Announcement

Collapse
No announcement yet.

தனிமையும் தியானமும்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தனிமையும் தியானமும்!

    ஏசுநாதர், ஜனகமஹாராஜர் மற்றும் பலர் இவ்வுலகில் இருந்துகொண்டே ஆத்மீக சாதனை செய்து ஆத்மானுபூதி அடைந்தனர். உலகின் மூலமாகவே உண்மையை உணர வேண்டும் என்பதே கீதையின் நடுநாயகமான போதனை. இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் பெரும் பகுதி மக்களால் செய்யத்தக்கதன்று. சொல்லுதல் எளியது. ஆனால் செய்வது கடினம். எத்தனை ஜனகர்களும் ஏசுநாதர்களும் தோன்றியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் உண்மையில் யோகப்பிரஷ்டர்கள். பெரும்பான்மை மக்களுக்கு இது அசாத்தியமானதொன்றாகும். ஏசுநாதர் பதினெட்டு வருடங்கள் மறைவில் இருந்தார். புத்தர்பிரான் எட்டு வருடம் உருவலாக் காட்டில் தனித்திருந்தார். சுவாமி ராமதீர்த்தர் இரண்டு வருடங்கள் பிரம்மபுரி (இமாலயம்) காட்டில் ஏகாந்தமாக வாழ்ந்தார். செயல்களுக்கு நடுவிலேயே ஆத்மானுபூதியைப் பெற வேண்டுமெனத் தெரிவித்த அரவிந்தர் இருபது வருடங்களுக்கு மேல் தனி அறையினுள் தனித்திருந்தார். சாதனைக் காலங்களில் பலரும் ஏகாந்தத்தையே போற்றியுள்ளனர். உலகில் இருந்து கொண்டே ஆரம்பத்தை ஏற்படுத்தலாம். ஆனால் சிறிது முன்னேறியதும், ஆத்மீக அலைகளும் தனிமையும் கொண்டதோர் பொருத்தமான இடத்தை உயர் சாதனைகளுக்காக நீங்கள் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். இளமையில் மதக்கட்டுப்பாடின்மை, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மதபோதனையின்மை, உலகாயதச் செல்வாக்கின் ஆதிக்கம் இவை காரணமாக பலரிடத்திலும் இச்சா சக்தி பலம் குன்றி விட்டதால் இடைவிடாத ஜபம், தொந்தரவற்ற தியானம் முதலியவற்றைப் பயிற்சி செய்ய சில வாரங்கள், மாதங்கள், வருடங்களுக்கு ஏகாந்தமாகச் செல்வது அவர்களுக்கு இன்றியமையாத தொன்றாகும்.
    மௌனத் தியானத்தினால் பொங்கி எழும் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும், எழுச்சிகளையும், உணர்வுகளையும் சாந்தப்படுத்துங்கள். ஒழுங்காகவும், படிப்படியாகவுள்ள பயிற்சியினால் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளுக்குப் புத்துயிரூட்டலாம். உலகியல் தன்மை முழுவதையும் நீங்கள் தெய்வீக நிலைக்கு மாற்றலாம். நரம்பு மையங்கள், நரம்புகள், நரம்போட்டங்கள், தசைகள், பஞ்சகோசங்கள் உணர்ச்சிகள், எழுச்சிகள், உணர்வுகள் மீது தியானத்தின் மூலம் உயர்ந்த ஆதிக்கம் செலுத்தலாம். தம் மக்களை நல்வாழ்க்கையிலிருத்தியவர்களும், உத்தியோகத்திலிருந்து ஓய்வுபெற்றவர்களும், உலகத்தின்கண் எவ்விதப் பற்றுதலில்லாதவர்களும் தூய்மைக்காகவும், ஆத்மானுபூதிக்காகவும் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு ஏகாந்தத்திலிருந்து கடினத் தியானத்தையும், தபஸ்ச்சர்யத்தையும் அப்பியசிக்கலாம். இது உயர்கல்விக்காகக் கல்லூரியில் புகுதலைப் போன்றது. தவம் முடிந்த பின், ஆத்ம ஞானத்தை அடைந்த பின், அவர்கள் வெளிப்போந்து தங்களது அறிவையும் ஆனந்தத்தையும் பிறருடன் பகுத்துக்கொள்ள வேண்டும். தங்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றவாறு அவர்கள் சொற்பொழிவுகள், சம்பாஷணைகள், உரையாடல்கள், மௌன மன உரையாடல்கள் மூலம் ஆத்மீக அறிவைப் பரப்பலாம். விடுமுறை நாட்களிலோ, முழு நேர சாதகனால் வருடம் பூராவுமோ அல்லது வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்போ தன் வீட்டிலேயே ஏதாவது ஒரு தனித்த அறையில் அல்லது ஒரு புண்ணிய நதியின் கரையிலோ அமர்ந்து, ஆன்மீக ஆர்வமும் யோகத் தன்மைகளும் பொருந்தப்பெற்ற கிருஹஸ்தன் தியானத்தைப் பயிலலாம்.
