Announcement

Collapse
No announcement yet.

கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்&a

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்&a

    Submitted by Right Mantra Sundar


    மார்கழி மாதத்துக்கு எத்தனை சிறப்பு உள்ளதோ அதே அளவு கார்த்திகை மாதத்துக்கும் உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது திருவண்ணாமலை மகாதீபம் தான். ஆனால், இக்கார்த்திகை மாதத்திற்கு வேறு பல சிறப்புகளும் உண்டு. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஜதீகம். அதே போன்று நினைத்தாலே முக்தியளிக்க கூடியது திருவண்ணாமலை. திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிக்க செல்ல முடியாதவர்கள் இங்கு கூறப்பட்டிருக்கும் திருவண்ணாமலையின் சிறப்பை படித்து பயன்பெறலாம். பண்டிகைகளின் சிறப்பு, தல வரலாறு, மாதங்களின் மகத்துவம் இவற்றை படிப்பது மிக மிக புண்ணியம் தரக்கூடியது.
    யாமறிந்த தகவல்களையும் இணையத்தில் திரட்டிய தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். படித்து முடிக்கும்போது மனம் ஒருவித அமைதி பெறுவதை நிச்சயம் உணர்வீர்கள்!


    திருமண மாதம்


    விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.


    கார்த்திகை மாத மகிமை





    கார்த்திகைக் கடவுள்



    தெய்வங்களுக்குரிவையாக ஒவ்வொரு நட்சத்திரங்கள் திகழும் ஆனால் முருகப் பெருமானுக்கு மட்டும் இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். விசாக நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும்தான். அந்த இரு நட்சத்திரங்கள் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று.
    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாகத் தோன்றிய சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.
    அதிலும் விருச்சிக மாதமாகிய கார்த்திகைத் திங்களில் பெளர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. எனவே கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை விரதமிருந்து கார்த்திகையனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கப் பெறுவர்



    சபரிமலை மாலை அணிதல்


    கார்த்திகை மாதம் பிறந்தவுடன் மாலை அணி விழா நடத்தப்படுகிறது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கப்படுகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதனால் இம்மாதம் ஸ்ரீ ஐய்யப்பனுக்கு உரிய மாதமாகவும் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது.


    கார்த்திகை பெளர்ணமி



    கார்த்திகை பெளர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. ஆகவே அன்றைய தினம் மற்ற பெளர்ணமி தினத்தை விட நிலவின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும். அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.
    கார்த்திகை பெளர்ணமி தினத்தன்று பெரும்பாலும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரக் காணலாம். கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது.
    சுபமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பெளர்ணமியில், நல்ல நட்சத்திர சக்தி கொண்ட கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வருவதால் இது ‘பெரிய கார்த்திகை’ எனப்படுகிறது. எனவே இவ்வளவு சிறப்புப் பெற்ற கார்த்திகை மாதத்தில் உள்ள விரத முறைகளை அனுஷ்டித்து வாழ்வில் வளம் பல பெறுவோமாக.



    கார்த்திகை மாதம் விளக்கேற்றும் முறை


    எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.


    கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.


    எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?


    ஊருக்கு முன் விளக்கேற்றினால் உயர்ந்த குடியாகும் என்று ஒரு பழமொழியே உள்ளது.


    சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.


    கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும்


    கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
    ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
    ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
    நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.






    கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது



    விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
    சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
    அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
    காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
    பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
    குளம்போல எண்ணெய் விட்டு
    கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
    ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
    வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
    மாளிகையில் சோதியுள்ள
    மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
    மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
    சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
    பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
    பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
    கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
    புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
    அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
    சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
    வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
    முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
    உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
    பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
    சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
    கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
    மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
    கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
    தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
    காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
    மங்கள நாயகியை மனங்குளிர
    கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
    அன்னையே அருந்துணையே
    அருகிருந்து காரும் அம்மா
    வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
    தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
    மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்!!





    திருவண்ணாமலையின் பெருமை


    காந்தமாய் ஈர்க்கும் மலை


    information

    Information

    இந்தியாவில் உள்ள சிவத்தலங்களில் 68 தலங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவற்றில் காசி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகியவை அடங்கும். ஆனால், மற்ற தலங்களுக்கு சென்று வந்தால்தான் புண்ணியம். அண்ணாமலையை நினைத்தாலே போதும்.. முக்தி கிடைத்துவிடும் என்பது ஐதீகம். ஒருவர் ஒருமுறை இந்த தலத்திற்கு சென்றுவிட்டால், அவர் மீண்டும் மீண்டும் இந்த தலம் நோக்கி வருவார் என்று சொல்வர். அப்படி ஒரு காந்த சக்தி இந்த மலைக்கு உண்டு. அதனால் இந்த மலையை “காந்தமலை’ என்றும் “அருள்சக்தி மலை’ என்றும் அழைப்பார்கள்.









