Announcement

Collapse
No announcement yet.

ஆறாவது அவதாரம்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆறாவது அவதாரம்!

    பரசுராமர், மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம். தன் மனைவி, ஒரு கந்தர்வனை ஏறிட்டு பார்த்து விட்டாள் என்பதற்காக, ஜமத்க்னி முனிவர், தன் மகன் பரசுராமரை அழைத்து, 'உன் தாயைக் கொன்று வா...' என உத்தரவிட்டார். தந்தையின் கட்டளைக்கு கீழ்படிவதே மகனின் கடமை என்பதை உலகிற்கு உணர்த்த, தாயைக் கொன்றவர் பரசுராமர். பிறகு தந்தையிடமே வரம் பெற்று தாயை பிழைக்க வைத்தார். சகல கலைகளையும் கற்றவர்; அஸ்திரம் பிரயோகிப்பதில் இவருக்கு நிகர் யாருமில்லை. இவரது ஆயுதம், 'பரசு' (கோடரி) என்பதால், பரசுராமர் என்று பெயர் பெற்றார்.
    தன் தந்தை ஜமத்க்னி முனிவரை, அரசன் ஒருவன் கொன்றான் என்பதற்காக, ஒட்டு மொத்த அரச வம்சத்தையும் வேரோடு அழிக்க சபதம் எடுத்தார். இந்நிலையில், ராமனும் மன்னர் குடும்பத்தில் இருந்து வர, வந்திருப்பது மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரம் என்பதை உணர்ந்த பரசுராமர், தன்னிடமிருந்த அஸ்திரங்களையும், வில்லையும் அவரிடம் ஒப்படைத்து, தவம் செய்ய சென்று விட்டார்.
    தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக, பல தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தவர், கடைசியாக, திருவனந்தபுரம் அருகிலுள்ள திருவல்லம் என்ற தலத்துக்கு வந்து, கரமனை ஆற்றில் நீராடினார். அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை, அங்கேயே பிரதிஷ்டை செய்து, தவம் செய்து, தோஷம் நீங்கப் பெற்றார். இதையடுத்து, திருவல்லத்தில் பரசுராமருக்கு கோவில் அமைக்கப்பட்டது.
    இங்கே அவரது பாதம் பொறித்த பீடத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது. பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் உள்ள விக்ரகம் எழுப்பப்பட்டுள்ளது. இங்குள்ள சிவபெருமானை, பரசுராமரும், வேதவியாசரை, விபாகரண முனிவரும், பிரம்மாவை, ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
    கல்வியில் சிறந்து விளங்க, வேதவியாசருக்கு விசேஷ பூஜை செய்கின்றனர். தமிழகத்தில் திருக்கடையூரில் நடைபெறுவதை போல, இங்கு ஆயுள்விருத்தி ஹோமங்களும் நடைபெறுகின்றன. ஆதிசங்கரர் தன் தாய் ஆரியாம்பாளுக்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்ததால் இதை, 'தட்சிண கயை' என்கின்றனர். அமாவாசை நாட்களில் பக்தர்கள் பிதுர் தர்ப்பணம் கொடுக்க பெருமளவில் கூடுகின்றனர்.
    'வல்லம்' என்றால் தலை. முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மனாப சுவாமியின் தலைப்பகுதி, இத்தலம் வரை நீண்டிருந்ததால், இத்தலம் திருவல்லம் எனப்பட்டது. திருவனந்தபுரம் பத்மநாபரை பிரதிஷ்டை செய்த வில்வமங்களம் சாமியின் வழிபாட்டால், பெருமாளின் உருவம் தற்போது உள்ள அளவுக்கு சுருங்கி விட்டதாக தல வரலாறு கூறுகிறது.
    திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில், திருவல்லம் பரசுராமர் கோவில், இதன் அருகிலுள்ள திருப்பாதம் மகாதேவர் கோவில் ஆகிய தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மிகுந்த புண்ணியம் தரும். திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் செல்லும் வழியில், 5 கி.மீ., தூரத்தில் திருவல்லம் பரசுராமர் கோவில் உள்ளது.


    தி.செல்லப்பா
Working...
X