Announcement

Collapse
No announcement yet.

Nambiyaandar Nambi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Nambiyaandar Nambi

    Courtesy:Sri.JK.Sivan


    நம்பியாண்டார் நம்பி


    நமக்கு ஒரு அதிர்ஷ்டம் என்னவென்றால் எங்கு திரும்பினாலும் எந்த ஊர் சென்றாலும் தமிழகத்தில் அது ஒரு சிறந்த க்ஷேத்ரம். யாரோ ஒரு மகான் சம்பந்தப் பட்டதாக தான் இருக்கும். கும்பகோணம், காஞ்சிபுரம், சிதம்பரம் மதுரை போன்ற குறிப்பிட்ட க்ஷேத்ரங்களை சுற்றி இன்னும் கொஞ்சம் அதிகமாகவே இத்தாக க்ஷேத்ரங்கள் இருக்க காரணம் என்ன.


    புண்ய க்ஷேத்ரங்களை சுற்றி தான் மகான்கள் வாழ்ந்தனர் என்பதால் சுற்றியுள்ள ஊர்கள் க்ஷேத்திர வரிசையில் இடம்பிடித்தன.


    திருநாறையூர் என்கிற ஊர் கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஒரு க்ஷேத்ரம். இங்கு ஒரு மஹா புண்ய புருஷர் இருந்தார். அவரால் தான் சம்பந்தர், அப்பர், சுந்தரர் இயற்றிய தேவாரங்கள் நமக்கு கிடைத்தன என்றபோது அவரைப் பற்றி ஒரு சில விஷயங்களாவது தெரிந்து கொள்ள வேண்டாமா. 63 நாயன்மார்களைப் பற்றியும் சுந்தரரின் திருத் தொண்டத்தொகையில் வரும் 63 சிவ பக்த நாயன்மார்களைப் பற்றியும் மிக அருமையாக நமக்கு அளித்தவர் அந்த மா புருஷர். இந்த குறிப்பை வைத்துக்கொண்டு தான் பிற்காலத்தில் சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணம் இயற்றினார் என்பார்கள். இந்த புண்ய புருஷர் இயற்றிய பதிகங்கள் 11வது திருமுறையில் இடம் பெற்றுள்ளன. அந்த மேதை இளம் வயதிலேயே சிவன் கோவில்களில் சிவாசார்யராக இருந்தவர். முறையாக வேதம் பயின்று, சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். அவர் பெயர் நம்பியாண்டார் நம்பி. அந்த கால பெயர்கள் இப்படித்தான் இருக்கும்.


    சிறுவயதில் பிள்ளையார் சதுர்த்தி அன்று அவரது தந்தை வேறு ஒரு ஊருக்கு அவசர ஜோலியாக செல்ல வேண்டியிருந்தது. அந்த ஊரில் பிள்ளையார் கோவில் ஒன்று உண்டு.


    ''அப்பனே, நீ இன்று இந்த பிள்ளையாருக்கு பூஜை செய்'' என்று அப்பா சொல்லிவிட்டுப் போய்விட்டார். குழந்தையாக இருந்த நம்பிக்கு பிள்ளையார் நைவேத்யம் உண்ண மாட்டார் அவருக்கு படைத்து விட்டு அதை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பது தெரியாது. கொழுக்கட்டையை (மோதகம்) தட்டில் வைத்துவிட்டு பிள்ளையார் உண்பதற்காக வெகு நேரம் காத்திருந்தார் நம்பி. நேரமாகவே பிள்ளையார் கொழுக்கட்டையை சாப்பிடாததால் தான் ஏதோ தப்பு செய்துவிட்டோமோ, அதால் தான் பிள்ளையார் வரவில்லையோ,சாப்பிட வில்லையோ என்று பயந்து அழ ஆரம்பித்தார். கோவில் சுவற்றில் தனது தலையை மோதிக்கொண்டு முடிவோம் என்று கூட தீர்மானித்து சுவற்றில் தலையை மோத துவங்கினார்.


    '''தலையை நீ ஏன் மோத வேண்டும் உன் மோதகத்தை நான் சாப்பிடுகிறேன்'' என்று பிள்ளையார் வந்து நம்பியைத் தடுத்தார். மோதகம் உண்ட விநாயகர் '' நம்பி உனக்கு என்ன வேண்டும் சொல்'' என்று கேட்க, நம்பி, ''நான் இன்று பள்ளிக்கூடம் போக நேரமாகிவிட்டதே. பாடம் போய்வி ட்டதே உன்னாலே, ஆசிரியர் அடிப்பாரே '' என்று பிள்ளையாரிடம்சொல்ல '' சரி உனக்கு நான் பாடம் சொல்லித்தருகிறேன் என்று சகல கலை ஞானமும் தந்தார் '


