Announcement

Collapse
No announcement yet.

Vallalaar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vallalaar

    Vallalaar
    வடலூர் வள்ளலார் பிறந்தநாள்.
    ( 05-10-2016)
    மாசிலா கோபி கிருஷ்ணன்
    துன்முகி வருடம்-2016
    புரட்டாசி 19-ம் தேதி
    புதன்கிழமை
    அக்டோபர் -05
    தமிழ்நாடு செய்த பெரும் தவப்பயனால் பச்சைப் பயிரோடு பக்திப் பயிரையும் வளர்க்கும் தென்னார்க்காடு மாவட்டத்தில், இறைவன், திருக்கூத்தாடும் தில்லையின் திருநகரை அடுத்து உள்ள மருதூரில்,
    இராமையாபிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகவாக இராமலிங்கர் தோன்றினார். அவர் பிறந்த நாள் 5-10-1823 ஆகும்
    .
    இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர்
    "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்
    இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்.
    பெற்றோர் இராமையாபிள்ளை,
    சின்னம்மையார்.
    இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.
    இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சென்று வாழ்ந்தார்.
    பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார்.
    அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
    இராமலிங்க அடிகள் 23𤂿867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார்.
    இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்
    மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார்.
    இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும்,
    உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
    அப்பெருமகனார் ஓராண்டுப் பருவத்தினராக இருந்தபோதே தில்லையம்பலநாதர் சந்நிதித் திரைச்சீலை தானே தூக்கப்பெற்று தரிசித்தார். ஒருமுறை திண்ணையிலிருந்து கீழே விழுந்தபோது இறைவி வந்து காப்பாற்றினார். ஒருநாள் பட்டினியோடு படுத்திருந்தபோது அவர் அண்ணியார் வடிவில் இறைவி காப்பாற்றினார். இளமையில் அண்ணன் சொற்பொழிவுகளுக்கு ஏடு படிக்கத் தொடங்கினார். ஒரு முறை அவர் நோய்வாய்ப் பட்டமையால் தாமே சொற்பொழிவு செய்யத் தொடங்கி நாடறிந்த பெருமகன் ஆனார்.
    தண்ணீரில் விளக்கெரியச் செய்தார். ஒரே இரவில் 1596 வரிகளை உடைய அருட்பெருஞ்சோதி அகவலைப் பாடி முடித்தார்.
    வள்ளலார் பக்தி நெறி நின்றாலும் உலக வாழ்வில் மக்கள் சிறந்து வாழும் பக்குவநெறியும் கண்டவர். ஏழை பணக்காரன், மேல்சாதி கீழ்சாதி, முறைகளை வன்மையாகக் கண்டித்தவர்.
    சாதி சமய வேறுபாடுகளைக் கடுமையாய் எதிர்த்தார். மக்கள் வாழப் பயன்படும் நெறியே நன்னெறி எனப் போற்றினார்.
    இளமையில் முருகப்பெருமானைக் கடவுளாகவும், திருஞான சம்பந்தரைக் குருவாகவும், திருவாசகத்தை வழிபடும் நூலாகவும் கொண்டார். பின்னர் ஒற்றியூரில் வாழும் இறைவனின் இணையற்ற பக்தராகவும், பின் தில்லையம்பல நாதரின் பக்தராகவும் விளங்கினார். முடிவில் அருட்பெருஞ்சோதி அடியவராகத் திகழ்ந்தார்.
    ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஆகிய அனைவரும் ஒருமை உள்ளவராகி உலகில் வாழ வேண்டும் என்ற பெருநோக்கோடு வள்ளலார் திருவாய் மலர்ந்தருளிய செந்தமிழ்த் திருப்பாடல்களின் தொகுதியே திருவருட்பா என்னும் கருவூலமாகும்.
    அருளாளர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் அருட்பாக்களே! ஆனால் திரு சேர்ந்து அப் பெயருடனேயே விளங்கும் அருட்பா, வள்ளல் பெருமான் பாடிய பாடல்களின் தொகுதியே யாகும்.
    தி்ருவருட்பா ஆறு திருமுறைப் பகுதிகள் கொண்டு விளங்குகின்றது. 399 பதிகங்களையும் 5818 பாடல்களையும் கொண்டது. எல்லாப் பாடல்களும் இறைவனை முன்னிறுத்திப் பாடப்பெற்றவையே. இது பக்திப்பா உலகில் ஒரு புதுமை; தமிழ்மொழிக்கு மற்றொரு பெருமை.
    ஆண்டவனை அனைவரும் நாள்தோறும் வேண்டிப் போற்றும் நிலையில் உரைநடை வேண்டுகோளாக அமைந்தவை, சுத்த சன்மார்க்கச் சத்தியச் சிறு விண்ணப்பம், சுத்த சன்மார்க்கப் பெரு விண்ணப்பம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம், சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய ஞான விண்ணப்பம் என்பனவாகும்.
    மனுமுறை கண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம் என்பன வள்ளல் பெருமான் இயற்றிய உரைநடை நூல்கள் ஆகும். அவர் உரையாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் திகழ்ந்தும் பல அரும்பணிகள் செய்தார்.
    இறைநெறியை ஆன்மநேயப் பெருநெறி ஆக்கிய வள்ளல் பெருமான் தைப்பூச நன்னாளில் வடலூரில் உள்ள சித்திவளாகத்தில் ஓர் அறைக்குள் சென்று கதவினை மூடிக்கொண்டு அருட்பெருஞ்சோதி ஆண்டவரான இறைவனோடு இரண்டறக் கலந்து சோதி வடிவானார். அவர் சித்தி அடைந்த நாள் 30-1-1874 ஆகும்.
    வள்ளல் பெருமானின் கொள்கைகள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றது.
    ஆண்டுதோறும் வடலூரில் தைப்பூசத் திருவிழாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடிச் சோதி வழிபாட்டில் கலந்துகொண்டு வள்ளல் பெருமானின் அருளைப் பெறுகின்றனர்.
    தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார்.
    அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.
    இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம்அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார்.
    1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும்,
    தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
    இராமலிங்க அடிகள் கொள்கைகள்
    1. கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
    2. புலால் உணவு உண்ணக்கூடாது.
    3. எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
    4. சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
    5. இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
    6. எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
    7. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
    8. சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
    9. எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
    10. மத வெறி கூடாது .






    வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்
    1. நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.
    2. தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
    3. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
    4. ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
    5. பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.
    6. பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
    7. இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.
    8. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
    9. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
    10. தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
    திருவருட்பா
    இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது
    இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
    திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டது.
    பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.
    முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார்.
    பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.
    அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
    தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    திருவருட்பா - திருப்புகழ் பாமாலை
Working...
X