Announcement

Collapse
No announcement yet.

Thirukarukudi temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thirukarukudi temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கரும்பசாமி.*பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *பாடல் பெற்ற சிவ தல தொடர். 87.*

    பிரபஞ்ச நாதனே போற்றி!
    பிறவாவரமருநாயகா போற்றி!

    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*

    *திருக்கருக்குடி.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)

    *திருசற்குணலிங்கேஸ்வரர் கோவில், திருகருக்குடி.*
    (தற்போது மருதாந்தநல்லூர் என்று வழங்கப்படுகிறது)


    *இறைவன்:* சற்குணலிங்கேஸ்வரர், கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர்.


    *இறைவி:* சர்வலங்கார நாயகி, அத்வைத நாயகி, கல்யாணநாயகி.


    *தல தீர்த்தம்:* இமயதீர்த்தம்.


    *தல விருட்சம்:*


    *தல விநாயகர்:* வலம்புரி விநாயகர்.


    *ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *பூஜை:* ஆகமம்.


    *இருப்பிடம்:*
    கும்பகோணம் - நீடாமங்கலம் சாலையில் சாக்கோட்டைக்கு தென்கிழக்கில் ஒன்றரைக் கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
    கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.


    *அஞ்சல் முகவரி:* அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்,
    மருதாநல்லூர்,
    மருதாநல்லூர் அஞ்சல்,
    திப்பிராஜபுரம் S.O,
    கும்பகோணம் வட்டம்,
    தஞ்சாவூர் மாவட்டம்,
    PIN - 612 402.


    *பூஜை காலம்:*
    தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 10. 00 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    சோழ நாட்டின் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் அறுபத்து எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *கோவில் அமைப்பு:*
    ஆலயத்திற்கு வந்த பிறகுதான் தெரிந்தது, இது சிறியதான பழமையான கோயில் என்று.


    கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் காட்சி தந்தது. *"சிவ சிவ"* என மொழிந்து உள் புகுந்தோம்.


    வாயிலில் விநாயகர் இருக்க முதல் வணக்கத்தை அவரிடம் உரியதாக்கிச் செலுத்திக் கொண்டோம்.


    கார்த்திகேயர் சந்நிதி பக்கத்தில் இருக்க அவரையும் வணங்கிக் கொண்டோம்.


    சுவாமி சந்நிதிக்கு வந்தோம். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் சிறியதாக இருந்தது. குனிந்து அவனருட் பார்வையை பெற்று வணங்கி நிமிர்ந்தோம்.


    அர்ச்சகரிடம் பாணம் சிறிதாக உள்ளதே என கேட்டோம்.


    இறைவன் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் லிங்கத்திருமேனியில் தெரியும். அரை அடி உயர சிறிய ஆவுடையார். பீடம் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.


    அடுத்து அம்மையை தரிசித்தோம். தரிசனத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டோம். ஆலயத்தில் கூட்டம் இல்லாததினால் வணங்கிக் கொள்ள வசதியாக இருந்தாலும், இவ்வாலத்துக்கு விளம்பரமின்மையின் காரணமாகத்தான் பக்தர்கள் நாடிவரவில்லை என்பதை எண்ணி மறுபுறம் மனம் வேதனையடைந்தது.


    உண்டியலிலும், அர்ச்சகர் தட்டிலும் காணிக்கையை செலுத்திவிட்டு, லேசான மனக்கலக்கத்துடன் குங்குமப் பிரசாதத்துடன் வெளிவந்தோம்.


    கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகரும், இருபுறத்திலும் பூதகணங்களும், இருந்தனர்.


    தட்சிணாமூர்த்தி, (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி), லிங்கோத்பவர் ஆகியோரின் மூர்த்தங்கள் உள்ளன. கை தூக்கி தொழுது வணங்கிக் கொண்டோம்.


    பிரகாரத்தில் வலம் வந்தபோது, வலம்புரி விநாயகர் இருந்தார். வணங்கிக் கொண்டோம்.


    நவகிரக சந்நிதி. சூரியன், சந்திரன், லிங்கோத்பவர், முருகன் ஆகியோர்களும் பிராகாரத்தில் இருக்க தொடர்ச்சியாக ஒவ்வொருவரையும் வணங்கி நகர்ந்தோம்.


