Announcement

Collapse
No announcement yet.

Thiruveezhimalai temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruveezhimalai temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பிரபஞ்சநாதனே போற்றி!
    பிறவாவரதாயனே போற்றி!!
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *சிவ தல தொடர்.79.*
    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல...... )
    *திருவீழிமிழலை.*
    நேத்ரார்ப்பனேஸ்வரர் கோவில், திருவீழிமிழலை.*
    *இறைவன்:* நேத்ரார்ப்பனேஸ்வரர், திருவீழிநாதர்.
    *இறைவி:* சுந்தர குசாம்பிகை.


    தல விருட்சம்:* வீழிமரம்.
    *தல தீர்த்தம்:* விஷ்ணு தீர்த்தம், மற்றும் இருபத்தைந்து தீர்த்தங்கள்.
    *ஆலய பழமை:*
    ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் வருடங்களுக்கும் முன்னதானது.
    பதிகம்:*
    திருநாவுக்கரசர் - 8
    திருஞானசம்பந்தர் - 14
    சுந்தரர் - 1
    பாடல் பெற்ற சிவதலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள 128 தலங்களுள் இத்தலம் அறுபத்து ஒன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.
    *புராணப் பெயர்கள்:*
    பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கபுரம், தட்சிணகாசி, சண்மங்களத்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பக்கங்கள், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம், திருவீழிமிழலை.
    இருப்பிடம்:*
    மயிலாடுதுறை - திருவாரூர் சாலை வழியில் பேரளம் வழியாக பூந்தோட்டம் வந்து அங்கிருந்து பத்து கி.மி. தொலைவில் அரிசிலாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.


    கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கி.மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.


    அருகில் உள்ள பெரிய ஊர் பேரளம். திருஅன்னியூர், சிறுகுடி, திருப்பாம்பரம் மற்றும் திருமீய்ச்சூர் ஆகியவை இத்தலத்தின் அருகில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்.


    *அஞ்சல் முகவரி:* அருள்மிகு நேத்ரார்ப்பணேஸ்வரர் திருக்கோயில்,
    திருவீழிமிழலை,
    திருவீழிமிழலை அஞ்சல்,
    குடவாசல் வட்டம்,
    திருவாரூர் மாவட்டம்.
    PIN - 609 505
    *ஆலயத் திறப்பு நேரம்:*
    காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    தேவார மூவராலும் பாடல் பெற்ற தலங்கள் பல உண்டு. அவற்றில் திருவீழிமிழலை தலமும் ஒன்றாகும்.


    இத்தலம் மூவர்களால் கொண்ட இருபத்து மூன்று திருப்பதிகங்களையுடையது. வீழிச்செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூருக்கு திருவீழிமிழலை என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தின் தல விருட்சம் வீழிமரம்.


    *ஸ்தல வரலாறு:* மஹாவிஷ்னுவின் கையில் இருந்த சக்கராயுதம் தேய்ந்து போனபோது, ஆற்றல் பொருந்திய சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்னு சிவபெருமானை பூஜித்ததாக பல்வேறு புராணத் தகவல்கள் உண்டு.


    அப்படி சிவபெருமானை விஷ்னு பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன.


    இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார்.


    ஆயிரம் தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்தால் என்னியது கிடைக்கும் என்று அறிகிறார். அதன்படி ஆயிரம் தாமரை மலர்கள் சேர்த்து அர்ச்சனை செய்ய ஆரம்பித்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது மலர்களால் அர்ச்சனை செய்து விடுகிறார்.


    ஆயிரமாவது மலர் இல்லை. இன்னொரு தாமரை மலரைக் கொண்டு வந்து அர்ச்சனையை தொடர நேரமும் இல்லை. குறைந்த ஒரு மலருக்குப் பதிலாக தாமரை மலருக்கு ஒப்பான தனது இரு கண்களில் ஒன்றையே பெயர்த்து எடுத்து பூஜையை குறை இல்லாமல் முடித்தவுடன் சிவனும் காட்சி கொடுத்து திருமால் விரும்பியபடி அவருக்கு சக்கராயுதம் கொடுத்து அருள் செய்கிறார்.


    இப்படி மஹாவிஷ்னு தன் கண்ணையே கொடுத்து சிவனை அர்ச்சித்த தலம் தான் திருவீழிமிழலை.


