Announcement

Collapse
No announcement yet.

நாரதருடன்..

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாரதருடன்..

    நாரதருடன்..
    விசுவாமித்திரரின் மகன் அஷ்டகன் ஒரு யாகம் நடத்தினான். அந்த யாகத்திற்கு பல அரசர்கள் சென்றனர். யாகம் முடிந்த பின் அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமனஸ், சிபி ஆகிய நான்கு அரசர்களும் ஒரு தேரில் ஏறி ஒன்றாகப் பயணித்தனர்.
    அப்போது அவர்கள் எதிரே வந்தார் நாரதர். தேரை நிறுத்தி விட்டு, அந்த நால்வரும் மரியாதை செலுத்தினர். நாரதரையும் அத்தேரில் வரும்படி அழைத்தனர். அவர்களின் வேண்டுதலை ஏற்று, நாரதரும் தேரில் ஏறிக் கொண்டார். செல்ல வேண்டிய பாதையில் தேர் பயணித்தது. அப்போது நான்கு அரசர்களில் ஒருவர் நாரதரிடம், ""அரசர்களாகிய நாங்கள் நால்வரும் புகழுடன் விளங்கக் கூடியவர்கள். நீங்களோ மகரிஷி. இப்போது நம் ஐவரில் நால்வர் மட்டுமே சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை விதித்தால், நம்மில் தேரை விட்டு முதலில் இறங்க வேண்டிய நபர் யார்?'' என்று கேட்டார்.
    உடனே நாரதர், ""அஷ்டகன் இறங்க வேண்டும்,'' என்றார்.
    ""ஏன்? என்ன காரணம்?'' என்று வினா எழுப்பியவரே, அதற்கான காரணத்தை அறிய முற்பட்டார்.
    ""நான் அவன் அரண்மனையிலிருந்த போது ஆயிரக்கணக்கான பசுமாடுகளைப் பார்க்க நேர்ந்தது. இவை தன்னால் தானம் செய்யப் பட்டவை என்று பெருமையுடன், அவற்றைக் காண்பித்தான் அஷ்டகன். தன்னைத் தானே புகழ்ந்து கொண்டதால் அவன் சொர்க்கத்திற்குப் போக அருகதை அற்றவனாகிறான். ஆகையால், அவன்தான் இறங்க வேண்டும்,'' என்றார் நாரதர்.
    ""சரி மீதி இருக்கும் நால்வரில் மூவர் மட்டும் சொர்க்கம் செல்ல வேண்டும் எனில் அதில் இறங்க வேண்டியவர் யார்?'' என்று மற்றொரு அரசர் கேட்டார்.
    நாரதர் யோசிக்காமல், ""பிரதர்த்தனன்!'' என்றார்.
    ""காரணத்தையும் நீங்களே சொல்லி விடுங்கள்?'' என்றனர் உடன் பயணித்தவர்கள்.
    ""நான் இவன் அரண்மனைக்கும் சென்று வந்திருக்கிறேன். ஒருமுறை மூன்று குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் நானும், பிரதர்த்தனனும் பயணம் செய்தோம். அப்போது வழியில் ஒருவர் பின் ஒருவராக மூன்று பெரியவர்கள் இவனிடம் வந்து ஒவ்வொரு குதிரையை தானமாகக் கேட்டனர். அரசனும் குதிரையைக் கொடுத்து விட்டால் தான் எப்படி அரண்மனை போய் சேர்வது என்று யோசிக்காமல், அம்மூவருக்கும் குதிரைகளைக் கொடுத்து விட்டான். குதிரைகளை தானமாக கொடுத்த பிறகு வண்டி இழுக்க குதிரைகள் இல்லாததால், தேரில் என்னை உட்கார வைத்து, தேரை அவனே இழுத்துச் சென்றான்.
    ""இப்படிப்பட்ட பெருமைக்குரிய செயலை செய்தவன், தேரை இழுத்துச் செல்லும் போது, ""வரவர பெரியவர்களுக்கு எதை தானமாகக் கேட்பது, எதை கேட்கக் கூடாது என்று அறிவு சிறிது கூட இல்லாமல் போய் விட்டது'' என்று புலம்பியவாறே தேரை இழுத்துச் சென்றான்.
    ""தானம் கொடுத்த பிறகு அதை மறந்து விட வேண்டும். ஆனால், அவன் கொடுத்த தானத்தையும், அதைப் பெற்றவர்களையும் குறை கூறியபடி சென்றதால் அவன் சொர்க்கம் செல்லும் தகுதியை இழக்கிறான்...'' என்று கூறினார்.
    ""மீதியிருக்கும் மூவரில் அடுத்து இறங்க வேண்டியவர் யார்?'' என்றனர் நாரதருடன் பயணித்தவர்கள்.
    ""வசுமனஸ் இறங்க வேண்டும்,'' என்ற நாரதர் தொடர்ந்து.
    ""வசுமனஸிடம் உயர்ந்த ரதம் ஒன்று இருந்தது. அதை ஒருவன் தானமாகக் கேட்டான். அதற்கு வசுமனஸ், "ரதத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் இல்லை, அது எல்லாருக்கும் பொதுவானது. பொதுவான ஒன்றை நான் எப்படி உங்களுக்கு தானமாக வழங்க முடியும்?' என்று கேட்டான்.
    ""சிறிது காலம் சென்றபின் கேட்டபோது, "அது தெய்வத்திற்கு அர்ப்பணம் செய்யப் பட்டது. அதைத் தர முடியாது' என்று கூறினான். மேலும் சில காலம் சென்றபின் கேட்டபோதும், அதே பதிலையே சொன்னான்.
    ""தானமாகக் கேட்கப்பட்ட பொருளை கொடுக்க மனமில்லாமல் நயமாகப் பேசினான். ஆனால், தான் தானம் வழங்குவதில் நியாயவான் போல் சாமர்த்தியமாக நடந்து வந்தவர்களை அனுப்பி வைத்து விட்டான். தானமும் தரவில்லை. இப்படி யாசிப்பவர்களுக்குக் கூட கணக்குப் பார்த்து அவன் நடந்து கொண்டதால், சொர்க்கத்திற்கு செல்லும் தகுதியை அவன் இழக்கிறான்,'' என்று பதிலுரைத்தார் நாரதர்.
    ""சிபியும், நீங்களும் மட்டும் இருக்க, அடுத்ததாக சொர்க்கம் செல்லாமல் இறங்க வேண்டியவர் யார்? என்றனர்.
    ""நான்தான்!'' என்றார் நாரதர்.
    ""சிபி என்னை விட உயர்ந்தவன். அவன் தானம் செய்தபோது பெயருக்கும், புண்ணியத்திற்கும் ஆசைப்பட்டு தானம் செய்யவில்லை. புறாவை காப்பாற்றும் பொருட்டு தன் உடல் பாகங்களை ஈந்ததால் அவன்தான் சொர்க்கம் செல்ல வேண்டியவன். நான்தான் இறங்க வேண்டியவன்,'' என்று முடித்தார் நாரதர்.
    பலன், நன்மை கருதி செய்யாமல், செய்யும் உதவியே புண்ணியத்திலும், சொர்க்கத்திலும் சேர்த்துக் கொள்ளப்படும் என்பதை இக்கதையின் வாயிலாக உணர்ந்து கொள்ளலாம்.
    ***
Working...
X