Announcement

Collapse
No announcement yet.

Nayagi swamigal & Azhwar songs

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Nayagi swamigal & Azhwar songs

    Nayagi swamigal & Azhwar songs
    Courtesy: http://gurupeet.blogspot.in/2012/08/blog-post_24.html
    திருவடி பெருமை


    நாயகி சுவாமிகளும்
    ஆழ்வார் பாடல்களும்
    Continues


    நடனகோபாலு நாமம் படனகெரோ- எல்லே நரகுபாதொ சொடி ஜவாய் ஜவாய்
    என்று இசைபாடுகிறார். இவ்வாறு அரிபஜனை செய்வதை விட்டுவிட்டு இந்த கலியுகத்தில் எவ்வளவு தவம் செய்தாலும் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கிறார். எத்தனை தவங்கள் செய்தாலும் ஒரு புண்ணியமும் இல்லை அரி பஜனையைவிட்டுவிட்டு எவ்வளவு தவங்கள் செய்தாலும் புண்ணியமில்லை. நாம் இந்த உயர்வான மானுடப் பிறவியை நம் தவப்பயனால் அடைந்துள்ளோம். உண்ணுதல், உறங்குதல், கும்மாளமிடுதல் போன்றவற்றுக்காக அல்ல இந்த மானுடப் பிறவி. அறவழியில் பொருள் ஈட்ட வேண்டும். நிரந்தர இன்பத்திற்காக அந்தப் பொருளைப் பயன்படுத்த வேண்டும். இப்படியெல்லாம் முறையாகச் செய்தால் வீடு என்னும் பிறவாமைப் பயன் கிடைக்கும். இதைவிட்டுவிட்டு தபம் செய்கிறேன் –யாகம் செய்கிறேன் என்று இருந்தால் ஒரு பிரயோசனமும் இல்லை. தினமும் ஹரியின் புகழைப் பாடவேண்டும். உரக்கப் பாட வேண்டும்.


    ஹரி பஜனை சொட்டி கித்கே தபஸ் கெரெதி காய்
    துசுரே வாட் நீரே மோட்சிக்


    வால்மீகி முனிவர் ஆவதற்கு முன் செய்த பாபங்கள் ஏராளம் ஏராளம். அவை எல்லாம் எப்படி மன்னிக்கப்பட்டு அவர் முனிவர் ஆக முடிந்தது. இராமாயணக் காவியத்தைப் படைக்க முடிந்தது. ஹரி பஜனை தான் காரணம்.


    லெக்கோ சேகி வால்மீகு கெரே பாபுன்
    அஸ்கீ கோன் நாமம் ஹால் ஜியெஸ்தே
    தெக்கி தெல்லரே திக்கு துசுரே நீரே


    கெட்டோ ஹிங்கடய் ஸ்ரீகேசவுடு நாமமு
    கிருஷ்ணா ராமா மேன் கெட்டோ ஹிங்கடய்
    கெட்டோ ஹிங்கடய் கேசவா நாம்




