Announcement

Collapse
No announcement yet.

Thiruturutti temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruturutti temple

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    * கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *தல தொடர்.55*
    *சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*
    ****************************************
    *திருத்துருத்தி.*
    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    இத்தலத்தின் பெயரான திருத்துருத்தி (தற்போது குத்தாலம் என்று வழங்கப்படுகிறது).

    *இறைவன்:* உக்தவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார். கற்றளி மகாதேவர்.

    *இறைவி:* அரும்பன்ன வளமுலையாள், பரிமள சுகந்த நாயகி. மிருதுமுகிழாம்பிகை, அமிருதுமிகிழாம்பிகை. (ம்ருதமுகுளகுஜாம்பிகை.)

    *தல விருட்சம்:*உத்தால மரம்(ஒரு வகையான ஆத்தி மரம்.)

    *தீர்த்தம்:*காவிரி தீர்த்தம், சுந்தர தீர்த்தம், பத்ம தீர்த்தம், வடகுளம்.

    *தலவிநாயகர்:*
    துணை வந்த பிள்ளையார்.

    *வழிபட்டோர்:*
    சம்பந்தர், சுந்தரர், அப்பர், ஐயடிகள் காடவர்கோண், உமா தேவியார், வருணன், காளி. சப்த கன்னியர்கள்.

    *இருப்பிடம்:*
    மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து பதினோரு கி.மி தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து இருபத்து நான்கு கி.மி. தொலைவிலும் குத்தாலம் என்ற ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

    பேருந்தை விட்டு இறங்கியவுடன் நடக்கும் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.

    திருவேள்விக்குடி, திருஎதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளன.

    *பெயர்க்காரணம்:*
    நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி *துருத்தி* என வழங்கப்படுவது இயல்பானது. முன் இருபுறமும் சென்ற காவிரி தற்போது கோவிலின் வடபுறமாக ஓடுகின்றது.

    காவிரித்தென்கரையில் சிறப்புப் பெற்ற ஊராக இருப்பதால் திருத்துருத்தி என பெயர் பெற்றது.

    *கோவில் அமைப்பு:*
    ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னதாகவே அமையப்பெற்றிருந்த இத்திருக்கோயிலை, சுமார் என்னூறு ஆண்டுகளுக்கு முன்புதான், சோழமன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.

    திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை. அம்பாளுக்கு இன்னொரு பணி காத்திருந்தது. அருகிலுள்ள குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரதமா முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள்.

    ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று நதியில் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். எட்டாம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினாள்.

    உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இனைவன் தாமே சொல்லிய விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.

    இத்தலத்தின் தலவிருட்சம் உத்தால மரம் என்ற் ஒரு வகை ஆத்தி மரம். அம்மரம் குடையாக அமைய அம்பாளைத் திருமணம் செய்து கொள்ள சுவாமி மணவாளநாதராக எழுந்தருளினார். அம்மரத்தினடியில் இன்றும் இரண்டு பாதுகைகள் இருப்பதைக் காணலாம். எனவே இத்தலம் உத்தாலவனம் என்று பெயர் பெற்று பின் மருவி குத்தாலம் என்றாயிற்று. தற்போது குத்தாலம் என்று அறியப்படும்.

    இத்தலம் தேவாரப் பதிகம் பாடப் பெற்ற காலத்தில் துருத்தி என்று வழங்கப்பட்டது. துருத்தி என்றால் ஆற்றின் இடையில் உள்ள தீவு என்று பொருள் படும். திருநாவுக்கரசர் தனது பதிகத்தின் மூன்றாவது பாடலில்......

    *பொன்னியி னடுவு தன்னுட் பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி யானைத் தொண்டனேன் கண்ட வாறே* என்று குறிப்பிடுவதால் இவ்வூர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காவிரி நதியின் இடையில் ஒரு தீவாக இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

    சுந்தரரும் இத்தலத்து இறைவன் மேல் பதிகம் பாடி இருக்கிறார். சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார்.

    காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார்.

    சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார். அப்போது தான் திருத்துருத்தியையும், திருவேள்விக்குடியையும் இணைத்து........

    *மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.*

    எனத் தொடங்கும் பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனாரின் பிணி தீர்த்ததால் தீர்ந்தது என்பதால் அத்தாமரைத் தடாகத்திற்கு *சுந்தர தீர்த்தம்* என்று பெயர் ஏற்பட்டது. தீர்த்தக்கரையில் சுந்தரருக்கு கோயிலும் இருக்கிறது.

    *கோவில் அமைப்பு:*
    ஆலயம் ஊருக்கு நடு நாயகமாக விளங்குகிறது. நாம் உள் புக ஐந்து நிலை இராஜகோபுரம் மேற்கு நோக்கி காட்சியளிக்கவும் *சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தரிசனத்தை செய்து கொள்கிறோம்.