    ஆழ்ந்த சாதனைக்குரிய ஆன்மீக வேட்கையுடன் கூடிய ஒரு கிருஹஸ்தராயிருந்து, தியானத்தில் பயிற்சி பெற ஏகாந்தத்தை நீங்கள் நாடுவீர்களேயானால், உங்கள் உறவினர்களுடன் உடனேயே உறவை அறுத்து விடுங்கள். திடீரென்று உலக ஆசாபாசங்களை உதறித் தள்ளுதல் உங்களுக்குத் தாங்க முடியாத துன்பத்தையும், உங்கள் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். படிப்படியாக நீங்கள் பந்தங்களை அறுத்தெறிய வேண்டியதிருக்கும். ஆரம்பத்தில் ஒரு வாரத்திற்கோ ஒரு மாதத்திற்கோ தனிமையாக இருங்கள். படிப்படியாகக் கால அளவை உயர்த்துங்கள். பின் அவர்கள் பிரிவினால் ஏற்படும் துன்பத்தை உணரமாட்டார்கள். அவா, ஆசை, பேராசை முதலியவற்றிலிருந்து ஒரு சாதகன் அகன்று நிற்றல் வேண்டும். பிறகே, அவன் நிøயான மனதைக் கொண்டிருப்பான். அவா, ஆசை, பேராசை முதலியவை மனதை எப்பொழுதும் நிலையற்றதாகவும், குழப்பம் பொருந்தியதாகவும் ஆக்குகின்றன. அவை சாந்திக்கும், ஆத்மஞானத்திற்கும் எதிரிகள். அவன் மிகுந்த உடைமைகளையும் கொண்டிருக்கக்கூடாது. தன் சரீரத்தைப் போஷிப்பதற்கு உண்டான பொருள்களையே அவன் பெற்றிருக்க வேண்டும். உடைமைகள் அதிகமாக இருக்குமேயானால், மனம் அப்பொருள்களைப் பற்றியும், அவைகளைக் காக்கும் விதத்தைப் பற்றியுமே எண்ணிக் கொண்டிருக்கும். ஏகாந்தத்தின் பொழுது தியானத்தில் சீக்கிரமாக முன்னேற விரும்புகின்றவர்கள் பத்திரிகைகள் படித்தல், குடும்பத்தினர், நண்பர்கள், உடைமைகள் முதலியவற்றைப் பற்றி எண்ணுதல் முதலியவை மூலம் உலகத்துடன் எவ்விதத் தொடர்பும் கொண்டிருத்தல் கூடாது.
    தன் தேவைகளைக் குறைத்தவன் எவனோ, உலகத்தின் பொருட்டு பற்றுதல் சிறிதும் எவனிடத்தில் இல்லையோ, பகுத்தறியும்பான்மை, வைராக்கியம், விடுதலைக்கான வேட்கை முதலியவைகளை எவன் கொண்டிருக்கிறானோ, மாதக்கணக்காக மௌனத்தை எவன் கடைப்பிடித்து இருக்கிறானோ, அவனால் தான் தனித்து இருக்கமுடியும். சாதகன் அமைதியே உருவாக அமைதல் வேண்டும். அமைதி மிகும் மனத்தில் தான் தெய்வீக ஒளி நின்று பிரகாசிக்கும். பற்றுதல்களை ஒழித்ததும் அமைதி உதயமாகிறது. அவன் பயமற்றவனாகவும் அமைய வேண்டும். இது மிக முக்கியமான தகுதியாகும். கோழைத்தனம் மிகும் பயம் மிக்க சாதகனொருவன் ஆத்மானுபூதிக்கு வெகு தொலைவிலிருக்கிறான். சாதகன் தனது சரீரத் தேவைகளைப் பற்றிக் கவலையுறுதல் கூடாது. எப்பொருளும் இறைவனால் அளிக்கப்படுகின்றன. இயற்கை அன்னையால் எல்லாம் முன்னாலேயே தயாரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லோருக்கும் வேண்டிய சரீரத் தேவைகளெல்லாவற்றையும் அவர்கள் செய்வதை விட மிகச்சிறந்த முறையில் அவள் கண்காணித்து வருகின்றனர். சீரிய முறையில் தேவைகள் என்ன என்பதை அவள் அறிந்து கொண்டு அவைகளை அவ்வப்பொழுது அளிக்கின்றாள். அன்னையின் மாயாஜால வழிகளை உணர்ந்து, தெளிவடையுங்கள். அவளது தனித்த இரக்க சுபாவம், கருணை, பரிவு முதலியவற்றிற்கு நன்றி பாராட்டுங்கள்.