    மற்றபடி பாபம் செய்தாலும் பிறவி உண்டு. புண்ணியம் செய்தாலும பிறவி உண்டு. எனவே பற்றற்று கடமையைச் செய்ய வேண்டும். பிறர் மனம் புண்படப் பேசக்கூடாது. மனத்துக்கண் மாசினல் ஆதல் வேண்டும். இதுதான் இப்பிறவியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதையெல்லாம் நமக்கு யார் கற்றுக் கொடுப்பார்? நமது குருநாதர் தான் கற்றுக் கொடுப்பார். நாயகி சுவாமிகள் என்னும் அந்த அற்புதக் குருநாதர் அருமையாக இக்கருத்தை வலியுறுத்துகிறார் பாருங்கள். சிலர் சொல்வார்கள். இப்பொழுது பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறேன். வயதான காலத்தில் இறைவனைத் தொழுவேன். முதலில் பொருள் ஈட்டிக் கொள்ள வேண்டும். என்று பொருள் ஈட்டுவதிலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழித்து விடுவார்கள். இறப்பு என்பது எப்போது வரும் என்று யாருக்குத் தெரியும்? நாம் வாழும் காலத்திற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் நம்மைத் தேடி வரும். நாம் மறுத்து உரைக்க முடியாது. அப்போது அச்சம் தான் வருமே தவிர ஆண்டவன் நினைப்பு வராது. எந்த வேளையில் எப்படி நாம் இறக்கப் போகிறோமோ? பின்னால் வரப்போவது என்ன பிறவியோ? யார் அறிவார்?
    அழகாகச் சொல்வார் –
    கோன் வேளும் கோட் பொடி ஜேடைகி ஏ சரீர்
    ஜியேத் கோன் ஜெலும் அவய்கீ என்று நம்மை எல்லாம் எச்சரிக்கிறார். வயதான காலத்தில் பக்தி செய்வதற்காகக் காத்திருக்க வேண்டாம் என்றும் நமக்கு அறிவுரை கூறுவார்.
    தீன் தெஸ்சு தீ தாத் லலி
    தீன் பாய் ஹொயி சல்னா முல்லாம்
    தீன் ஆசென் சோடி
    தீன் லோக் ஹொய் ரியசி தெகஹோர் மொன்னு
    தெவோ தெவோ தெவோ தெவோ


    ஆம் முப்பத்திரண்டு பற்கள் விழுந்து
    ஊன்று கோல் கொண்டு மூன்ற காலுடன் நடக்கும் முன்
    மூன்று ஆசைகளை விட்டுவிடு
    மூவுலகும் நிறைந்திருக்கும்
    முகுந்தன் பால் மனது வை மனது வை மனது வை மனது வை என்று அழகாக மனதில் படும் படி ஒருதடவைக்கு மேல் அழுத்தி அழுத்திச் சொல்கிறார். முதுமை வரை காத்திராதே. மண், பெண், பொன் மீதுள்ள ஆசையை விட்டுவிடு. என்று அழகிய தமிழில் அதன் பொருள். நம்மாழ்வார் தனது திருமொழியில்
    கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
    வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
    வளர் இளம்பொழில் சூழ் மாலிருஞ்சோலை
    தளர்வு இலர் ஆகில் சார்வது சதிரே என இளமை கெடுவதன் முன்னமே இறைவனிடம் சரணடைய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துவார்.


    மறம் சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
    புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
    அறஞ்சுவராகி நின்ற அரங்கனாருக்கு ஆட்செய்யாதே
    புறஞ்சுவர் கோலம் செய்து புள் கௌவக் கிடக்கின்றீரே
    என்பார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
    அரங்கத்திலே உள்ள ரங்கநாதன் அற வடிவானவர். தர்மத்தின் வடிவானவர். அவரைச் சரணடைய வேண்டும். அவருக்கு அடிமையாக வாழவேண்டும். நமது உடலே முற்பிறவியில் செய்த பாவத்தின் காரணமாக வந்துள்ளது. நமது உடலில் உள்ள உயிர் அது தான் ஆத்மா. அது இறைவனின் ஒரு அணு. அது தண்டனை எதையும் அனுபவிக்காது. அப்போது முற்பிறவியில் செய்த தவறுகளுக்கு தண்டனை பெற வேண்டுமே. அதற்குத் தான் இந்த மானுட உடல். தண்டனை பெறுவதற்கு மட்டுமல்ல. கலியுகத்தில் இறை பஜனை செய்து இந்த பிறவியில் இருந்து விடுபடவும் முடியும். – நாம் பிறவிச் சுழலிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆண்டவன் நமக்கு அளித்து ஒரு வாய்ப்பு. பாபச் சுவரால் ஆனது இந்த உடம்பு. பாவத்தை அரணாகக் கொண்டது இந்த உடம்பு. இதிலே பல குற்றங்கள் உண்டு. கண், காது, மெய், வாய், நாசி இப்படி ஐம்பொறிகளால் பல பாபங்களைச் மீண்டும் செய்யத் தூண்டும் இந்த ஐம்பொறிகள். தவறு செய்யக்கூடியது மனித இயல்பு. இந்த பாபச்சுவரிலே ஒன்பது ஓட்டைகள். எனவே வீழ்வது நிச்சயம். எப்போது வீழும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே இறைவழிபாட்டில் நாள்கடத்தக் கூடாது. சிறிது காலம் கழித்து இறைவழிபாட்டுக்குச் செல்வோம். இப்போது பொருள் ஈட்டுவோம் என்று எண்ணக் கூடாது. இந்த ஒன்பது வாசலுடைய குடிசையை எவ்வளவு அலங்கரித்தாலும் எவ்வளவு செலவழித்தாலும் நிலைத்து நிற்காது. எவ்வளவு உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்தாலும் சரி – வாசனைத் திரவியங்களை உபயோகித்தாலும் சரி –எவ்வளவு அழகுபடுத்திக் கொண்டாலும் சரி - எப்பொழுது இந்த ஒன்பது வாசல் உடைய குடிசை மண்ணில் விழும் என்பது தெரியாது. போது அறிய மாட்டீர் என்று அழகாகச் சொல்கிறார்.
    மனம் ஒரு குரங்கு. ஆம் மனித மனம் ஒரு குரங்கு. சிலவேளை நல்ல சிந்தனைகள் வரும். கோவிலைத் தேடிச் செல்லும் கால்கள். நா இறைவன் புகழைப் பாடும். மறுகணம் மாறிவிடும் இந்த மனம். பணத்தைத் தேடிச் செல்லும். பாபத்தைப் பண்ணச் சொல்லும். அழகாகச் சொல்லுவார் நாயகி சுவாமிகள்




