Announcement

Collapse
No announcement yet.

Kolaru patigam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kolaru patigam

    courtesy:Sri.N.Jayakumar
    கோளறு பதிகம் (திருஞானசம்பந்தர் அருளியது):
    முதல் பாடல்:
    வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
    மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
    சனிபாம்பு இரண்டும் உடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.
    பொருள்:
    இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.
    இரண்டாவது பாடல்:
    என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
    எருதேறி ஏழை உடனே
    பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
    உடனாய நாள்கள் அவைதாம்
    அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.
    பொருள்:
    அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.
    மூன்றாம் பாடல்:
    உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
    உமையோடும் வெள்ளை விடைமேல்
    முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
    திசை தெய்வமான பலவும்
    அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே.
    பொருள்:
    திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.
    நான்காம் பாடல்:
    மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
    மறையோதும் எங்கள் பரமன்
    நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
    கொடு நோய்களான பலவும்
    அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.
    ஐந்தாம் பாடல்:
    நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
    விடையேறு நங்கள் பரமன்
    துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
    மிகையான பூதம் அவையும்
    அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.
    ஆறாம் பாடல்:
    வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
    மடவாள் தனோடு உடனாய்
    நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
    கொடு நாகமோடு கரடி
    ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.
    ஏழாம் பாடல்:
    செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
    விடையேறு செல்வன் அடைவார்
    ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
    வினையான வந்து நலியா
    அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.
    எட்டாம் பாடல்:
    வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
    மடவாள் தனோடும் உடனாய்
    வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
    உளமே புகுந்த அதனால்
    ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
    இடரான வந்து நலியா
    ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.
    ஒன்பதாம் பாடல்:
    பலபல வேடமாகும் பரனாரி பாகன்
    பசுவேறும் எங்கள் பரமன்
    சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
    வரு காலமான பலவும்
    அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.
    பத்தாம் பாடல்:
    கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
    குணமாய வேட விகிர்தன்
    மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
    உளமே புகுந்த அதனால்
    புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
    திருநீறு செம்மை திடமே
    அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
    அடியார் அவர்க்கு மிகவே
    பொருள்:
    புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.
    பதினோறாம் பாடல்:
    தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
    வளர்செம்பொன் எங்கும் நிகழ
    நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
    மறைஞான ஞான முனிவன்
    தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
    நலியாத வண்ணம் உரைசெய்
    ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
    அரசாள்வர் ஆணை நமதே!!
    பொருள்:
    இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.
Working...
X