ஸ்ரீராம ஆலிங்கனம் பெற்ற ஹநுமான்
Click image for larger version

Name:	Ram-Anjaneya-hgging.jpg
Views:	117
Size:	96.4 KB
ID:	49598பக்திக்கு ஓர் இலக்கணம் வகுத்தவர் ஆஞ்சநேயர். ஶ்ரீராம பிரானிடம் அவர் கொண்டிருந்த பக்திக்கு எல்லையே இல்லை. அதற்கு ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடலாம். ராவண வதத்துக்குப் பிறகு அயோத்திக்குத் திரும்பி பட்டாபிஷேகம் நடைபெற்றது. பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும், ராவணனுடன் தான் செய்த யுத்தத்தில் உதவிபுரிந்த ஒவ்வொருவருக்கும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது சீதா பிராட்டியார், தன்னை ராமபிரானுடன் சேர்த்து வைத்த அனுமனுக்கு பரிசு தர விரும்பினார். ராமபிரானின் அனுமதியுடன் தன் கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலையை பரிசாக வழங்கினார். அனுமன் அந்த மாலையில் இருந்த முத்துக்களை பிய்த்து ஒவ்வொன்றாக கடித்துத் துப்பினார். அதைக் கண்ட சீதா பிராட்டியார், தான் அன்புடன் கொடுத்த மாலையை அனுமன் இப்படி கடித்துத் துப்புகிறாரே என்று ராமபிரானிடம் முறையிட்டார். உடனே ராமபிரான் அனுமனைப் பார்த்து, ''ஆஞ்சநேயா, பிராட்டியார் கொடுத்த மாலையை அணிந்துகொள்ளாமல், ஏன் இப்படி கடித்துத் துப்புகிறாய்?'' என்று கேட்டார். அதற்கு ஆஞ்சநேயர், ''பிரபோ, தங்கள் திருநாமத்தை உச்சரிக்கும்போது என்னுடைய நாவெல்லாம் இனிக்கும். இந்த முத்துக்களிலும் அப்படி ஒரு ருசி இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றுகூட ருசியாக இல்லை. அதனால்தான் துப்புகிறேன்'' என்றார். அப்படிப்பட்ட அனுமனுக்கு என்ன பரிசுதான் ஈடாகும் என்று சிந்தித்த ராமபிரான், அனுமனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார். தன் இதயத்தில் பிராட்டியுடன் ராமபிரான் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காக அவர் தன்னுடைய மார்பை பிளந்துகாட்டியதாகவும் சொல்லப்படுவது உண்டு.