    தெரன் நிகிளேத் ஹிப்பிரானா தமய் மொன்னு
    எகோ தெரன் முசைகீ
    என்பார்.
    ஆண்டவன் எப்படிபட்டவன் என்பதை மிக அழகாகச் சொல்வார். அண்டம், பிண்டம், பிரம்மாண்டம் எல்லாம் அவனே – அவனால் தான் உருவாயிற்று. இந்த அண்டம் பிண்டம் பிரம்மாண்டம் அவனுக்குள் தான் ஒடுங்குகிற்து என்ற கருத்தை
    அண்ட பிண்ட பிரம்மாண்டுன்
    தெகொஹாலுஸ் ஹொயெஸ்தே
    ஏ அண்ட பிண்ட பிர்மாண்டுன்
    தெகோ பித்தரூஸ் சேஸ்தே என்கிறார்.
    பரம் பொருளினின்று ஆகாயம் தோன்றும். ஆகாயத்தினின்று காற்று தோன்றும். காற்றினின்று தீ தோன்றும். தீயிலிருந்து நீர் தோன்றும். நீரிலிருந்து நிலம் தோன்றும். பேரூழிக் காலத்தில் நிலம் நீரில் ஒடுங்கும். நீர் தீயினுள் ஒடுங்கும். தீ காற்றினுள் ஒடுங்கும். காற்று வானில் ஒடுங்கும். வான் எம்பெருமானுக்குள் ஒடுங்கும். எதுவுமே மறைந்து போவதில்லை. ஒடுங்கத்தான் செய்யும். மீண்டும் உலகம் உதிக்கும்.அடங்கும். மனிதன் பிறந்து இறப்பது போல் இது தொடர்ச்சியான சுழற்சி தான். திருமங்கை ஆழ்வார் தனது பெரியமொழியிலே பல இடங்களில் இதைச் சுட்டிக் காட்டுவார்.
    பாரேழு கடல் ஏழு மலை ஏழுமாய்
    சீர் கெழும் இவ்வுலகேழும் எல்லாம்
    ஆர்கெழு வயிற்றினில் அடக்கி நின்று
    அங்கு ஓரெழுத்து ஓர் உருவானவனே எனவும்


    நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்
    உலகமும் உயிர்களும் உண்டொருகால்
    கலைதரு குழவியின் உருவினையாய்
    அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே என்றும்
    திருமங்கை ஆழ்வார் கூறுவார். கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருவிண்ணகர் என்னும் அருமையான தலம். அங்குள்ள இறைவன் ஒப்பிலியப்பன் என்னும் உப்பிலியப்பன். தாயார் பூமிதேவி நாச்சியார். இந்த மனை வாழ்க்கை வேண்டாம் வேண்டாம் என்று அந்த இறைவனிடம் முறையிடுவார் திருமங்கையாழ்வார். எப்போது வேண்டாம் என்று அவர் கூறுகிறார் தெரியுமா? இறைவனைக் காணும் வாய்ப்பினை பெருமாள் அவருக்கு அருளிவிட்டால் இந்தத் துன்பப் பிறவி எனக்கு வேண்டாம் வேண்டாம் எனத் திரும்பத் திரும்ப பத்து பாட்டுகளில் மீண்டும் மீண்டும் கூறுவார். இந்த பாடல்களில் ஒன்று மட்டும் நாம் இப்பொழுது பார்ப்போம்.
    குழல்நிற வண்ண – நின் கூறு கொண்ட தழல்நிற வண்ணன்
    நண்ணார் நகரம் வீழ
    நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற அம்பு அது ஆனவனே
    ஆண்டாய், உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல்
    வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே என்பது தான் அந்தப் பாட்டு.
    சைவம் வைணவம் என்று நாம் பரம்பொருளை அறியாது பிரிந்து நின்று போராடுகிறோம். இங்கே செதுக்கப்பட்டுள்ள கருத்து எப்படி இருக்கிறது.
    ஒரு சிறு கதை. நரகாசுரனின் மூன்று குமாரர்கள் வித்துயுன்மாலி, தாரகாட்சன், மற்றும் கமலாட்சன். இவர்கள் மூவரும் கடும் தவம்இருந்து பிரமனிடம் பல அற்புதமான வரங்களைப் பெறுகிறார்கள். நினைத்தவுடன் வானில் பறந்து செல்லக் கூடிய மூன்று கோட்டைகளை அமைக்கிறர்கள். தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் செய்யப்பட்ட கோட்டைகள் இவை. பறந்து சென்று தேவர்களை தாக்குகிறார்கள். வெற்றி பெறுகிறார்கள். இறுமாப்பு எல்லை மீறுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு அடிகோலுகிறார்கள். தேவர்களைத் துன்புறுத்துகிறார்கள். அச்சத்துடன் அலையும் தேவர்கள் சிவனிடம் அடைக்கலம் கேட்கிறார்கள். அருமையான தேர் ஒன்று தயாரித்து கொண்டு வரும்படி ஆணையிடுகிறார் சிவனார். தேர் வந்தவுடன். மேருவை வில்லாக்கி வாசுகியை நாணாகக் கட்டுகிறார். இவ்வளவு அருமையான வில்லுக்கு நல்ல அம்பு தேவை அல்லவா. திருமாலே அம்பாக மாறுகிறார். அதன் நுனியில் அக்னி பகவான் அமருகிறார். புன்சிரிப்புடன் இந்த அம்பைத் தொடுத்து முப்புரங்களை எரிக்கிறார் சிவனார். மதுரையில் கூட