Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    150.உடுக்கத்துகில்


    உடுக்கத் துகில்வேணு நீள்பசி
    யவிக்கக் கனபானம் வேணுநல்
    ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை
    ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
    இருக்கச் சிறுநாரி வேணுமொர்
    படுக்கத் தனிவீடு வேணுமிவ் வகையாவுங்
    கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
    யக்கக் கடலாடி நீடிய
    கிளைக்குப் பரிபால னாயுயி ரவமேபோம்
    க்ருபைச்சித் தமுஞான போதமு
    மழைத்துத் தரவேணு மூழ்பவ
    கிரிக்குட் சுழல்வேனை யாளுவ தொருநாளே
    குடக்குச் சிலதூதர் தேடுக
    வடக்குச் சில தூதர் நாடுக
    குணக்குச் சில தூதர் தேடுக வெனமேவிக்
    குறிப்பிற் குறிகாணு மாருதி
    யினித்தெற் கொருதூது போவது
    குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ
    அடிக்குத் திரகார ராகிய
    அரக்கர்க் கிளையாத தீரனு
    மலைக்கப் புறமேவி மாதுறு வனமேசென்
    றருட்பொற் றிருவாழி மோதிர
    மளித்துற் றவர்மேல் மனோகர
    மளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே



    -150 கதிர்காமம்



    பதம் பிரித்தல்


    உடுக்க துகில் வேணும் நீள் பசி
    அவிக்க கன பானம் வேணும் நல்
    ஒளிக்கு புனல் ஆடை வேணும் மெய்யுறு நோயை


    உடுக்க = உடுப்பதற்கு துகில் வேணும் = ஆடை வேண்டும்நீள் = பெரும் பசி அவிக்க = பசியைத் தணிப்பதற்கு கன பானம் வேணும் = நிரம்பப் பருகும் உணவு வேண்டும் நல் ஒளிக்கு = தேகம் நல்ல ஒளி தருவதற்கு புனல் = (குளிக்க) நீரும் ஆடை வேணும் = உயர்ந்த உடையும் வேண்டும் மெய் உறு நோயை= உடலுறு நோய்களை.




    ஒழிக்க பரிகாரம் வேணும் உள்
    இருக்க சிறு நாரி வேணும் ஓர்
    படுக்க தனி வீடு வேணும் இவ் வகை யாவும்


    ஒழிக்க = ஒழிப்பதற்கு பரிகாரம் வேணும் = (தக்க) வைத்தியம் வேண்டும் உள் இருக்க = (வீட்டின்) உள் இருப்பதற்கு சிறு நாரி வேணும் = இளம் மனைவி வேண்டும் படுக்க =படுப்பதற்கு ஓர் தனி வீடு வேணும் = ஒரு தனி இல்லம் வேண்டும் இவ் வகை யாவும் = இந்த மாதிரி சுகங்களை எல்லாம்.




    கிடைத்து க்ருஹ வாசியாகி அ
    மயக்க கடல் ஆடி நீடிய
    கிளைக்கு பரிபாலனாய் உயிர் அவமே போம்


    கிடைத்து = கிடைக்கப் பெற்று க்ருஹவாசியாகிய =குடும்பத்தனாகி அ மயக்கக் கடல் ஆடி = அந்த மயக்கக் கடலில் திளைத்து ஊடாடி. நீடிய கிளைக்கு = பெருத்த (தனது) சுற்றத்தார்களை பரிபாலனாய் = பரிபாலனம் செய்பவனாக இருந்து உயிர் அவமே போம் = உயிர் வீணாகக் கழிந்து போகும்.


    க்ருபை சித்தமும் ஞான போதமும்
    அழைத்து தர வேணும் ஊழ் பவ
    கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ஒரு நாளே


    க்ருபைச் சித்தமும் = கருணை உள்ளத்தையும் ஞான போதமும் = ஞான நிலை அறிவையும் அழைத்து = (என்னை) அழைத்து தர வேணும் = தர வேண்டுகிறேன் ஊழ் பவ கிரிக்குள் = ஊழ் வினைப்படி பிறப்பு என்கின்ற மலைச்சூழலில் உழல்
    வேனை = சுற்றித் திரிபவனை ஆளுவது ஒரு நாளே =ஆண்டருள்வது ஒருநாள் ஆகுமோ?