    இரண்டு பிரகாரங்கள் இக்கோயிலுக்கு இருக்கிறது.

    கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் பார்க்கிறோம் அவைகளை வழக்கமான நம் வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறோம்.

    வலதுபுறம் ஸ்தல விருட்சமான உத்தால மரமும் அதை சுற்றி உள்ள பீடமும் உள்ளது. அப்பீடத்தில் சிவனின் பாதரட்க்ஷகள் இருக்க தொழுது வணங்கிக் கொண்டோம்.

    மூலவர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது. ஆனந்தமயமான பக்தியின் தொழுகையை அவனிடம் சமர்பித்து விட்டு அடுத்தாக இருக்கும் அம்பாளை வணங்கத் திரும்புகின்றோம்.

    மூலவருக்கு சற்று அருகிலேயே தெற்குப் பார்த்த வண்ணம் இறைவியைக் காணவும், கண் இமையாது அர்ச்சகர் தீபத்தட்டுடன் வரும் வரை அம்பாளின் அருட் பார்வையை விட்டு கண் இமைக்காமலும், கால்மாற்றி நகராமலும் விலகாதிருந்தோம்.

    மூலவர் சந்நிதியும், இறைவி சந்நிதியும் (இவ்விரு கோவில்களும்) தனித்தனியே வலம் வருமாறு தனிப் பிரகாரங்களோடு அமைந்துள்ளன.

    அம்பிகையை மணந்து கொள்ள வந்த இறைவனுக்குத் துணையாக வந்த விநாயகர் *"துணைவந்த விநாயகர்"* என்ற பெயருடன் அம்பாள் சந்நிதிக்கு செல்லும் வழியில் வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கோயில் கொண்டிருப்பதைக் கண்டதும், எங்களுக்கும்
    நீயும் துணை என்று அவர்முன் நின்றிருந்து வணங்கி நகர்ந்தோம்.

    உட்பிரகாரத்தில் வலஞ்சுழி விநாயகரையும் தரிசித்துக் கொண்டோம். கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசண்முகரை பார்த்து வணங்கி சந்தோஷம் கொண்டோம். இவரை வணங்கியதில் சந்தோஷமானதிற்குக் காரணம்....அத்தனை அழகுகான பேரழகு கலையழகுடன் இவர் காட்சி அளித்ததால்தான்.

    பிராகாரத்தின் கிழக்குப் புறத்தில் நவக்கிரகங்கள், சப்தரிஷீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர் மற்றும் பஞ்ச லிங்கங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. தொடர்ந்து வணங்கிச் சென்றோம்.

    சுவாமி கருவறை விமானத்திலுள்ள சுதைச் சிற்பங்கள் யாவும் பெரியவையாகவும், கலையழகோடும் காணப்படுகின்றன. இவற்றை நின்று நிதானமாக பார்த்து ரசித்து நகர்ந்தோம்.

    அக்னி பகவான் இத்தலத்து இறைவனை வழிபட்டு தன் பாபங்களை போக்கிக் கொண்டுள்ளார். காசிபன், ஆங்கிரசன், கௌதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகளும் வழிபட்டு இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர். சூரியன், பரத முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு பெறும் பேறு பெற்றிருக்கின்றனர்.

    சிவபெருமான் கயிலாயத்தில் இருந்து உமாதேவியை நிச்சயம் செய்ய இத்தலத்திற்கு வந்த போது, உடன் நிழல் கொடுப்பதற்காக தொடர்ந்து வந்த உத்தால மரத்தையும், காலணிகளையும் ஈசன் இங்கேயே விட்டுச் சென்றதாக ஐதீகம். உத்தாலம் என்பது தான் குத்தாலம் என்று மருவியதாக ஒரு வழக்கு உண்டு.

    *தல பெருமை:*
    இந்தத் திருத்தலத்தில் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    உருத்திர சன்மன் என்பவன் முக்தி பெற காசிக்குச் சென்றான். *'இத்தலமே காசிக்கு நிகரானது'*என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து, நீ பாம்பு வடிவம் எடுத்து உயுத்திரசன்மனை காசிக்குச் செல்ல விடாமல் தடுத்து விடு.

    சிவன் கூறிய படி பாம்பு இவனைத் தடுக்க உருத்திர சன்மன் கருடமந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கி கீழே விழுந்தது.
    பாம்பைக் காப்பாற்ற சிவன் பாம்பாட்டியாக வடிவம் எடுத்தார்.

    பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, இத்தலத்தைத் தரிசித்தாலே காசியில் தரிசித்தப் புண்ணியம் கிடைக்கும் என்று கூறினார்.

    தன்னால் தீண்டப்படும் பொருட்கள் யாவும் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்து தன் பழி ஒழிய வழிபட்டன.

