Announcement

Collapse
No announcement yet.

Thiruchengaatankudi temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Thiruchengaatankudi temple

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.97*

    ☘ *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*☘

    *திருச்செங்காட்டங்குடி.*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல............)

    *குறிப்பு.*
    இத்தலப் பதிவு அதிக நீளமான பதிவாகும். எனவே நீளம் கருதி, இன்றும் நாளையும் இத்தலப் பதிவு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நாளை வரும் பதிவில் சிறுத்தொணாடர் நாயனார் தொண்டும் இணைந்து வரும்.


    *இறைவன்:* உத்தராபதீசுவரர், ஆத்திவனநாதர், கணபதீஸ்வரர், மந்திரபுரீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.


    *இறைவி:*
    *சூளிகாம்பாள், வாய்த்த திருக்குழலம்மை, வாய்த்த திருக்குலழம்மை உமைநாயகி.


    *தல விருட்சம்:*
    ஆத்தி மரம். (காட்டாத்தி.)


    *தீர்த்தம்:* சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், மற்றும் சீராள தீர்த்தம் ஆகிய மொத்தம் ஒன்பது தீர்த்தங்கள்.


    *திருமேனி:* சுயம்புத் திருமேனியானவர். உத்திராபசுபதீஸ்வரர் திருமேனியின் நெற்றியில் காயத்துடனே காட்சி தருகிறார்.


    *புராணப் பெயர்:* கணபதீச்சரம்.


    *ஊர்:* திருச்செங்காட்டங்குடி.


    *பதிகம் பாடியவர்கள்:*
    அப்பர், சுந்தரர்.


    *ஆலய பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *ஆகமம்/பூஜை:* காமிகம்.


    *இருப்பிடம்:* திருவாரூரிலிருந்து திருமருகல் சாலையில் சென்றால், *செங்காட்டங்குடி* என பெயர் பலகை தென்படும்.


    அந்தப் பெயர் காட்டும் சாலையில் சென்றால் சந்தைப்பேட்டை வரும். இதன் வழியாகச் செல்ல திருமருகல் கால்நடை மருந்தகம் வரும்.


    இதையும் தாண்டிச் செல்லும் 3AE-பஸ் வழித்தடத்தில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.


    திருவாரூரிலிருந்தும், திருமருகலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கிறது.


    பாடல் பெற்ற காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் எழுபத்து ஒன்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *பெயர்க்காரணம்:* கயமுகாசூரணைக் கொன்ற பலி தீர்வதற்காக சிவனை வழிபட்டு அருள் பெற்றார் கணபதி. எனவே கணபதீஸ்வரம் என்று அழைக்கப்படுவதாயிற்று.


    *கோவில் அமைப்பு:*
    இத்தலத்திற்கு செல்ல வேண்டுமென்ற நினைவு எங்களுக்கு அடிக்கடி நினைவாய் இருந்தது.


    இருப்பினும் அவனருள் எங்களுக்கு வாய்க்காமல் காலம் கடந்தே போயின. இந்த நேரத்தில் நினையாத கோயிலெல்லாம் சென்று வரும்படி நடந்தது.


    அப்போதுதான் நினைத்தோம்..."அவனை நாடிச் செல்வதற்கும் அவனருள் இருந்தால்தான் அது நடக்குமென்று நினைத்தோம்.


    அப்படியில்லாமலா..... இவ்வழியே சென்ற திருநாவுக்கரசர் அந்த ஊருக்குச் செல்லும்போது என்னை வந்து பார் என்று கூறினார்? இது...அவர்...அருளினால் தானே!


    அதுபோலதான் இப்போது அவர் அருள் எங்களை இவ்வாலயத்துக்கு வருமாறு அழைக்கும் சமிக்ஞை கிடைத்ததால் திருச்செங்காட்டங்குடிக்குப் புறப்பட்டுச் சென்றோம்.


    பேருந்தை விட்டு இறங்கியதும் ஊருக்கு நடுவே இருக்கும் இவ்வாலயத்திற்கு நடக்கலானோம்.


    கோயிலினுள் கும்பிட்டு திசைப்பக்கம் திரும்பவும் முதலில் இராஜகோபுரம் நம் கண்களுக்குக் காட்சி தரவும் *ஈசுவரனே!, பெருமானே!!சிவ சிவ* என சிரம் மேல் கையுர்த்தி கோபுரத் தரிசனம் செய்து வணங்கிக் கொண்டோம்.


    இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு பார்த்த வண்ணம் எழிலுடன் அமைந்திருந்தன. மிக அழகான நேர்த்தி அக்கோபுரம் முழுவதும் பரவிக் கிடந்தது.


    கோபுரத்தின் எதிர்திசையை பார்த்தோம். அங்கே திருக்குளத்தைக் காணப்பெற்றோம், எங்கள் கால்கள் திருக்குளத்தை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியது.


    திருக்குளக்கரை வந்து, அருகிருந்தோரிடம் அத்தீர்த்தப் பெயரைக் கேட்டோம்.


    இந்தத் திருக்குளம் சத்திய தீர்த்தமாகும். இதுபோக இன்னும் எட்டுத்தீர்த்தங்கள் இக்கோயிலுக்கு உள்ளதென கூறினார்.


    குளக்கரையிலிருந்த முகப்பில், *'மங்கள விநாயகரைக்* கண்டு விட்டோம். விடுவோமா? தோள் சுமைகளை கீழிறக்கி வைத்துவிட்டு விநாயகரைப் பார்த்து நம் காதினை பிடித்துத் தோப்புங்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.


    பின் திரும்ப நடந்து ராஜகோபுரத்தின் உட்பக்கம் செல்ல அங்கே தலவிருட்சமான ஆத்திமரத்தினடியில்
    இறைவன் அமர்ந்திருக்க, சிறுத் தொண்டர் அவரை அமுது செய்ய அழைக்கும் சிற்பத்தை அழகுடன் இழைத்திருந்தார்கள்.


    முன்புமிருந்த மண்டபத்திற்கு வந்தோம், அங்கே அம்பாள் சந்நிதியில் நின்ற திருக்கோலம் கொண்டு அருளௌட்சிக் கொண்டிருந்தாள்.


    மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக் கொண்டு அவளருட் பிரசாதமான குங்குமத்தை பெற்றுக் கொண்டு வெளி வந்தோம்.


    கவசமிட்ட கொடிமரம் இருக்க வணங்கினோம். முழு தரிசனம் முடித்து வெளிவருகையில் கொடிமரத்தை வணங்கிக் கொள்ளலாமென நகர்ந்தோம்.


    கொடிமரத்தைத்தாண்டி, உட்பிராகாரத்தில் உள் புகுந்தோம். அங்கு கல்லில் வடித்துள்ள பிட்சாடனர் கோலவுருவத்தையும், சந்தனநங்கை, சீராளதேவர், திரவெண்காட்டு நங்கை, சிறுத்தொண்டர் ஆகியோர் மூலத் திருமேனிகளையும் கண்டு, பக்திப் பாங்குடன் மெய்மறந்து, நெஞ்சிநேராக கூப்பியிருத்திய கரங்களுடன் ஒவ்வொருத்தரையும் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.


    அறுபத்துமூவர் திருமேனிகளையும் தரிசித்தோம் ஆனந்தித்தோம். ஒவ்வொரு நாயனார் முன்பு வரும்போது, அவர் ஆற்றிய தொண்டுகள் நம் மனத்தில் நிழலாட, நம் விழியோரங்கள் ஈரப்பட்டன.


    தலமரம் *'ஆத்தி'* இருந்தது. சுற்றி வணங்கிக் கொண்டோம்.


    இதற்கடுத்தாக பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகியோர்களின் சந்நிதிகளுக்குச் சென்று தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.


    அடுத்து, *வாதாபிகணபதி* தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். இவர் மிக விசேஷமானவர். இவரின் பங்கு மிக அற்புதம் கொண்டது.


    சத்பாஷாட மகரிஷி, என்பவர் பூஜித்த லிங்கம், பிரமன் வழிபட்ட இலிங்கம் வள்ளிதெய்வனானை சுப்பிரமணியர் சந்நிதிகளுக்கும் சென்று வணங்கிக் கொண்டோம். உள்ளன.


    இக்கோயிலில் உள்ள அஷ்டமூர்த்தி மண்டபத்திற்கு வந்தோம். இம்மண்டபத்தை அவசியம் கண்டு தொழத்தக்கது என்பதை உணர்ந்தோம்.


    துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனர், திரிபுராரி, பைரவர், விநாயகர் முதலிய மூலத் திருமேனிகள் மிக அருமையான வேலைப்பாடுகளுடன் தெரிந்தன.


    இந்த அஷ்டமூர்த்தி மண்டபத்தில் நடராஜ சபை இருந்ததது. இச்சபையிலிருந்த ஆடவல்லானின் தூக்கிய திருவடியின் கீழினிலில் நம் சிரத்தை மோத வேண்டும் போலிருந்தது நமக்கு.