    இப்படி திருமால் ஈசனை வழிபட்ட செய்தியை திருநாவுக்கரசர் தனது பதிகம் மூலமாக பாடுகிறார். நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும்
    *"பூதத்தின் படையர் பாம்பின்"*என்று தொடங்கும் பதிகத்தின் எட்டாவது பாடலில் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.


    *நீற்றினை நிறையப் பூசி, நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறைய விட்ட ஆற்றலுக் காழி நல்கி, யவன்கொணர்ந் திழிச்சங் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்தனாரே.* என பாடிப் பரவியிருக்கிறார்.


    *திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில் தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார்.*


    நான்காம் திருமுறையில் இடம் பெற்றிருக்கும்
    *"ஆதியில் பிரமனார் தாம்"* என்று தொடங்கும் திருக்குறுக்கை வீரட்டம் தலத்திற்கான பதிகத்தின் ஐந்தாவது பாடலிலும் இத்தல வரலாற்றைக் குறித்துப் பாடுகிறார்.


    *"ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக்கீழ் வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை யீண்டக் கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே"* என் பாடிப் பரவியிருக்கிறார்.


    *ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால் கங்கா சடாதரனை அவன் திருவடிகளின் கீழ் ஆயிரம் தாமரைப்பூக்கள் கொண்டு அருச்சித்தானாக அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க, அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார்.*


    இங்குள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரேசுவரர் திருவடியில் திருமால் தம் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளமும், கீழே சக்கரமும் இருப்பதை ஆலயத்துக்கு இன்று போனாலும் பார்க்கலாம்.


    *கோவில் அமைப்பு:*
    ஆலயத் தரிசனத்திற்கு உள் நுழைகையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்திற்கு கைகளை சிரம் மேல் உயர்த்தி *சிவ சிவ சிவ சிவ* உணர்ச்சிபூர்வமான வணங்கிக் கொண்டோம்.


    இராஜகோபுரத்திற்கு முன்பாக பெரிய அழகிய திருக்குளம் அமைந்துள்ளது.


    திருக்குளத்தில் இறங்கி சிரசில் தெளித்து ஈசனை மனதுக்குள் வைத்து வணங்கிக் கொண்டோம்.


    இறைவன் சந்நிதியில், நேத்ரார்ப்பனேஸ்வரர் ஈசுவரர் சந்நிதியில் கிழக்கு நோக்கிய வண்ணம் அருட்பார்வை வழங்கிக் கொண்டிருந்தார்.


    சந்நிதியிலிருக்கும் இவர் சுயம்பு உருவில் சுமார் ஐந்து அடி உயரத்தில் நற்காட்சியருள் தருகிறார்.


    வழக்கமாக நின்று வணங்க எடுத்துக் கொள்ளும் நேரத்தைவிட அதிக நேரங்களை எடுத்துக் கொண்டோம்.


    அதற்குக் காரணம், ஆலயப்பிரவேசத்திற்கு எங்களுக்கு முன்னும் பின்னும் யாரும் தொடர்ந்தது வரவில்லை.


    எனவே தடுப்பினில் சாய்ந்தவாறு மனதிற்குள் சிவபுராணம் முழுமையும் சொல்லி முடித்துப் பின் வணங்கினோம்.


    மூலவரின் பின்புறச் சுவற்றை நோக்கினோம்.
    மூலவர்க்கு பின்புற கர்ப்பக்கிருக சுவரில் பார்வதி பரமேசுவரர் திரு உருவங்கள் ஓவியங்களாக இருக்கின்றன.


    இறைவன் உமையை மணந்து கொண்ட தலம் என்னும் நிலைக்கேற்ப இவ்விடமாதலால்,
    கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணும் இருக்கக் கண்டோம்.


    மகாமண்டபத்தில் கல்யாணசுந்தரர் மாப்பிள்ளை சுவாமியாகக் காட்சி தருகிறார். இவரே இத்தலத்தின் உற்சவமூர்த்தி ஆவார். இவரின் பாதகமலத்தை பார்க்கையில்,..........


    இவரின் வலது பாதத்தின் மேலே கண்மலரும், அதன் கீழே சக்கரமும் இருக்கக் கண்டோம். இதுதான் திருமால் அர்சித்தது எனத் தெரிந்து கொண்டோம்.


    பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் இது.


    கோவிலின் பிரதான நுழைவு வாயில் கோபுரத்தை விட கர்ப்பக் கிருஹத்தின் மேல் இருக்கிற பதினாறு சிம்மங்கள் தாங்கக்கூடியதாக உள்ள விமானம் மிக சிறப்பானது.


    இதற்கு *"விண்ணிழி"* விமானம் என்று பெயர். சக்கரம் பெற்ற திருமால் வைகுண்டத்தில் இருந்து இவ்விமானத்தைக் கொண்டு வந்து இந்த விமானத்தால் இக்கோவிலை அலங்கரித்ததாக புராணங்கள் சொல்கின்றன.


    இறைவி சுந்தர குசாம்பாள் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு அருகில் இருக்க, இங்கேயும் பக்தர்கள் கூட்டம் இல்லாததனால், சுமார் பத்து நிமிடங்கள் அம்பாள் எதிரில் அமர்ந்து தியானம் செய்து எழுந்தோம்.


    மனதிற்கு திருப்தியாக இருந்தது. இதயத்தில் வலித்த பாரங்கள் இப்போது காணாமலும் போயிருந்தது.


    ஆலயத்தின் முதல் பிரகாரத்தில் இருக்கும் நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைக்கு ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. நான்கு பக்கமும் நன்றாக ரசித்துப் பார்த்துக் கொண்டோம்.


    மூலவரின் வலப்பக்க மண்டப அறையில் கையில் கண்ணோடு அர்ச்சிக்கும் பாவனையில் திருமால் காட்சி தரும் நிலையினைக் காணப் பெற்றோம்.


    இத்தலம் வீழிச்செடி, சந்தனம், சணபகம், பலா, விளா முதலிய மரங்களடர்ந்த காடாய் பல காலம் இருந்ததாம். மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் ஒருவர் இத்தலத்தில் வசித்து வந்தாராம்.


    அவர் தினமும் ஒரு விளாங்கனி நிவேதனம் செய்து வீழிநாதரை வழிபட்டு வந்திருக்கிறார். அதன் பலனாக ஈசன் அவர் முன் தோன்றி அருளாசி வழங்க, அவர் தவக்கோலம் பூண்டு, அருந்தவங்கள் செய்து அட்டமாசித்திகள் கைவரப் பெற்றாராம்.


    இந்த மிழலைக் குறும்பருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.


    *தல அருமை:*
    வட இந்திய மன்னன் ஒருவனின் மகன் சுவேதகேது. அவனது ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள், பதினாறு வயதில் அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று கூறினார்கள். அரசன் முனிவர்களிடம் ஆலோசனை செய்ய,.....


    அவர்கள் திருவீழிமிழலை தலத்திற்குச் சென்று சிவபூஜை செய்தால் காலமிருத்யுவை வெல்லலாம் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.


    சுவேதகேது அதன்படி திருவீழிமிழலை தலம் வந்து இறைவனை தினமும் ஆராதித்து வந்தான். நாட்கள் சென்றன. சுவேதகேதுவின் உயிர் பிரிய வேண்டிய நேரம் வந்தது.


    உயிரை எடுக்க வந்த எமதர்மரைப் பார்த்த சுவேதகேது சிவலிங்கத்தை இறுகப் பற்றிக் கொண்டான். எமதர்மன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து சுற்றிக் கொள்ள, சுவேதகேதுவோடு, பெருமானையும் இழுத்தான் எமதர்மன்.


    அப்போது சிவலிங்கத்திலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டு, எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததுபோல், சுவேதகேதுவைக் காப்பாற்றினார்.


    பின் தேவர்கள் வேண்டுகோளின் பேரில் எமனை உயிர்ப்பித்து, இனி என் பக்தர்கள் சிவபூஜையில் ஈடுபட்டிருக்கும் போது உயிரைப் பறிக்க வரக்கூடாது என்று ஆணையிட்டார். அத்தகைய சிறப்பு பெற்றது திருவீழிமிழலை திருத்தலம்.


    இக்கோயிலில் உள்ள வெளவால் நெத்தி மண்படம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டவை.