    குடக்கு சில தூதர் தேடுக
    வடக்கு சில தூதர் நாடுக
    குணுக்கு சில தூதர் தேடுக என மேவி


    குடக்கு = மேற்கே சில தூதர்கள் = சில தூதுவர்கள்
    தேடுக = (சென்று) தேடுங்கள் வடக்குச் சில தூதர்கள் = வட திசைப் புறம் சென்று சில தூதர்கள் நாடுக =தேடுங்கள்
    குணக்கு = கிழக்கே சில தூதர்கள் தேடுக = தேடுங்கள் என மேவி = என்று கூறி அனுப்பி வைத்து.


    குறிப்பில் குறி காணும் மாருதி
    இனி தெற்கு ஒரு தூது போவது
    குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ


    குறிப்பில் குறி காணும் = குறிப்பினாலேயே குறித்த பொருளைக். காணவல்ல மாருதி = அனுமன்.
    இனி தெற்கு ஒரு தூது போவது = இனி தெற்கே ஒப்பற்ற தூதுவனாகப் போக வேண்டியது குறிப்பில் =
    சொல்லியனுப்பிய குறிப்பு விவரத்தின்படி குறி போன
    போதிலும்= குறித்த பொருள் கிட்டுதல் தவறிப் போன போதிலும் வரலாமோ = திரும்பி வீணே வருதல் நல்லதோ (நல்லதல்ல என்று சுக்கிரீவன் சொல்லி அனுப்ப).


    அடி குத்திரகாரர் ஆகிய
    அரக்கர்க்கு இளையாத தீரனும்
    மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று


    அடி = சுத்த குத்திரர்காரர் ஆகிய =வஞ்சகர்களாகிய
    அரக்கர்க்கு இளையாத = அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனும் = தீரனாய் அலைக்கு அப்புறம் மேவி =கடலைத் தாண்டி அப்புறம் (இலங்கைக்குச் சென்று)மாது உறும் வனமே சென்று = மாதாகிய சீதை இருந்த அசோக வனத்தை அடைந்து.


    அருள் பொன் திரு ஆழி மோதிரம்
    அளித்து உற்றவர் மேல் மனோகரம்
    அளித்து கதிர் காமம் மேவிய பெருமாளே.


    அருள் = இராமர் தந்தருளிய பொன் = அழகிய
    ஆழி மோதிரம் அளித்து = ஆழி மோதிரத்தைக் கொடுத்தவராகிய உற்றவர் மேல் = அனுமனுக்கு
    மனோகரம் அளித்து = அன்புடன் அனுக்கிரகம் செய்து கதிர் காமத்தில் மேவிய = கதிர்காமத்தில் வீற்றிருக்கும்பெருமாளே= பெருமாளே.



    [lik]சுருக்க உரை


    உடுக்க ஆடை, உண்ண உணவு, நோய்களுக்குச் சிகிச்சை,படுக்க வீடு, இளம் மனைவி முதலிய எல்லா சுகங்களும் கிடைத்துக் குடும்பத்தனாகி, வீணாக உயிரைக் கழிக்காமல்,கருணை உள்ளத்தையும், ஞான நிலை அறிவையும் அடியேனை அழைத்துத் தரவேணும். பிறவி என்னும் சூழலில் சிக்குண்ட என்னைஆண்டருளும் நாளும் உண்டாகுமோ.


    குறிப்பறிந்து சீதையைத் தேடித் தெற்கே சென்று,இலங்கையில்
    சீதையை அசோக வனத்தில் கண்ட அனுமனுக்கு அன்புடன்
    அனுக்கிரகித்து கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. பிறவிச் சூழலில் இருக்கும் என்னை ஆண்டருள வேண்டும்.[/link]



    குகஸ்ரீ ரசபதி விரிவுரை


    காதக பாதக, சாதக இராவணன், பிராட்டியை இராமனிடமிருந்து பிரித்தான். செம்மையற்ற இலங்கையில் சிறையும் வைத்தான். இது கண்டு தேம்பி அழுதது தர்ம தேவதை. தேவியைப் பிரிந்து திகைத்த ரகுபதி,மயிலே, குயிலே, மான் இனங்காள் எங்கே என் தேவி?, எங்கே என் மைதிலி?, எங்கே? எங்கே? என்று எதிர்பட்டவற்றை எல்லாம் நோக்கி குமறி அழுது கூவினன்.


