Benefits of Reciting Sri Laltha Shahasranamam

லலிதா சகஸ்ரநாமம் கூறும் பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்


லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

"ஸ்ரீ மாதா" என்று அழைக்கப்படும் ஸ்ரீ லலிதையானவள், எப்படித் தோன்றினாள்?

அசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளை வேண்டி நின்றனர். அவளை வரவழைக்க, தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் தோன்றினாள்.

சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல், சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

நமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்' என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது. அந்த சக்தியானது, மேலே எழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது.

சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும் பொழுது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிழ்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால், கங்கை போன்ற புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல், அவிலிங்க க்ஷேத்திரத்தில், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், இவையெல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது.

இப்பொழுது புரிகிறதல்லவா, நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமத்தை சிரத்தையுடன் கூறவேண்டும் என்பதை.

விழிப்பு நிலை, உறக்க நிலை இரண்டிலுமே நம்முடன் தேவி எப்பொழுதுமே இருக்கிறாள். வாக்தேவிகள் மொழிய, ஸ்ரீ ஹயக்ரீவரால் தெளியப்படுத்தப்பட்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தினை நாம் அனுதினமும் நவிலுவோம். நிறைவான வாழ்வினைப் பெறுவோம்.

Source: m.dailyhunt.

This post is for sharing knowledge only, no intention to violate any copy rights