Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    88.மூல மந்திரம்
    [மூல மந்திர மோத லிங்கிலை
    யீவ திங்கிலை நேய மிங்கிலை
    மோன மிங்கிலை ஞான மிங்கிலை மடவார்கள்
    மோக முண்டதி தாக முண்டப
    சார முண்டப ராத முண்டிடு
    மூக என்றொரு பேரு முண்டருள் பயிலாத
    கோல முங்குண வீன துன்பர்கள்
    வார்மை யும்பல வாகி வெந்தெழு
    கோர கும்பியி லேவி ழுந்திட நினைவாகிக்
    கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
    ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
    கூர்மை தந்தினி யாள வந்தருள் புரிவாயே
    பீலி வெந்துய ராலி வெந்தவ
    சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
    பீதி கொண்டிட வாது கொண்டரு ளெழுதேடு
    பேணி யங்கெதி ராறு சென்றிட
    மாற னும்பிணி தீர வஞ்சகர்
    பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே
    ஆல முண்டவர் சோதி யங்கணர்
    பாக மொன்றிய வாலை யந்தரி
    ஆதி யந்தமு மான சங்கரி குமரேசா
    ஆர ணம்பயில் ஞான புங்கவ
    சேவ லங்கொடி யான பைங்கர
    ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே.

    -88 பழநி

    பதம் பிரித்து உரை
    மூல மந்திரம் ஓதல் இங்கு இலை
    ஈவது இங்கு இலை நேயம் இங்கு இலை
    மோனம் இங்கு இலை ஞானம் இங்கு இலை மடவார்கள்


    மூல மந்திரம் = மூல மந்திரமாகிய (ஆறெழுத்தை). ஓதல் இங்கிலை = ஓதுவது என்பது என்னிடம் கிடையாது. ஈதல் இங்கிலை =(பிறருக்குக்) கொடுத்தல் என்பதும் என்னிடத்தில் கிடையாது.மோனம் இங்கிலை = மனத்தை அடக்கும் மவுன நிலை என்பது என்னிடம் கிடையாது. ஞானம் இங்கிலை = ஞானம் என்பதும் என்னிடத்தில் இல்லை. மடவார்கள் = மாதர்கள் மீது.


    மோகம் உண்டு அதி தாகம் உண்டு
    அபசாரம் உண்டு அபராதம் உண்டு இடு
    மூகன் என்ற ஒரு பேரும் உண்டு அருள் பயிலாத


    மோகம் உண்டு = காமம் என்பது என்னிடம் உண்டு. அதி தாகம் =அதில் மிக்க வேட்கை (எனக்கு) உண்டு. அபசாரம் உண்டு =(அதனால் செய்த) அபசாரம் எனக்கு உண்டு. இடு மூகன் என்ற =(எல்லாரும்) இட்ட கீழ்மகன் என்னும். பேரும் உண்டு = பெயரும் எனக்கு உண்டு. அருள் பயிலாத = உனது திருவருளில் பயிலாத.


    கோலமும் குண ஈன துன்பர்கள்
    வார்மையும் பலவாகி வெந்து எழு
    கோர கும்பியிலே விழுந்திட நினைவாகி


    கோலமும் = விளையாட்டுக் கோலமும்.குண ஈன=குணம் இழிவான.துன்பர்கள் = துன்பச் செயலாளர்களின். வார்மையும் = ஒழுக்கமும்.பலவாகி = பல கூடி. வெந்து எழு = வெந்து எழுகின்ற. கோர =கோரமான. கும்பியிலே= கும்பிபாகம் என்னும் நரகத்தில். விழுந்திட = விழுவதற்கே. நினைவாகி = நினைவு கொண்டு.


    கூடி கொண்டு உழல்வேனை அன்போடு
    ஞான நெஞ்சினர் பால் இணங்கிடு
    கூர்மை தந்து இனி ஆள வந்து அருள் புரிவாயே


    கூடு கொண்டு = இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து. உழல்வேனை = திரிகின்ற என் மீது அன்பொடு = அன்பு வைத்து. ஞான நெஞ்சினர் பால் = ஞானம் நிறைந்த மனத்தினருடன் இணங்கிடும் =சேரும்படியான கூர்மை தந்து = நுண்ணறிவை எனக்குத் தந்து. இனி ஆள வந்து = என்னை ஆட்கொள்ள என்னிடம் வந்து. அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.


