Announcement

Collapse
No announcement yet.

Pavoor chatram Sastha temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Pavoor chatram Sastha temple

    திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியில் மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தென்காசி மலையான் தெருவில் பாண்டியர் காலத்தில் இறை வழிபாட்டிலும், சிவபக்தியிலும் சிறந்து விளங்கிய திருமலை என்பவர் வாழ்ந்து வந்தார்.


    எள் பயிர்


    ஒரு சமயம் அவர் தனது குடும்பத்துடன் கிழக்கு நோக்கி, பிழைப்பு தேடி வந்தார். தென்காசி பாண்டிய அரசின் கீழ்திசை பகுதியாக விளங்கிய கீழப்பாவூரின் அருகே ஒரு இடத்தில் குடி அமர்ந்தார். அதுவே பிற்காலத்தில் அருணாப்பேரி ஆனது. வானம் பார்த்த பூமியான அருணாப்பேரியில், மழைக் காலங்களில் விதைத்து அறுவடை செய்யும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன. மலையநாடாரும், இந்தப் பகுதியில் மழை பயிரான எள் செடியை விளைவித்து வந்தார்.


    ஒருமுறை ஆடி மாதம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தான் பயிரிட்டிருந்த நிலத்தில், அபரிமிதமாக விளைந்திருந்த எள்ளினை அறுவடை செய்த திருமலை தம்பதியினர், அவற்றை காய வைப்பதற்காக குவியல் குவியலாக களத்தில் குவித்து வைத்தனர். கடுமையான வெயில் காரணமாக எள் கூடு வெடித்து களத்தில் கிடந்தது. அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கியது. காயப் போட்டிருந்த எள் அனைத்தும் மழையில் அடித்து செல்லும் நிலை உண்டானது.மழை பெய்தது.


    கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அந்த தம்பதியினர் என்ன செய்வது என்று அறியாமல் அழுது புலம்பினர். அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி கேட்டது.
    'எள்ளுக்குள் மழை தண்ணீர் வராமல் இருக்க, எள் குவியலைச் சுற்றிலும் மண்ணால் அணை கட்டு! என்று அந்தக் குரல் கூறியது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஆள்அரவம் இன்றி காணப்படும் இந்த இடத்தில், குரல் மட்டும் கேட்பதை கண்டு பெரும் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர் அந்த தம்பதியர். இருப்பினும் அசரீரியின் ஒலிக்கு கட்டுப்பட்டது போல், வானத்தை நோக்கி நிமிர்ந்து பார்க்காமல், ஒவ்வொரு எள் குவியலைச் சுற்றிலும் மண்ணால் தடுப்பு அமைத்தனர்.
    பணி முடிந்து நிமிர்ந்து பார்த்த போது, கண்ட காட்சி அவர்களை திகைக்க செய்தது. ஆம்! எள் குவியலைச் சுற்றிலும் அமைக்கப்பட்ட மண் தடுப்புக்கு வெளியில், அதாவது எள் காய வைத்திருந்த களத்திற்கு வெளியில் மட்டும் மழை பெய்து கொண்டிருந்தது. எள்ளின் மீது மழைத்துளி ஒன்று கூட விழவில்லை. மழை வெள்ளம் மண் அணைப்பிற்கு வெளியே திரண்டு ஓடியது. மழை நின்றபாடில்லை. இறைவன் மீது பாரத்தை போட்டு, அந்த தம்பதியினர் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு வந்தனர்.


    எள்ளுக்குள் லிங்கம்


    மறு நாள் காலை மழை நின்றதும், அந்த தம்பதியர் எள் களத்திற்கு சென்றனர். அங்கு எள் குவியல் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக காய்ந்த நிலையில் இருந்தது. மகிழ்ச்சியில் திளைத்த திருமலையும், அவரது மனைவியும் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகளில் எள்ளை அள்ளினர். அப்போது எள் குவியலின் உள்ளே லிங்கம் ஒன்று தோன்றியிருந்தது. இதை பார்த்ததும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இறைவனின் கருணையை எண்ணி உள்ளம் உருகினர்.


