Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    173.சத்தி பாணீ


    தத்த தானா தனாதன தத்த தானா தனாதன
    தத்த தானா தனதாதன தந்ததான




    சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
    தத்வ வாதீ நமோநம விந்துநாத
    சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
    தற்ப்ர தாபா நமோநம என்றுபாடும்
    பத்தி பூணா மலேயுல கத்தின் மானார் சவாதகில்
    பச்சை பாடீ ரபூஷித கொங்கைமேல்வீழ்
    பட்டி மாடான நானுனை விட்டி ராமே யுலோகித
    பத்ம சீர்பா தநீயினி வந்துதாராய்
    அத்ர தேவா யுதாசுர ருக்ர சேனா பதீசுசி
    யர்க்ய சோமா சியாகுரு சம்ப்ரதாயா
    அர்ச்ச னாவா கனாவய லிக்குள் வாழ்நா யகாபுய
    அக்ஷ மாலா தராகுற மங்கைகோவே
    சித்ர கோலா கலாவிர லக்ஷ்மி சாதா ரதாபல
    திக்கு பாலா சிவாகம தந்த்ரபோதா
    சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத
    தெர்ப்பை யாசா ரவேதியர் தம்பிரானே
    .


    -173சிராப்பள்ளி


    பதம் பிரித்தல்


    சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம
    தத்வ ஆதி நமோநம விந்து நாத


    சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம
    தற் ப்ரதாபா நமோநம என்று பாடும்


    பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில்
    பச்சை பாடீர பூஷித கொங்கைமேல் வீழ்


    பட்டி மாடான நான் உனை விட்டிராமே உலோகித
    பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய்


    அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி
    அர்க்(கி)ய(ம்) சோமாசியா குரு சம்ப்ரதாயா


    அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய
    அ(க்)க்ஷ மாலாதரா குற மங்கை கோவே


    சித்ர கோலாகலா வீர லக்ஷ்மி சாதா ரதா பல
    திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா


    சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத
    தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே
    .



    பதம் பிரித்து உரை


    சத்தி பாணீ = ஞான சத்தி வேலை ஏந்திய திருக்கரத்தனே நமோநம = உன்னை வணங்கு கிறேன் முத்தி ஞானீ நமோநம = முத்தியைத் தர வல்ல ஞான மூர்த்தியே, உன்னை வணங்கு கிறேன் தத்வ ஆதீ நமோநம = தத்துவங்களுக்கு ஆதி மூர்த்தியாய் விளங்குபவனே, உன்னை வணங்குகிறேன் விந்து நாத = விந்து நாதம் (சத்தி, சிவம்) இவை இரண்டின்.




    சத்து ரூபா நமோநம = சத்தான வடிவம் வாய்ந்த வனே, உன்னை வணங்குகிறேன் ரத்ந தீபா நமோநம = ரத்தினத்தின் பேரொளி விளக்கமே,உன்னை வணங்குகிறேன் தற் ப்ரதாபா நமோநம = தனக்குத் தானே நிகரான இயல்பை உடைய வனே,உன்னை வணங்குகிறேன். என்று பாடும் = என்றெல்லாம் பாடித் துதிக்கும்.


    பத்தி பூணாமலே = பத்தியைப் பூணாமல். உலகத்தின் = உலகத்திலே மானார் = மாதர் களுடைய சவாது அகில் பச்சை பாடீர = சவ்வாது,அகில், பசுஞ் சந்தனம். பூஷித = (இவற்றை) அணிந்துள்ள கொங்கை மேல் வீழ் = தனங்களில் மேலே விழுகின்ற.


    பட்டி மாடான நான் = அடங்காமல் திரியும் மாடாகிய நான் உனை விட்டிராமே = (இனி) உன்னை விட்டிடாமல் உலோகித = சிவந்த பத்ம சீர் பாத = தாமரை போன்ற உனது சிறந்த திருவடியை நீ இனி வந்து தாராய் = இனியேனும் வந்து எனக்கு அருள்வாயாக.


    அத்ர தேவாயுதா = சத்தி வேலாயுதனே சுரர் உக்ர சேனாபதீ = தேவர்களுக்குத் தலைமை பூண்ட உக்கிரம் வாய்ந்த சேனாபதியே. சுசி =பரிசுத்தமான அர்க்ய = உபசாரங்கள் கொண்டசோமாசி யாக குரு = சோமாசி யாகத் தலைவனேகுரு சம்ப்ரதாயா = குரு பரம்பரைக்கு முதல்வனே.


    அர்ச்சனா = அர்ச்சனைகளை ஏற்றுக் கொள்ப வனே வாகனா = மந்திரங்களால் அழைக்க எழுந்தருள்பவனே வயலிக்குள் வாழ் நாயகா = வயலூரில் வாழ்ந்தருளும் தலைவனே. புய =திருப்புயங்களில் அக்ஷ மாலாதரா = ருத்ராட்ச மாலை தரித்தவனே குற மங்கை கோவே = குறப் பெண்ணாகிய வள்ளியின் தலைவனே.


