Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    மகர கேத னத்த னுருவி லானெ டுத்து
    மதுர நாணி யிட்டு நெறிசேர்வார்
    மலைய வேவ ளைத்த சிலையி னூடொ ளித்த
    வலிய சாய கக்கண் மடமாதர்
    இகழ வாச முற்ற தகையெ லாம்வெ ளுத்து
    இளமை போயொ ளித்து விடுமாறு
    இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்து
    னினிய தாள ளிப்ப தொருநாளே
    அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட
    அதிர வேந டத்து மயில்வீரா
    அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்கு
    அடைய வாழ்வ ளிக்கு மிளையோனே
    மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்க
    விழைசு வாமி வெற்பி லுறைவோனே
    விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்க
    வினவ வோது வித்த பெருமாளே

    - 112 திருவேரகம்



    பதம் பிரித்து உரை


    மகர கேதனத்தன் உருவு இலான் எடுத்து
    மதுர நாண் இட்டு நெறி சேர்வார்


    மகர கேதனத்தன் = மீன் கொடியை உடையவனும் உருவு இலான் = உருவம் இல்லாதவனுமாகிய மன்மதன் எடுத்து =கையில் எடுத்து. மதுர = இனிமை தரும் (கரும்பு வில்லில்).நாண் இட்டு = நாணை இட்டு. நெறி சேர்வார் = நல்ல நெறியில் இருப்பவர்களும்.


    மலையவே வளைத்த சிலையின் ஊடு ஒளித்த
    வலிய சாயக கண் மட மாதர்


    மலையவே = மயங்கித் திகைக்கும்படி வளைத்த சிலையின் ஊடு = வளைத்த வில்லின் உள்ளே ஒளித்த = மறைத்து வைத்த வலிய = வலிய. சாயகக் கண் = அம்பாகிய கண்ணை உடைய மட மாதர் = அழகிய (விலை) மாதர்கள்.


    இகழ வாசம் உற்ற தலை எ(ல்)லாம் வெளுத்து
    இளமை போய் ஒளித்து விடு மாறு


    இகழ = இகழும்படி. வாசம் உற்ற = (ஒரு காலத்தில்) மணம் இருந்த. தலை எலாம் வெளுத்து = தலை முழுமையும் வெளுத்து.இளமை போய் = இளமை என்பது கடந்து போய். ஒளித்து விடுமாறு = ஒளித்து விடும்படி.


    இடை விடாது எடுத்த பிறவி வேர் அறுத்து
    உன் இனிய தாள் அளிப்பது ஒரு நாளே


    இடை விடாதே = இடை விடாமல். எடுத்த பிறவி = நான் எடுத்த பிறவி என்பதின் வேர் அறுத்து = வேரை அறுத்து இனிய தாள் =உனது இனிமையான திருவடுடியை அளிப்பது ஒரு நாளே = நீ தந்து அருளுவதும் ஒரு நாள் கிட்டுமோ?


    அகிலம் ஏழும் எட்டு வரையின் மீது முட்ட
    அதிரவே நடத்தும் மயில் வீரா


    அகிலம் ஏழும் = ஏழு உலகங்கள் மீதும். எட்டு வரையின் மீது =அட்ட கிரிகளின் மீதும். முட்ட = முட்டும்படியாக. அதிரவே =அதிரும்படியாக. நடத்தும் மயில் வீரா = செலுத்துகின்ற மயில் வீரனே.


    அசுரர் சேனை கெட்டு முறிய வானவர்க்கு
    அடைய வாழ்வு அளிக்கும் இளையோனே


    அசுரர் சேனை கெட்டு முறிய = அசுரர்களின் சேனைகள் கெட்டு முறிய. வானவர்க்கு = தேவர்களுக்கு. அடைய வாழ்வு அளிக்கும் = முழு வாழ்வை அளித்த. இளையோனே = இளையவனே.


    மிக நிலா எறித்த அமுத வேணி நிற்க
    விழை சுவாமி வெற்பில் உறைவோனே


    மிக நிலா எறித்த = மிகவும் நிலவொளியை வீசுகின்ற. அமுத வேணி = அமுத சடையராகிய சிவபெருமான். நிற்க = நின்று கேட்க விழை = விரும்புகின்ற சுவாமி வெற்பில் உறைவோனே =சுவாமி மலையில் வீற்றிருந்து (உபதேசித்தவனே).


    விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க
    வினவ ஓதுவித்த பெருமாளே.


    விரைய = விரைவில் ஞான வித்தை = ஞான மூலப் பொருளைஅருள் செய் = (அடியார்களுக்கு) அருள் செய்கின்ற தாதை =தந்தையாகிய சிவபெருமான் கற்க = அறிய வேண்டிக் கற்கவினவ = கேட்க. ஓதுவித்த = அதை அவருக்கு உபதேசித்தபெருமாளே = பெருமாளே.




    ஒப்புக
    1. அகில மேழு மெட்டு வரையின் மீது முட்ட...
    மேரு அடியிட எண்டிசை தூள்பட்ட அத்தூளின் வாரி
    திடர்ப்பட்டதே ... கந்தர் அலங்காரம்


    2. மிக நிலா எறிந்த அமுத வேணி...
    வெண் நிலா மிகுவிரி சடை அரவொடும். .. சம்பந்தர் தேவாரம்.


    விரைய ஞான வித்தை அருள் செய் தாதை கற்க...
    சிவபெருமான் ஒரு க்ஷணநேரம் தியானத்தில் இருக்க, முருகவேள் அவருக்கு பிரணவப் பொருளைத் தணிகையில் உபதேசித்தார் என்றும், அதனால் தணிகைக்கு க்ஷணிகாசலம் எனப் பெயர் வந்தது. தணிகைப் புராணம்


    ஏழு உலகங்கள்
    ஏழு உலகங்கள்: பூலோகம், புவர்லோகம், ஸ்வர்கலோகம், மகரலோகம்,ஜனலோகம், தபோலோகம் மற்றும் பிரம்ம லோகம் என்பன.




    எட்டு மலை
    இமயம், மந்தரம், கைலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம்
Working...
X