Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    60. ஆறுமுகம்


    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய தென்றுநாளும்
    ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
    ஈசஎன மானமுன தென்றுமோதும்
    ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
    யேவர்புகழ் வார்மறையு மென்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாகவுமை தந்தவேளே
    நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்வடும டங்கல்வேலா
    சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
    தேவர்துணை வாசிகரி அண்டகூடஞ்
    சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
    தேவர்வர தாமுருக தம்பிரானே.

    - பழநி



    பதம் பிரித்து உரை

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம் என்று பூதி


    ஆறுமுகம்...என்று = ஆறுமுகம் என்று பல முறை கூறி பூதி =திருநீற்றை ஆகம் அணி மாதவர்கள் = உடம்பில் தரித்துக் கொள்ளும் பெருந் தவத்தோர்களுடைய பாத மலர் சூடும் =தாமரை போன்ற திருவடியைச் சூடுகின்ற அடியார்கள் பதமே = அடியார்களின் திருவடியே துணை அது என்று =துணையாகும் என்று கடைப் பிடித்தும் நாளும் =நாள்தோறும் .


    ஆகம் அணி மாதவர்கள் பாத மலர் சூடும்
    அடியார்கள் பதமே துணை அது என்று நாளும்


    ஆகம் அணி = உடம்பில் தரித்து கொள்ளும் மாதவர்கள் =பெரும் தவமுடையவர்களது பாத மலர் சூடும் =திருவடிகளைத் தன் தளையில் சூடிக்கொள்ளுகின்ற அடியார்கள் = பக்தர்கள் பதமே துணை அது என்று =அதுவே பற்றுக்கோடு என்று நாளும் = தினந்தோறும்


    ஏறு மயில் வாகன குகா சரவணா எனது
    ஈச என் மானம் உனது என்று மோதும்


    ஏறு மயில் வாகன = ஏறுதற்கமைந்த மயில் வாகனனே குகா =குகனே(குகன் – ஆன்மாக்களின் இதய குகையில் வசிப்பவன்) சரவணா = சரவண தாடகத்தில் தோன்றியவனே. எனது ஈசா= என்னுடைய ஈசனே என் மானம் உனதென்று =அடியேனுடைய பெருமை எப்பொழுதும் உன்னுடையதே என்று. மோதும் = மோதிக் கொள்ளும்.


    ஏழைகள் வியாகுலம் இதே என வினாவில் உனை
    ஏவர் புகழ்வார் மறையும் என் சொலாதோ


    ஏழைகள் = ஏழை அடியார்கள் வியாகுலம் = இந்த மனத் துயர்.ஈதே என வினா இல் = எனக்கு எப்படி வந்தது என்று உன்னிடம் முறையிட்டால். உனை ஏவர் புகழ்வார் =உன்னை யார் புகழ்ந்து பேசுவார்கள். மறையும் என் சொலாதோ = வேதங்களும் உன்னை என்ன சொல்லுவது?(வாரியார் இதே வரிகளுக்கு “ஏழைகளைக் கண்டு ‘உமக்கு இது என்ன கவலை’ என்று நீர் கேட்டு அருளவில்லை யானால், தேவரீரை அருட்கடல் என்றும் ஸர்வக்ஞர் என்றும் யார்தான் புகழ்வார்கள்?” என்று பொருள் கூறுகிறார்).


    நீறு படு மாழை பொரு மேனியவ வேல அணி
    நீல மயில் வாக உமை தந்த வேளே


    நீறுபடு = திருநீறு படிந்துள்ளதும் மாழை பொரு மேனியவ =பொன் போன்றதுமான உடம்பை உடையவரே வேல =வேலனே அணி = அழகிய நீல மயில் வாக = நீல மயில்வாகனனே உமை தந்த வேளே = பார்வதி ஈன்ற வேளே


    நீசர்கள் த(ம்)மோடு எனது தீ வினை எலாம் மடிய
    நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா


    நீசரர் தம்மோடு = அசுரர்களுடன். எனது தீ வினை எலா மடிய = என்னுடைய கொடிய வினைகள் எல்லாம் அழிந்து போக. நீடு தனி= நீண்ட ஒப்பற்ற. வேல் விடு = வேலைச் செலுத்துகின்ற மடங்கல் வேலா = உழித் தீயைப் போன்ற உக்ரமான வேற்படையை உடையவரே. (மடம் – அரியாமை, கல் – நீக்குவது, அறியாமை என்ற கல்லை நீக்கும் வேல் - வாரியார் ஸ்வாமிகள்)


    சீறி வரும் மாறு அவுணன் ஆவி உ(ண்)ணும் ஆனை முக
    தேவர் துணைவா சிகிரி அண்டர் கூடம்


    சீறி வரும் மாறு அவுணன் = கோபித்து வந்த பகைமை உடைய கஜமுகன் என்னும் அசுரனின் ஆவி உணும் =உயிரைப் போக்கிய ஆனை முக தேவர் = யானை முகம் கொண்ட கணபதியின் துணைவா = தம்பியே சிகரி =கோபுரம் அண்ட கூடம் = வானுலகம் வரை


    சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமரனே பிரம
    தேவர் வரதா முருக தம்பிரானே.