    கோபமும் துன்பமும் மிகுந்து கொதித்து, பொரிந்து கழிந்தது இலக்குவன் மேனி. இருவரும் பல இடங்களை நாடினர். உயிர் போம் நிலையில் ஜடாயு சமிக்ஞை காட்டினார். சபரி வழி காட்டினள். அவடவழியே சென்ற அருள் மிகு ரகுபதி, சுக்ரீவனை துணை கொணடார். அவன் மூலம் ஜானகி இருக்கும் இடம் கண்டு வர வானரப் படைகள் வாய்த்தன.


    சிலருக்கு வடக்கில் செல்லக் கட்டளை. சிலருக்கு மேற்கில் செல்ல உத்தரவு. சிலருக்கு கிழக்கில் செல்ல ஆக்ஞை. அரும் திறல், பெரும் தகுதி,கலைஞானம், நுண்மை மதி, குறிப்பறிதலில் சிறந்த குணக் கொண்டலான அநுமானை அன்போடு ராமன் தனித்து அழைத்தான்.


    ஆஞ்சனேயா, நீ தென் திசைச் செல். தேவியைக் காண்பயேல் என் தூதன் என்பதற்கு அடையாளமாக இதைக் கொடு என்று கைக் கணையாழியைக் கழற்றி அளித்தான். அருளாணையை மேற்கொண்ட அநுமான் கந்தனை இதயத்தில் வந்தித்து கடலைத் தாவினன். இலங்கையில் குதித்தான்.தேவியை எங்கும் தேடினான். அன்னை எங்கும் அகப்படாமையால் துறப்பேன் உயிர் என்று துணிந்தான்.
    கவலும் அவன் மன நிலையைக் கண்ட கதிர்காமன் அருளோடு அவனில் ஆவேசித்தான். பெரும் தெளிவு அதனால் பிறந்தது. மேலும் தேடினான். தேடிக் கொண்டே சென்றான். காகுத்தன் தேவியை அசோக வனத்தில் கண்டான். வந்த சோதனைகளால் நொந்த மன தேவி ஊர்தண்யமாகி உயிர் துறக்க முயன்றாள். கண்டான் அநுமன். கருத்தும் எண்ணினன். கொண்டான் நடுக்கம். மெய் தீண்டக் கூசினான். அண்டர் நாயகன் அருள் தூதன் யான் என்று அறிவித்த படி குதிதார். மகிழ்ந்தது மனம். மேலும் யாரோ இவன் என்று இதயம் ஐயம் கொண்டது. அதை அறிந்து விருவிரு என்று ராகவன் செய்தியை விளம்பினன் மாருதி. தாயே, தாங்கள் இருக்கும் இடம் அறிய எண்ணிறந்த வானரங்கள் திசை அனைத்தும் சென்றுளர். தங்களை தரிசிக்கும் தவமுடைய அடியேன் யான். இந்தா அம்மா,ரகுபதியின் கணையாழி என்று கண்டு மகிழ கையில் கொடுத்தான். ஆர்வம் பெருகிய அன்னை, அநுமா , நீ இன்று போல் என்றும் இரு என்று ஆசி கூறினள். ஒரு மாதத்தில் சிறை அகலும் என்று உறுதி கூறி திரும்பினன். அந்த சிறிய திருவடி அநியாய ராவணன் மேல் இருந்த ஆத்திரத்தால் அசோக வனத்தை அழித்தான்.


