Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    46.முந்துதமிழ்


    முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
    சந்தமொடு நீடு பாடிப் பாடி
    முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி யுழலாதே
    முந்தைவினை யேவ ராமற் போக
    மங்கையர்கள் காதல் தூரத் தேக
    முந்தடிமை யேனை யாளத் தானு முனைமீதே
    திந்திதிமி தோதி தீதித் தீதி
    தந்தன தான தானத் தான
    செஞ்செணகு சேகு தாளத் தோடு நடமாடுஞ்
    செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
    துங்கஅநு கூல பார்வைத் தீர
    செம்பொன்மயில் மீதி லேயெப் போதுவருவாயே
    அந்தண்மறை வேள்வி காவற் கார
    செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
    அண்டருப கார சேவற் கார முடிமேலே
    அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
    குன்றுருவ ஏவும் வேளைக் கார
    அந்தம்வெகு வான ரூபக் கார எழிலான
    சிந்துரமின் மேவு போகக் கார
    விந்தைகுற மாது வேளைக் கார
    செஞ்சொல டியார்கள் வாரக் கார எதிரான
    செஞ்சமரை மாயு மாயக் கார
    துங்கரண சூர சூரைக் கார
    செந்தினகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

    - திருச்செந்தூர்



    பதம் பிரித்து உரை


    முந்து தமிழ் மாலை கோடி கோடி
    சந்தமொடு நீடு பாடி பாடி
    முஞ்சர் மனை வாசல் தேடி தேடி உழலாதே


    முந்து = மொழிகளுக்குள்ளே முற்பட்டதாய் விளங்கும்தமிழ் மாலை = தமிழ்ப் பாமாலைகளை கோடிக் கோடி =கோடிக் கணக்காக சந்தமோடு = சந்தப் பா வகையில்நீடு = நீண்ட வனாய் பாடி பாடி = பாடிப்பாடி முஞ்சர் தம் = அழிவுறும் மக்களுடைய மனை வாசல் தேடித் தேடி = வீடுகளை எங்குளது என்று தேடித் தேடிஉழலாதே = திரியாமல்.


    முந்தை வினையே வராமல் போக
    மங்கையர்கள் காதல் தூரத்து ஏக
    முந்து அடிமையேனை ஆளத்தானும் முனை மீதே


    முந்தை வினையே = பழ வினை என்பதே என்னைவராமல் போக = தொடராது ஓடிப் போகவும்.மங்கையர்கள் காதல் = பெண்ணாசை என்பது தூரத்து ஏக = தூரத்தே ஓடிப் போகவும் முந்து = அடிமைப் பட்டபழமையான அடிமையேனை = அடிமை யாகிய என்னைஆளத் தானும் = ஆண்டருளும் பொருட்டு முனை மீதே =(நீ என்) முன்னிலையில்.


    திந்திதிமி.............தாளத்தோடு நடம் ஆடும்


    திந்திதிமி.......தாளத்தோடு = இவ்வாறான தாளத்துக்கு ஒக்க நடமாடும் = நடனம் செய்யும்


    செம் சிறிய கால் விசால தோகை
    துங்க அநுகூல பார்வை தீர
    செம் பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே


    செம் சிறிய கால் = செவ்விய சிறிய கால்களையும்விசாலத் தோகை = அகன்ற தோகையும் துங்க = தூயதாய் அநுகூல = நன்மை புரிவதாய் உள்ள பார்வை= பார்வையையும் தீர = தீரத்தையும் செம் பொன் =செம்பொன் நிறத்தையும் உடைய மயில் மீதிலே =மயிலின் மேல் எப்போது வருவாயே = எந்த சமயத்தில்வருவாய் ?