    'என்னா?"..ஆடல் நளினம்! 'என்னா?" விழியோரக் களிப்பு!....அப்பப்பா!...............எத்தனை முறையில்லை, எத்தனை ஆண்டுகள் தரிசித்தாலும், எங்கள் பக்தித்தாகம் தனியாது பெருமானே!..ஈசனே!...
    எம்பெருமானே! சிவ..சிவ.


    அப்படியே ஒரு ஓராமாக அமர்ந்து *"மன்னாதிபூதமொடு"* பாடல் முழுமையும் பாடியெழுந்தோம். அதன்பின் மனதிற்கு வணங்கிய திருப்தி உண்டானது.


    அடுத்து நவக்கிரகங்கள், பைரவர், ஸ்தம்ப முகூர்த்த விநாயகர், சூரியன் சந்நிதிகள் இருக்க வழக்கம்போல வணங்கிக் கொண்டோம்.


    அடுத்து மூலவப்பெருமானைத் தரிசிக்க அவன் சந்நிதி முன் உள் புகுந்தோம்.


    அங்கே வாயிலில்
    திண்டி, முண்டி எனும் இரு துவாரபாலகர்கள் இருந்தார்கள். அவர்களை வணங்கி ஈசனைத் தரிசிக்க உள்புக அனுமதிக்க வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.


    நேரே மூலவர் தரிசனக் காட்சி அருள்பிரவாகமாக இருந்தன. இவர் கணபதீச்சரமுடையார் என்ற நாமத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருந்தார். இவரின் கருவறையைச் சுற்றி அகழி அமைப்புடன் அமைந்திருந்தது.


    மனமுருக பிரார்த்தனை செய்து ஈசனை வணங்கி, அவனுடைய வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம். இவன் சந்நிதி ஓரமாய் அமர்ந்து சிறிது இளைப்பாறிப் பின்னெழுந்து வணங்குதலை தொடர ஆரம்பித்தோம்.


    அடுத்திருக்கும்
    *உத்ராபதீஸ்வரர் உற்சவத் திருமேனியைக்* கண்டோம். இவருக்கு பச்சைக் கற்பூரத்தையும் குங்குமப்பூவையும் சேர்த்து அர்ச்சகர் சார்த்திக் கோண்டிருந்தார்.


    அர்ச்சகரிடம் இதுபற்றி கேட்டபோது, உத்திராபதீஸ்வரரின் திருமேனிக்கு நாள்தோறும் இவ்விதம் சார்த்தப்படுவது இவ்வாலய வழக்கம் என்றார் அர்ச்சகர்.


    அங்கு ஒரு பேழையில் சிறியதான ஒரு மரகதலிங்கம் ஒன்றும் இருந்தது.


    கோஷ்டத்திற்குள் அடியெடுத்து வைத்தோம். மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் (ரிஷபத்தின் மீது கை ஊன்றியநிலை.) துர்க்கை சந்நிதிகளுக்குச் சென்று நேர்த்தியான வணக்கத்தை பிரிதொரு மனம் அகலாது வணங்கிக் கொண்டோம்.


    சண்டேசரரை அவர் சந்நிதியில் கண்டோம். இவருக்குண்டான மரபுமுறையான அமைதித் தன்மையுடன் அவரை வணங்கிக் கொண்டோம்.


    நல்ல கணக்கே எம்மிடமுளன! கள்ளக்கணக்கேதுமிலை. என்ற மனவோட்டத்தை அவரிடம் ஒப்பித்துப் பின் விடைகேட்டுத் திரும்பினோம்.


    பின் வெளிவருகையில் கொடிமரத்துமுன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து கரம் புஜம் சென்னி தேய்த்து வணங்கியெழுந்து மகிழ்ந்து வெளிவந்தோம். சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.


    *இத்தலப் பதிவு நாளையும் வ(ள)ரும்.*


    திருச்சிற்றம்பலம்.


    *குறிப்பு:*
    திருச்செங்காட்டங்குடி தல அருமைகள், பெருமைகள் தல பதிவு நீளமானதால், இத்தலத்தின் மீதிப் பதிவு நாளையும் தொடர்ந்து வரும். அடியார்கள், நாளைக்கு வரும் பதிவுடன் இப்பதிவையும் சேர்த்து இணைத்து வாசிக்குமாறு தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன்.
Working...
X