Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    147.சுற்றகபடோடு
    பல சூதுவினை யானபல
    கற்றகள வோடுபழி காரர்கொலை காரர்சலி
    சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு துயர்மேவித்
    துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு
    செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல்
    சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு பொறியாலே
    சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில்
    தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர்
    சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை விளையாடித்
    தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல
    சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
    தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத மருள்வாயே
    தித்திமித தீதிமித தீதிமித தீமிதத
    தத்ததன தானதன தானனன தானனன
    திக்குடுடு டுடமட டாடமட டுடுடுடு எனதாளம்
    திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ
    னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல
    திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் களமீதே
    எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல
    மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர்
    எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு வடிவேலா
    எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை
    சித்தமலை காமுககு காநமசி வாயனொடு
    ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் பெருமாளே.



    -147 இரத்தினகிரி
    (குழித்தலைக்கு அருகில் உள்ளது)
    ஐயர்மலை, சிவாயமலை, சிவைதைப்பதி, அரதனாசலம், இரத்தினவெற்பு, சிவாயம், வாட்போக்கி, மணிக்கிரி, மாணிக்கமலை என்றும் அழைக்கப்படுகிறது)



    பதம் பிரித்து உரை


    சுற்ற கபடோடு பல சூது வினையான பல
    கற்ற களவோடு பழி காரர் கொலை காரர் சலி
    சுற்ற விழலான பவிஷோடு கடல் மூழ்கி வரு துயர் மேவி


    சுற்ற = சூழ்ந்துள்ள கபடோடு பல = வஞ்சனைகள் பலவும் சூது
    வினையான பல = சூது நிறைந்த தொழில்கள் பலவும் (கொண்டு)கற்ற களவோடு = கற்ற கள்ளத் தொழிலொடு பழி காரர் = பழிக்கு
    இடம் தருபவர்கள் கொலைகாரர் = கொலை செய்பவர்கள் சலி =(இவர்களுடன் கூடி) சலிப்புற்று சுற்ற = அலைந்து விழலான
    = வீணான பவிஷோடும் = பெருமையோடு கடல் மூழ்கி =(வாழ்க்கைக்) கடலில் மூழ்கி வரு துயர் மேவி = அதில் உண்டான துன்பங்களை அடைந்து.


    துக்க சமுசார வலை மீன் அது என கூழில் விழு
    செத்தை என மூளும் ஒரு தீயில் மெழுகான உடல்
    சுத்தம் அறியாத பறி காயம் அதில் மேவி வரு பொறியாலே


    துக்க சமுசார = துக்கம் தரும் சமுசாரம் என்னும் கடலில்.
    வலை மீன் அது என = வலையில் அகப்பட்ட மீன் போல.கூழில் விழு = கூழில் விழுந்த செத்தை என = குப்பை போலக் கிடந்து மூளும் ஒரு தீயில் = மூண்டு எரியும் பெரிய நெருப்பில் பட்ட மெழுகான உடல் = மெழுகு போல் உருகும் உடல் சுத்தம் அறியாத = சுத்தம் என்பதையே அறியாத பறி காயம் அதில் = பாரம் வாய்ந்த உடலில் மேவி வரும் = பொருந்தி வேலை செய்யும் பொறியாலே = ஐந்து இந்திரியங்களாலும்.


    சற்று மதியாத கலி காலன் வரு நேரம் அதில்
    தத்து அறியாமல் ஓடி ஆடி வரு சூதர் ஐவர்
    சத்த பரிசான மண ரூப ரசமான பொய்மை விளையாடி


    சற்றும் மதியாத = சிறிதேனும் இரக்கமில்லாமல் வரும் கலி = வலியும் செருக்கும் கொண்ட காலன் வரும் நேரம் அதில் = யமன் வரும்போது தத்து = (இந்த) ஆபத்து அறியாமல் =வருகின்றதே என்பதை அறியாமல் ஓடி ஆடி = ஓடியாடியும்
    வரு சூதர் ஐவர் அவர் = வருகின்ற சூதாடிகளான ஐவர்சத்த(ம்)
    = சப்தம் பரிசானம் = (ஸ்பரிசம்) தொடுகை மணம் =வாசனை ரூபம் = வடிவம் ரசமான = ரசம் எனப்படும்பொய்மை விளையாடி = பொய் இன்பங்களில் திளைத்து விளையாடி.