    அந்தண் மறை வேள்வி காவல் கார
    செம் தமிழ் சொல் பாவின் மாலைக்கார
    அண்டர் உபகார சேவல் கார முடி மேலே


    அந்தண் = அழகிய குளிர்ந்த சிந்தை உள்ளவர்களாய்மறைவேள்வி = வேதவிதிப்படி செய்யும் யாகங்களுக்கு காவல் கார = இடையூறு இல்லாமல் காவல் புரியும் செம் தமிழ் சொல் = செந்தமிழ்ச் சொற்களால்தொடுக்கப்பட்ட பாவின் = மாலைகளை மாலைக்கார =மாலையாக அணிந்து கொள்பவனே அண்டர் உபகார =தேவர்களுக்கு உபகாரியே . சேவற் கார = சேவல் கொடியோனே முடி மேலே = முடியின் மேல்.


    அஞ்சலி செய்வோர்கள் நேயக் கார
    குன்று உருவ ஏவும் வேலைக் கார
    அந்தம் வெகுவான ரூபக்கார எழிலான


    அஞ்சலி செய்வோர்கள்=(கை)கூப்பித் தொழும்அடியார்களிடம் நேயக் கார = அன்பு பூண்டுள்ள வனேகுன்று உருவ = கிரவுஞ்ச மலை ஊடுருவும்படி ஏவும் வேலைக் கார = வேலைக் கரத்தில் ஏந்திய வனே அந்தம் வெகுவான = மிக்க அழகுடைய ரூபக்கார = திரு உருவம் கொண்டவனே எழிலான= அழகுள்ள.


    சிந்துர மின் மேவு(ம்) போகக் கார
    விந்தை குற மாது வேளைக் கார
    செம் சொல் அடியார்கள் வாரக் கார எதிரான


    சிந்துர = யானையால் வளர்க்கப்பட்ட மின் = மாது (தேவசேனை) போகக்கார = விரும்பும் போகம் வாய்ந்தவனே விந்தை குற மாது = அழகிய குற மாதாகிய வள்ளியுடன் வேளைக்கார = பொழுது போக்கும் மெய்க் காவல்காரனே செம் சொல்அடியார்கள் = செஞ்சொற்களால் போற்றும் அடியார்கள் மீது வாரக்கார = அன்பு கொண்டவனே எதிரான = எதிர்த்து வரும்.


    செம் சமரை மாயும் மாயக் கர
    துங்க ரண சூர சூறைக் கார
    செந்தில் நகர் வாழும் ஆண்மைக் கார பெருமாளே.


    செம் சமரை = பெரிய போரில் பகைவர்களை மாயும் =இறக்கும்படி செய்யும் மாயக்கார = மாயக்காரனே துங்க ரண சூர = பெரும் போரில் சூரனை சூறைக்கார =சூறையாடியவனே செந்தில் நகர் வாழும் =திருச்செந்தூரில் வீற்றிருக்கும் ஆண்மைக் கார பெருமாளே = ஆட்சித் திறன் உள்ள பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    அ. முந்து தமிழ் மாலை....
    வட மொழிக்கும் தென் மொழிக்கும் ஆசிரியர் சிவபெருமானே ஆவர். வட
    மொழியைப் பாணினிக்கும், தென் மொழியை அகத்தியனுக்கும் சிவ
    பெருமான் உபதேசித்தார்.
    (ஆரியம் தமிழோடு இசை ஆனவன்)...திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை5.18.3.
    (ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்)திருநாவுக்கரசர் தேவாரத்திருமுறை 6.23.5.
    (வடமொழியும் தென்மொழியும் மறைகள் நான்கும் ஆனவன் காண்)...
    …………………………………….....திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை 6.87.1.


    ஆ. முஞ்சர் மனை வாசல் தேடித் தேடி....
    (வஞ்சக லோப மூடர் தம்பொரு ளூர்கள் தேடி
    மஞ்சரி, கோவை, தூது பலபாவின்)…………………...திருப்புகழ் (வஞ்சகலோப).


    இ. முந்தை வினையே வராமற் போக....
    (நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்விடும டங்கல்வேலா)...........................திருப்புகழ் (ஆறுமுகம்).
    (வினையோட விடுங் கதிர்வேலா)………………………………....கந்தர் அனுபூதி.