    வருடனின் சலோதரம் எனும் பிணி நீங்கிய இடம் இதுதான்.

    சிவபக்தனின் காசநோயைப் போக்கியதும் இத்தலம்தான்.

    *தல அருமை:*
    பரதமா முனிவரின் கடுந்தவத்தால் பராசக்தி அவருக்கு மகளாகப் பிறந்தாள். சிவபெருமானைக் கணவனாக அடைய இத்தலத்துக் காவிரிக் கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டாள் அம்பிகை. இறைவன் தோன்றி அம்பிகையின் கரம் பற்ற முற்பட்டபோது, 'என்னை வளர்த்த பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினாள்.

    இதையடுத்து நந்தியை அழைத்து, பரதமா முனிவரிடம் சென்று திருமணம் பற்றி பேசி வரும்படி அனுப்பிவைத்தார் ஈசன். நந்தியும் முனிவரை சந்தித்து ஈசனுக்கு, அம்பாளை மணம் முடித்துக் கொடுக்கும்படி கேட்டார். பெருமகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் பரதமா முனிவர். இதையடுத்து இறைவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த திருமண நிச்சயம், இந்த ஆலயத்தில் நடைபெற்றது என்றும், அதன்பிறகு அருகில் உள்ள திருமணஞ்சேரியில் திருமணம் நடைபெற்றது என்றும் சொல்லக் கேட்டோம்.

    இதற்காக கயிலாயத்தில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் வந்தபோது, விநாயகர் முன்செல்ல, *'உத்தாலம்'*என்னும் மரம் சிவனுக்கு நிழல் தந்தபடியே பின் தொடர்ந்து வந்தது. அந்த மரமும், ஈசன் அணிந்து வந்த பாதுகையும் தான் இந்த ஆலயத்தில் இருப்பதாக தல புராணம் எடுத்துரைக்கிறது.

    இத்தல இறைவனையும், அம்பிகையையும் வழிபட்டால் திருமணத் தடை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும், சிவனுக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள்.

    அர்ச்சனை செய்து வழிபட்டு சுவாமி, அம்பாளுக்கு சூட்டிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத் தடை நீங்கும்.

    உள்பிரகாரத்தை வலம் வரும்போது தனிச் சன்னிதியில் சனீஸ்வரரும், அவருக்கு நேர் எதிரில் விநாயகர் சன்னிதியும் உள்ளன. சனி தோஷம் உள்ளவர்கள் பிரார்த்திக்க ஏற்றத் தலம் இதுவென சொல்லப்படுகிறது.

    காசிப முனிவர், கவுதமர், ஆங்கீரகர், புலத்தீயர், மார்க் கண்டேயன், அகத்தியர், வசிஷ்டர் ஆகிய சப்த முனிவர்களும், வருணன், காளி, அக்கினி பகவான், காமன் ஆகியோரும் இங்கே வந்து இறைவனை வணங்கியுள்ளனர்.

    விக்கிரம சோழ மன்னனின் மனைவி கோமளை என்பவளின் தொழு நோய் இந்தத் தல இறைவனின் அருளால் நீங்கியதாக தல வரலாறு கூறு கிறது.

    மேலும் இறைவனின் தோழரும், நாயன்மார்களில் ஒருவருமான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோல் நோய் தீர்த்த தலமும் இதுதான்.

    *சுந்தரர் தீர்த்தம்:*
    திருக்கோவிலின் முன்புறம் படிக்கட்டுகளுடன் கூடிய ஆழமான தீர்த்தக்குளம் உள்ளது. இது *'சுந்தரர் தீர்த்தக்குளம்'* என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்தின் அருகில் சுந்தரருக்கு சிறிய கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தரர் இத்தல இறைவனை வேண்டி பதிகம் பாடி தன் தோல் நோய் நீங்க வேண்டினார். பின்னர் இறைவனை நினைத்தபடி ஆலயத்தில் அமைந்திருந்த தீர்த்தக்குளத்தில் நீராடினார். நீரில் மூழ்கி எழுந்தபோது அவரது தோல் நோய் முற்றிலுமாக குணமாகி இருந்தது. இதையடுத்து இந்த தீர்த்தம், அவரது பெயரிலேயே அழைக்கப்படலாயிற்று.

    மனத்தூய்மையுடன் திருத்துருத்தி சிவாலயத்தில் உள்ள சுந்தரர் தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, சுந்தரர் பாடிய பதிகத்தை பாடி சுவாமியையும், அம்பாளையும் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு சிவனை நினைத்து திருநீற்றினை உடல் முழுவதும் அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஒரு மண்டல நாட்கள் செய்து வந்தால், சரும நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    முழு மண்டல நாட்களும் ஆலயத்திற்கு வர முடியாதவர்கள், முதல் நாளிலும், கடைசி நாளிலும் வந்து வழிபடலாம். மற்ற நாட்களில் இல்லத்தில் இருந்தபடியே சுந்தரரின் பதிகத்தை பாடியபடி இறைவனை நினைத்து வழிபாடு செய்யலாம்.