    சுயம்புவாக தோன்றிய இந்த லிங்கத்தை கண்டு பரவசம் அடைந்த தம்பதியர், ஊர் மக்களை அழைத்து வந்து அந்த அற்புத அதிசய காட்சியை காட்டினர். விடிய விடிய பெய்த பெரும் மழையில் இருந்து தப்பிய எள், சற்றும் சேதமடையாததைக் கண்டு ஊர் மக்கள் பக்தி பரவசம் அடைந்தனர். மழை தரும் மேகத்தையே குடையாக, தடுப்பு திரையாக அமைத்து எள் குவியலை நனையாமல் காப்பாற்றிய சுயம்புநாதருக்கு, காரணப் பெயராக 'மேகம் திரைகொண்ட சாஸ்தா' என்று பெயரிட்டு அழைத்தனர். இது நடந்தது ஒரு ஆடி மாதம் 3-வது புதன்கிழமையில் ஆகும்.


    கோவில் திருவிழா


    ஆடி மாதம் 3-வது புதன்கிழமை லிங்கமுகம் காணப்பட்டதால், ஆண்டு தோறும் அன்றைய தினத்தில் இந்த பகுதியில் உள்ள மேகம் திரைகொண்ட சாஸ்தா கோவிலில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்தப் பகுதி மக்கள் சாஸ்தாவுக்கு சிறிய சன்னிதியை அமைத்து, மரம் மற்றும் பூஞ்செடிகளை சன்னிதியை சுற்றி வளர்த்தனர். வன்னிமரம் போன்றவை அடர்த்தியாக வளர்ந்ததால் நாளடைவில் இந்த கோவில் மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் என அழைக்கப்பட்டது.
    சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஆலய வளாகம் அமைந்துள்ளது.


    சாஸ்தாவின் கிழக்கு நோக்கிய சன்னிதி சிறிய அளவில் உள்ளது. வளாகத்தின் மேற்கு பகுதியில் தனிச் சன்னிதியில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் சுயம்பு சாஸ்தாவுக்கு உருவச்சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது. கோவில் அமைக்கப்பட்ட தொடக்க காலத்தில், இந்த ஆலயத்தில் பூரண, புஷ்கலை தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. பின்னர் பக்தர்கள் சேர்ந்து பூரண, புஷ்கலை உருவங்களை அமைத்து வழிபட்டனர்.


    கோவில் தோற்றம்துன்பம் போக்கும்



    துஷ்ட தேவதைகளிடம் இருந்து கிராமம், நகர் மற்றும் விளை நிலங்களை காப்பாற்றும் சக்தி கொண்டவர் இவ்வாலய இறைவன். மேலும் பஞ்சம், கடும் நோய், சண்டை, சச்சரவு ஆகியவற்றில் இருந்தும் பாதுகாப்பவர் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே இன்றும் நிலவுகிறது. மேகம் திரைகொண்ட சாஸ்தாவுக்கு வலப்புறம் சிறிய விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. இடப்புறம் நாகராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    கருவறையின் முன் அமைந்துள்ள மண்டபத்தின் இரு புறங்களிலும் வரிசையாக பரிவார தேவதைகள் என்ற துணை தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர். மண்டபத்தின் முன்புறம் வலப்புறத்தில் ஆண் ஆலியும், இடப்புறத்தில் பெண் ஆலியும் 15 அடி உயரத்தில் 10 அடி அகலத்தில் மிகப்பெரும் தோற்றத்துடன் காட்சி தருகின்றன. கோவில் நுழைவு வாசலில் அழகிய சுடலை மாட சுவாமி சன்னிதி உள்ளது. மண்டபத்தின் வடப்புறத்தில் நவக்கிரக சன்னிதியும் அமையப்பெற்றுள்ளன. இந்தப் பகுதி மக்களின் குடும்பம் செழிக்க, குலம் தழைக்க மேகம் திரைகொண்ட சாஸ்தா அருள் புரிந்து வருகிறார்.


    நல்லெண்ணெய் காணிக்கை


    கோவிலில் நித்திய பூஜை அன்றாடம் நடைபெறு கிறது. புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும். மேகம் திரை கொண்டு இறைவன் எள்ளை காப்பாற்றியதால் சுவாமிக்கு, தினமும் எண்ணெய்க் காப்பு நடக்கிறது.
    எள்ளில் இருந்து பெறப்படும் நல்லெண்ணெய் மட்டுமே, இறைவனின் எண்ணெய்க் காப்புக்கு பயன்படுத்தப்படு கிறது. இதனால் பக்தர்கள் அனைவரும் ஆலயத்துக்கு நல்லெண்ணெய் காணிக்கையாக செலுத்துவது மரபாக உள்ளது. இங்கு சாஸ்தாவுக்கு பக்தர்கள் செவ்வந்திப்பூ மாலைகளை விரும்பி அணிவிக்கிறார்கள்.
Working...
X