    ஈ. முந்தடிமை யேனை...
    (பழைய நினது வழியடிமையும் விளங்கும் படிக்கினி துணர்த்தி
    யருள்வாயே)...................................................திருப்புகழ் (அகரமுதலென).










    குகஸ்ரீ ரசபதி விரிவுரை


    விரும்பியது நிறைவேற வேள்வி செய். அவிசை சிவத்திற்கு அளித்து விடு. அமைதியும் இன்பமும் அதன் வழி அமையும் என்பது அரும் மறைகளின் அறிவிப்பு. அவிசை சிவத்திற்குத் தான் அளிக்க வேண்டுமா? அடுத்த ஒருவர்க்கு அளித்தால் ஆகாதோ? அதை நானே ஆரம்பித்து வைக்கிறேன் என்று தக்சன் ஆரவாரித்தான். சிறந்த தவம் செய்தான். அதன் பயனாக ஒன்பது பிரம்மர்களுள் ஒருவனாயினான். மா பெரும் தேவர்கட்கு மாமனார் ஆயினான். எவ்வளவு உயர்ந்த பேறு இது?. ஏன் அவன் அறிவு இப்படி இழிவு அடைந்தது?முன்னேறியவர்கட்கு வரும் முனைப்பு இது தானா?


    சிவ அபராதம் விளைய தக்சன் எழுப்பிய சிறந்த வேள்வி சிதைந்தது. முறை தவறி அவிசை வாங்க வந்தார் தலையும் அறுந்தது. உம்பர் சிரங்கள் உருண்டன. இதனால் குய்யோ முறையோ எனும் குரல் அண்ட கடாகத்தை அளாவியது. பிழையின் பிரசாதம் போல் தக்சன் ஆட்டுத் தலையன் ஆயினான்.


    அதன் பின் எவரும் வேள்வி நடத்த அஞ்சினர். அதனால் வானம் மழையை மறந்தது. வானவர் மன்னவர் பல காலமாய் இருந்தது இந்த பரிபவம். ஆ உயர்ந்தோர் செய்யும் ஒரு தவறு வீணாக எவ்வளவு தொல்லைகளை விளைவிக்கிறது.


    தூய வேள்வியை நாரதர் துணிந்து துவக்கினார். விதி இடை எழுந்து விளையாடியது. தவறு படா நாரதரும் மந்திரத்தில் தவறலாயினர். குறுகுறுத்த அப்பிழை ஆட்டின் உருவம் கொண்டது. கொடிய அந்த ஆடு வேள்வித் தீயில் இருந்து குதித்தது. அடித்த செட்டியாரையும் கடித்த ஆட்டையும் கண்டிலம் என்பது அனுபவ மொழி. அதற்கு மாறாக அந்த ஆடு அகில உலகையும் அழிவு செய்தது. அதனால் மண்ணும் விண்ணும் அலறியது.


    அது அறிந்தாய் நீ. ஆட்டை ஊர்தியாக்கி அதன் ஆவேசத்தை அடக்கினை. இனி எவரும் வேள்வியைச் செய்யலாம். கலங்கம் விளையாத படி யாம் காப்போம் என்றாய். புனித வேள்விகள் அதன் பின் எங்கும் பொலிவு காட்டின.


    முக்கனல் சூழ் வேள்வியில் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என மும்முறை மறைகள் முழங்கின. - மந்திர விதியின் மரபொழி வழா அந்தணர் வேள்வி ஓர்க்குமே ஒரு முகம் - என்று திருமுருகாற்றுப் படையும் அதைத் தெரிவிக்கின்றது.இனிய இவ் வரலாறுகளை எண்ணி நெகிழ்ந்து, அந்தண்மறை வேள்வி காவற் காரஎன்று அன்பர்கள் நின்னை அழைக்கின்றனரே.