    சேரும் அழகு ஆர் பழநி வாழ் குமர = ஓங்கியுள்ள அழகு நிறைந்த பழனியில் வாழும் குமரனே பிரம தேவர் வரதா =பிரமன் முதலிய தேவர்களுக்கு வரத்தைக் கொடுப்பவரேமுருக = முருகனே தம்பிரானே = தலைவனே.


    தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்கு கெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு



    [link]சுருக்க உரை


    ஆறுமுகம் ஆறுமுகம் என்று பல முறை கூறித் திரு நீற்றை உடலில் பூசும் தவத்தோர்களின் அடியே துணை என்று கடைப்பிடித்தும், ஏறுதற்குகந்த மயில் வாகனனே, குகனே, சரவணனே, எனது ஈசனே, உனது மானமே என்னுடைய பெருமை என்று நான் கூறியும், உன்னைப் புகழும் ஏழைகள் இறைவனே. இந்த மனத் துயரம் எனக்கு எப்படி வந்தது என்று உன்னிடம் முறையிட நீ கேட்கா விட்டால், உன்னை யார் தான் புகழ்வார்கள்? வேதங்கள் தான் உன்னைப் புகழுமா?


    திரு நீறு விளங்கும் பொன்னான உடம்பை உடையவனே, நீல மயில் வாகனனே. உமா தேவி பெற்ற வேளே, அசுரர்களோடு எனது தீ வினைகளும் அழிய வேலை விட்டவனே, கஜமாசூரனைக் கொன்ற கணபதியின் தம்பியே. அழகிய பழனியில் வாழும் முருகனே, என் துயரம் என்று நீ கேட்கா விட்டால் உன்னை யார் தான் புகழ்வார்கள்?]/link]


    [div6]விளக்கவுரை குகஸ்ரீ ரசபதி


    திருமேனியன் இறைவன். நீறு பூத்த நெருப்பு போல் அவன் பொன் வண்ண திருமேனியில் விபூதி என்றும் விளங்குகிறது. இதனை நீறு படு மாழை பொரு மேனியவ என்பதில் நினைவூட்டினார்.


    பாழும் அஞ்ஞானம் பற்றியவர் நாங்கள். பரமஞான சக்தியை வேல் உருவில் பற்றியவன் நீ. ரன சக்தியால் மறைக்கப்பட்டிருந்த மாபெரும் குற்றவாளிகள் நாங்கள். மாயாதீதன் என்பதற்கு ஏற்ப மயில் உருவான அச்சக்திதை அடக்கி இன்று அதன் மேல் இருப்பவன் நீ. மண், பெண், பொன்னில் மயங்குபவர்கள் நாங்கள். அதனால் பிறவி எங்களைப் பின்னி பிணைத்தது. வீண் படுத்தும் மாயையை வென்று வீடு விருப்ப்ம் எங்களுக்கு விளைவிப்ப உமையாள் அருளிய உருவினன் நீ.


    நிசியில் விழித்தவர், நியதி கெட்டவர், நீச்சு நாற்றம் நீடிக்கும் ஐம்பொறி அறிவின் பலர் உளர். அவர்களோடு உறவு கொள்ள அவாவுகின்ற எம் வினைகளும் பல உள. அவர்களுக்கும் அவைகளுக்கும்அடியோடு அழிய அநாதி நித்திய அருமை உடைய உப்பானதும் மக்கானதும் இல்லாத வேலை ஏவும் விமலன் நீ. நீடிய வேல் செயல் செய்ய நீங்க என்றும் நீங்காத குளிர் ஞான சக்தியை கரத்தில் கொண்டவர் நீர்.


    ஆணவச் சார்பாம் அவதியை அடைபவர் யாம். பகைமுகனான ஆங்கார கயமுகன் ஒருகாலத்தில் பலரை பாம்பெனச் சீறி பாதித்தான். ஆணவச் சொரூபமான அவனை அடக்கினர் தெய்வ ஓங்கார ஆனைமுகர். பெரிய கயமுகன் பெருச்சாளியானான். உவந்து கணபதி அவனை ஊர்தியாக்கினார். அதுபோல் அகங்கார சூராதிகளை அடக்கிய ஓங்காரப் பொருள் நீர். மாபெரும் சூரன் மயிலானான். ஊர்தியாக்கி அவன் மேல் உவந்திருக்கின்றீர். அதனால் அனைமுக தேவர் துணைவா என ஆர்வத்தோடு உலகம் உம்மை அழைக்கின்றது.