    பிரம்மா, சற்குணன் என்ற அரசன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபபட்டுள்ளனர். இதனால் இறைவன் *சற்குணலிங்கேஸ்வரர்* என அழைக்கப்படுகிறார்.


    இராமேசுவர வரலாறு இத்தலதிற்கும் சொல்லப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு செல்லும் முன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறார்கள்.


    இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், ராமன் தன் அருகிலிருந்த மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வழிபட்டார் என்றும் அதுவே தற்போதைய *பிருதிவி லிங்கமாகும்* என்றும் கூறப்படுகிறது.


    அனுமன் கொண்டு வந்த லிங்கம் கோயிலின் இடப்புறம் *அனுமந்த லிங்கம்* என்ற பெயரில் தனி சந்நிதியில் உள்ளதைக் கண்டு விழுந்து எழுந்து வணங்கினோம்.


    இத்தலத்திற்கு மற்றொரு வரலாறையும் அங்கிருந்தோர் கூறினர். தனஞ்சயன் என்ற வணிகன் ஒருவன் தன் சிற்றன்னையை அறியாது புனர்ந்தமையால் தொழுநோய் ஏற்படுகிறது.


    மனம் வருந்திய அவன் இத்தல இறைவனை வேண்டி தொழுநோய் நீங்கப்பெற்றான்.


    அம்மன் சன்னதி எதிரே தனஞ்சய வணிகனின் வணங்கிய சிலை உள்ளது.


    எனவே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்றும் கூறினார்கள்.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    *திருஞானசம்பந்தர்* இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.


    *தல அருமை:*
    ராமேஸ்வர வரலாறு எப்படியோ அது போலவே இந்த தலத்திற்கும் அதே மாதிரியான வரலாற்றைச் சொல்லப்படுகிறது.


    இராமேஸ்வரத்தில் நடந்தது போல குறித்த நேரத்தில் வழிபாடு செய்ய அனுமன் சிவலிங்கம் கொண்டு வர தாமதமானதால், நேரத்தினை கணக்கிற் கொண்டு, ராமன் தன் கைகளால் மணலிலேயே இரண்டு கைகளாலும் லிங்கம் பிடித்து இத்தலத்தில் வைத்து வழிபட்டார்.


    மண்ணினை கையால் பிடித்து செய்த சுவடுகள் தெரிகிறது. அர்ச்சகர் தீபம் கட்டும் போது அந்த சுவடுகள் நமக்குத் தெரியும்..


    மணல் லிங்கமாக தாவல், லிங்கத்திருமேனி மீது சுவாமிக்கு குவளை சார்த்தி அர்ச்சகர் அபிஷேகம் செய்கின்றார்.


    ராமன் மணல் லிங்கம் பிடித்து வைத்தபின், அனுமன் கொண்டு வந்த லிங்கமான *ஹனுமத் லிங்கம்* என்ற பெயரில் தனி சன்னதியில் காட்சியையும் செய்கிறது.


    தனஞ்சயன் என்ற வணிகனுக்கு ஏற்பட்ட தொழு நோயை சுவாமி குணப்படுத்தினார். அம்மன் சன்னதி எதிரில் தனஞ்சயன் சிலை உள்ளது.


    இத்தலம் பரிகார தலங்கள் என்று சொன்னால்தான் பக்தகோடி கூட்டம் ஓடி வரும் போல.....,நாங்கள் சென்றிருந்த சமயத்தில் ஆலத்தினுள் யாருமில்லை.


    வழிபாட்டுக்கு வந்திருந்த நாங்களும், ஆலய அர்ச்சகரும் மட்டுந்தான். பாடல் பெற்ற தலம். ஆரவாரம் எதுவுமில்லாது இவ்வளவு அமைதியாக இருக்கிறதே? என வேதனைப் பட்டோம்.


    பிரபலமான தலம் என பிரச்சாரம் இல்லாததால் கூட்டம் அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தோம்.


    மிகவும் சிறிய கிராமம். இந்தக் கிராமத்தில் வசதிகள் எதுவும் இல்லை. எனவே வேண்டிய பூஜை பொருட்களை வீட்டிலிருந்து புறப்படும் போதே எடுத்துச் செல்லுங்கள்.


