Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    75.ஞானங்கொள்
    ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
    நாடண்டி நமசி வாய வரையேறி
    நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
    நாதங்க ளொடுகு லாவி விளையாடி
    ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
    லோமங்கி யுருவ மாகி யிருவோரும்
    ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
    லோகங்கள் வலம தாட அருள்தாராய்
    தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
    சீரங்க னெனது தாதை ஒருமாது
    சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
    சேர்பங்கி னமல நாத னருள்பாலா
    கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
    காடந்த மயிலி லேறு முருகோனே
    காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
    காணெங்கள் பழநி மேவு பெருமாளே

     75 பழநி



    பதம் பிரித்து உரை
    ஞானம் கொள் பொறிகள் கூடி வான் இந்து கதிர் இலாத
    நாடு அண்டி நம சிவாய வரை ஏறி
    ஞானங்கள் = ஞான நிலையை பொறிகள் கூடி = (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்) ஐம்பொறிகளும் நாடிநிற்பதாய். வான் = வானத்தில் உள்ள இந்து = சந்திரன்கதிர் = சூரியன். இலாத நாடு அண்டி = இல்லாத தேஜோ மண்டல பூமியைக் (ஸ்ரீநந்தி ஒளியைக்) காணப் பெற்றுநம சிவாய வரை ஏறி = நமசிவாய என்னும் ஐந்தெழுத்தை ஓதுவதால் அடையக் கூடிய உச்சி நிலையை அடைந்து.
    நா இன்ப ரசம் அது ஆன ஆநந்த அருவி பாய
    நாதங்களோடு குலாவி விளையாடி
    நா இன்ப ரசமது ஆன = நாவில் இன்ப ரசத்தைத் தரும் ஆநந்த அருவி பாய = ஆனந்தம் என்னும் அருவி (உட்புறத்தே) பாயநாதங்களோடு = (அப்போது பத்து) நாதங்களும் கேட்க குலாவி விளையாடி = மகிழ்ந்து விளையாடி.


    ஊனங்கள் உயிர்கள் மோக நான் என்பது அறிவு இலாமல்
    ஓம் அங்கி உருவமாகி இருவோரும்
    ஊ(ன)ங்கள் உயிர்கள் = ஊன், உயிர் மோகம் = ஆசை. நான் = நான் என்னும் அகந்தை என்பது அறிவு இலாமல் = இத்தகைய மயக்க அறிவாசை என்னை விட்டு அகல ஓம் அங்கி உருவம் ஆகி =ஓம் என்னும் சிவோக நிலை கொண்டவனாய் இருவோரும் =சீவாத்மாவும் பரமாத்மாவும் ஆகிய நாம் இருவரும்.
    ஓர் அந்தம் மருவி ஞான மா விஞ்சை முதுகி(ல்) ஏறி
    லோகங்கள் வலம் அது ஆட அருள் தாராய்
    ஓர் அந்தம் மருவி = ஒன்று சேரும் முடிவை அடைந்து ஞான மா விஞ்சை = சிவ ஞானம் என்னும் யானையின் முதுகின் ஏறி =முதுகின் மேல் ஏறி (மவுன நிற்குண நிலையைப் பெற்று)லோகங்கள் வலமது ஆட = சகல லோகங்களும் (அந்த ஞான ஒளியில்) சுற்றி விளக்கம் தந்து வலமது ஆட = பொலிவு தர அருள் தாராய் = அருள் புரிவாயாக.
    தேனம் கொள் இதழி தாகி தார் இந்து சலில வேணி
    சீர் அங்கன் எனது தாதை ஒரு மாது


    தேனம் கொள் = மது நிறைந்த இதழி = கொன்றை மாலை தாகி தார்=தாதகி (ஆத்தி) மாலை இந்து = நிலவு சலில = (கங்கை) நீர் வேணி= (இவைகளைக் கொண்ட) சடை முடியை உடைய சீர் அங்கன் =அழகிய அங்கத்தை உடையவனும் எனது தாதை = எனது தந்தையும் ஒரு = ஒப்பற்ற மாது = மாது.
    சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி
    சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா
    சேர் = சேர்ந்துள்ள பஞ்ச வடிவி = ஐந்து வடிவத்தினள் மோகி =ஆசை தருபவள் யோகம் கொள் = யோக நிலை கொண்ட மவுன ஜோதி = மவுன சோதி (ஆகிய பார்வதி). சேர் பங்கின = இடது பாகத்தை உடைய அமல நாதன் அருள் பாலா = குற்றமற்ற நாதனுமாகிய சிவபெருமான் அருளிய பாலனே.
    கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீலகாடு அந்த மயிலில் ஏறு முருகோனே
    கானங்கள் = காடுகள் வரைகள் = மலைகள் தீவு = தீவுகள் ஓதங்கள் =கடல்கள் பொடிய = இவை எல்லாம் பொடிபடவும் நீலக் காடு =நீல நிறம் மிக்க அந்த மயிலில் ஏறு = அழகிய மயிலில் ஏறும்.முருகோனே = முருகனே.
    காமன் கை மலர்கள் நாண வேடம் பெண் அமளி சேர்வை
    காண் எங்கள் பழநி மேவு பெருமாளே.
    காமன் கை மலர்கள் = மன்மதனுடைய கையிலுள்ள மலர்ப் பாணங்கள் நாண = வெட்கிக் குலைய வேடம் பெண் = வேடுவப் பெண் வள்ளியின் அமளி சேர்வை = படுக்கைச் சேர்க்கையைகாண் எங்கள் = கண்ட எங்கள் பழநி மேவும் பெருமாளே = பழனி மலையில் எழுந்தருளி இருக்கும் பெருமாளே.






    [div5]விளக்கக் குறிப்புகள்
    அ. இந்து கதிர் இலாத நாடு.....
     இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
    இருள்கதி ரிலிபொற் பூமி தவசூடே)...............................................திருப்புகழ். திருநிலமரு
     இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
    னிடம தேறியே னிருநோயும்)......................................................திருப்புகழ், இருளுமோர்
     சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
    சோதிமரு வும்பூமி யவையூடே...............................................திருப்புகழ், நீருநிலமண்ட


    இந்த நிலையில் உள்ளொளியாகிய ஸ்ரீநந்தி ஒளியைக் காணலாம்.


    ஆ. நாதங்களொடு குலாவி....
    ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிகமோடு............................. திருப்புகழ், ஆசைநாலு
    தச நாதங்களாவன... கிண்கிணி, சிலம்பு, மணிசங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில். இவை யோகிகளால் உணரப்படுவன.


    இ. ஊனங்கள்உயிர்கள் மோக .....
    ஊனங்கள் - ஊன்கள். செய்யுள் விகாரம்
    ஈ. தாகி - தாதகி = ஆத்தி. இடைக்குறை


    உ. பஞ்சவடிவி.... அம்பிகை ஐந்து வர்ணங்களை உடையவள்
    பிங்கலை (பொன்னிறம்), நீலி (நீல நிறம்), செய்யாள் (செந்நிறம்), வெளியாள்
    (வெண்ணிறம்), பசும் பொன் (பச்சை).


    பஞ்சபூத வடிவி எனவும் பொருள் கொள்ளலாம்


    ஊ. லோகங்கள் வலமதாட அருள்தாராய்....
    ஞான ஒளியில் சகல லோகங்களும் விளக்கம் தரும்.
    அகிலபுவ னாதி யெங்கும் வெளியுற மெய்ஞ் ஞான இன்ப
    அமுதையொழி யாத ருந்த அருள்வாயே).........................................திருப்புகழ்,சுருளளகபார[div5]
Working...
X