    பீலி வெந்து உயர் ஆலி வெந்து
    அசோகு வெந்து சமண் மூகர் நெஞ்சிடை
    பீதி கொண்டிட வாது கொண்டு அருள் எழுது ஏடு


    பீலி வெந்து = மயில் பீலியும் வெந்து. உயர் ஆல = உயர்ந்த குண்டிகை நீரும் வெந்து கொதித்து. அசோகு வெந்து = அசோகந் தளிர்களும் வெந்து. அமண் மூகர் = (அந்த அவமானத்தால்) சமண்களாகிய ஊமைகள். நெஞ்சிடை பீதி கொண்டிட = மனத்தில் பயம் கொள்ளுமாறு. வாது கொண்டு = வாது செய்து. அருள் எழுது ஏடு = திருவருட் பெருக்கால் (பாசுரம் எழுதிய) ஏடு.


    பேணி அங்கு எதிர் அறு சென்றிட
    மாறனும் பிணி தீர வஞ்சகர்
    பீறு வெம் கழு ஏற வென்றிடு முருகோனே


    பேணி = யாவரும் விரும்பும்படி. அங்கு எதிர் ஏறு சென்றிட =(வைகை) ஆற்றில் எதிர்த்துச் செல்லவும். மாறனும் = பாண்டிய மன்னனும். பிணி தீர = நோய் தீர்ந்து குணம் பெறவும். வஞ்சகர் =வஞ்சகர்கள். பீறு = (உடலைக்) கிழிக்கின்ற. வெம் கழு ஏற = கொடிய கழுவில் ஏறவும்.


    ஆலம் உண்டவர் சோதி அம் க(ண்)ணர்
    பாகம் ஒன்றிய வாலை அந்தரி
    ஆதி அந்தமுமான சங்கரி குமரேசா


    ஆலம் உண்டவர் = ஆலகால விடத்தை உண்டவரும். சோதி அம் கண்ணர் = முச்சுடர்களை விட அழகிய முக்கண்கள் கொண்டவரும் ஆகிய சிவபெருமானின். பாகம் ஒன்றிய = பாகத்தில் பொருந்திய. வாலை = குமரி. அந்தரி = பராகாச வடிவினள். ஆதி அந்தமுமான =முதலும் இறுதியுமாய் நிற்கும். சங்கரி குமரேசா = சங்கரியின் குமரனே.


    ஆரணம் பயில் ஞான புங்கவ
    சேவல் அம் கொடி ஆன பைங்கர
    ஆவினன்குடி வாழ்வு கொண்டு அருள் பெருமாளே.


    ஆரணம் பயில் = வேதங்கள் பயிலும். ஞான புங்கவ = ஞான குருவே.சேவல் அம் கொடி ஆன = அழகிய சேவல் கொடியை ஏந்திய.பைங்கர = திருக் கரத்தனே ஆவினன் குடி வாழ்வு = பழனியில் வாழ்வு கொண்டு. அருள் பெருமாளே = அருள் பாலிக்கும் பெருமாளே.




