Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    133தாக்கமருக்கொரு


    தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு
    சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு
    சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு தவமூழ்குந்
    தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
    போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
    சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை தடுமாறிப்
    போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
    போற்றுத லற்றது ரோகியை மாமருள்
    பூத்தம லத்ரய பூரியை நேரிய புலையேனை
    போக்கவி டக்கட னோஅடி யாரொடு
    போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
    போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் புரிவாயே
    மூக்கறை மட்டைம காபல காரணி
    சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
    மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி முழுமோடி
    மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
    பேற்றிவி டக்கம லாலய சீதையை
    மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு முகிலேபோய்
    மாக்கன சித்திர கோபுர நீள்படை
    வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
    மார்க்மு டித்தவி லாளிகள் நாயகன் மருகோனே
    வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
    வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
    வாய்த்தி ருத்தணி மாமலை மேவிய பெருமாளே.

    -133 திருத்தணிகை

    பதம் பிரித்து உரை


    தாக்கு அமருக்கு ஒரு சாரையை வேறு ஒரு
    சாக்ஷி அற பசி ஆறியை நீறு இடு
    சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை வேர் விழு(ம்) தவ(ம்) மூழ்கும்


    தாக்கு அமருக்கு = தாக்குகின்ற போர் வந்தால்.
    ஒரு = ஒப்பற்ற.
    சாரையை = சாரைப் பாம்பு போல் (சீறிப் பாய்பவன்).
    வேறொரு = பிறிதொரு.
    சாக்ஷி அற = சாட்சி கூட இல்லாமல்.
    பசி ஆறியை = (தனது) பசியையே போக்கிக் கொள்பவன்(தனித்து உண்பவன்).
    நீறு இடு = திரு நீற்றை இடுகின்ற.
    சாஸ்த்ர வழிக்கு = நூலின் உபதேச மொழிக்கு.
    அதி தூரனை = வெகு தூரத்தில் உள்ளவன்.
    வேர் விழும் தவம் = வேர் போய்வது போல அழுத்தமான தவ நெறியில்.
    மூழ்கும் = முழுகுவதற்கு (சிறிதேனும்).






    தாற் பர்ய(ம்) அற்று உழல் பாவியை நா வ(ல்)லர்
    போல் பரிவுற்று உனையே கருதாது இகல்
    சாற்று(ம்) தமிழ் குரை ஞாளியை நாள் வரை தடுமாறி


    தாற்பர்யம் அற்று உழல் = கருத்து என்பதே இல்லாமல் திரிகின்ற.
    பாவியை = பாவி.
    நா வல்லர் = நா வல்ல புலவர் போல்
    பரிவுற்று = அன்பு கொண்டு
    உனையே கருதாது = உன்னையே தியானிக்காமல்.
    இகல் சாற்றும் = பகையை மூட்ட வல்ல
    தமிழ் குரை ஞாளியை = தமிழைக் குரைக்கும் நாய்
    நாள் வரை தடுமாறி = நாள் தோறும் தடுமாற்றம்
    கொண்டவனாய்.




    போக்கிடம் அற்ற வ்ருதாவனை ஞானிகள்
    போற்றுதல் அற்ற துரோகியை மா மருள்
    பூத்த மல த்ரய பூரியை நேரிய புலையேனை


    போக்கிடம் அற்ற = போய்ச் சேர நல்ல இடம் இல்லாத
    வ்ருதாவனை = வீணன்
    ஞானிகள் போற்றுதல் = ஞானிகளைப் போற்றும்
    அற்ற துரோகியை = குணமில்லாத துரோகி (பாதகன்)
    மா மருள் பூத்த = பெரிய மயக்க அறிவு நிரம்பிய
    மல த்ரய பூரியை = மும்மலங்களும் நிறைந்தவன்
    நேரிய புலையேனை = சரியான கீழ் மகன் (ஆகிய என்னை)


    போக்கி விட கடனோ அடியாரோடு
    போய் பெறு கைக்கு இலையோ கதி ஆனது
    போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள் புரிவாயே


    போக்கி விட = கை விடுதல்
    கடனோ = நீதியாகுமோ?
    அடியாரோடு = அடியவர்களோடு.
    போய்ப் பெறுகைக்கு கதியானது = போய்ப் பெறும் நற் கதி
    இலையோ = எனக்கு இல்லையோ?
    போர்ச் சுடர் = போரில் வல்லதும், ஒளி வீசுவதும்.
    வஜ்ர = திண்மையானதும்
    வைவேல் = கூரியதுமான வேலாயுதத்தை உடைய
    மயிலா = மயிலோனே
    அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.


