Announcement

Collapse
No announcement yet.

Dont want Svargaa... ???

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Dont want Svargaa... ???

    courtesy: http://aacharyahruthayam.blogspot.in...g-post_10.html
    சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா????

    பிரம்மத்தைப் பற்றியும், பூரண சரணாகதியைப் பற்றியும் படிச்சதும், இது நினைவுக்கு வந்தது. இறைவன் இருக்குமிடம் தேடி அலையவேண்டாம், நம்முள்ளேயே உறைகின்றான் என்றாலும், அதை உணர்ந்தவர் வெகு சிலர். அப்படி உணர்ந்தவர்களும் திரும்பத் திரும்ப இறைவன் புகழைப் பாட பூமியிலேயே பிறக்க ஆசைப்பட்டனர். இன்னும் சிலர் இந்தப் பூமியிலேயே சிரஞ்சீவியாக நிலைக்கவும் நிலைத்தனர், அப்படி நிலைத்தவர்களில் ஆஞ்சநேயரும் ஒருத்தர். ராமர் வைகுண்டம் செல்லத் தயார் ஆனபோது அனைவரும் அவருடன் கிளம்பத் தயார் ஆனார்கள். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு அனுமன் மட்டும் தனித்திருக்க, ராமர் அனுமனைக் கூப்பிட்டு, "அப்பா, நீ ஏன் இன்னும் கிளம்பவில்லை? நீ வைகுண்டம் வரவில்லையா?" என்று கேட்டாராம். அனுமனோ, "ராமா, வைகுண்டத்தில் நீ யார்? மகாவிஷ்ணு! உனக்கு அங்கே சேவை சாதிக்க அநேகக் கோடி அடியார்கள் இருக்கின்றார்கள். ஏற்கெனவே உன் வாகனம் ஆக கருடனும், உன் படுக்கையாக ஆதிசேஷனும் இடம் பெற்றிருக்கின்றார்கள். உன்னருகில் அமர உரிமை பெற்ற இரு பெண்களும் இருக்கின்றார்கள். மற்ற அடியார்களோடு அடியாராக நான் அங்கே இருந்து என்ன செய்யப் போகின்றேன்? இந்த உன் ராம அவதாரத்தைக் கண்ட என் கண்கள், ராம காதையைச் சொன்ன என் நாவு, ராம காதையைக் கேட்ட என் செவிகள், உன் சர்வாலிங்கனத்தை உணர்ந்த என் உடல், உணர்வு, உன் அன்பில் திளைத்த என் புலன்கள், இனி இன்னொருவரை நாடுமோ? நான் இங்கேயே இருக்கின்றேன். உன் ராம கதை இந்தப் பூவுலகில் பாடும்வரை, எங்கெல்லாம் பாடப் படுகின்றதோ, சொல்லப் படுகின்றதோ, எழுதப் படுகின்றதோ அங்கெல்லாம் நான் இருப்பேன். நீ எனக்கு அதற்கு மட்டும் அருள் புரிந்தால் போதும்." என்று சொல்ல ராமனும் அவ்வாறே அருள் பாலித்தானாம். ஆஞ்சநேயரும்,


    "யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
    தத்ர தத்ர கிதமஸ்த காஞ்சனம்
    பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
    மாருதிம் நமத ராட்ச சாந்தகம்"


    என்று சொல்லும் வண்ணம் இன்றளவும் ராம காதையைக் கேட்டு அனுபவித்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுவதுண்டு.இதையே தான் தொண்டரடிப் பொடியாழ்வாரும்(??) தன்


    "பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா, அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!"


    என்று சொல்லி இருக்கின்றார். 13-ம் ஆழ்வார் வந்து இதைச் சொன்னது தொண்டரடிப் பொடிதானானு சொல்ல அழைக்கிறேன். இன்னொருத்தரும் சொல்லி இருக்கார்,. பெயர் நிச்சயம் செய்யாததால் போடவில்லை,


    "ஊரிலேன் காணி இல்லை, உறவு மற்றொருவர் இல்லை,
    பாரில் நின் பாத மூலம் பற்றினேன் பரம மூர்த்தி,
    காரொளிர் வண்ணனே, கண்ணனே கதறுகின்றேன்,
    ஆருளர் களை கண் அம்மா, அரங்கமாநகருளானே!"