யானைமலை என்று ஒரு மலை உண்டு. சமணர்கள் பாண்டியனை பயமுறுத்த ஒரு யாகம் செய்து அதிலிருந்து யானை ஒன்றை உருவாக்கி மதுரை மாநகர் மீது ஏவுகிறார்கள். பாண்டியன் பயந்து சொக்கநாதரிடம் முறையிடுகிறான். நான் மதுரையைக் காப்பாற்றுகிறேன் என்று அவர் வாக்கு கொடுக்கிறர். அதன்படியே ஒரு வேடுவனாக வந்து திருமாலை அம்பாகத் தொடுத்து அந்த யானையை மலையாக மாற்றி நிறுத்துகிறார். இன்றைக்கு நீங்கள் போனாலும் அந்த அம்பு பதிந்த இடத்தில் நரசிம்மர் இருப்பார். குகைக் கோவில். இப்படி எல்லாம் நடந்தது நடக்கும் என்பதை நிரூபிக்க இன்றும் அந்த நரசிம்மர் கோவில் யானைமலையில் உள்ளது. இது நடந்தது விக்கிரம பாண்டியன்என்னும் மன்னனது காலத்தில். அவன் புகழைக் கண்டு பொறாமைப்பட்ட சோழ மன்னன் சமணர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து பாண்டியனைக் கொல்ல முயற்சி செய்கிறான். ஏற்கனவே போரில் அவன் தோற்றுவிட்டான். அபிசார ஓமத்தைச் செய்யத் தூண்டுகிறார்கள் சமணர்கள். பாலி என்னும் ஆற்றங்கரையோரம் யாகம் செய்கிறார்கள். அதன் பயனாக கரிய யானை ஒன்று யாககுண்டத்திலிருந்து வருகிறது. தென்திசை சென்று பாண்டிய நாட்டையும் மன்னனையும் அழிக்க உத்தரவிடுகிறார்கள். மதுரை மக்கள் கலங்குகிறார்கள். மன்னனோ செய்வதறியாது சொக்கநாதரிடம் முறையிடுகிறான். அசரீரி கேட்கிறது. அட்டாலை மண்டபம் ஒன்றை எழுப்புக என்று கட்டளையிடுகிறது அந்த அசரீரி. அதன்படி பதினாறுகால் மண்டபம் ஒன்றை எழுப்புகிறான் விக்கிரம பாண்டியன். யானை மதுரையை நெருங்கியவுடன் சோமசுந்தரப் பெருமான் வில்லேந்திய வீரனாக அந்த பதினாறுகால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அவர் பூட்டியது நரசிங்கக் கணை. கணை பாய்ந்தவுடன் சாய்ந்தது யானை. இப்படிப்பட்ட இடத்தைத் தான் பிற்காலத்தில் நமது நாயகி சுவாமிகளும் தமது நந்தவனம் இருக்க வேண்டிய இடமாகத் தேர்ந்தெடுக்கிறார்.
    இதேபோல பேயாழ்வாரும்
    சிவனாரும் திருமாலும் ஓருருவில் உள்ளதை நமக்கு மிக அழகாக விளக்குவார்.
    தாழ்சடையும் நீள்முடியும்,
    ஒண்மழுவும் சக்கரமும்
    சூழ் அரவும் பொன்னாணும் தோன்றுமால்
    சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
    இரண்டுருவும் ஒன்றாய் இணைந்து என்பார்.
    நடனகோபாலருக்குத் தெரியும் நல்ல விஷயங்களைச சொன்னால் நாம் ஒப்புக்குத் தலையாட்டுவோம். மனதில் வாங்கிக்கொள்ள மாட்டோம் என்று. எனவே தலையாட்டாதே. மனதில் பதிந்துகொள் என்று எச்சரிக்கிறார்.
    மான் ஹோர் ஐகுநாஸ்தக்
    கான் தீ ஐகோ ஐகோ
    த்யான் கரோ
    அரி முக்தி தேந் அவயி.