    குகஸ்ரீ ரசபதி விளக்கவுரை
    அமணர் காடு காழியை அடர்ந்தது. அப்பாவத்தால் பாண்டியனை அந்நோய் பாதித்தது. அதைத் தவிர்க் அமணர் எண்ணினர். மந்திரம் கூறி மயிற் பீலியால் மன்னர் உடலை வருடினர். தேகத்தின் மீது கும்பிகை நீரைத் தெளித்தனர். சுர வெம்மையால் சார்ந்த பீலி சாமம்பலாகியது. வளமான கும்பிகை நீர் வற்றியது. கையில் இருந்த அசோக தளிரும் தீந்தது. இறுதியில் திருநீற்றுப் பதிகம் பாடி சுரம் தீர்த்தார் திருஞானசம்பந்தர். கண்ட அமணர் பீதி கொண்டனர். அழிந்தது நமது சமயக் கொள்கை என அலறினர். அருள் நாதம் மெய்மையை அறிவிக்கும். அம்மெய்மையை உள்ளத்தில் அழுத்தி அதை உண்மை ஆக்குவம். உண்மையை வாய் வழி வெளிப்படுத்தி அதை வாய்மை ஆக்குவம். வாய்மையை ஒலி ஆக்குவம். ஒலியை எழுத்தாக்குவோம். எழுத்தை ஏட்டாக்குவோம். தெய்வ அந்த ஏட்டை தீயில் சேர்ப்போம். வேகாத ஏடு வெற்றி பெற்றது என்று வாதத்தை அமணர் வளர்த்தினர். சுர வாதில் தோற்ற அமணர் தூய அனல் வாதிலும் தோற்றனர். மீண்டும் வாதத்தில் முடி சூடலாம் என்று எண்ணினர். புனல் வாதம் செய்வோம், தோற்றவர் கழு ஏற வேண்டும் என்று தம்மைத் தாமே வஞ்சிக்கொண்ட தடுமாற்றத்தால் தம் சமய உண்மை தழுவிய ஏட்டை வெள்ளம் பெருகிய வைகையில் இட்டனர். அந்த ஏட்டை வெள்ளம் அடித்துச் சென்றது.
    வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீய எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே - என எழுதிய திருப்பாசுர ஏட்டை
    வெள்ளப் பெருக்கில் இட்டார் பிள்ளையார்.