    அக்காலத்தில் கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள் திருவீழிமிழலை வெளவால் நெத்தி மண்டபம் மற்றும் திருவலஞ்சுழி கல் பலகணி போன்ற அரிய திருப்பணிகள் நீங்கலாக மற்றவை செய்து தருகிறோம் என்று ஒப்புக் கொள்வார்கள். அத்தகைய சிறப்பு பெற்ற இந்த வெளவால் நெத்தி மண்படம் இன்று கல்யாண மண்டபமாக இங்கு விளங்குகிறது.


    இராஜகோபுரம் கடந்து நுழைந்தவுடன் வலதுபுறம் உள்ள இந்த வெளவால் நத்திமண்டபம் அகலமான அமைப்புடன் நடுவில் தூணில்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள வளைவான கூரை அமைப்புடன் உள்ள இந்த மண்டபம் கட்டிட வேலைப்பாட்டில் மிகமிக அபூர்வமானது.


    வெளவால் வந்து வசிக்க முடியாதவாறு கூரை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். சித்திரை மாதத்தில் இங்குதான் இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.


    *படிக்காசு அருளியது:*
    திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது நாட்டில் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது.


    இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள்.


    அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு அண்ணமளப்பு செய்திருக்கின்றனர்.


    படிக்காசு அளிப்பதிலும் இறைவன் அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து *"வாசி தீரவே காசு நல்குவீர்"* என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார்.


    இவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. படிக்காசுப் பிள்ளையார் மேற்கு பலிபீடத்தின் அருகில் உள்ளார். அருகில் சம்பந்தர், அப்பரின் உருவங்கள் உள்ளன.


    இவ்விருவரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.


    *தல பெருமை:*
    ஸ்ரீ கார்த்தியாயினி அம்பிகையின் திருமணம்.


    முனிவர்களில்
    சிறந்தவராகிய கார்த்தியாயன முனிவர்
    இத்தலத்தை அடைந்து
    தீர்த்தபுஷ்கரணி
    கரையில் ஓர் தவச்சாலை அமைத்து தினந்தோறும்
    தீர்த்தபுஷ்கரனியில் நீராடி
    அழகியமாமுளை
    அம்மையையும் வீழினாதரையும் வழிபட்டுப் பர்ணகசலையில் தம் பத்தினியோடு அருந்தவம் புரிந்து வரலானர்.


    அவருக்குப் புத்திர பேரின்மையால் அதைக் குறித்து அறிய பெரிய
    வேள்விகளை செய்தார்.
    அப்பொழுது அம்பிகையானவள் இடக்கரத்தில் அன்னப்பாத்திரமும்,
    வலக்கரத்தில் அண்ணபாத்திரத்துடனும் அண்ணபூரணியாக காட்சியளித்து "அருந்தவ
    முனிவா!" நீ விரும்பிய வரம்யாது? கேளாய் என்றாள்.


    *"தாயே நீ எனக்கு புத்திரியாக வரவேண்டும் "* என்றார்.


    அவருக்கு அம்பிகை
    அவ்வரத்தை தந்தாள். அம்பிகை பரமனிடத்தில் விடைபெற்று முனிவர் தவம் புரியும் பர்ணககசாலைக்கு அருகே உள்ள
    தீர்த்தபுட்கரனியில் ஒரு சிறந்த பெரியநீலோற்பல மலரில் அழகிய பெண் குழந்தை வடிவமாக திகழ்ந்தார்.


    அதனை முனிவர் பத்தினி ஆகிய சுமங்கலை என்பவள் கண்டு ஆனந்தம் கொண்டு அக்குழந்தையை எடுத்து மார்போடு அனைத்து
    கார்த்தியாயன முனிவரிடம் கொடுத்துக்
    கார்த்தியாயினி என்று பெயரிட்டு மிக மகிழ்ச்சியோடு வளர்த்து வருவாயினர்.


    கார்த்தியாயினிக்கு உரிய
    மணப்பருவம் வருவதை அறிந்து பரமனை குறித்து அருந்தவம் புரிந்தார். முனிவரின்
    தவத்திற்கிணங்கி பரமன் வெளிப்பட்டார்.


    இறைவன் திருவடிகளில் வணங்கிப் "பெருமானே!" இக்கன்னிகையை தேவரீர்
    மணக் கோலத்தோடு வந்துதிருமணம் கொண்டருள வேண்டுமென்று பிரார்த்தித்தார்.