    சின்னச்சின்ன பாடல்களைப் பாடி சிறிய குழந்தைகளுக்கும் ஆன்மீக உணர்ச்சியை ஊட்டியவர் நாயகி சுவாமிகள்.


    இறைவனிடத்தில் பக்தி செய்யுங்கள் பிள்ளைகளே
    நாட்கள் வீணே கழிகின்றன
    இறைவனிடத்தில் பக்தி செய்தால்
    ஜீவாத்மாவுக்கு முக்தி கிட்டும் என்று
    கண்ணனே விசயனுக்கு பாரதப் போரின்போது சொல்லியிருக்கிறான்
    ஜீவாத்மா பரமாத்மா தான் நித்தியம்
    இந்த உலகம் அநித்தியம்
    நித்தியமாக உள்ள அரி நித்திய பதவியைக் கொடுப்பான்
    சத்தியம் இது சத்தியம் என்று இறைவன்பால் பக்தி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவார்.


    இறைப்பணி தான் நன்மையைச் செய்யும் என்பதைச் சுட்டிக்காட்ட
    கைங்கர்யமாவது கிங்கைர்யமாவது போய் வேலையைப் பாரப்பா என்று சொல்வோர் உண்டு இந்த உலகத்தில்
    அவர்கள் கருமவினைக் காட்டில் அகப்பட்டு
    கஷ்டப்பட்டுக கொண்டே இருப்பார்
    கைங்கர்யமே அரிவாள்
    கருமவினைக் காட்டை உடனே அறுப்பது அதுதான் என்று உறுதி கூறுவார்.


    இதுபோல ஒரு பாட்டைத் தொண்டரடிப்பொடியாழ்வார் மிக அழகாகப் படைத்துள்ளார்.


    எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்
    வெறிகொள் பூ துளப மாலை விண்ணவர் கோனை ஏத்த
    அறிவிலாத மனிதர் எல்லாம் அரங்கன் என்று அழைப்பாராகில்
    பொறியில் வாழ் நரகம் எல்லாம் ஒழியும் புல் எழுந்து அன்றே


    வேலை என்றால் க்டல். கடல் அலை நீரை வாறி எறிகிறது. இப்படிப்பட்ட கடலால் சூழப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம். எறியும் கடலால் சூழப்பட்ட நாம் மணமிக்க துளசிமாலை அணிந்த அரங்கனைத் துதிக்க வேண்டும். துதித்தால் என்ன நடக்கும். ஐம்புலன்களால் நாம் செய்த . செய்துகொண்டிருக்கிற எல்லா பாபங்களும் மறைந்துவிடும். புல் இருந்த சுவடு கூட காணமுடியாதபடி மறைந்துவிடும். எனவே இறைவன் திருநாமமான ரங்கா ரங்கா என்று அனுதினமும் நாம் பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.


    பல பிறவிகளை நாம் எடுத்து பிறப்பு இறப்பு எனத் தொடர்ந்து கொண்டு இருந்தோம். இவன் உய்யட்டுமே இந்தப் பிறவிச் சுழலிலிருந்து மீளட்டுமே என்று நமக்கு ஒரு வாய்ப்பினை ஆண்டவன் கொடுத்து உள்ளார். எனவே இந்த பிறவியிலாவது ஆண்டவன் திருநாமத்தைச் சொல்லுங்கள். ஆண்டவனுக்குத் திருப்பணி செய்யுங்கள். இறைத்தொண்டினை தள்ளிப்போடாதீர். ஆறு அறிவு நமக்கு ஆண்டவன் இந்த மனிதப் பிறவியில் கொடுத்து இருப்பது அவன் இருப்பதை மனத்தால் சிந்தித்து அறிந்து போற்றுவதற்காகவே. நம் வாழ்வு சதமல்ல. அழகாகச் சொல்வால் கண்ணதாசன்.
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று


    நமக்கு ஆண்டவன் ஆறு அறிவு கொடுத்தது அவனை நினைக்க. ஐம்புலன்களை அடக்கி ஆள. ஆனால் நாம் அதை மறந்து விடுகிறோம். உல்லாசமாக இருக்கிறோம். ஆண்டவனை மறக்கிறோம்.
    திருமழிசை கூறுவார்
    அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில்
    அவன் என்னை எய்தாமல் காப்பான் – அவன் என்னது
    உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
    வெள்ளத்து அரவணையின் மேல்.
    என்பார்.
    சரி ஆறு அறிவு என்றால் என்ன?


    தொல்காப்பியம் மிக அழகாகச் சொல்லும்


    புல்லும் மரமும் ஓர் அறிவினவே
    நந்தும் முரளும் ஈர் அறிவினவே
    சிதலும் எறும்பும் மூ அறிவினவே
    நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
    மாவும் மாக்களும் ஐ அறிவினவே
    மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே.