    மூக்கு அறை மட்டை மகா பல காரணி
    சூர்ப்பநகை படு மூளி உதாசனி
    மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி


    மூக்கு அறை = மூக்கு அறுபட்டவள்
    மட்டை = பயனற்றவள்
    மகா பல காரணி = பெரும் பலம் கொண்டவள்
    சூர்ப்பநகை = (போருக்கு மூல காரணமாக இருந்த) சூர்ப்பனகை
    படு மூளி = உறுப்புகள் குறைந்தவள்
    உதாசனி = கொடியவள்
    மூர்க்கக் குலத்தி = மூர்க்கமான அரக்கர் குலத்தைச் சேர்ந்தவள்விபீஷ்ணர் சோதரி = விபீடணின் சகோதரி
    முழு மோடி = முழு வஞ்சகி


    மூத்த அரக்கன் இராவணன் ஓடு இயல்பு
    ஏற்றி விட கமலாலய சீதையை
    மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொ(ண்)டு முகிலே போய்


    மூத்த - (தனக்கு) மூத்தவனாகிய
    அரக்கன் இராவணனோடு = அரக்கன் இராவணனோடு
    இயல்பு ஏற்றிவிட = (சீதையின் வரலாறு முதலியவற்றை எடுத்துக் கூறி) அவனுக்குக் காமத்தை மூட்டிவிட
    கமலாலய சீதையை = தாமரைக் கோயிலில் வீற்றிருக்கும்
    சீதையை
    மோட்டன் = (அந்த) மூர்க்கன் சூழ்ச்சியால்
    வளைத்து = கவர்ந்து.
    ஒரு தேர் மிசையே கொடு = ஒரு தேரின் மேல் ஏறிக் கொண்டு
    முகிலே போய் = ஆகாய வழியாகச் சென்று.


    மா கன சித்திர கோபுர நீள் படை
    வீட்டில் இருத்திய நாள் அவன் வேர் அற
    மார்க்கம் முடித்த வில்லாளிகள் நாயகன் மருகோனே


    மாக்கன சித்திர = சிறந்த பெருமையும் அழகும் வாய்ந்த
    கோபுர நீள் = கோபுரங்கள் விளங்கும்
    படை வீட்டில் இருத்திய = தனது இலங்கை நகரில் சிறை இருத்தி
    நாள் = வைத்த போது
    அவன் வேர் அற = அவடைய குலம் முழுதும் அழியும்படி.மார்க்கம் முடித்த = வழியை எடுத்து முடித்த
    வில்லாளிகள் = விற்போரில் வல்ல வீரர்களின்
    நாயகன் = தலைவனாகிய இராமனின்
    மருகோனே = மருகனே.


    (சரவேகத்திலும், கர வேகத்திலும் ராமன் தேர்ந்தவனாதலின் அவன் வில்லாளிகள் நாயகன்)


    வாச்சிய மத்தள பேரிகை போல் மறை
    வாழ்த்த மலர் கழு நீர் தரு நீள் சுனை
    வாய்த்த திருத்தணி மா மலை மேவிய பெருமாளே.


    வாச்சிய மத்தள பேரிகை போல் = வாத்தியங்களாகிய மத்தளம், பேரிகை இவைகளின் ஒலியைப் போல்
    மறை வாழ்த்த = வேத மொழி கூறி வாழ்த்த
    திருத்தணி மா மலை மேவிய பெருமாளே = திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.
    மலர்க் கழு நீர் தரு = செங்கழு நீர் மலரைத் தருகின்ற நீண்ட
    சுனைகள் உள்ள
    திருத்தணி மா மலை மேவிய பெருமாளே = தணிகையில் உறையும் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    இப்பாடலில் இரமாயணக் கதையின் பகுதிகள் கூறப்பட்டுள்ளன.