    உயிர் போகும் வரை, அடி அடி என்று அடிக்க அறிந்தவர் இரக்கமற்றவர் அரக்கர்கள். ராவணன் மகன் அக்ஷயன் எதிர்பட்டாரை இடிப்பான், அவர் என்பை உடைப்பான். குடைந்து உடலைக் குளம்பாக்குவான். அந்த அக்ஷயன் அரக்கரோடு வந்து எதிர்த்தான். கதிர்காமன் தன்னில் ஆவேசித்திருக்கும் ஆற்றலால் உறுத்து எதிர்த்தனர் உயிரை ஒழித்தார் மாருதி. அதன் பின் இந்திரஜித் வந்து எதிர்த்தான். கருதிய பல சிந்தனையால் வேண்டுமென்றே கட்டப்பட்ட அநுமனை ராவணன் எதிரில் நிறுத்தினர். அறவுரை பல கூறினார் அநுமன். இருமாந்திருக்கும் ராவணன் தன் இருபது செவிகளும் அந்த உபதேசத்தை ஏற்க மறுத்தன. இவன் வாலில் தீ வைமின்கள் என்று பத்து வாயாலும் கூறினன். வாலில் வைத்த தீயால் இலங்கையைக் கொளுத்தி வந்த வழியே மீண்டான் அநுமன்.ராகவனை தரிசித்தான். ஜானகி ஆக்கம் கூறி சாந்தி தந்தான். அதன் பின் அரக்கர்களை கழுவறுத்து, அறவோர்க்கு காப்பளித்து விடுதலை பெற்ற ஜானகியுடன் அயோத்தியை ஆண்டு எவர்க்கும் இன்பம் செய்தான் ராமன் என்பது பழைய வரலாறு.


    மாருதியின் தொண்டு தன்னலமற்றது. அது கண்டு அவனில் கலந்திருந்து வெற்றியை அளித்தது வேல் தெய்வம். இவ்வரலாறு முருக பக்தர்களுக்கு ஓர் முன்னறிவிப்பு. பற்று ஒன்றும் இல்லாத பக்தர் ஆஞ்சனேயர். அந்நிலையில் உத்தம்த் தொண்டு செய்து உயர்ந்தார். கதிர்காமா, அவருக்கு நீ அருள் பாலித்தாய் என்பதில் என்ன அதிசயம் இருக்கிறது?.


    என் சரித்திரம் பரிதாபம். இடைக்கு உடை, மேலாடை, பசிக்கு உணவு சிறந்ததாக பலிக்க வேண்டும். உடல் நோய் வந்தால் அது நொடியில் ஒழிய வேண்டும். இது என் நினைவு மேலும் மோக விகாரம் ஒருபுறம் முதிர்கிறது. கனம் தங்கிய மேலோர் காரித் துப்பும் கடைப்பட்ட வாழ்வுடைய எனக்கு, இல்லறத்தான் என்ற ஒரு போலிப் பெயரும் இருக்கிறது.
    எம்பெருமானே, உன் திரு உளத்தில் இரக்கம் தோன்ற அடியேனுக்கு ஞானம் அருளாயா. தெளிவு பிறக்க சங்கல்பம் செய்யாயா. முறையே பிறவி எனும் மலை குறையுள் சிக்கி வெளிப்பட அறியாமல் அங்கேயே சுழன்று வருந்தும் அடியேனை நீ ஆளாக்கிக் கொள்ளும் நாள் என்றேயோ என்று பிராத்திக்கும் இனிய திருப்புகழ் இது.


    (அநுமனை சொல்லின் செல்வன் என்றான் ராமன். மெய்மையின் வேலி போன்றான், தருமத்தின் தனிமை தீர்ப்பான்என்பது கம்பர் வைத்த பெயர். குறிப்பிற் குறி காணும் மாருதி எனும் ஓர் அரும் பெயர் சூட்டுகின்றார் நம் அருணகிரிநாதர். இதயத்தில் குகப்பரமன் இருக்கும் குறிப்பை உணர்ந்தவன்அநுமான் என்ற பொருளும் இதற்கு உண்டு. சுந்தர முருகனை என்றும் எண்ணும் அதனால் மாருதிக்கும் சுந்தரன் என்னும் பெயர் உண்டு. எம்பெருமான் கதிர்காமனோ தன்னையே அநுமனுக்குத் தந்து அவனைத் தக்கோன் ஆக்கினான் என்பது இத் திருப்புகழில் கண்ட திறம்).



    விளக்கக் குறிப்புகள்


    குடக்குச் சில தூதர் தேடுக...


    கதிர்காமத்தில் வீற்றிருக்கும் முருகன் அனுமனுக்கு அருள் புரிந்ததாகக்
    குறிப்பிடப்பட்டுள்ளது. இரமாயணக் கதையும் கூறப்பட்டுள்ளது
    .
Working...
X