    தக்க மடவார் மனையை நாடி அவரோடு பல
    சித்து விளையாடு வினை சீசி இது நாற உடல்
    தத்தி முடிவாகி விடுவேனோ முடியாத பதம் அருள்வாயே


    தக்க = தகுந்த மடவார் மனையை நாடி = மாதர்களையும் அவர்கள் வீடுகளையும் தேடிச் சென்று அவரோடு =அம்மாதர்களோடு பல சித்து விளையாடு வினை = பல மாய வித்தைகளை விளையாடுகின்ற தொழில் சீசி இது நாறு =சீசீ இது என்று பலருக்கும் வெறுப்புடன் கூறத் தக்கதாய்த்தோன்ற உடல் தத்தி = (என்னுடைய) உடல் வருத்தமுற்று முடிவாகி விடுவோனோ = நான் இறந்து படுவேனோ? முடியாத = (உனது) அழிவில்லாத பாதம் அருள்வாயே = திருவடியைத் தந்து அருளுக.




    தித்திமித..............என தாளம்


    தித்திமித...........என தாளம் = இவ்வாறு தாளம்.


    திக்கு முகிலாட அரி ஆட அயன் ஆட சிவன்
    ஒத்து விளையாட பரை ஆட வரர் ஆட பல
    திக்கு அசுரர் வாட சுரர் பாட மறை பாட எதிர் களம் மீதே


    திக்கு = (எல்லா) திசைகளிலும் முகில் ஆட = மேகம் போல் ஒலிக்க அரி ஆட = திருமால் ஆட அயன் ஆட =பிரமன் ஆட
    சிவன் ஒத்து விளையாட = சிவனும் மகிழ்ந்து களி கூத்து ஆட.
    பரை ஆட = தேவி களித்து ஆட வரர் ஆட = (சிறந்த) முனிவர்கள் ஆட
    பல திக்கு அசுரர் வாட = பல திக்குகளில் இருந்த அசுரர்கள் வாடி மயங்க சுரர் பாட = தேவர்கள் பாட மறை பாட =வேதங்கள் பாடித் துதிக்க எதிர் களம் மீதே = எதிர்த்து வந்தபோர்க் களத்தில்.


    எத்திசையும் நாடி யமனார் நிணமோடு ஆட பெல
    மிக்க நரி ஆட கழுது ஆட கொடி ஆட சமர்
    எற்றி வரு பூத கணம் ஆட ஒளி ஆட விடு வடிவேலா


    எத்திசையும் நாடி = எல்லாத் திசைகளையும் தேடிச் சென்று
    யமனார் = கால தூதுவர்கள் நிணமொடு ஆட = (போர்க் களத்தில் கிடந்த) மாமிசக் கொழுப்பில் நடை செய்ய பெல மிக்க நரி ஆட = பலம் மிக உள்ள நரி (உணவு கிடைக்கின்றது என்று) கூத்தாட கழுது ஆட = பேய்கள் ஆட கொடி ஆட = காக்கைகள் ஆட
    சமர் எற்றி வரு பூத கணம் ஆட = போரில் மோதி வருகின்ற பூத கணங்கள் ஆட. ஒளி ஆட = ஒளியை வீசும்படி விடு =
    விடுத்த வடிவேலா = கூரிய வேலனே.


    எத்தி ஒரு மானை தினை காவல் வல பூவை தனை
    சித்தம் அலை காமுக குகா நம சிவாயனொடு
    ரத்ன கிரி வாழ் முருகனே இளையவா அமரர் பெருமாளே.


    எத்தி = (வேலன், வேங்கை, செட்டி, விருத்தன் ஆகிய வேடங்களைக் காட்டி) ஏமாற்றி ஒரு மானை = ஒப்பற்ற மான் போன்றவளும் தினை காவல் வல = தினைப் புனம் காப்பதில் வல்லவளும் பூவை தனை = நாகண வாய்ப்புள் போன்ற வளுமாகிய வள்ளியின்
    சித்தம் அலை காமுக = உள்ளத்தை கலக்கிய காமம்கொண்ட வனே குகா = குகனே நம சிவாயனோடு =சிவபெருமானோடு
    ரத்ந கிரி வாழ் முருகனே = ரத்தின கிரி எனப்படும் வாட் போக்கித் தலத்தில் வாழும் முருகனே இளையவ = என்றும்இளையவனே அமரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே.






    விளக்கக் குறிப்புகள்


    தத்தி முடிவாகி.....
    தத்தி = தத்துறுதல் = வருந்துதல். நமசிவாயன் = சிவனது சிறப்புப்
    பெயர். (நக்கர் தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே)...
    சம்பந்தர் தேவாரம்.
    (நாதன் நாமம் நமச்சிவாயவே)...சம்பந்தர் தேவாரம்.


    நாகண வாய்ப்புள் – ஒருவகை பறவை
Working...
X