Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    102.காமியத்து


    காமி யத்த ழுந்தி யிளையாதே
    காலர் கைப்ப டிந்து மடியாதே
    ஓமெ ழுத்தி லன்பு மிகவூறி
    ஓவி யத்தி லந்த மருள்வாயே
    தூம மெய்க் கணிந்த சுகலீலா
    சூர னைக்க டிந்த கதிர்வேலா
    ஏம வெற்பு யர்ந்த மயில்வீரா
    ஏர கத்த மர்ந்த பெருமாளே.

    - 102 திருவேரகம்



    பதம் பிரித்து உரை


    காமியத்து அழுந்தி இளையாதே
    காலர் கை படிந்து மடியாதே


    காமியத்து = ஆசைப் படும் பொருள்களில் அழுந்தி =ஈடுபட்டு இளையாதே = மெலிந்து போகாமல் காலர் = யம தூதர்களின் கைப்படிந்து = கையில் சிக்கி மடியாதே = இறந்து போகாமல்.


    ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
    ஓவியத்தில் அந்தம் அருள்வாயே


    ஓம் எழுத்தில் = ஓம் என்னும் பிரணவப் பொருளில். அன்பு மிக ஊறி = அன்பு மிகவும் வைத்து. ஓவியத்தில் = சித்திரம் போன்ற (மோன நிலை). அந்தம் = முடிவை. அருள்வாயே =அருள்வாயாக.


    தூமம் மெய்க்கு அணிந்த சுக லீலா
    சூரனை கடிந்த கதிர் வேலா


    தூமம் = நறும்புகை மெய்க்கு அணிந்த = உடலில் அணிந்துள்ளசுக லீலா = சுக லீலைப் பெருமானே ( உயிரினங்கள் இன்புறும் பொருட்டு திருவிளையாடல் புரிவரே). சூரனைக் கடிந்த = சூரனை அழித்த கதிர் வேலா = ஒளி வீசும் வேலனே.


    ஏம வெற்பு உயர்ந்த மயில் வீரா
    ஏரகத்து அமர்ந்த பெருமாளே.


    ஏம வெற்பு = பொன் மலை போல. உயர்ந்த =சிறந்தோங்கும் மயில் வீரா = மயிலில் ஏறும் வீரனே. ஏரகத்து =திருவேரகம் எனப்படும் சுவாமி மலையில். அமர்ந்த பெருமாளே = வீற்றிருக்கும் பெருமாளே.











    "ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி
    ஓவியத்தில் அந்தம் அருள்வாயே"


    ஆறெழுத்தும் அடங்கி நிற்கும்
    ஓமென்னும் ஓரெழுத்தில்
    "ஓரெழுத்தில் ஆறெழுத்தை
    ஓதுவித்த" பெருமான்
    உறைந்திருக்கும் படைவீடு
    ஏரகத்தில் எம்பெருமான்
    ஓரெழுத்தின் பொருளுரைக்க
    விடையேறு நம்பெருமான்
    பணிந்து நின்று கேட்டனன்
    அன்பு கொண்டு தியானித்து
    மனம் முழுதும் அதில் திளைத்து
    ஓவியம்போல் அசைவற்று
    முடிவென்னும் அந்தத்தில்
    மோனத்தில் நான் மூழ்க மனமிரங்கி அருளவேண்டும். –
    VSK


    இப்பாடலை விளக்கும் பொழுது பிரணவ மந்திரத்தின் பெருமையினை வாரியார் கூறியுள்ளார். ‘ஓம்’ என்ற எழுத்தே சூக்கும சடக்கரம் என்பார். இதனுள் ஆறெழுத்தும் அடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் பாங்கில் “ஓரெழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமாளே” என்ற திருப்புகழ்ப் பாடற் பகுதியை மேற்கோள் தந்தனர். பல்வேறு உபநிடதங்களையும் தம் கருத்திற்கு அரணாக எடுத்துக் காட்டுவார். இப்பிரணவ மந்திரத்தை மிக்க அன்பு பூண்டு தியானித்து ஓவியம் போல் அசைவற்று விளங்குதலே முடிந்த முடிவு என்பதும், அதனைத் தனக்கு அளித்தருளும் படியும் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.




    ஒப்புக




    1 காமித்தழுந்தி யிளையாதே...


    காமியம் செய்து காலம் கழியாதே
    ஓவியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ --- திருநாவுக்கரசர் தேவாரம்


    ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றி கள்ளம் ஒழிந்து வெய்ய
    சொல்லை ஆறி தூய்மை செய்து காமவினை அகற்றி --- சம்பந்தர் தேவாரம்


    2. ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி....


    ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி
    ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு
    ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
    ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே --- திருமந்திரம்


    3. ஓவியத்தில் அந்தம் அருள்வாயே...


    ஓவியமான உணர்வை அறிமின்கள்
    பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
    தீவினை யாமுடன் யாமுடன் மண்டல மூன்றுக்கும்
    பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே --- திருமந்திரம்.


    பூவினிற் கந்தம் பொருந்தஙிய வாறுபோற்
    சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
    ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
    நாவி யணைந்த நடுதறி யாமே ---
    திருமந்திரம்
Working...
X