    அந்த ஏடு ஆற்றின் எதிர் ஏறிச் சென்றது. மேற்படி பாசுரத்தில் உள்ள - வேந்தனும் ஓங்குக - எனும் வாக்கால், மன்னனுடைய உடல் கூன் நிமிர்ந்தது. அதைக் கண்ட உலகம் களித்தது. எங்கும் ஹர ஹர ஒலி எழுந்தது. சுண்டக் காய்ச்சிய பால் அளவில் குறையும், சுவையில் மீகும். பால் குறைந்தது என்று அழுவார் போல் அமணர் தம் சமயம் அழிந்ததே என தடுமாறினர். ஆளுடைய பிள்ளையார் எவ்வளவு தடுத்தும் கேளாமல் கலக அமணர் கழு ஏறி மாய்ந்தனர் எனும் வரலாறு 5, 6 அடிகளில் இருக்கின்றன.
    எல்லா சமயங்களும் உயர்ந்து இருக்க வேண்டும், பயனாக ஒவ்வொரு சமயமும் படி நிலைகள். மேதகு படி வழியாகத்தான் எவரும் மேலே போக வேண்டும். ஒரு படி கெடினும் தடை பல விளையும். அந்நுட்பம் ஓராமல் சமய வாதிகள் தம்முள் முரணினால் அக்கால நிலைக்கு ஏற்ப விமல முருகன் வெளிப்படும். சமணர்களைப் பெருக்கி சைவப் பயிரை அழிக்க முயன்ற சமயத்தில் அபர சுப்ரமண்யம் ஞானசம்பந்தராய் வந்தது. ஆக்ரமித்த சமணர்களை புடம் போட்டு எடுத்தது. இது தான் இங்குள்ள அறிவிப்பு.
    அமலனை மறந்து அமுதம் திரட்ட அமரர் எண்ணினர். அவ்வினை விளைவு விடமாய் எழுந்தது. அமரர் கதறினர். அபயம் என்றனர். அத்தன் வந்தான், அஞடசற்க என்றான், ஆலம் உண்டான், அமரரைக் காத்தான். பகலில் இரவில் ஒளி வழங்கும் பருதி மதிகள் அவன் கண்கள், உயிருள் மருவும், அருளை அழிக்கும் அருள் ஒளியை நெற்றிக் கண்ணில் நிமித்தினர் நிமலர். அந்த எம்மான் இடத்தில் இருப்பவள் என்றும் குமரி. தியான சிரேஷ்டர்களைஞான விண்ணில் சந்திப்பவள் அத்தேவி.அப்பொருளிலும் முதலிலும் முடுவிலும் நிற்பவள் அம்முதல்வி. இறப்பு பிறப்பின் இளைப்பை ஆற்றும் அந்தப் பெருமாட்டியின் மைந்தன் குமரன்.
    இடர் தவிர்க்கும் இரக்கமுளர், ஒளி உருவினர் ஆன ஞானியர் எல்லாம் சிவமாவர். இளமை கெடாத, வளமான ஞானத்தர், பணி முகத்தில் முன்னும் பின்னும் பயன் செய்வார் அடைந்தார் அயர்வை அகற்றுபவர் ஆன சால்பு உடைய மாதர்கள் எல்லாம் சக்தியின் அம்சம். இவ்விருவர் நடுவில் குதுகலித்து வெள்ளிப்படுபவன் குமரேசன் என்பது 7, 8 அடிகளில் இருக்கும் நுட்பம்.
    சிவனடியே சிந்திக்கும் திருபெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினனின் ஓங்கிய ஞானம் உவமை இல் கலை ஞானம் உணர்வறிய மெய்ஞானம் தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் - என்கிறார் சேக்கிழார். கலை ஞான வாத்தால் கலந்தாரை, திருஞான சம்பந்தராய் வந்து தெளிவுறுத்தும் பெருமான் , ஆரணங்களால் பயின்றிருந்த அத்தன் , சிவனாருக்குக் குருவான செம்மல் ஆதலின் ஞான புங்கவ என்கிறார். அருள் நூட்களை ஓத ஓத ஓதலில் இருந்து நாதம் எழும். நாதம் ஒரு சேவல். அக்னி ஒரு சேவல். சூரனின் பாதி உடலான பதுமச் சேவலைபரம குமரன்
    பற்றியுள்ளன்.பரிபாகத்திற்குத் தக்க படி பர நாதம், அபர நாதம், பராப்பர நாதங்களை முறையே எழுப்பும் மூன்று சேவல்கள் முருகனிடம் உள.
    பேரின்பப் பெரு வாழ்வினன் அதை பிறருக்கும் அருள்பவன் ஆதலின் பெரு வாழ்வு கொண்டருள் பெருமாளே என வியந்து உவந்து விளித்தார்.
    மூல மந்திரம் என்பது ஓரெழுத்து மனு. நினைவை விறைவேற்றுவது என்பதே அதன் பொருள். அது விசாலமான முறையில் செய்ய விண்ணப்பமும் ஆகும். அதிரகசியம் பல அதனில் அடங்கியுள். ஓயாது அதை ஓதி ஓதி ஊன் அவிழ, உணர்வு அவிழ வரும் காலத்தில் ஓதல் தடைப்படும். அந்நிலையில் அந்நாதம் இயல்பாக செவியல் வந்து பாயும். இது தான் சுருதி முறை.
    அடியவருக்கு ஈதல் இல்லை, அவர் பால் அன்பில்லை என முதல் அடிக்குப் பொருள் சொல்லல் லேசு நடை. மூலமந்திரம் ஓதாவிடினும் தலையணை மந்திர தையலர் உண்டு. அவர்பால் மோகமும் தாகமும் மூழ்வது முறையோ ???? அருள் நெறிக்கு அயலாகி செயற்கை அழகு வெளிப்பட சிங்காரம் செய்வதோ ??? குணங்கெட்டார் தொடர்பால் கும்பி பாகமோ பெறுவது ???
    முருகோனே, குமரேசா, ஞான புங்கவா, பைங்கரா, பெருமாளே, ஞானிகளுடன் உறவு கொள்ளும் படியான நுண்ணறிதைத் தா. அருளிய என்னை ஆள வந்து அருள் செய் என்பது 4 - அடியில் உள்ள நலன்.
    அருணகிரி நாதர் கமல அடிகளுக்கே அடைக்கலம்

    விளக்கக் குறிப்புகள்
    பிண்டியும் தண்டும் பாயும் பீலியும் குடையும் வெந்து....கையில்
    குண்டிகை நீரும் நின்று கொதித்திடக் கண்டார் குண்டர்........திருவாலவாயுடையார்
    புராணம் 37.63. ஆ பீலி வெந்துய ராலி .........
    பீறு வெங்கழு வேற வென்றிடு - சம்பந்தர் வரலாறு பாடல் 187ல் காண்க


    • கும்பி பாகம் என்ற நரகம் ஏழு நரகங்களில் ஒன்று. பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம். ஏழு நரகங்கள்: கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).
    Last edited by soundararajan50; 03-08-17, 06:37.
Working...
X