    வடமொழி மரவு வழாது கனம் தங்கிய வேள்வி காவலனான நீ செம்மைத் தமிழால் அமைத்த மாலை சூடி வெற்றி வீரனாய் விளங்குகின்றாய். இப்படி இரு மொழியனான நின் அருமை நினையாராய் மொழிப் போர் எழுப்பி முழுங்குவோர்க்கு வாழ வழி உளதோ ஐயா??


    - தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ தமிழ் சொல்லும் வட சொல்லும் தாள் நிழல் சேர - எனும் அச்சிறு பாக்க தேவாரம் நினைவில் என்றும் நிழலிடுகிறதே .


    மாபெரும் தீவினையர், நின் அருமையை மறக்கலாம். வளர்ந்துள்ள அண்டங்களில் வாழ்பவர்கள், உன் பெருமையை உணர்கின்றனர். நீ அவர்கட்கு உபகாரி ஆயினை. அதனால் அண்டர் உபகார என்று அகில உலகமும் அழைக்கின்றதே.
    அரிய புலன்களை அடக்கி விருவிருத்த குணங்களை வென்று பயன் தரும் பிரயாணமத்தில் பழகி சுழுமுனை வழியே சென்று கனல் மண்டலத்தைக் கடந்து சிறக்க இருப்பர் சிவ யோகிகள். அந்நிலையில் ஆணவ இருள் அகல மா பெரும் உதய சாத்வீக மலை மேல் இன்ப ஞான சூரியன் எழுவான். அவ்வமயம் நீடித்த பிறவி நித்திரை நீங்க வாழி, எழு,அறி, அனுபவி எனும் அரிய பொருளில் குதூகுல நாதமாக சேவல் குரல் கொடுக்கும். வெற்றிக் கொடியாய் அச்சேவல் என்றும் நின் இடத்தில் விளங்குகின்றதே, அதனால் தான் சேவற்கார சிறக்க அழைக்கின்றார் சிவ யோகியர்.


    சிரத்தின் மேல் உள்ளது துவாதசாந்தம். பரம உணர்வால் அதைப் பற்றுவம் விட மாட்டோம் என்னும் வித்தக நினைவால், - புலரா காழகம் புலர கூடி உச்சி கூப்பிய கையினர் - பலரை நலம் பட காட்டுகின்றார் நக்கீரர். - சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப் பெரும் துறை உறை சிவபெருமானே- என்கிறது திருவாசகம். - கை கால் கூப்பித் தொழீர் - என்கிறார் நம் அப்பர். நலம் மிக்க அந்த அன்பர்கள் இடத்தில் நட்புடைய உன்னை, முடிமேலே அஞ்சலி செய் வோர்கள் நேயக் கார என்பது தான் எவ்வளவு இன்பு உளது.
    ஆயிரம் கோடி மன்மதர்கள் நேர் வந்து நின்றாலும் உனது இணை அடி அழகிற்கு அழகாகார் என்று சூரனே பாராட்டும் உனது பேரழகை சொல்ல முடியுமோ துரையே, அதனால் தான் அருமை விருந்தாம் அழகின் கொழுந்தான உன்னை முடிவிலா பேரழகன் எனும் பொருளில் அந்தம் வெகு வான ரூபக் கார என்று வித்தக சொல் ஓவியர்கள் வியக்கின்றனரே.