    போகமும் அறியோம். யோகமும் உணரோம். பொய்த்த வாழ்வில் புளுங்குகிறவர்கள் யாம். வராக கிரியில் பழநிமலை வாழ்கிறது. வழங்கினோர் வாழும்படி அம்மலை மேல் என்றும் குமரனாய் இருக்கின்றாய். நம குமாராய என சிறக்க உருவேற்றுகிறார் சிவனார். 16 வயது உடைய குமாரத் திருவுருவை இதயங் கொண் இரு தேவியரும் சரவணபவா என்று ஏத்தி போற்றி இருந்தனர். இவ்வரலாறுகளால் யோக நுட்பமான குமார வடிவமே போகரூபம் ஆகிறது. அதனால் பழநி வாழ் குமரனே என்று ஏத்த இருப்பவன் நீ.


    என்னென்னவோ பிரம்ன் எங்கள் தலையில் எழுதியுள்ளான். எவரினும் பெரியோன் ஆதலின் அந்த நான்முகன் பிரமன் எனப் பெயர் பெற்றான். உலகைப் படைக்கும் தொழிலை உதவியவன் சீர். அதனால் உலகம் பிரம தேவர் வரதா என அழைக்கிதது.


    பாலனாகி, குமாரனாகி, தருணனாகி, கோலை ஊன்றிப் பெறுவம். என்றும் இளம்பூரணர் நீர். ஆதலின் முருகா முருகா முருகா உம்மை வாய்விட்டு அழைக்கிறது வையகம். அடிமை யாம், ஆண்டான் நீ. ஆதலின் தம்பிரானே என்று ஆர்வத்தோடு உம்மை அழைக்கிறோம். பிரியாதவன் என்பது பிரான் என மருவியது.


    தனக்குத் தானே தலைவன் தானே ஆனவன், மற்ற ஆன்மாக்களை விட்டு அகலாதவன்என்கிற பொருளையும் இனிதே கொண்டது அந்நாமம்.


    ஐந்து தொழில்களை புரியும் ஐம்முகம், சிற்சக்தி முகம் அந்த ஐந்து முகங்கட்கும் மூலம். ஆறுமுகம் ஆறு, ஆறுமுகமாக சிதாகாசமாக அமர்ந்த முகம் ஆறு. அறு சமயக் கடவுள் யாம் என்று அறிவிக்கும் முகம் ஆறுமுகம். -வெவ்வசுரர் குலத்தை மாய்க்க ஐஞ்சு முகம் அமையா என்று ஆறுமுகமாய் எழுந்தருளினானே - என குற்றால புராணம் குறிப்பிடுகிறது.


    ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று,
    ஈசருடன் ஞான மொழி பேசும் ஒன்று,
    கூறும் அடியாரின் வினை தீர்க்கு முகம் ஒன்று,
    குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று,
    மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்று,
    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
    ஆஹாஇப்படி ஆறுமுகம் என்று ஆறு தரம் அழைத்தால் தானே ஆனந்தம் பிறக்கும்.


    ஆறுமுகம் அவதரித்த இடம் கங்கையாறு, உகந்த இடம் ஆறுபடை வீடு, மூலாதாரம் முதல் இருந்த இடம் ஆறு, உருவேற்ற ஆதரவு காட்டும் எழுத்து ஆறு, திருப்புகழ், அலங்காரம், அநுபூதி, வகுப்பு, அந்தாதி, திருமுருகாற்றுப்படை எனும் அருள் நூட்கள் ஆறு. நீறுபடு மாழை பொரு மேனியன் நிமலன். இனியன் திருவுருவை எண்ணி ஆறுமுகம் என்று ஆறு தரம் கூறி விபூதியை மேலோர் பூசிக்கொள்வர்.


    வி- சிவம், பூ - பாவனை, தி - தியானம்.


    நீறு பூசி நீறணிந்த நிமலனை இடையறாது நினைத்தால் சிவத்துவ பாவனை சித்திக்கும் என்பது இங்குள்ள நுட்பம். அந்தத்தில் நீறு என்றார், ஆதியில் பூதி என்கிறார். இது ஆய்ந்து உணரும் ஓர் இடம். பூதி - பெரும் செல்வம் என்று பொருள்படும்.


    ஐயும் தொடர்ந்து விழியும் செருகி அறிவழிந்து, மெய்யும் பொய்யாகிவிடுகின்றபோது ஒன்று வேண்டுவன் , செய்யும் திருவொற்றியுடையீர் திரநீறும் இட்டு யான், கையும் தொழப்பண்ணி ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே -


    என்று பாடி கதறுகிறார் பட்டினத்தார்.