    சுக்கிலம் நரம்புகளையும், மூளையையும் சீர்படுத்தி மண்டலத்தை ஊக்குவிக்கிறது. பிரம்மச்சரிய விரதத்தினால் சுக்கிலத்தைப் பாதுகாத்து ஓஜஸ சக்தியாக மாற்றிய ஒருவன் நீண்ட காலத்திற்கு ஒழுங்கான தியானத்தைப் பயிற்சி செய்யலாம். அவனே யோகம் என்ற ஏணியில் ஏறமுடியும். பிரம்மச்சரியமின்றி ஆன்மீக முன்னேற்றம் அணுவளவேனும் ஏற்படுவது அசாத்தியம். தியானம், சமாதி முதலிய உயர் கட்டிடங்கள் எழுப்பப்படுவதற்கு பிரம்மச்சரியமே அடித்தளமாகும். உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு, அறியும் தன்மையையும் இழந்து குருடர்களாகையில் உண்மையிலேயே ஒரு பெரிய ஆன்மீகப் பொக்கிஷமான இந்த ஜீவாதாரச் சக்தியைப் பலர் இழக்கின்றனர். அந்தோ! பரிதாபம் அவர்கள் நிலை! யோகத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் அவர்கள் அடையமுடியாது. தொடர்ந்த உண்மையான தியானத்தைச் செய்யத் தொடங்கும் முன் ஒழுங்கான பயிற்சியின் மூலம் சரீரத்தை அடக்கத் தெரிய வேண்டும். உறுதியான ஆசனமின்றி நீங்கள் தியானத்தைப் பயில முடியாது. சரீரம் ஒரு உறுதியான நிலையிலில்லாதிருந்தால் மனமும் நிலையில் நில்லாது. மனத்திற்கும் சரீரத்திற்கும் இடையில் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சரீரத்தை சிறிதளவேனும் அசைத்தல் கூடாது. அன்றாடப் பயிற்சியினால் நீங்கள் ஆசனத்தில் வெற்றி கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் சரீரம், தலை, கழுத்து முதலியவற்றை ஒரே நேர்கோட்டில் வைத்திருந்தால் முதுகெலும்பும் நேராக இருக்கும். சுஷும்னாவின் மூலம் குண்டலினி நேரடியாக மேலே கிளம்பும், நீங்கள் நித்திரையினால் ஆட்கொள்ளப்படமாட்டீர்கள். பிரத்யாகாரம் என்ற புலன்களை அடக்குதலாகிய பயிற்சியில் நீங்கள் நன்கு தேர்ச்சி பெற்று விளங்கினால் உங்கள் முழு ஆணையின் கீழ் புலன்களைக் கொண்டு விளங்கினால், சந்தடியும் சச்சரவும் மிகும் ஒரு பெரும் நகரத்திலாயினும் மாபெரும் சாந்தியை நீங்கள் காண்பீர்கள். புலன்கள் அடக்கப்படாமலும், புலன்களை அடைக்கும் திறன் உங்களிடம் இல்லாமலும் இருந்தால் சாந்தியின் உறைவிடமாகத் திகழும் இமயமலைக் குகைகளில் கூட சாந்தியை நீங்கள் அடையமாட்டீர்கள்! மனத்தையும் புலன்களையும் அடக்கிய யோகி ஒருவனால் தனித்த குகையில் மனச்சாந்தியை அனுபவிக்க இயலும். மனத்தையும் புலன்களையும் அடக்காத ஒரு காமுகன் ஒரு மலையின் தனித்ததோர் குகையில் வாசம் செய்யினும் ஆகாயக் கோட்டைகளையே கட்டிக் கொண்டிருப்பான்.
