Announcement

Collapse
No announcement yet.

Kalamega pulavar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kalamega pulavar

    சிலேடைக்கோர் ஆசுகவி -- J.K. SIVAN


    காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். வைணவர். திருவானைக்கா சிவன் கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை அவருக்கு. என்ன செய்வார்? இதனால் மோகனாங்கிக்காக அவளது சைவ சமயத்துக்கு மாறினார். பெண் மீது மையல் கொண்டால் என்னவெல்லாம் செய்ய வைக்கிறது ஒருவனை. இவர் ஆசு கவிகள் இயற்றி பாடுவதில் வல்லவர். அதாவது வசையாக ஏதாவது சொன்னால் உடனே பலித்துவிடும். இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் தமிழுலகத்தில் பிரசித்தி பெற்றவை. திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய பக்தி
    நூல்களாகும்.

    இவரைப் பற்றி சில ருசிகர தகவல்கள் தான் உங்களுக்கு பிடிக்குமே என்பதற்காகவே சொல்கிறேன்.


    கல்வி அறிவில்லாத வரதன் ஒரு வைணவன். திருவரங்கத்து கோவிலில் பரிசாரகன் (சமையல் செய்பவன்) . திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டான் என்றேன். வரதனது இதயத்தை பிளந்து அவள் குடி புகுந்தாள். ஆகவே அவளை தனியாக சந்திக்க அவன் ஒரு நாள் மாலை திருவானைக்கா ஆலயம் சென்று உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் அவனை ஆட் கொண்டதால் அருகே இருந்த ஒரு மண்டபத்தில் படுத்து உறங்கிப்போனான். அப்பெண்ணும் அவனுக்காக காத்திருந்து வரதனைத் தேடி காணாமல் அவன் வரவில்லையோ என்று கருதி திரும்பி ச் சென்றுவிட்டாள். கோவிலிலும் எல்லா பூஜைகளும் முடிந்து கதவுகள் சார்த்தப் பட்டது. கோவில் உள்ளே எங்கோ மண்டபத்தில் அசந்து தூங்கின வரதனை
    யாரும் இருட்டில் கவனிக்க வில்லை.


    அக்கோவிலின் மண்டபத்தில் மற்றொரு பக்கத்தில் ஓர் வேதம் அறிந்த பிராமணன் வெகு காலமாக சரசுவதி தேவியை
    உபாசித்து தவங்கிடந்தவனும் ஒரு ஓரமாக படுத்திருந்தான். அன்றிரவு சரசுவதிதேவி அந்த பிராமணன் மீது கருணை கொண்டு அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றி


    '' பக்தா உன் தவத்தை மெச்சினேன். உனக்கு சகல கலைகளும் கை கூட வேண்டும் என்று வேண்டினாயே தரட்டுமா ? என்றாள் சரஸ்வதி.


    ''ஆஹா அது என் பாக்யம்''


    ''சரி வாயைத் திற''


    வாயைத் திறந்த பிராமணன் சரஸ்வதி தனது வாயிலிருந்து தான் சுவைத்துக் கொண்டிருந்த தாம்பூலத்தை அந்த பிராமணன்
    வாயிலுமிழப் போகும் நேரத்தில்


    ''ஐயோ எச்சிலா. வேண்டாம் ? என்று அந்த பிராமணன் வாயை மூடிக் கொண்டான். சரஸ்வதி வருந்தினாள். ''அட வடிகட்டின முட்டாளே'' என்று சினந்து நாலாபுறமும் நோக்கின சரஸ்வதி அத்தாம்பூலத்தை கண்ணெதிரே சற்று தள்ளி வாயைத் திறந்து கொண்டு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருந்த வரதனின் வாயில் உமிழ்ந்து விட்டுச் சென்றாள்.


    வரதன் தனது தன் அன்புக் காதலி மோகனாங்கியோடு கனவில் ''ஆஹா இன்ப நிலாவினிலே'' பாடிக்கொண்டு படகில் போய்க்கொண்டிருந்தான். எனவே வாயைப் பிளந்து தூங்கிக்கொண்டிருந்த அவனுக்கு அவள் தான் தாம்பூலம் தந்ததாக
    கனவில் தோன்றி அதை அப்படியே ருசித்து விழுங்கிவிட்டான். தூக்கம் விழித்து மறுநாள் காலை எழுந்த வரதன், இனி ஊதிய மனிதன்


    வரதன் இனி கவி காளமேகப்புலவர், சரஸ்வதி தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான்.


    இனி நாம் காளமேகப் புலவரின் ஒன்றிரண்டு கவி நயம் இன்று கண்டு மகிழ்வோம். கவி இயற்றுவதே கடினம். அதிலும் வார்த்தைகள் கவி நயத்தோடு, இலக்கண சுத்தமாக சந்தம் தப்பாமல் சிலேடையாக -- அதாவது ஒரு வார்த்தை ரெண்டு அர்த்தம் தரும்படியாக இயற்றுவது எவ்வளவு கடினம் என்று கொஞ்சம் யோசியுங்கள். இது காளமேக சிலேடை.

    ''நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
    வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
    தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
    பாம்பாகும் வாழைப்பழம்''


    வாழைப்பழத்திற்குள்ளும் நடுவில் நஞ்சு போன்ற சாப்பிட முடியாத வஸ்து இருக்கும். பாம்பிற்கு நஞ்சு என்கிற கொடிய விஷம் உண்டு. வாழைப்பழத்தையும் தோலோடு சாப்பிடாமல் தோலை உரிக்கவேண்டும். சர்ப்பமும் தோலை உரித்துக் கொள்ளும். வாழைப் பழம் அர்ச்சனைக்கு சிவன் மேல் இருக்கும். சர்ப்பமும் சிவன் மேல் ஆபரணமாக இருக்கும். பாம்பின் பல் பட்டால் ஆள் இல்லை. ஆளின் பல் பட்டால் வாழைப்பழம் இல்லை. எப்படி இந்த அழகான வாழைப்பழத்தத்துக்கும் நல்லபாம்புக்குமான ஒரு நல்ல சிலேடை.


    இன்னொன்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.


    வெங்காயம் சுக்கானால்வெந்தயத்தால் ஆவதென்ன
    இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத,
    சீரகத்தை தந்தீரேல்வேண்டேன் பெருங்காயம்
    வேரகத்துச் செட்டியாரே


    வெங்காயம் என்பது மனித உடல், சாம்பார் வெங்காயம் ரெண்டையும் குறிக்கும். வெந்தயம் சமையல் செய்யும் தானியத்தையும் வெந்து அழியும் தேகம் இரண்டையும் குறிக்கும். சீரகம் சமையல் தானியம். சீரான உள்ளம், அகம். என்று பொருள் கொள்ளும். பெருங்காயம் பெரிய உடம்பு, சமையல் வாசனை சாமான் இரண்டையும் குறிக்கும். அருமையான ஒரு சிலேடை.
Working...
X