Announcement

Collapse
No announcement yet.

ப்ரதோஷ வழிபாடு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ப்ரதோஷ வழிபாடு

    பிரதோஷ வரலாறு: இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக , வெப்பமுடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது. திசை தோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷவேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திருக்கயிலாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.
    தஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்கடலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டவர்! நாங்கள் அடிமைகள், தேவரீர் உடையவர். நாங்கள் உடைமைகள். நாங்கள் பாற்கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது. தேவரீருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தனர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்களைத் காத்தருளக் கோரித்துதித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடிவான கண்ணுதற் கடவுள் தமது அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வாய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதி வானவர்களால் அணுகமுடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத்திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணாமூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம்பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத்தை அடியவர்களாகிய அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த விடம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும். ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார். அதனால் செம்மேனி எம்மானுடைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இது கார்த்திகை மாதச் சனிப்பிரதோஷ காலமாகும். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.
    சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா? என்று நாலம் வா என்று ஒரு பாடலை ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத் திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம விஷ்ணு இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங்கே? வேந்தனுயர் வாழ்வெங்கே? இந்திரன் செங்கோலெங்கே? வானோர் குடியெங்கே? கோலஞ் செய் அண்டங்கள் எங்கே? எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்? என்கிறார் வடலூர் வள்ளலார்.
    பரவி வானவர் தானவர் பலரும்
    கலங்கிட வந்த விடம்
    வெருள உண்டு கந்த
    அருள் என் கொல்? விண்ணவனே
    கரவின் மாமணி பொன் கொழித்திழி
    சந்து காரகில் தந்து பம்பை நீர்
    அருவி வந்தலைக்கும்
    ஆமாத்தூர் அம்மானே - திருஞானசம்பந்தர்

    இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.
    மீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலைக் கடையுமாறு பணித்தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன்போலவே கடலைக்கடையத் தொடங்கினார்கள். பாற்கடலிருந்து இலக்குமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைச்ரவம் முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. இலக்குமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். ஏனைய பொருட்களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை, தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும் பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.
    பிரதோஷம்: மறுநாள் திரயோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள். பரமகருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கயிலையில் அன்று மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை) பிரதோஷ வேளையில் சிவபெருமான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூலத்தைச் சுழற்றி, நந்தி தேவரின் இரண்டு கொம்புகளிடையே ஒரு யாமம் நடனமாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலைமகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தாண்டவமாடினார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடை வழியாக ஈசனிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடனமாடினார். தேவர்கள் அதனைத்தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள்.
    அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேரமாயிற்று. அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம்.
    ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம்.

    சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும்.
    தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.
    பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.
    ஐந்து வகைப் பிரதோஷம் : 1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர் உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.
    2. பட்சப் பிரதோஷம்: இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.
    3. மாதப் பிரதோஷம்: இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
    4. மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)
    5. பிரளயப் பிரதோஷம்: இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.
    பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?
    பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும். வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்.
    பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல்லோரும் பெறுவோமாக !
    விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.


    பிரதோஷ பூஜை அன்று முக்கிய அபிஷேகப் பொருட்களும் பலனும்
    1. அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
    2. தயிர் கொடுத்தால் - பல வளமும் உண்டாகும்
    3. தேன் கொடுத்தால் - இனிய சாரீரம் கிட்டும்
    4. பழங்கள் கொடுத்தால் - விளைச்சல் பெருகும்
    5. பஞ்சாமிர்தம் தந்தால் - செல்வச் செழிப்பு ஏற்படும்
    6. நெய் கொடுத்தால் - முக்திப் பேறு கிட்டும்
    7. இளநீர் தந்தால் - நல்ல மக்கட்பேறு
    8. சர்க்கரை கொடுத்தால் - எதிர்ப்புகள் மறையும்
    9. எண்ணெய் தைலம் கொடுத்தால் - சுகவாழ்வு
    10. சந்தனம் கொடுத்தால் - சிறப்பான சக்திகள் பெறலாம்
    11. மலர்கள் கொடுத்தால் - தெய்வ தரிசனம் கிட்டும்

    பிரதோஷ பூஜையின் மகிமைகள்
    மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜென்மம் எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.
    பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்
    1. துன்பம் நீங்கி - இன்பம் எய்துவர்.
    2. மலடு நீங்கி - மகப்பேறு பெறுவர்
    3. கடன் நீங்கி - தனம் பெறுவர்
    4. வறுமை ஒழிந்து - செல்வம் சேர்ப்பர்
    5. நோய் நீங்கி - நலம் பெறுவர்.
    6. அறியாமை நீங்கி - ஞானம் பெறுவர்
    7. பாவம் தொலைந்து - புண்ணியம் எய்துவர்
    8. பிறவி ஒழித்து - முக்தி அடைவர்

    மஹா பிரதோஷம்: ஐந்து வருட பலன் சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வருடம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹாபாதகம் ஏற்படும். இந்த மஹா பாதகத்தை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.
    பலன்கள்: ஒரு வருட பலன் சனிக்கிழமை தவிர மற்ற கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அன்று முழுவதும் உபவாசம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய்தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் ஆலயம் சென்று வழிப்பட்ட பலன் கிட்டும்.
Working...
X