Announcement

Collapse
No announcement yet.

இராமானுஜர் நாமமே நமக்கெல்லாம் காப்பு !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இராமானுஜர் நாமமே நமக்கெல்லாம் காப்பு !


    -
    (ஆச்சார்யர் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு- 2016-17)
    --------------------
    திருப்பெரும்புதூரில் அவதரித்த

    திருமாலின் இளையவன்.

    திருக்கச்சியுறை வரதராசனின்

    ஆணைவழி நடந்த அடியவன்.

    திருவரங்கம் கோயில் புதுமை செய்த

    கைங்கர்ய வல்லுநன்.

    திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய

    திண்மை மிக்க மன்னவன். 1

    .

    சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து

    சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.

    தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து

    சாதனை செய்த புரட்சியாளன்.

    திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த

    தெய்வம் அருளிய தமிழ் முனி.

    வடமொழியில் கரைகண்ட வேதவித்து.

    ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2

    .

    உலகில் பிறந்த அனைவரும் அடியார்.

    உடையவன் முன்னால் அனைவரும் சமமே.

    மானுட வேற்றுமை மாதவன் அறியான்.

    மாய இருளை நீக்கும் கதிரோன்

    அனைவருக்கும் பொது உடைமையென

    திண்ணமாய் உரைத்த மனிதன்.

    திருக்குலத்தோரை அரவணைத்து

    சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3

    .

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,

    தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.

    பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்

    பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.

    திருக்கோயில்கள் திறம்பட இயங்க

    வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.

    அகங்காரம் என்னும் மாயப்பேயை

    தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4

    .

    இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்

    துறவு பூண்ட தூயவன்.

    இல்லறத்தாரை மடாதிபதியாக்கி

    இயக்கம் வளர்த்த மாயவன்.

    விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை

    விளக்க வந்த வேதியன்.

    ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற

    திருவருள் பெற்ற சோதியன். 5

    .

    திருவாய்மொழியைப் பரவலாக்கிய

    நம்மாழ்வாரின் ஓதுவன்.

    பாவை பாடிய கோதையின் ஆசையை

    நிறைவேற்றிய சோதரன்.

    அருகில் வருவோர் அனைவரும் உயர

    நல்வழி காட்டும் சாதகன்.

    சரணாகதியை முதன்மைப்படுத்தி

    துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6

    .

    பலரிடம் கற்ற அந்தப் பரமன்,

    குருவை விஞ்சிய சிஷ்யன்.

    குருநாதர்களையே சீடனாகப் பெற்ற

    அரிதினும் அரிய அவதார புருஷன்.

    ஆளவந்தாரின் ஆசைகளை

    பூர்த்தி செய்த புன்ணியன்.

    ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி

    ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7

    .

    அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது

    வைணவம் திருப்புமுனை கண்டது.

    இறைவனை அடையும் ரகசிய வழியை

    உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.

    குருநாதர் சொல்லை மீறி அவன்

    எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது

    அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.

    இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8

    .

    தானொருவன் நரகம் புக்கினும்

    மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக

    தன்னை அளித்த தயாபரனை

    அப்போது உலகம் கண்டது.

    எம்பெருமானாரின் கருணை மழை

    எல்லோரையும் நனைத்தது.

    சௌமிய நாராயணர் திருத்தலம்

    ராமானுஜனால் பேறு பெற்றது! 9

    .

    ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.

    ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.

    ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.

    ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10

    --------------

    குறிப்பு:

    கவிஞர் குழலேந்தி
    தேசிய சிந்தனைக் கழகத்தின்
    மாநில பொதுச்செயலாளர்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X