    இது தினமும் தொடர்ந்தது. விஷயம் காற்றில் பரவி அப்போது சோழ நாட்டை ஆண்ட ராஜ ராஜ சோழன் காதுக்கும் எட்டியது. மந்திரி சேனாபதி, ராஜாங்க பிரமுகர்கள் புடை சூழ ஒரு பெரிய ஊர்வலமாக் நிறைய மா, பலா, வாழைப் பழங்கள், தேன் , அவல் பொரி, இனிப்பு வகைகளுடன் பிள்ளையாருக்கு நைவேத்யம் பண்ண சோழ ராஜா வந்துவிட்டான். நேரே திருநாறையூர் நம்பியின் காலடியில் விழுந்து வணங்கினான். ''எங்கள் தெய்வமே, இதையெல்லாம் உங்கள் அருள் மூலமாக பிள்ளையார் உண்ணும்படியாக தாள் பணிந்து வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என்று கேட்டான். சிறுவன் நம்பியும் ''பிள்ளையாரே, வந்து இதையெல்லாம் வழக்கம் போல சாப்பிட வேண்டும்'' என்று கேட்க, விநாயகனும் அத்தனை ஆகாராதிகளையும் தும்பிக்கையின் ஒரே வீச்சில் எடுத்து சுழற்றி வாயில் போட்டுக்கொண்டான்
    கண்களில் பக்தியும் ஆச்சரியமும் நீராக வழிய ராஜ ராஜன் சாஷ்டங்கமாக நம்பியின் காலில் விழுந்தான். ''என் தெய்வமே, எனக்கு ஒரு நீண்ட கால ஆசை. சைவ சமய குரவர் மூவர் எழுதிய தேவார பதிகங்களை முழுமையாக பெற வேண்டும். இதுவரை அவை கிடைக்கவில்லையே என்கிற குறை. அதை நீங்கள் தான் நிறைவேற்றி வைக்கவேண்டும். பிள்ளையாரப்பன் மீது இருந்த நம்பிக்கையில் நம்பியும் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டார்.


    ''விநாயகா, நீ தான் எனக்கு இதை செய்யவேண்டும். எங்கே இருக்கின்றன அந்த தேவார பதிகங்கள். உதவுகிறாயா, ராஜா எவ்வளவு ஆசையாக அதெல்லாம் கேட்கிறான்?''


    '' உனக்காக செய்கிறேன் நம்பி. ராஜாவிடம் சொல்லு, அவையெல்லாம் சிதம்பரத்தில் நடராஜா ஆலயத்தில் நடராஜாவின் பின்னால் ஒரு இடத்தில் ஜாக்ரதையாக வைக்கப்பட்டு இருக்கிறது. அது எங்கே என்று ஒரு கை காட்டும். அந்த இடத்தில் பார்த்தால் அத்தனை ஓலைச்சுவடிகளும் இருப்பது தெரியும்.


    எத்தனை பதிகங்கள் அவ்வாறு எழுதியிருக்கிறார்கள் ?


    அதுவா, ஞான சம்பந்தன் எழுதியது 16000, திருநாவுக்கரசர் எழுதியது அதிகம். அவை 49000. அடுத்ததாக சுந்தரர் இயற்றியது 39000''


    நம்பி இந்த விஷயத்தை ராஜராஜனிடம் சொல்ல ராஜா நம்பியாண்டார் நம்பியை அழைத்துக்கொண்டு சிதம்பரம் சென்று அங்கே பிள்ளையார் சொன்ன இடத்தில் தேட, அங்கு கரையான் தின்றது போக ஒரு சில மட்டுமே காணப்பட்டது. வருத்தத்தோடு ராஜராஜன் கண்ணீர் விட, நம்பியாண்டார் நம்பி, நடராஜரை பணிந்து வேண்ட, ''நம்பி, எது வேண்டுமோ அது அங்கே உள்ளது. எடுத்துச் செல்'' என இறைவன் அசரீரீயாக உரைத்தான். ஆர்வத்தோடு அரசன் உடனே அந்த ஓலைச்சுவடிகளை படி எடுக்க (நகல் எடுக்க) ஏற்பாடு செய்தான். இன்றைய தமிழ் கூறும் நல்லுலகம் இந்த சீரிய தொண்டு புரிந்த நம்பியாண்டார் நம்பிக்கும் சோழன் ராஜராஜனுக்கும் என்றும் தலைவணங்கி கடன் பட்டிருக்கிறது. நமக்கு கிடைத்திருப்பது மொத்தத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. நம்பியாண்டார் நம்பி இத் தேவார பதிகங்களோடு, மணி வாசகரின் திருவாசகம், திருமூலரின் திருமந்திரம், எல்லாமும் சேர்த்து அளித்திருக்கிறார். நீலகண்ட யாழ்ப்பாணர் வம்சத்தில் வந்த ஒரு பெண் உதவியோடு தேவாரப் பண் (melody )களை சீர் படுத்தினார். தான் வணங்கும் பொல்லாப்பிள்ளையார் அருளால் சுந்தரரின் திருத்தொண்டத் திருவந்தாதி மூலம் 63 நாயன்மாரின் சரிதம் நமக்கு கிடைத்திருக்கிறது. சம்பந்தர் வாழ்க்கை வரலாறும் நமக்களித்தவர் நம்பியாண்டார் நம்பியே.
    நம்பியாண்டார் நம்பியை நன்றாக அனுபவிக்க படிக்க வேண்டிய நூல்களின் விபரம் :


    திருநாரையூர் விநாயகர் இரட்டை மணி மாலை.
    கோயில் திருப் பண் இயல்விருத்தம்
    திருத்தொண்டர் திருவந்தாதி
    ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி.
    ஆளுடைய பிள்ளையார் திருச்சபை விருத்தம்
    ஆளுடைய பிள்ளையார் திருமணிக் கோவை
    ஆளுடைய பிள்ளையார் திருவுள்ள மாலை
    ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
    ஆளுடைய பிள்ளையார் திருத் தொகை
    திருநாவுக்கரசு தேவர் திரு ஏகாதச மாலை
Working...
X