    உடம்பு ஒரு தேர், அதனுள் இருப்பவன் ஆத்மகுமாரன், இருவினைக்கயிற்றில் இணைந்த மனமாம் குதிரை தேரை ஈர்த்துச் செல்கிறது. தேரைச் செலுத்துவோன் திருவருட்பாகன். தேரும் பரியும் நேர் வழிச் செல்ல ஆறுமுகத்தை எண்ணி ஆறுமுகம் என்று வாயால் ஆறுதரம் கூறி பூதியை அகத்தில் பூசுகிறார் அறவோர். இதுதான் மாபெரும் தவ மார்க்கம்.மதியை அவ்வழியில் செலுத்துபவரே மாதவர்.


    எவ்வளவு முயன்றாலும் ஆறுமுக நுட்பம் அறிய முடிவதில்லையே. அறிந்த மாதவர் பாதமலர் சூடுவம். அவர்கள் ஆசியின் மூலம் அருளைப் பெறுவம் என்று அன்போடு எண்ணுகிறார்கள் அடியார்கள். இறப்பும் பிறப்பும் இரண்டார்க்கும் அஞ்சினவர் அவ்வடியவர். வாய்மை அவர் மன நிலையும் எனக்கு வர வாய்ப்பில்லையே. மறதியும் நினைவும் மாறி மாறி வருகின்றனவே. நல்லாரோடு இணங்கி இருப்பதும் நன்றன்றோ. கனிவு மிக்க அந்த அசூயவர்களின் பாதங்களே கதி என்று எண்ணியுளம். அதனால் நாங்கள் அடியார்க்கு அடியவர் ஆகின்றோம்.


    ஆண்மை உடையது, எங்கும் நிறைந்தானை ஏந்தும் பெரும் வீரமும் பெற்றது நீலகண்டம் எனும் நீல மயில் மேல் அகண்டன் எனும் வருகின்ற நினை ஏறு மயில் வாகனா என்கிறோம். கனிந்த அடியார் தம் பாதமே கதி என நம்பினவர் நாங்கள் இன்பமான அவர் தம் இதயகுகையில் இருப்பவனே என்று ஆர்வத்தோடு குகா என உம்மை அழைக்கின்றோம்.


    பொங்கும் மங்களம் பொலிபவனே, கேட்டதை எல்லாம் தந்தருளும் கேடில்லா தாதாவே, இருளகற்றும் பேரொளியே, அமைதியை என்றும் அளிப்பவனே எனும் பொருளில் உம்மை சரவணா என்று உம்மை சால்போடு விளிப்பம்.
    ச - மங்களம், ர - ஈகை, வ - பேரொளி, வ - சாத்வீகம்.[div6]


    அறியாமை வறுமையை அழிக்கும் என் பெரும் செல்வமே எனும் கருத்தில் எனது ஈசா என்கிறோம். ஏழைகள் நாங்கள், எங்கட்கு நேரும் இடர்பாடுகள் பல நீங்காமல் மேலும் நெருக்கடி செய்யுமேல், கனிந்து போற்றினீர்களே, அந்தக் கடவுள் ஏன் உங்களைக் கை விட்டது?, என்று நாற்புறம் ஊரார் நகையாடுவரே. உடல், பொருள், ஆவியை ஒப்படைத்தது எங்கள் மானத்தையும் உம்மிடமே ஒப்படைக்கின்றோம். காவாது மேலும் கைவிட்டால் மானத்தின் முன் அவம் கலக்கும். அவமானம் நேர்ந்தால் உனக்குத்தான் அகௌரவம். அதுமட்டும் அல்ல. எம்மைக் கைவிட்ட உம்மை எயிர் நாளில் ஏவர் புகழ்வர்? . உம்மை இதுவரை ஏத்திய வேதம் கூட எதிர்நாளில் எதிர்ப்பை எழுப்பும். இந்த வம்பெல்லாம் எதற்கு? இப்போதே வந்து ஏற்றுக் கொள் பிரபு என்பது குறிப்பு.


    1. முருகன், 2. முருகனையே எண்ணும் மாதவர், 3. மாதவர் பாதமலர் சூடும் அடியார், 4. அடியாருக்கு அடியார், 5. இதைப் பாட்டில் பாடும் அருணகிரியார், 6. இதை சிரவணிக்கும் பத்தர்கள் - என இவர்களும் அறுவர் ஆதலை அறிவிக்கும் திருப்புகழ் இது



    ஒப்புக


    அ. ஆறுமுகம் என்று பூதி ஆகம் அணி மாதவர்கள்....
    விபூதி = மேலான செல்வத்தைத் தருவது.
    (முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு
    சத்திமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
    பத்த தருவது நீறு பரவ இனியது நீறு
    சித்தி தருவது நீறு திருவாலவாயான் திரு நீறே)......................... சம்பந்தர்தேவாரத்திருமுறை 2-66-3.
Working...
X