    நீங்கள் உங்கள் பார்வையை உங்கள் மூக்கு நுனிக்குத் திருப்பி, மனத்தை ஆத்மனிலேயே ஒன்றுபடச் செய்ய வேண்டும். அத்தியாயம் 25வது பாடலில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார் :- மனத்தை ஆத்மனிலேயே நிலைக்கச் செய்து, மற்றொன்றையும் எண்ணாது வாளா இருப்பீர்! புரூமத்திருஷ்டி அல்லது இருகண் புருவங்களுக்கு இடையிலும் பார்வையை நிலைக்கச் செய்தல் மற்றோர்விதப் பார்வையாகும். இது கீதையில் விவரிக்கப்படுகிறது. இவ்விதப் பார்வையில் மூடிய கண்களுடன் பார்வையை ஆஜ்ஞா சக்கரத்தை நோக்கித் திருப்புங்கள். திறந்த கண்களுடன் இதைச் செய்ய முற்படுவீர்களேயாகில் தலைவலி உண்டாக ஏதுவாகும். புறப்பொருள்கள் கண்களில் விழ நேரிடும்; மனச்சிதைவும் நேரிடலாம். கண்களுக்குத் தொந்தரவு கொடுக்காதீர்கள். மெதுவாகப் பயிலுங்கள். மூக்கு நுனியில் மனஒருமைப்பாட்டை நீங்கள் பயிலுங்கால், நறுமணமொன்றை அனுபவிப்பீர்கள். ஆஜ்ஞா சக்கரத்தில் பயிலுங்கால் திவ்யஜோதியைக் கண்டுகளிப்பீர்கள். உங்களுக்கு ஊக்கமளிக்கவும் ஆன்மீகப் பாதையில் உங்களை உந்தித் தள்ளவும், உயரிய பூவுலகத்திற்கும் உயரிய பொருட்களுக்கு உங்களை மாற்றவும் இது ஒரு அனுபவமாகும். இப்பொழுது உங்கள் பயிற்சியை நிறுத்திவிடாதீர்கள். பகவான் சிவனைத் தியானிப்பவர்களும், ஆஜ்யா சக்கரத்தில் மனத்தை ஒருமைப்படுத்துபவர்களுமாகிய பக்தர்களே யோகிகளாவார்கள். சிதறுண்ட மனத்தின் பற்பல கதிர்களை ஒன்று திரட்டி மனத்தை ஒரு நிலையிலிருக்கச் செய்யுங்கள். இடைவிடாது மனத்தைப் புலன்வழிப் பொருள்களிலிருந்து பின்னிழுத்து உங்கள் லக்ஷியத்தில் அதை நிலைக்கச் செய்யுங்கள். படிப்படியாக நீங்கள் மன ஒருமைப்பாட்டைப் பெறுவீர்கள். பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் பயிற்சியில் நீங்கள் வெகு ஒழுங்காக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் வெற்றியைப் பெற முடியும். மிகச்சிறந்த தேவைகளில் ஒன்று ஒழுங்குமுறையாகும். அன்றாடம் விசாரம், சுய ஆராய்ச்சி மூலமாக மனப் பழக்கவழக்கங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மனத்திற்குரிய விதிமுறைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பின், சுற்றித் திரியும் மனத்தைப் பிடித்து நிறுத்துதல் மிக எளிதாக இருக்கும். உலகப் பொருள்களை வெகு முயற்சியுடன் மறக்க முயற்சித்து தியானத்திலமருங்கால் ஒவ்வாத பல உலக எண்ணங்கள் உங்கள் மனதில் எழுந்து, தியானத்தைக் கலைக்கத் தலைப்படும். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பல வருடங்களுக்குமுன் நீங்கள் கொண்ட பல எண்ணங்கள், கடந்த கால இன்பங்களின் பழைய ஞாபகங்கள் முதலியன தோன்றி மனத்தைப் பல திசைகளிலும் சுற்றித் திரியவைக்க முயலும். அடிமனத்தில் படர்ந்திருக்கும் எண்ணங்கள் நினைவுகளது களஞ்சியத்தின் கள்ளக்கதவானது திறக்கப்பட்டு உள்ளேயிருக்கும் எண்ணங்களின் பண்டகசாலையின் மூடியானது தூக்கப்பட்டு தொடர்ந்து அருவிபோன்று எண்ணங்கள் பீறிட்டு வெளி வருவதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் அவற்றை எவ்வளவுக் கெவ்வளவு அடக்க முனைகின்றீர்களோ, அதற்கு இரட்டித்த மடங்கு திறனுடனும், வேகத்துடனும் அவை பொங்கியெழும்.