    இப்படி ஆழ்வார்களும், அடியார்களும் வேண்டாம் என்று சொல்லும் சொர்க்கத்தை வேண்டாம் என்று சொன்ன ரிஷி ஒருத்தரும் புராண காலத்திலே இருந்திருக்கின்றார்.அவர் தான் முத்கலர். நானுமே சொர்க்கம் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்! முத்கலரும், அனுமனும், ஆழ்வார்களும் மறுத்த சொர்க்கத்தில் உண்மையில் என்ன இருக்கின்றது? அங்கே போனால் அனுபவித்துத் தீர்த்ததும், மீண்டும் பிறந்து கர்மாவைக் கழிக்க இறைவனைப் பாடி அவனருளாலே, அவன் தாள் பற்றி, சற்றேனும் அவனை மறவாமல் இருந்தால் அதை விடச் சிறந்தது வேறு என்ன உண்டு. "இறைவனைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே!" என்று இருந்தால் அதுவே போதுமே! கீழே உள்ளவை குமரனின் "புல்லாகிப் பூண்டாகி" தொடருக்கு நரசிம்ம தாசரின் பக்தியைக் குறித்து வியந்த நான் அது பற்றி எழுதிய விமரிசனம். அந்தத் தொடர் மொத்தத்திலும் என்னைக் கவர்ந்ததும் இந்த ஒரு அத்தியாயமே!


    பின்னர் மனிதரில் தேவர் ஆன நரசிம்மதாசரின் பக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. "உண்ணும் சோறும், பருகும் நீரும் கண்ணனே!" என்ற நிலையில் இருக்கும் நரசிம்மதாசன், குரு சைதன்யர் இன்னும் ஐநூறு பிறவிகள் இருக்கின்றன என்று சொல்லுவதைக் கேட்டு ஆனந்த நடனம் ஆடுகிறான். இதைக் கண்ட மற்றவர் வியந்தாலும் ஐநூறு பிறவிகளிலும் கண்ணனை மறவாமல் இருக்கவேண்டும் என்ற நரசிம்மதாசனின் பக்தியை நினைத்தால் உண்மையிலேயே "அரிது, அரிது, மானிடராய்ப் பிறப்பது அரிது" என்ற தமிழ் மூதாட்டியின் சொல்லின் உண்மையில் மெய் சிலிர்க்கிறது. இப்போ முத்கலர் பற்றிப் பார்ப்போமா???


    முத்கலர் என்னும் முனிவர் மிகச் சிறந்த ஞானி, தவசீலர், கேட்பவருக்கு இல்லை என்னாது இயன்றவரை தரும் தயாள குணம் படைத்தவர். எனினும் அன்றாட உணவுக்குத் தேவையான தானியங்களை அவ்வப்போது சேமித்துக் கொண்டே உண்பவர்கள் அவரும், குடும்பத்தினரும். ஆகவே எப்போதுமே ஒரு பத்து நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களே கைவசம் இருக்கும். இது இவ்வாறிருக்க, ஒரு முறை இவரின் ஆசிரமத்துக்கு துர்வாசர் வருகை புரிந்தார். மகிழ்வோடு துர்வாசரை முத்கலர் வரவேற்றார். முத்கலர் மட்டுமின்றி, அவர் குடும்பத்தினரும் துர்வாசர் வரவால் மகிழ்ந்து அவரை வரவேற்றனர், உபசரித்தனர். துர்வாசருக்கு விருந்து அளிக்க விரும்பினார் முத்கலர். துர்வாசரிடம் உணவு அருந்திவிட்டுச் செல்லும்படி கூறினார் முத்கலர். அவர் குடும்பத்தினரும் அவ்வாறே அவரை உபசரித்தனர். துர்வாசருக்கு மிகுந்த நகைப்பாக இருந்தது. ஏளனத்துடன், "எனக்கு உணவளித்து உபசரிக்கும் வல்லமை உன்னிடம் உண்டோ?" என வினவினார் முத்கலரிடம். முத்கலர் தன்னிடம் இருப்பதை வைத்து விருந்து அளிப்பதாய் மிகுந்த வணக்கத்துடன் சொல்ல, துர்வாசரும் ஒப்புக் கொண்டார். முத்கலர் விருந்து அளிப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றார். பத்து நாட்களுக்காகச் சேர்த்து வைத்த அனைத்து உணவுப் பொருட்களையும் போட்டு மிக அருமையான விருந்து தயாரிக்கப் பட்டது. துர்வாசர் நதியில் நீராடி நித்திய கர்மானுஷ்டானங்களைச் செய்யப் புறப்பட்டுச் சென்றார். அனைத்தையும் முடித்துக் கொண்டு வந்த துர்வாசருக்கு, முத்கலரும், அவர் மனைவியும் விருந்து அளித்தனர். தங்கள் எளிமையான விருந்தை துர்வாசர் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.


