Announcement

Collapse
No announcement yet.

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

    வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இறைவனுக்கு இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர் தன் அருளை உணர்த்துகிறார். அதை உணர்வோர் உயர்வு பெறுகின்றனர்; உணராதவர்களோ கடவுளை நிந்திக்கின்றனர்.
    பாண்டு மன்னர் இறந்த பின், பாண்டவர்களும், குந்தி தேவியும் அஸ்தினாபுரம் வந்தனர். அப்போது, நடந்த வரலாறு இது:
    அஸ்தினாபுர மாளிகையில், கவுரவர்களும், பாண்டவர்களும் ஒன்றாக வளர்ந்து வந்தனர். இந்நிலையில், பீமனின் பொலிவும், ஆற்றலும் துரியோதனனை பயம் கொள்ளச் செய்தன. அதனால், பீமனைக் கொலை செய்யும் தீய எண்ணம் அவன் மனதில் எழுந்தது.
    அதை செயலாற்ற, பற்பல விதங்களில் கொலை முயற்சி செய்தும், ஒன்றும் பலிக்கவில்லை.
    இந்நிலையில், கங்கையில், பிரமாணகோடி என்ற பகுதியில், தினமும் பீமன் குதித்து குளிப்பதாக அறிந்தான் துரியோதனன். உடனே, ஆட்களை அனுப்பி, பீமன் குதிக்கும் இடத்தில், தண்ணீருக்குள், வெளியே தெரியாதபடி கூர்மையான ஈட்டிகளை நடச் செய்தான்.
    விஷம் தோய்ந்த அந்த ஈட்டிகள், பீமன் குதிக்கும் போது அவன் உடலில் குத்தும். உடனே பீமன் இறந்து விடுவான் என்பது அவனது எண்ணம்.
    அவனுடைய வஞ்சனையை அறியாத பீமன், வழக்கப்படி நீராடப் போனான். குளிக்கப் போகும் அவன், திரும்ப மாட்டான் என்று எண்ணி, குதூகலித்தான் துரியோதனன்.
    பிரமாணகோடி பகுதியில் நீரில் குதிக்கத் தயாராக இருந்தான் பீமன். அப்போது அங்கே வந்த கண்ணன், 'என்ன பீமா... நீராடப் போகிறாயா... நீ குதிக்கப் போகும் இடத்தில், நீருக்கு மேலாக ஏதோ பரவி பறக்கிறது பார்...' என்றார்.
    உற்றுப் பார்த்த பீமனும், 'ஆமாம்... ஏதோ நீர் வண்டுகள் போல இருக்கின்றன...' என்று கூறியவன், வண்டுகளின் மீது கருணை கொண்டு, அவை பறக்கும் பகுதியை தாண்டி குதித்து, நீராடி, கரை ஏறினான்.
    தண்ணீருக்கு அடியில் துரியோதனன் நட்டு வைத்திருந்த விஷம் தோய்ந்த ஈட்டிகளின் மேற்பரப்பில் தான், அந்த வண்டுகள் பறந்தன. கண்ணன் அதை குறிப்பிட, அதை மீறாத பீமன், கண்ணனின் கருணையினால் உயிர் பிழைத்து, உயர்வு பெற்றான்.
    ஆனால், இதே கண்ணன், யுத்தம் வேண்டாம் என, நேருக்கு நேராக வந்து தெளிவாக சொல்லியும், துரியோதனன் கேட்கவில்லை; இதனால், என்ன ஆனதென்று நமக்குத்தான் தெரியுமே! இறைவன் நம்மை காக்கக் தவறுவது இல்லை; நாம் தான் இறைவன் சொல்லை கேட்பது இல்லை.


    பி.என்.பரசுராமன்


    திருமந்திரம்!
    ஏழ சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
    சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
    சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
    அற்புத மேதோன்ற லாகுஞ் சற்சீடனே
    பொருள்: நற்குணம், உண்மை, இரக்கம், அறிவு, பொறுமை, குருநாதரை நீங்காது இருத்தல், தெளிந்த ஞானம் மற்றும் அருளுதல் எனும் குணங்களைக் கொண்டவனே நல்ல சீடன்!
Working...
X