    அல்லது கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் வாங்கி கொள்ளுங்கள். முடிந்தால் விளக்கெரிக்க எண்ணெய்யை உங்களால் முடிந்த அளவுக்கு வாங்கி ஆலயத்தில் சேர்த்து விடுங்கள்.


    விளக்கெரிப்பு தடைபடாது. உங்களுக்கும் புண்ணிய கணக்கின் உயரம் எழும்.


    *தேவாரம் பாடியவர்கள்:*
    நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
    நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன்
    கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
    அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே.


    நான் விழித்திருக்கும் பொழுதும், கனவு காணும்பொழுதும், உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய இறைவனாய், ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான சிவபெருமானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக.


    வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
    மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
    காதியல் குழையினன் கருக்கு டியமர்
    ஆதியை அடிதொழ அல்ல லில்லையே.


    வேதத்தை அருளிச் செய்தவனும், வேதப் பொருளாக விளங்குபவனும், இயல்பாகவே பாசங்களின் நீங்கிய வனும், பகையசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை அணிந்தவனாய்த் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லை.


    மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி
    நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
    அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
    வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ.


    மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான், அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சம்படி கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல்?


    ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
    கானிடை யாடலான் பயில்க ருக்குடிக்
    கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
    வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.


    வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர்! சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள உயர்ந்த கோயிலை வணங்கியும், நாள்தோறும் வானவர்கள் தொழுகின்ற அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தியும் வாழ்வீர்களாக!


    சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
    கூடுவர் உலகிடை ஐயங் கொண்டொலி
    பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்
    ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.


    இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார். தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார். இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார். பறைகொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார். இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் அருள் தன்மையாகும்.


    இன்புடை யாரிசை வீணை பூணரா
    என்புடை யாரெழின் மேனி மேலெரி
    முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக்
    கன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே.


    திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் வீணையை இசைத்துப் பாடுவதில் மகிழ்பவர். தம்முடைய அழகிய திருமேனியில் பாம்பையும்,எலும்பையும் ஆபரணமாக அணிந்துள்ளவர். எரிகின்ற நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர். யாவற்றுக்கும் மூலப் பொருளாகிய, முதற்பொருளாக விளங்குபவர். அன்பர்களிடத்து அன்புடையவர்.


    காலமும் ஞாயிறுந் தீயும் ஆயவர்
    கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
    சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச்
    சாலவும் இனிதவ ருடைய தன்மையே.


    சிவபெருமான் கால தத்துவமாகவும், அதனைக் கடந்தும் விளங்குபவர். ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர். நெருப்பு முதலிய பஞ்சபூதங்களானவர். தம் சடைமுடியில் பாம்பணிந்தவர். சிறந்த புகழை உடையவர். திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும்.


    எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
    முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
    கறைபடு பொழின்மதி தவழ்க ருக்குடி
    அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.


    அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை மன்னனான இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய இறைவர், மரங்களின் அடர்த்தியால் இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவராய், தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார்.


    பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர்
    வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
    ஆமென வுயர்ந்தவன் அணிக ருக்குடி
    நாமன னினில்வர நினைதல் நன்மையே.


    தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும், அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம், ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும்.


    சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
    ஆக்கிய வுரைகொளேல் அருந்தி ருந்நமக்
    காக்கிய அரனுறை அணிக ருக்குடிப்
    பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.


    புத்தரும், சமணர்களுமான வஞ்சகர் கூறும் பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா. பெறுதற்கரிய சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள்.


    கானலில் விரைமலர் விம்மு காழியான்
    வானவன் கருக்குடி மைந்தன் றன்னொளி
    ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
    ஊனமில் மொழிவலார்க் குயரு மின்பமே.


    கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சீகாழியில் அவதரித்த, வானவர் தொழுதெழு திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம் மிகும்.




    திருச்சிற்றம்பலம்.


    *ஆலயத் தொடர்புக்கு:*
    99435 23852.


    *நாளைய தலம்..திருவாஞ்சியம்.*



    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X