    விருந்து எளிமையாக இருந்தாலும், சுவையாகவே இருந்தது. வயிறு நிரம்பத் திருப்தியோடு சாப்பிட்டார் துர்வாசர். யாருக்கும், எதுவும் மிச்சம் வைக்கவில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அவசரம், அவசரமாய் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். முத்கலரோ, அவர் மனைவியோ சாப்பிட்டார்களா என்று பார்த்துக் காத்திருக்கவில்லை. சாப்பிட்ட பின்னர் முறையாகச் செய்ய வேண்டிய ஆசி வழங்கும் கடமையையும் செய்து முடிக்கவில்லை. துர்வாசர் சென்று விட்டார். ஆயிற்று. விருந்து முடிந்தது. ஆனால் பத்து நாட்களுக்கான தானியங்களைப் போட்டுச் செய்த விருந்து இது! துர்வாசர் அனைத்தையும் அவரே சாப்பிட்டு முடித்துவிட்டார். இனி என்ன செய்வது?? அரைப் பட்டினி, கால் பட்டினி தான். இனி வேண்டும் தானியங்களைச் சேகரித்தாலே, அடுத்து வரும் நாட்களுக்கான உணவு கிட்டும். அதுவரையிலும் கிடைத்த காய், கிழங்குகள் தான். இருக்கும் கொஞ்ச தானியத்தில் கஞ்சி தான். மீண்டும் தானியங்களைச் சேகரித்த பின்னரே முழுச்சாப்பாடு.


    இதற்கெனக் கவலைப் படாமல் முத்கலர் மீண்டும் தானியங்களைச் சேகரித்தார். குடும்பத்தினரும் உதவினார்கள். அதுவரையில் கிடைத்தவற்றைச் சாப்பிட்டனர் அவர் குடும்பத்தினரும், அவரும். தானியங்கள் சேகரிக்கப் பட்டது. அதற்குள் துர்வாசர் முதல் முறை வந்து போய்ப் பத்து நாட்களும் ஆகி இருந்தது. சரியாகப் பதினோராவது நாள். இருக்கும் தானியங்களை வைத்து உணவு தயார் ஆனது. குடும்பத்தினர் சாப்பிட அமர்ந்தனர். அந்தச் சமயம் பார்த்து வந்தார் துர்வாசர். தான் மிகுந்த பசியோடு வந்திருப்பதாயும், உணவு கிட்டுமா எனவும் கேட்டார். கடுகடுத்த முகத்துடனேயே இருந்த அவரைப் பார்க்கவே பயமாகவும் இருந்தது. வீட்டில் உள்ளவர் யாரும் இதை எதிர்பார்க்கவில்லை எனினும் துர்வாசரை அமர வைத்து உணவைப் பரிமாறினார்கள். துர்வாசர் இம்முறையும் உணவு அனைத்தையும் அவரே உண்டார். கடு கடுத்த முகத்துடன் உணவை உண்ட அவர் இம்முறையும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.


    முத்கலர் குடும்பத்தினரின் அரைப்பட்டினி நிலை தொடர்ந்தது. எனினும் குடும்பத்தினர் யாரும் இதற்காகக் கவலைப்படவில்லை. வருந்தவும் இல்லை. தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். தினசரி வேலைகளைச் செய்வதும், எஞ்சியுள்ள நேரத்தில் வயல்வெளிக்குச் சென்று தானியங்கள் சேகரித்து வருவதும் வழக்கம் ஆனது. மீண்டும் அதே போல் பத்து நாட்கள் கடந்தது. பதினோராம் நாள் மீண்டும் அழையா விருந்தாளி துர்வாசர், அதே போல் கடுகடுத்த முகத்துடன், மிகுந்த பசியோடு, உணவு அளிக்கும்படியான அதிகாரத் தொனியோடு. மீண்டும் உணவளித்தனர் குடும்பத்தினர். இப்படியே தொடர்ந்தது, இரண்டு மாதங்களுக்கு மேல். துர்வாசர் வரும்போது இருக்கும் தானியங்களை வைத்து உணவு படைப்பதும், வீட்டில் உள்ளவர்கள் அரைப்பட்டினி இருப்பதும், மீண்டும் தானியங்கள் சேர்ப்பதும், துர்வாசர் வருவதும், தொடர்கதையானது. இப்போது இது ஏழாம் முறை!