    சொர்க்கக் கிளி, திருமுத்தி மாது, போதக் கலாப கோதை எனப் பெறும் தேவயானையார் பேசா மோன பெரு யோக நிலையினர். கட்டுக்கடங்காத அவர் ஆர்வம் கண்டாய். இருமையில் ஒருமை தோன்ற அவரில் இணையும் நின்னை சிந்துரமின் மேவு போகக் கார என்று விரிந்த சிவயோக வேட்கையர் விளிக்கின்றனரே.
    என்று வந்தாய் என கொஞ்சிக் கெஞ்சினை. கனிந்த வினயம் பல காட்டியும் உன்னை புறத்தில் மறுத்து அகத்தில் ஆவலித்த புனிதவதியார் வள்ளியார் வந்தனையை சிந்தனையில் வைத்த அவர் விந்தை குற மாது எனும் வளரும் திருப் பெயர் வாய்த்தவர். யாது பணி செய்ய வேண்டும் அடியவர் எவர்க்கு அருள வேண்டும் சொல் சொல் என எந்தவேளையும் கெஞ்சி அவருடன் இருக்கும் நின்னை, விந்தை குற மாது வேளைக் கார என வியந்து வர்ணிக்கிறது வியன் உலகம்.
    புனித மொழியால் அடியார்கள் உன்னைப் போற்றுகின்றார்கள். உள்ளம் கலந்து உருவாகும் அம்மொழி கேட்டு வள்ளியார் மொழி போல் கனிந்து ஆர்வம் காட்டுகின்றாய். வாரம் பெறுவான் அது கருதி பயிறு வளர்ப்பான் விவசாயி. அதுபோல் அன்பர் ஆகிய பயிர்களை ஆவலித்து வளர்ப்யை. அவர்கள் அரிய தம் பணியின் பயனை அர்ப்பணிப்பர். வாக்கு, மனம், காயம் மூன்றையும் வழங்குவர். இப்படி இரு வகையாலும் செஞ்சொலடி யார்கள் வாரக் காரன் ஆகின்றாய் நீ.
    இறைவனை வணங்க வேண்டா, எப்போதும் சிறந்த வழிபாட்டை எனக்கே செய்யுங்கள் என்று அடியவர் முன் வந்து ஆரவாரிப்பர் அசுர உணர்வினர். மாயமாய் மறையும் படி பொல்லாத அவர்களை பொன்றச் செய்வை. அதனால் எதிரான செஞ் சமரை மாயு மாயக் கார என்று நின்னை அடியவர் சிறக்க அழைப்பர்.
    ஒருவகையில் மாயக்காரன் மற்றொரு வகையில் ஆயக் காரனும் ஆகின்றாய் ( ஆயக்காரன் = ஊர் நோக்கி வருவாரை வழி மடக்கி வரி வசூலிப்பன் ) அவன் போல் ஜீவ போதத்தை வாங்கும் ஆற்றல் உடையவன் நீ. சுத்த வீரன் சூரனை சண்ட மாருதமாக மோதினை,அவனை சேவலும் மயிலுமாக சிறக்க ஏற்றனை. நீ சூரைக்காரன் என்றாலும் சுவை பிறக்கின்றதே
    பன்னிரு கண்ணும் பன்னிரண்டு தோளும் போல் காவற்காரன்,மாலைக்காரன், சேவற்காரன், நேயக்கார்ன, வேலைக்காரன்,ரூபக்காரன், போகக்காரன், வேளைக்காரன், வாரக்கார்ன், மாயக்காரன்,சூரைக்காரன், ஆன்ம அகமான செந்திலில் வாழும் ஆண்மைக்காரன் .பன்னிரண்டு நிலை காட்டி பேறு பெறும் பெருமான் நின்னை பெருமாளே என்று உள்ளம் கூவி உவகை வெறுகிறதே.
    பரம அருமை உணர்ந்து உன்னைப் பாடாமல் பாவலர் வாழ்க்கை பாழாகலாமா? முக்காலத்தும் முதலாகி முதல்வன் திருமுன் முன்னாகி,-பொன்னின் ஜோதி போதினில் நாற்றம், பொலிவே போல் பூ உள் தேனின் தீம் சுவை செஞ்சொல் கவி இன்பம்- ருண்டு எழுந்து சீதை உருவம் கொண்டது என்று கம்பர் போன்றோர் உவக்க முந்தி வருகிற தமிழ் முந்து தமிழ். முருகன் எவர்க்கும் முந்தியவன். அகத்தியர்க்கு அப்பரன் அருளிய தமிழ் முந்து தமிழ். இப்படி எவ்வளவோ சொல்லலாம். பரம அத்தமிழால் உன்னைப் பாடும் பாக்களை நீ சூடுவாய். விமல பயனும் அதானால் விளையும்.
