Announcement

Collapse
No announcement yet.

கவிதைச்சோலை!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கவிதைச்சோலை!

    காலத்தை வென்ற கலாம்!


    மலர்களுக்கு சிரிப்பைத் தந்தாய்
    மாணவர்களுக்கு கனவு தந்தாய்
    குழந்தைகட்கு அன்பைத் தந்தாய்
    இளைஞருக்கு எழுச்சி தந்தாய்
    மதம் மொழி இனம் கடந்து
    மக்களை நேசித்தாய்!


    தலைமுறை தாண்டி
    மனிதர்(ம்) வாழ யோசித்தாய்
    அக்னிச்சிறகுகளை அனைவருக்கும்
    அணிவித்தாய்!


    உனக்கென எதையும் எண்ணாமல்
    விண்ணையும் மண்ணையும்
    உயிராய் கருதினாய்
    அதனால்தானோ என்னவோ
    உனதுடல் மண்ணுக்கு
    உயிர் விண்ணுக்கு!


    பூக்கள் சிரிக்கும் போது
    பூமி சிரிக்கிற தென்றலாய்
    உன் அஞ்சலிக்கு வந்த
    மண்ணில் மலர்ந்த மலர்கள் எல்லாம்
    புண்ணியம் பெற்றதாய் பேசிக்கொண்டன
    துக்கத்துடன்!


    விழிமடை உடைப்பெடுக்க
    விடை கொடுத்தோம் இப்போது
    ராமேஸ்வரம் கடலில் கரிப்பது
    உப்பல்ல...
    எங்களின் கண்ணீர்!


    தீபகற்ப இந்தியத்தாய் ஏங்குகிறாள்
    மீண்டும் உன்னை
    தன் கர்ப்பத்தில் தாங்கிக் கொள்ள!


    அணு ஆயுத சோதனையால்
    அகிலத்தையே வியக்க வைத்த நீ
    இறுதி வரை ஆராயவேயில்லை
    அன்பு கொள்பவருக்காய்
    ஆயுளை பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை
    கண்டிருந்தால்
    தந்திருப்போம் எங்கள் ஆயுளை
    இன்னும் வாழ்ந்திருப்பாய்
    பல கோடி ஆண்டு!


    அப்துல் கலாம்... நீ
    ஒற்றை வார்த்தையில்
    உருவான இந்தியக் கவிதை!


    எழுத எழுத முடிவில்லாமல் நீளும்
    உன்னைப் பற்றி
    தற்காலிகமாய் முடிக்கிறேன்
    வைக்காது விட்ட முற்றுப்புள்ளியுடன்!


    — ஜோதி பெருமாள்,
    புதுடில்லி.
Working...
X