    ஓரறிவு உயிர் என்பது என்ன? இவை தத்தம் உடலால் தொடுவதை மட்டும் அறியும். அதுதான் புல், மரம்.- மெய்யுணர்வு
    தொடு உணர்வோடு நாவினால் சுவையையும் அறிபவை ஈரறிவு உடையவை. அவையே முரள் மற்றும் நந்து. முரள் என்றால் அட்டை. நந்து என்றால் நத்தை.
    கரையான் எறும்பு போன்றவை மூன்றறிவு உடையவை. இவை தொடு உணர்வு, சுவை மற்றும் முகரும் பண்பினையும் கொண்டவை. மோப்பம் பிடிக்கும். அதனால் தான் கரையான் புத்தகம் எங்கே இருந்தாலும் வந்து அரிக்கிறது. நான்கு அறிவு உடையவை என்பவை பார்வையும் சேர்ந்து உடையவை. நண்டு தும்பி ஆகியவை இதற்கு உதாரணம். ஐந்து அறிவு உடையவை விலங்கினங்கள். ஐந்தாவது அறிவு என்பது ஒலி அறிதல். ஆறாம் அறிவு என்பது தான் மனத்தால் அறியும் அறிவு. அதனால் தான் கண்ணதாசன் இரண்டு மனம் வேணடும் என்று ஆண்டவனிடம் கேட்கிறார்


    தொடு உணர்வு மட்டும் இருந்தால் ஓர் அறிவு
    தொடு உணர்வும் சுவையும் அறிந்தால் ஈர் அறிவு.
    தொடு உணர்வு, சுவை மற்றும் முகரும் அறிவு இருந்தால் மூன்று அறிவு
    தொடு உணர்வு, சுவை, முகரும் அறிவு மற்றும் பார்வை இருந்தால் நான்கு அறிவு
    தொடு உணர்வு, சுவை, முகரும் அறிவு, பார்வை மற்றும் கேட்கும் திறன் இருந்தால் ஐந்து அறிவு
    இவற்றுடன் சிந்திக்கும் திறன் இருந்தால் ஆறறிவு
    இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்பதையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் மிக அழகாகச் சொல்வார்.


    போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்
    தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்பமாட்டேன்
    காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே
    ஏதிலேன் அரங்கர்க்கு எல்லோ என் செய்வான் தோன்றினேனே


    என்பார். பொழுதெல்லாம் பூக்களைக் கொண்டு உன்னுடைய பொற்பாதங்களுக்கு அணிவிக்கவில்லையே. இதோ உங்கள் வசதிக்காக இங்கே பாத உருவங்கள் வெளியே வைக்கப்பட்டுள்ளன. பூக்களைக் கொண்டு வந்து பூசியுங்கள். குற்றமற்ற சொற்களால் உன் புகழைப் பாடவில்லையே. உண்மையான அன்பை மதிலே வைக்கவில்லையே. நான் எப்படி அரங்கத்து அம்மான் ரங்கனுக்கு ஏற்புடையவனாவேன். ஐயோ நான் ஏன் பிறந்தேன? என்று நெஞ்சுருகி துதிக்கிறார் ஆழ்வார்.
    நாயகி சுவாமிகளும் இதேபோன்ற கருத்தை


    இசோஸ் ஏ மெனிக ஜெலும் அவ்லேத் ராய்கி
    ஏ ஹரிக் பஜன நீஜியேத் பாப் திரைகி
    பிசோ தெரி ஹிண்டுனோகோன் நமமூஸ் வாடு
    சொக்கட் பிசோதெரி கவ்னாத்ஜியேத் நீ கதி ஏடு


    ஹரியின் பஜனையில்லாமல் மோட்சமில்லை. பிறவிக்கடலைக் கடக்க முடியாது. பைத்தியம் போல் ஹரி நாமத்தை எப்போதும் சொல்லிக்கொண்டே இரு. என்று அறிவுறுத்துகிறார்.

    இறைவனின் அடியார்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் நாயகி சுவாமிகள் மிக அழகாக நமக்குச் சொல்வார்.


    அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே அல்லும் பகலும்
    அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே


    மாடா மானிடஜென்மமா நீ ஏடா மூடா
    மாடா மானிடஜென்மமா நீ
    பாவம் தேடாது தேடாது போடா நீ
    வீடுடை விமலனைக் கூடி மகிழ்கிற
    அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே அல்லும் பகலும்
    அடியார் திருவடியைப் பணி நீ நெஞ்சே


    என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். நம்மைப் பார்த்து இந்த நாயகி சுவாமிகள் மூடா என்கிறாரே இது சரி தானா என்றார். சரிதான். ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம் என்ற பாடலில் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே என்பார். முட்டாளே கோவிந்தனை என்ற பெயரை பஜனை செய்வாய் என்று அதன் பொருள். அதன்பிறகு வரும் 23 பாடல்களிலும் வாழ்க்கை எவ்வளவு மட்டமானது – அதை எப்படி நாம் கடக்க வேண்டும் என விளக்குவார். நாம் இந்தப் பாடலைத் தினம்தினம் வானொலியில் கேட்கிறோம். ஆனால் பொருள் புரிவதில்லை. இதேபோல அவர் பாடிய சிவ அபராத மன்னிப்பு வேண்டும் பாடலிலும் பல இடங்களில் அறிவுறுத்துவார்.
    ஆயுர் நச்யதி – உயிர் வடிந்து கொண்டிருக்கிறது
    பக்ஷயதாம் – அறிந்து கொள்ளவேண்டும்
    பிரதிதினம் – தினம்தினம்
    யாதி க்ஷயம் யவ்வனம் – இளமை கரைந்து போய்விடுகிறது
    ப்ரதி ஆயாந்தி கதா புனர் ந திவசா – கடந்து போன நாட்கள் திரும்பவரமாட்டா
    காலோ ஜகத் பட்சக – காலம் உலகத்தை விழுங்கிவிடுகிறது
    லட்சுமி தோய தரங்க பங்க சபலா – நீரில் எழும் அலைகளைப் போல் செல்வத்தின் நாயகியான லட்சுமியின் வாசம் நிலையற்றது
    வித்யுத்சலம் ஜீவிதம் – வாழ்க்கை மின்னலைப்போல் நிலையற்றது
    தஸ்மாத் – ஆதலால்
    சரணாகதம் மாம் – சரணடைந்திருக்கும் என்னை
    சரணத – அடைக்கலம் தருபவனே
    அதுனா – இப்போது
    த்வம் – நீங்கள்
    ரட்ச ரட்ச – என்னைக் காப்பீராக


    மொத்தம் 12 பாடல்கள். மிக அற்புதமானவை. தமிழில் பொருள் தெரிந்து பாடல்களைப் படித்தால் மிக அற்புதமாக இருக்கும். வாழ்க்கையில் தவறுகளைச் செய்யவே மாட்டோம்.


    கண்ணனை மட்டுமல்ல ஆண்டாளையும் அற்புதமாகப் பாடியிருக்கிறர் நாயகி சுவாமிகள். மார்கழி மாதத்தில் நாம் இருக்கிறோம் இன்றைக்கு மார்கழி 23– சனவரி 8 . – நிறைமதி நாள். அதாவது பௌர்ணமி. ஆருத்ரா தரிசன நாள். சடைய நாயனார் குருபூசை நாள். வீரமாமுனிவர் பிறந்த நாள். இப்படி ஏகப்பட்ட சிறப்புகள் கொண்ட நாள். எனவே ஆண்டாள் எனும் கோதையைப் பற்றி நாயகி சுவாமிகள் பாடிய பாடலையும் நாம் அறிந்து இன்புற வேண்டும்.


    செல்வக் கோதை ஆண்டாள்
    சேவடியை வணங்கு என் நெஞ்சே


    வல்வினை தீர்ப்பாள் உயர் மேல்வீடு சேர்ப்பாள்
    நல்வாக்கும் தந்து காப்பாள்


    அகிலங்கள் ஓய அவதாரம் செய்தாளே
    பகவந் நாமங்களையே சுகஜீவனமாகக் கொண்டு
    ககவாகன அரங்கனுக்கே கண்ணி அளித்த
    செல்வக் கோதை ஆண்டாள்
    சேவடியை வணங்கு என் நெஞ்சே


    To be continued
Working...
X