    சிறக்க அங்ஙனம் செய்யாமல் ஒன்றிற்கும் உதவாத பரம லோபிகளையோ பாடுவது ?. கோயில் வாயிலில் குந்தி இராமல் தெளிவிலாத செல்வர் வாயிலையோ தேடிச் செல்வது?. அவர் மேல் பல பல பாடியோ பாடழிவது ?. அதுவன்றி அவர்களைப்பாட ஆரம்பிக்கும் போதே அத்தமிழ் கோடிக் கொள்ளுமோ. ( கோடுதல் = மடங்குதல்,வளைதல் )
    கோடியது கண்டு தந்த தன தான என்று உரத்த ஓசையால் உரப்பி எழுப்பி நெளியும் தமிழை நீள வைத்து பாவமே பாவம் லோபிகளைப் பாடுகின்றனரே. தரும துரையே அப்படி உழலாதபடி உதவி அருள். அருள் செல்வன் நீ மயில் மேல் வந்தால் பொருள் செல்வ பாவம் பொன்றிப் போகுமே.உன் அருள் நோக்கால் முதலாம் சஞ்சித வினை முறிந்து போகுமே அல்லது முந்தித் தோன்றும் ஆகாமிய வினை முதல் இல்லாது ஒழியுமே.
    உன்மேல் காதல் ஊறிய போது பெண்ணாசை என்பது பொய்துப் போம். எனினும் அந்த சக்தியால் அன்பர்களில் ஒரு காந்த சக்தி உருவாகும். வனிதையர் பலரை அது வசீகரிக்கும். என்றாயினும் அது அன்பர்களை அம்மாதர்க்கு அடிமை ஆக்கிவிடும் அங்ஙனம் ஆகாதபடி அவர்கட்கு முந்தி அடியேனை நீ ஆளாக்கிக் கொள்.
    ஆட்கொள்ளும் திட்டத்தில் என் முனைப்பில் மேல் ஏறி திந்தி திமி தோதி எனத் தோத்தி செஞ்சணகு செஞ்சணகு எனும் மாரியம்மன் கோயில் பறை ஒலி போன்றதான ஒற்றுடன் புனித நிர்த்தம் பயில் மயில் மேல் என் மேல் பிரபோ எப்போது வருவாய். சிவந்து எழுந்த சிறிய விரல்கள், தூய விசாலமான தோகை, புனித அனுகூலம் புரியும் பார்வை கொண்ட மாபெரும் என் அப்பா, என் ஐயா, என் அரசே, எப்போது வருவையோ?அப்படி வந்தால் மேல் உரைத்த துன்பம் யாவும் தொலைந்து போகுமே என்று வினயம் காட்டி வேண்டிய படி இத்திருப்புகழ் அமைந்துள்ளது
    .


    முந்து தமிழ் மாலை' என்று அருணகிரிநாதர் கூறுகிறாரே... இதன் பொருள்?


    உள்ளத்தின் சிந்தனையை வெளிப்படுத்த உதவுவது மொழி. அந்த மொழியில் இனிமை வேண்டும். கரடுமுரடாக இருக்கக்கூடாது. நான்கு பேர் நடந்து செல்கிறார்கள். அதில் ஒருவன் மட்டும் ஒல்லியாக இருக்கிறான். ஏனையோர் கனமாக உள்ளனர். இவர்களில் ஒல்லியானவன் தான் வேகமாக நடைபோடுவான். மொழிகள் எல்லாம் இறைவனை நோக்கிப் பயணம் செய்யுமானால் அவற்றில் தமிழ்தான் முந்திச் செல்லும். அதன் மென்மைதான் காரணம். அதனால்தான் ``முந்து தமிழ் மாலை கோடிக்கோடி'' என்று பாடினார் அருணகிரிநாதர் – வாரியார்
Working...
X