    பரமன் திருவுளம் மகிழ்ந்து,
    நாம் சித்திரை மாதத்தில்
    மகநட்சத்திரத்தன்று
    திருமணம் கொண்டருளுவோம்
    என்று அருள்புரிந்தார்.


    இறைவன் முனிவருக்கு
    வாக்களித்தபடி சித்திரை மாதத்தில்
    மகநட்சத்திரத்தன்று
    ஸ்ரீகைலாயத்தினின்றும் எழுந்தருளி நந்தி முதலிய கணங்கள் புடைசூழ,
    சர்வலங்காரரூபமாய் இத்தலத்தை நாடி திருவீழிமிழலையில் கார்த்தியாயன முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தார்.


    கார்த்தியாயன முனிவர்
    இறைவனை எதிர்கொண்டு வணங்கி திருமணத்திற்கு ஆவன செய்தார்.


    மகாஅலங்காரத்தோடு மிகசிறப்புற கைலாசபதிக்கும் கார்த்தியாயினிக்கும்
    திருமண வைபவம் நடைபெற்றது.


    இத்தலத்தில் பாதாள நந்தி இருக்கிறார். முழு கோயிலே நந்திக்கு மேல் அமைந்திருப்பது போல் அமைந்துள்ளது.


    இங்கு இறைவன் காசியாத்திரைக்கு கிளம்பும் மாப்பிள்ளை கோலத்தில் அருள்பாலிப்பதால், *மாப்பிள்ளை சுவாமி* எனப்படுகிறார்.


    *மகாமண்டபம்:*
    திருமணமண்டபம் போல் இங்கு மகாமண்டபம், பந்தல் காலுடன் காட்சியளிப்பது இந்தியாவில் வேறு எங்கும் காண இலயாத சிறப்பு.


    இங்கே கொடிமரம் அருகே சிவலிங்கம்
    அமைந்திருப்பது இன்னொரு சிறப்பம்சம்.


    இங்கு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்மாண்ட *"வவ்வால் நந்தி மண்டபம்'* உள்ளது.
    தெற்குப் பிராகாரத்தில் தல
    விநாயகர் (படிக்காசு விநாயகர்) சந்நிதியும், மேற்கில் சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகளும், வடக்கில் சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது.
    இத்தல நடராசர் சந்நிதி சிறப்பானது. இங்குள்ள விநாயகர் படிக்காசு விநாயகர் எனப்படுகிறார். சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் இங்கு நடத்தப்படுகின்றன.
    *திருவீழிமிழலை சம்பந்தர் தேவாரம்.*
    திருவீழிமிழலை
    சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்
    படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்
    மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்
    விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.
    ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
    மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்
    ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்
    வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.
    வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
    உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்
    மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்
    விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.
    பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்
    உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்
    மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்
    விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.
    ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
    தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
    தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்
    மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.
    கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்
    எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப
    வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
    வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.
    கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்
    புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா
    வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி
    விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.
    முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை
    தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்
    பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த
    மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.
    பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா
    ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை
    வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில
    வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.
    மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்
    இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்
    பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்
    விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே
    வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
    காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
    யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
    ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.
    ********வாசி தீரவே, காசு நல்குவீர்
    மாசின் மிழலையீர், ஏச லில்லையே.


    இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
    கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
    செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
    பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
    நீறு பூசினீர், ஏற தேறினீர்
    கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
    காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
    நாம மிழலையீர், சேமம் நல்குமே.
    பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
    அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
    மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
    கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
    அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
    பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
    அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
    இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
    பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
    வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே காழி மாநகர், வாழி சம்பந்தன்
    வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.


    இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.
    திருச்சிற்றம்பலம்.
    *திரூவிழாக்கள்:*
    மகாசிவராத்திரி, மார்கழித் திருவாதிரை.
    *தொடர்புக்கு:*
    04366- 273050,
    94439 73629,
    94439 24825.
    *நாளைய தலம்...திருஅன்னியூர் வ(ள)ரும்*
    திருச்சிற்றம்பலம்.
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X