யலப்த சரணானி ச பேதபுத்த்யா
த்ரக்ஷ்யந்தி அகக்ஷதத்ருச:ஹ்யஹிமன்வவஸ்தான்
க்ருத்ரா ருஷா மம குஷந்தி அதிதண்டநேது: ( ஸ்ரீமத்பாக. 3.16.10)


புண்ய புருஷர்கள், பசுக்கள், தீனஜனங்கள் இவர்கள் என் சரீரம் போன்றவர்கள். இவர்களை என்னிலும் வேறாக எண்ணி துன்புறுத்துவோரை சர்ப்பம் போன்ற என் தூதர்கள் கோபம் கொண்டு கருடனைப்போல அலகுகளால் துண்டிப்பார்கள்."


அதைக்கேட்ட சனகாதியர் மீண்டும் பகவானைத் துதித்து அவர் கூறியதன் உட்பொருளை அறியாமல் தங்கள் செய்த தவறை மன்னிக்கும்படியும் அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுகொள்வதாகவும் கூறினார்கள்.அப்போது பகவான் கூறினார்.


"முனிவர்களே தாங்கள் இவர்களுக்கு கொடுத்த சாபமானது என்னாலேயே ஏற்படுத்தப்பட்டது. ஆதலால் இவர்கள் இருவரும் அசுரப்பிறவி அடைந்து விரோத மனப்பான்மையுடன் என்னையே நினைந்து சீக்கிரமாகவே என்னை வந்தடைவார்கள்."


பிறகு ஜயவிஜயர்களைப் பார்த்து ,
"முன்னொரு சமயம் நான் யோகநித்திரையில் இருக்கும்போது ஸ்ரீதேவியை நீங்கள் அனுமதிக்காததால் அவள் உங்களுக்கு சாபம் இட்டாள். அது இப்போது இந்த முனிவர்கள் மூலம் பலிக்கின்றது. விரோதியாகஎன்னை பாவிப்பதால் முனிவர்களை அவமதித்த பாவம் சீக்கிரமாகத் தீர்ந்து என்னை வந்தடைவீர்கள்." என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார் .


அவர்கள் இருவரும் உடனேயே வைகுண்டத்தில் இருந்து தேவத்தனமையை இழந்து பூமியில் விழுந்தனர். அவர்கள்தான் இப்போது திதியின் கர்ப்பத்தில் உள்ளனர். அவர்களுடைய கடுமையான ஒளியால் உலகத்தில் இருள் சூழ்ந்தது.


இதைக் கூறிவிட்டு பிரம்மா தேவர்களை பின்வருமாறுஆச்வாசப்படுத்தினார்.
விச்வஸ்ய ய: ஸ்திதிலயோத்பவஹேதுராத்ய:
யோகேச்வ்ரைரபி துரத்யயயோகமாய:
க்ஷேமம் விதாஸ்யதி ஸ ந: பகவான் த்ர்யதீச:
தத்ர அஸ்மதீய விம்ருசேன கியான் இஹார்ய: (ஸ்ரீமத் பா. 3.16. 37)


உலகத்தின் சிருஷ்டி, ஸ்திதி , லயம் இவற்றுக்கு யார் ஆதி காரணமோ, எவருடைய யோக மாயையை யோகிகளும் அறியமாட்டார்களோ, யார் மும்மூர்த்திகளுக்கும் மேலானவரோ அவர் உரிய நேரத்தில் நம்மை காப்பார். அதைப்பற்றி நாம் விவாதிப்பதில் என்ன பயன்?


அடுத்து ஹிரண்யாக்ஷன் ஹிரண்ய கசிபு இவர்கள் பிறப்பு , ஹிரண்யாக்ஷ வதம் முதலியவை அடுத்து வரும் மூன்று அத்தியாயங்களில் வர்ணிக்கப்படுகிறது.