    அருணகிரிநாதர் ‘விபீஷணர் சோதரி’ என்று ஒரு அடைமொழியில் குறிப்பிட்டு சூர்ப்பனகையை சொல்லவது வியப்பானதானலும் அதனால் ஒரு பெரிய கதையை நம் முன் காட்டுகிறார். எந்த ஒரு நல்ல பண்பும் இல்லாதவளாயினும் ராமாயணக் கதைக்கு முக்கிய காரணமானவளே சூர்ப்பனகை. ராவணனைக் கொல்ல வந்த உடன் பிறந்த நோய அவள் என்கிறது கம்ப ராமாயணம். அவள் தான், சீதையின் அழகு பற்றி தன் அண்ணன் ராவணனிடம் கூறி அவனை உசுப்பேற்றியவள். முற்பிறப்பில் இவள் ஆனந்த குரு என்பவளுக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது அவளது பெயர் சுமுகி. ஆனந்தகுருவிடம், சத்தியவிரதன் என்ற மன்னனின் மகனான குணசீலன் என்பவன் பாடம் படித்தான். குணசீலனை சுமுகிஒருதலைப் பட்சமாகக் காதலித்தாள். ஒருநாள் பாடத்தில் சந்தேகம் கேட்க குருவின் வீட்டுக்கு குணசீலன் சென்றான். குரு வீட்டில் இல்லை. சுமுகி தனித்திருந்தாள். தன் காதலை குணசீலனிடம் வெளிப்படுத்தினாள். பெண்ணே! குரு துரோகம் பொல்லாதது. குருவின் மகளான உன்னை என் தங்கையாகவே நினைக்கிறேன், என சொல்லி விட்டு போய்விட்டான். ஏமாற்றமடைந்த சுமுகி, தந்தை வீட்டுக்கு வந்ததும் தன்னை குணசீலன் கெடுத்து விட்டதாக பழி போட்டு விட்டாள். இதை நம்பிய குரு, மன்னனிடம் இதுபற்றி புகார் தெரிவித்தார். மன்னனும் அதை நம்பி, தன் மகனின் கை, கால்களை வெட்டிவிட்டான். குணசீலன் பூமியில் விழுந்து, தர்மம் அழிந்து விட்டதா? எனக் கதறினான். உடனே பூமி பிளந்தது. உள்ளிருந்து ஆதிசேஷன் வெளிப்பட்டான். குணசீலா! இப்பிறப்பில் உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய சுமுகியை மறுபிறப்பில் ‘நானே பழிவாங்குவேன்’ என்றான். குணசீலன் மறுபிறப்பில் ராவணனின் தம்பியாக (விபீஷணன்) பிறந்தான். அவனது தங்கையாக சுமுகி பிறந்தாள். அவளே சூர்ப்பனகை எனப் பெயர் பெற்றாள். ஆதிசேஷன் லட்சுமணனாகப் பிறந்து அவளது மூக்கை அறுத்தான். தமிழகத்தில் வரும் இக்கதையை அருணகிரிநாதர் அறிந்திருந்திருக்கிறார். சூர்ப்பநகையை குறிப்பிட வந்தவர் ‘விபீஷணர் சோதரி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.


    1.சூர்ப்பநகைப் படு மூளியு தாசனி...
    கோமான் உலகுக்கு ஒரு நீ, குறைகின்றது என்னே
    பூ மான் குழலாள்தனை வவ்வுதி போதி என்றாள்) ..கம்ப ராமாயணம் (சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்)


    2.போக்கி விடக் கடனோ...
    தாயுமானவரும் இங்ஙனம் பரிதவிப்பதைக் காணலாம்.
    (யாதேனுந் அறியாவெறும்
    துரும்பனேன் எனினும் கைவிடுதல் நீதியோ
    தொண்டரொடு கூட்டுகண்டாய்
    சுத்தநிர்க் குணமான பரதெய்வமே பரம்
    ஜோதியே சுகவாரியே)..
    .தாயமானவர் (சுகவாரி)
Working...
X