    அதைரியமடையாதீர்கள். நம்பிக்கையை ஒருபொழுதும் இழந்துவிடாதீர்கள். ஒழுங்கான இடைவிடாத தியானத்தினால் அடிமனத்தை நீங்கள் சுத்தம் செய்யலாம். தவிர, மற்ற எண்ணங்களையும் நினைவுகளையும் அடக்கியாளலாம். தியானத்தீயானது எல்லா எண்ணங்களையும் எரித்து விடும். இதில் உறுதிகொள்ளுங்கள். நஞ்சு கலந்த உலக எண்ணங்களை அழிக்கவல்ல சக்திமிகும் மாற்று மருந்தே தியானம். இந்த உண்மையை நினைவிலிருத்துங்கள். உள்ளே துருவி ஆராயும் போது ஒருவகையான எண்ணத்திலிருந்து மற்றொன்றிற்குள்ள மனத்தின் அதிவேகமான தாவுதலை நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மனத்தை செவ்வனே சீர்படுத்தவும், எண்ணங்களையும் மனச்சக்தியையும் தெய்வீகக் கால்வாயில் திருப்புவதற்குமான ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு இங்குதான் மறைந்து கிடக்கிறது. நீங்கள் எண்ணங்களை மறுமுறையும் சரிசெய்து புதிய சாத்வீக அடிப்படையில் புதிய தொடர்புகளை ஏற்படுத்தலாம். களைகளை அகற்றித் தூரே எறிந்து விடுதல் போன்று, உபயோகமற்ற உலகியல் எண்ணங்களை வெளியே நீங்கள் எறிந்து விடலாம். உங்கள் மனமாகிய தெய்வீகப் பூங்காவில் சீரிய தெய்வீக எண்ணங்களை நீங்கள் அபிவிருத்தி செய்யலாம். இது மிகவும் பொறுமையான வேலையாகும். உண்மையிலேய இது ஒரு பிரம்மாண்டமான வேலையாகும். திருவருளையும், இரும்பு போன்ற இச்சாசக்தியையும் கொண்ட தன்னில் நிலைத்த யோகிக்கு அது ஒரு பொருட்டன்று. அழியா ஆத்மனில் செய்யப்படும் தியானமானது வெடி வைத்துத் தகர்த்தெறியும் இயந்திரமாகும். தவிர அடிமனத்தில் எண்ணங்கள் பலவற்றையும் கடந்த கால நினைவுகளையும் அது வெடி வைத்துத் தகர்த்தெறிந்து விடும். எண்ணங்கள் உங்களை மிகவும் துன்புறுத்துமேயாகில் அடக்குமுறையினால் அவைகளை அடக்காதீர்கள். சினிமா பார்ப்பதைப் போன்று மௌனசாட்சியாக விளங்குங்கள். படிப்படியாக அவை அடங்கி விடும். பின் ஒழுங்கான மௌனத் தியானத்தின் மூலம் அவைகளை வேரோடு அறுத்தெறிய முற்படுங்கள். பயிற்சி இடைவிடாது தொடர்ந்து செய்யப்படல் வேண்டும். அப்பொழுதுதான் நிச்சயமாகவும் சீக்கிரமாகவும் ஒருவன் ஆத்மானுபூதியை அடையமுடியும். தினம் தினம் தியானத்தைச் சில நிமிடங்கள் மாத்திரம் விட்டு விட்டுச் செய்யும் ஒருவனால் யோகத்தில் எவ்விதப் பலனையும் அடையமுடியாது.
    உணர்ச்சிகளின்றிச் சூனியமாக விளங்கும் ஒருவனிடத்தில் எவ்வாறு புலனடக்கத்தைப் பரிசீலிக்க முடியும்? குகையில் ஏகாந்தத்தில் திகழும் யோக சாதகனொருவன் பூரண பக்குவத்திற்குப் பிறகு சந்தடி மிகும் சமவெளிகட்குச் சென்று தன்னைத் தானே சோதனை செய்து கொளல் வேண்டும். ஆனால் தினந்தோறும் தண்ணீர் ஊற்றிய பிறகு குளம் செடியொன்று வேர் விட்டு விட்டதா இல்லையா என்று பார்ப்பதற்காக மண்ணைத் தோண்டித் தோண்டிப் பார்த்த ஒருவனைப்போல் அந்தச் சாதகன் அடிக்கடித் தன்னை இவ்விதம் பரிசீலித்துக் கொள்ளவும் கூடாது. மனவடக்கம், புலனடக்கம் முதலியவற்றாலும் இடைவிடாத ஒழுங்கான தியானத்தினாலும், நீங்கள் எல்லோரும் யோகத்தில் வெற்றிபெற்று நிர்விகல்ப சமாதி அல்லது இறைவனுடன் பேரின்பக் கலப்பபைப் பெறுவீர்களாக.
Working...
X