    இந்தத் திருக்கோவில் தருமபுர ஆதீனத்தின் கீழ் இயங்கப்படுகிறது.

    *தேவாரம்:*
    1 *மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி*
    *வெடிபடக்கரை யொடுந்திரை கொணந்தெற்றும்*
    *அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்*
    *அடியினை தொழுதெழும் அன்பராம் அடியார்*

    சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
    என்னுடம்பு அடும்பிணி இடர் கெடுத்தானை

    2 *கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்*
    *கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி*
    *மாடுமா கோங்கமே மருதமே பொருது*
    *மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி*

    ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
    பழவினை யுள்ளன பற்ற றுத் தானை

    3 *கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்*
    *கொழுங்கனிச் செழும்பயன் கொண்டு கூட்டெய் திப்*
    *புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்*
    *போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்*

    செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
    தொடர்ந்தடுங்கடும்பிணித் தொடர்வறுத்தானை

    4 *பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்*
    *பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்*
    *கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்*
    *கடலுற விளைப்பதே கருதித்தன்கைபோய்*

    எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளா ரடிகளைச் செடியனேன் நாயேன்
    அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
    யருவினை யுள்ளன ஆசறுத் தானை

    5 *பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும்*
    *பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி*
    *இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி*
    *எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே*

    சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    ஒழிந்திலேன் பிதற்றமா றெம்பெரு மானை
    உற்றநோய் இற்றையேஉறவொழித்தானை

    6 *புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்*
    *பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி*
    *அகழுமா காவிரி அருங்கரை வளம்படப்பெருகி*
    *ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்*

    திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
    இழிந்த நோய் இம்மையே ஒழிக்கவல்லானை

    7 *வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்*
    *வருடியும் வணக்கியும் மராமரம் பொருது*
    *கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்*
    *காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்*

    விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளா ரடிகளைச் செடியனேன் நாயேன்
    உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
    உலகறி பழவினை அறவொழித்தானை

    8 *ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்*
    *புள்ளினம் பல படிந் தொண்கரை உகளக்*
    *காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்*
    *கவரிமா மயிர்சுமந்து ஒண்பளிங் கிடறித்*

    தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
    ஆருமா றறிகிலேன் எம்பெருமானை
    அம்மை நோய் இம்மையே ஆசறுத்தானை

    9 *புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்*
    *பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப*
    *இலங்குமா முத்தினோ டினமணியிடறி*
    *யிருகரைப் பெருமரம்பீழ்ந்துகொண்டெற்றிக்*

    கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளாரடிகளைச் செடியனேன் நாயேன்
    விலங்குமா றறிகிலேன் எம் பெருமானை
    மேலைநோய் இம்மையே விடுவித்தானை

    10 . *மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி*
    *மாறலார் திரிபுரம் நீறெழச் செற்ற*
    *அங்கையான் கழலடி அன்றி மற்றறியான்*
    *அடியவர்க் கடியவன் தொழுவன் ஆருரன்*

    கங்கையார்க் காவிரித் துருத்தியார் வேள்விக்
    குடியுளர் அடிகளைச் சேர்த்திய பாடல்
    தங்கையால் தொழுது தம்நாவின்மேற்கொள்வார்
    தவநெறி சென்று அமர்உலகம் ஆள்பவரே.

    *திருவிழாக்கள்:*
    மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகள்.

    *பூஜை:*
    காரண, காமீக ஆகம முறையில் ஐந்து கால பூசை.

    காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,
    மாலை 6.00 மணி முதல்
    இரவு 8.00 மணி வரை.

    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு, உக்தவேதீஸ்வரர் திருக்கோயில்,
    குத்தாலம் அஞ்சல், மயிலாடுதுறை வட்டம்,
    நாகை மாவட்டம். 609 801

    *தொடர்புக்கு:*
    தருமயாதீனத்திற்குட்பட்ட கோவில்,
    இராஜசேகர குருக்கள். 04364--235225

    திருச்சிற்றம்பலம்.

    *நாளைய தலம்...திருவழுந்தூர்.*

    முக்தி பேறு கிடைக்க வேண்டச் செய்யும் நீங்கள், அடியார்களுக்குத் தொண்டு செய்திருக்கிறீர்களா? ஆலயத்திற்கு தொண்டு செய்திருக்கிறீர்களா?, அப்படியில்லையெனில் தர்மங்களையும் ஆலயத் தொண்டையும் செய்யத் துவங்குங்கள்! ஏனெனில், *"முக்தி, தர்மத்தின் மூலதானம்"*

    ■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X