    திருவண்ணாமலையின் உயரம்


    notice

    Notice

    திருவண்ணாமலை 2665 அடி உயரம் கொண்டது என்பது பழைய தகவல். அரசு தகவலின்படி இது 2748 அடி உயரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள கோயில் மிகவும் பழமையானது. கிளிக் கோபுரம் 1191ம் ஆண்டு உருவானது. இதன் அருகில் உள்ள தீப தரிசன மண்டபம் 1202ம் ஆண்டில் கட்டப்பட்டது. 1230ல் இங்குள்ள பிரம்ம தீர்த்தம் தோன்றியிருக்கிறது. இதை ஒரு காலத்தில் பெருமாள் தடாகம் என்று அழைத்தனர். மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி இந்த ஊருக்கு ஒரு ஏரியை வெட்டித்தந்தார். திருவண்ணாமலைக்கு குடிநீர் தரும் இந்த ஏரியை “சமுத்திரம் ஏரி’ என்பார்கள்.





    திருவண்ணாமலையின் வயது




    திருவண்ணாமலை மிகப்பழமையான மலை. இதன் தற்போதைய வயது 260 கோடி ஆண்டுகள். இது, உலகிலேயே மிகப்பழமையான மலை என்பதற்கு விஞ்ஞான சான்றும் இருக்கிறது . 1949, ஜனவரியில் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில், டாக்டர் பீர்பால் சகானி என்பவர் இந்த தகவலைத் தெரிவித்தார். மற்ற தலங்களில் மலைமேல் கடவுள் இருப்பார். ஆனால், இங்கு மலையே கடவுளாக வணங்கப்படுகிறது. திருவண்ணாமலை மூலவரின் பெயரும் “அருணாசலேஸ்வரர்’ என இருக்கிறது. “சலம்’ என்றால் “மலை’.
    பழமையான கார்த்திகை தீப விழா


    கார்த்திகை தீப விழா மிகவும் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் “வேலினொக்கிய விளக்கு நிலையும்’ என்று இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்த விளக்கு ஏற்றப்பட்டதாக நச்சினார்க்கினியர் என்னும் புலவர் உரை எழுதி இருக்கிறார். சமண மத நூல்களிலும் கார்த்திகை தீப விழா பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியமான முத்தொள்ளாயிரத்தில் இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளதிலிருந்து இதன் பழமை தெரியவருகிறது.



    ஆறுவிரல் ரகசியம்


    திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர் முருகபக்தர் ஆவார். அவருக்கு கையில் ஆறு விரல்கள் இருந்தன. முருகப்பெருமானின் ஆறு தலைகளையும் அவருக்குரிய சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும் நினைவுறுத்துவதுபோல் இந்த அமைப்பு இருந்தது. அருணகிரிநாதர் கால்களை சற்று உயர்த்தி நடப்பார். இது மயிலின் நடைபோல இருக்கும். முருகப்பெருமானின் வாகனம் மயில். தன்னை முருகனின் சுமை தாங்கியாக கருதிக்கொண்டதால் தான் அருணகிரியாருக்கு, இம்மாதிரியான நடை அமைந்ததாக சொல்வதுண்டு.






    அண்ணாமலையின் சிறப்பு


    திருவண்ணாமலை திருத்தலம் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. மலையின் சுற்றளவு 14 கி.மீ. உத்தேசமாக 8 மைல். மலைவழிப் பாதையில் உள்ள லிங்கங்களும் 8. பொதுவாக மலை என்றால் கொடிய விலங்குகளும் செடி கொடிகளுமாகக் காட்சியளிக்கும். இப்படி இங்கே எதுவும் இல்லை. இங்கே தீர்த்தங்களும், சுனைகளும், குகைகளுமே உள்ளன. அவற்றில் விருப்பாட்சி குகை, நமச்சிவாய குகை, பவளக்குகை ஆகியவை முக்கியமானவை. பீமதீர்த்தம், பாத தீர்த்தம் ஆகியவை புனிதமானவை. மயிலாடும்பாறை, ஆமைப்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பாறைகளும் இங்குள்ளன. அல்லிச்சுனை, அரளிச்சுனை, அத்திமரச்சுனை ஆகியவற்றில் நல்ல நீர் உள்ளது. நோய் போக்கும் மூலிகைகளும் நிறைந்துள்ளன. மலையின்மேல் குகை நமச்சிவாயர் கோயில், பச்சையப்பன் கோயில், அரவன் கோயில் ஆகியவையும் உண்டு. இதனால்தான் ஏராளமான சித்தர்களும் முனிவர்களும் இந்த மலையில் வசித்தனர். இப்போதும் பல சித்தர்கள் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது.
    லிங்கமே மலையாக அமைந்த மலை, தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம், பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது ஆகும். நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். நான் என்ற அகந்தை அழிந்த தலம் இது. உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் இது.
    பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம்.அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் திருவண்ணாமலை.

    கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை
    கிரிவலம்


    மலைமேல் இருந்து அருணாசலர் ஆலயம் கார்த்திகை தீபப் திரு நாள் அன்று தான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன்இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான். இந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான மிகுந்த புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.

    மலையின் பெருமை


    இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது.
    .
    ராஜ கோபுரம்


    கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
    (ஆக்கத்தில் பெரிதும் உதவிய தளங்கள் : தினமலர்.காம், தினகரன்.காம்)
    ===========================================================
    - See more at: http://rightmantra.com/?p=7979#sthash.Ef9L6prT.dpuf
    November 16, 2013 Post is reproduced on the occasion Tiruvannamalai Deebaththiruvizha on 05-12-2014
    Last edited by soundararajan50; 03-12-14, 13:48.
Working...
X