Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    72.சீயுதிர
    சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
    மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
    தீநரிகள் கங்கு காகமிவை தின்ப தொழியாதே
    தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
    மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
    சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து நிலைகாணா
    ஆயதுந மன்கை போகவுயி ரந்த
    நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
    யாகியவு டம்பு பேணிநிலை யென்று மடவார்பால்
    ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
    தானுமிக வந்து மேவிடம யங்கு
    மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு புரிவாயே
    மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
    பார்முழுது மண்ட கோளமுந டுங்க
    வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை யதனாலே
    வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
    நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
    வாரணஇ ரண்டு கோடொடிய வென்ற நெடியோனாம்
    வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
    மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
    வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து பொடியாக
    வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
    கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
    வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் பெருமாளே.

    -72 பழநி

    பதம் பிரித்தல்
    சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும்
    மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
    தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே
    சீ உதிரம் எங்கும் ஏய் = சீழும் இரத்தமும் எங்கும் பொருந்தி நிரம்பும்= நிறைந்த. மாய = நிலை இல்லாத மல பிண்டம் = மலங்கள் நிறைந்த நோய் இடு = நோய்களுக்கு இருப்பிட மாகிய குரம்பை =(இந்த) உடலை தீ = நெருப்பும் நரி = நரிகளும் கங்கு =கழுகுகளும் காகம் இவை = காகங்களும் ஆகிய இவைகள் தின்பது= உண்ணுவது ஒழியாதோ = நீங்காதோ?


    தீது உள குணங்களே பெருகு தொந்த
    மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு
    சேரிடு நரம்பு தான் இவை பொதித்து நிலை காணா


    தீது உள குணங்களே = தீமையான குணங்களே பெருகு தொந்த =வளர்கின்ற பந்த பாசம் மாயையில் வளர்ந்த = மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு சேரிடு = தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள நரம்பு தான் இவை பொதிந்து = நரம்பு ஆகிய இவைகளும் நிறைந்து நிலை காணா = நிலை காண முடியாத.


    ஆயது நமன் கை போக உயிர் அந்த
    நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
    ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார் பால்


    ஆயது = இப்படியான இந்த உடம்பு நமன் கை உயிர் போக = யமன் கையில் உயிர் போனவுடன் அந்த நாழிகையில் = அந்த நேரத்தில்விஞ்ச ஊசிடும் = மிகவும் கெட்டுப் போகும் இடும்பையாகிய உடம்பு =துன்பம் நிறைந்த இவ்வுடலை பேணி = விரும்பி நிலை என்று =அது நிலையுள்ளது என்று கருதி மடவார் பால் = மாதர்களிடத்தே.


    ஆசையை விரும்பியே விரக சிங்கி
    தானும் மிக வந்து மேவிட மயங்கும்
    ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே


    ஆசையை விரும்பியே = காமப் பற்றை வைத்து விரக சிங்கிதானும் மிக வந்து = காம விடம் மிகுதியாக மேவிட = சேர்வதால். மயங்கும் =மயக்கம் கொண்டு ஆழ் துயர் விழுந்து மாளும் = ஆழ்ந்த துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற எனை அன்பு புரிவாயே = என் மீது அன்பு புரிந்தருளுக.


    மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு
    பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க
    வாய் பிளறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே


    மாயை வல கஞ்சனால் விட = மாயையில் வல்லவனாகிய கம்சனால் விடப் பட்டு வெகுண்டு = கோபத்துடன் வந்து பார் முழுதும் =உலகம் முழுவதும் அண்ட கோளமும் = அண்ட கோளங்களும்நடுங்க = நடுங்கும்படியாக வாய் பிளிறி நின்று = வாய் விட்டு சத்தமிட்டு வந்து நின்று மேக நிகர் தன் கை அதனால் = மேகம் போன்ற கருமையான தனது தும்பிக்கையால்.


    வாரி உற அண்டி வீறொடு முழங்கு
    நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
    வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம்


    வாரி உற அண்டி = எல்லாவற்றையும் வாரும்படியாக நெருங்கிவீறொடு முழங்கு = கர்வத்துடன் முழக்கம் புரிந்து நீரை நுகர்கின்ற =நீரை உண்ணும் கோபமொடு எதிர்ந்த வாரணம் = கோபத்தோடு எதிர்த்து வந்த (குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கோடு ஒடிய வென்ற = இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்றநெடியோனாம் = நீண்ட வடிவை உடையவனும்.


    வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து
    மேயல் புரி செம் கண் மால் மருக துங்க
    வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக
    வேயின் = புல்லாங்குழலின் இன்னிசையைக் கொண்டு கோ நிரை புரந்து = பசுக் கூட்டங்களைக் காத்து மேயல் புரி செம் கண் =மேயவிட்ட சிவந்த கண்களை உடையவனும் ஆகிய மால் மருக= திருமாலின்மருகனே துங்க = பரிசுத்தமான வேல = வேலனேகிரவுஞ்ச மால் வரை = கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாக = இடிந்து பொடியாகும்படி.


    வேலை விடு கந்த காவிரி விளங்கு
    கார் கலிசை வந்த சேவகன் வணங்க
    வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.


    வேலை விடு கந்த = வேலைச் செலுத்திய கந்த வேளே காவிரி விளங்கு நகர் = காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான கார் = நீர் சூழ்ந்த கலிசை வந்த சேவகன் = கலிசை என்ற ஊரில் வாழ்கின்றசேவகன் என்ற வீரன் வணங்க = உன்னைத் துதிக்க வீரை நகர் வந்து வாழ் = வீரை நகரில் எழுந்தருளியுள்ள பழநி = பழனிப் பெருமாளே அண்டர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.






    ஒப்புக
    அ. வாரண இரண்டு கோடு ஒடிய வென்ற நெடியோனாம்...
    கேசவன் ... வேழ மருப்பை ஒசித்தான்..................................நம்மாழ்வார் (திருவாய் மொழி)


    ஆ. சீயுதிர....
    தோலெலும்பு சீ நரம்பு பீளைதுன்று கோழைபொங்கு
    சோரிபிண்ட மாயுருண்டு வடிவான தூலம்).......................திருப்புகழ், தோலெலும்பு


    இ. நோயிடு குரம்பை...
    கள்ளப்புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே....................................திருவாசகம் -சிவபுராணம்
    குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
    எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
    குலைந்த செயிர் மயிர் குருதியொ டிவைபல சுகமாலக்..............திருப்புகழ்,குரம்பைமலசலம்
    பல நோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது..............திருப்புகழ், முனையழிந்தது


    ஈ. தீ நரிகள் கங்கு காகமிவை.....
    எய்ச்சிளைச்ச பேய்க்கும் எய்ச்சிளைச்ச நாய்க்கும்
    எய்ச்சிளைச்ச ஈக்கும் இரையாகும்
    இக்கடத்தை நீக்கி அக்கடத்து ளாக்கி
    இப்படிக்கு மோட்சம் அருள்வாயே)..................................................... திருப்புகழ், மச்சமெச்சு


    பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
    நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
    ஆக்கைக் கேஇரை தேடி அலமந்து
    காக்கைக் கேஇரை யாகிக் கழிவரே)............................... திருநாவுக்கரசர் தேவாரத் திருமுறை


    எரியெனக் கென்னும் புழுவோ எனக்கெனும் இந்த மண்ணும்
    சரியெனக் கென்னும் பருந்தோ எனக்கெனும் தான் புசிக்க
    நரியெனக் கென்னும் புன்னாய் என்கெனும் இந் நாறுடலைப்
    பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே)...................பட்டினத்தார்... பொது


    உ. விரக சிங்கி ...
    சிங்கி = குளிர்ந்து கொல்லும் விஷம். மாதராசை இந்த நஞ்சுக்கு நிகரானது.


    ஊ. கார் கலிசை வந்த சேவகன்...
    இவர் அருணகிரியாருடைய இனிய நண்பர். இவர் காவிரிச் சேவகன் என்ற
    பெயராலும் அழைக்கப் பெறுகின்றார். முருக பக்தர், வீரைத் தலத்தில் பழநி
    ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர். மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் இவர் ஒருவர். மற்றவர்கள் – சோமநாதன், பிரபுட ராஜன்


    இவரைப்பற்றி குறிப்பிடும் மற்ற திருப்புகழ் பாடலகள்

    கலிசை வாழ வரு காவேரி சேவகனது உளம் மேவும் வீர------------------------ தோகைமயிலேக
    வீறு கலிசை வரு சேவகனது.. இதயம் மேவும் முதல்வ---------------------------கோல மதிவதனம்
    வீறு கலிசைவரு சேவகனது இதயம் ... புகழ்------------------------------- சீற லசடன்வினை காரன்
    கலிசை வரு காவேரி சேவகனொடு அன்பு புரிவோனே------------------------ இருகனக மாமேரு
    வீறு காவிரி உட்கொண்ட சேகரனான சேவகன் –------------------------------------------பாரியான
Working...
X