    வரும்போதே இம்முறை துர்வாசர் முகத்தில் மலர்ச்சி காணப்பட்டது. மிகுந்த சுமுகத்தோடு காட்சி அளித்தார். முத்கலரிடம் சொன்னார்:" முத்கலரே! உம்முடைய பணிவும், வினயமும், திட சிந்தையும், விருந்தோம்பும் குணமும் என்னை வியக்க வைத்தது. அதைப் பரிட்சை செய்து பார்க்கவே இம்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டி வந்தது. ஒன்றையும் மிச்சம் வைக்காமல் உங்கள் அனைவரையும் பட்டினி போட்டுவிட்டு நான் ஒவ்வொரு முறையும் சாப்பிட்டு விட்டுப் போனாலும், நீர் ஒவ்வொரு முறையும் இன்முகத்தோடு விருந்தளித்து எம்மை மகிழ்வித்தீர். உம் பண்பு என்னை மட்டுமில்லாமல் தேவாதிதேவர்களையும் வியக்க வைத்தது. தேவலோகத்திலிருந்து, இதோ உமக்காகப் பொன்மயமான ரதம் வந்துள்ளது. போதும் இப்பூவுலக் வாழ்க்கை! உம் துன்பங்கள் அனைத்தும் இன்றோடு அழிந்து விடப் போகின்றது. கிளம்பும், தேவதூதர்களோடு, சொர்க்கத்துக்கு!" என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றார். முத்கலரோ???


    மிக மிக மெதுவாக, "மகரிஷி, இம்மண்ணுலகுக்கும், அவ்விண்ணுலகுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று எடுத்துரைக்க இயலுமா தங்களால்? என்று கேட்கின்றார். துர்வாசர் சொல்கின்றார்: "பூலோகம் கர்மபூமி. வினைப்பயன்களை அனுபவித்தே தீரவேண்டும். சொர்க்கமோ எனில் போக பூமி. கற்பனைக்கும் எட்டாத சுகங்களை அங்கே அனுபவிக்கலாம். எப்போதும் அங்கே மகிழ்ச்சிதான். துன்பம் என்பதே இல்லை. பூமியில் பிறந்து புண்ணியங்களைச் சேகரித்துக் கொண்டால் ஒழிய சொர்க்கம் இத்தனை எளிதில் கிட்டாது. நீர் இந்தப் பூமியில் செய்த பாவ, புண்ணியங்களின் விளைவாலேயே சொர்க்கம் உமக்குக் கிட்டியுள்ளது என்பதில் சந்தேகமும் இல்லை. அதிலும் உம்போன்ற தவசீலர்களின் செயல்களால் சொர்க்கம் அன்றி வேறு ஏது கிட்டும்? உமக்குத் தகுந்தது சொர்க்கம் ஒன்றே!" என்று சொல்கின்றார்.


    முத்கலரோ,"ஸ்வாமி, அங்கே எப்போதும் மகிழ்ச்சி என்றால் குறை ஒன்றும் இல்லையோ? சொர்க்கத்திலும் குறை இருக்குமே ஸ்வாமி?" என வினவ, துர்வாசர், "முத்கலரே, ஒரே ஒரு குறைதான் சொர்க்கத்திலே, புண்ணிய பலன்களை அங்கே வேண்டிய மட்டும் அனுபவிக்கலாமே ஒழிய, புண்ணியங்களை மேன்மேலும் பெருக்கிக் கொண்டு போக அங்கே இடம் இல்லை. புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டுமானால், மீண்டும் பூமியில் பிறந்து, தானம், தர்மம், போன்ற நற்செயல்களைச் செய்து, புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளலாமே தவிர, சொர்க்கத்தில் புண்ணியம் பெருக வாய்ப்பே இல்லை" என்று சொல்ல, முத்கலரோ, "ஸ்வாமி, அறச்செயல்கள் செய்ய வாய்ப்பில்லை எனில் அது எவ்வாறு சொர்க்கம் ஆகும்? அப்படி வாய்ப்பில்லாத ஓர் இடம் எனக்குத் தேவை இல்லை. இந்தக் கர்ம பூமியிலேயே மீண்டும், மீண்டும் பிறந்து, கர்மங்களோடு சேர்ந்து அறங்களையும் முறைப்படி செய்து, கர்மங்களுக்கான பலன்களையும் அனுபவித்து, அறச்செயல்களைச் செய்தும், பிறருக்குத் தொண்டுகள் பல செய்தும், வாழவே ஆசைப்படுகின்றேன். இதிலே கிடைக்கும் மன நிறைவும், மன மகிழ்ச்சியும், உங்கள் சொர்க்கத்திலே கிட்டாது எனில் அந்த சொர்க்கம் எனக்குத் தேவை இல்லை, துர்வாசரே, என்ன மிக மிக மன்னிக்க வேண்டுகின்றேன்." என்று சொல்கின்றார் முத்கலர்.


    சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல் வருமா???????????????
Working...
X