    சித்ர = அழகிய. கோலாகலா ஆடம்பர மூர்த்தியே. வீர லக்ஷமி சாதா = வீர இலக்குமி யான பார்வதியிடம் தோன்றிய வனே இரதா =இனிமை வாய்ந்தவனே பல திக்கு பாலா = பல திக்குகளையும் காத்துப் பரிபாலிப்பவனேசிவாகம தந்த்ர = சிவமாக நூல்களை உபதேசிக்கும் போதா = ஞான மூர்த்தியே.


    சிட்ட நாதா = மேன்மை தங்கும் நாதனே சிரா மலை அப்பர் ஸ்வாமி = சிராமலை அப்பராகிய தாயுமானவருக்கும் சுவாமியே மகா வ்ருத = மிகச் சிறந்த ஒழுக்கம் பூண்டவராய் தெர்ப்பை =தருப்பைப் புல் ஏந்தும் ஆசார = ஆசாரம் கொண்ட வேதியர் தம்பிரானே = அந்தணர்களின் தம்பிரான் மூர்த்தியே.






    [div6]குகஸ்ரீ இரசபதி அவர்களின் விரிவுரை


    நித்திய விழா நாள்தோறும் நடைபெறுவது. நைமித்தியம் எனும் ஆண்டு விழா பிரமோற்சவம் எனப்படும். நித்திய ஆராதனை நம்பர் ஆலயத்துள் நடைபெறும்,.நைமைத்தியத்தில் புனித அஸ்த்ர தேவர் முதலில் புறப்படுவர். மட வீதிகளை வலம் வருவர். இதன் மூலம் எவற்கும் தெய்வ நினைவை எழுப்புவர். அதன் பின் மூர்த்திகள் வீதி வழி கொள்வர். எந்த மூர்த்திகளுக்கும் வேறு வேறு அஸ்த்ர தேவர் உளர். குமரா, நீ தொடுவது வேல்,விடுவது வேல். அஸ்த்ர தேவரே உமக்கு வேலாக அமைந்ததே அருமையிலும் அருமை. அவை அறிந்து அஸ்த்ர வேலாயுதா என்று உலகம் உம்மை அழைக்கிறது. அமுதம் உண்டவர் அமரர். அதனால் இறவா தன்மை எய்தினர். அவர்கள் உமது படை வீரர்கள் ஆகினர். அதன் முன் அவர்கள் தலை எடுத்து அராஜகம் விளையாதபடி மேலான உமது கட்டளைகளை மேற்கொண்டு அவர்கள் ககனமெல்லாம் உலவி கடுமையாக காவல் செய்கின்றனர். அதனால் சுர உக்ர சேனாபதி என உலகம் உம்மைக் கும்பிடுகிறது.


    சோமலதை என்பது ஒரு வகைக் கொடி. அதன் பூண்டு அதிக காரமானது. வானவரை மந்திர நீரால் மகிழ்வித்து பெருக்கமான சோமலதை விதையை பிழிந்திட்டு மேம்பாடு விளைய நிகழ்த்தும் சோமயாகம் மிகவும் உயர்ந்தது. சொலற்கரித இவ்வேள்வி பல செய்தவர் சோமசிமாற நாயனார். இத்தகைய வேள்விகளை கண்ணும் கருத்துமாகக் காப்பவர் நீர். அதனை அறிந்து அந்தண்மறை வேள்விக் காவறரகார என்று முன் ஒரு சமயம் ஓதியுளன். சுசி அர்க்ய சோமாசியா என இன்றும் புகழ்ந்து உம்மைப் போற்றுகிறேன். ( சோமாசியன் - சோமலதை கொண்டு செய்யும் தனிப் பெரும் வேள்விக்குத் தலைவன)


    சனகாதியர் முதல் பலருக்குக் குருவானார் சங்கர். அப்படியே பலரை மாணவர் ஆக்கினார் பரந்தாமர். நான்கு வாயாலும் பேசும் குருவானார் பிரம்ம தேவர். பெருகிய இமையோருக்குக் குரு பிரகஸ்பதி.அசுரர்கட்கு ஒரு வெள்ளி(சுக்கிரர்). இங்ஙனம் பலர் காலந்தோறும் குருமுகம் கொண்டனர். அகங்காரம் அழிந்தது இல்லை. சிறந்த உபதேசம் மட்டும் சித்திக்கிறது. சிறந்த சாதனை செய்வதும் இல்லை. எண்ணம் மட்டும் எல்லாம் அறிந்ததாக எழும்பி உதிக்கின்றது. வாழ்நாள் அனைத்தும் வீழ் நாள் ஆகி அத்தகையோர்கள் விளைத்த பரிபவம் படிக்கப் புகுந்தால் அது ஒரு பாரதம். நாலு வாயாலும் நான்மறை ஓதி அனுபவத்திற்கு அயலாகி அகங்களித்து இருந்த அயனைக் குட்டி சிறையில் வைத்தனை. அனைத்தும் அறிவேன் எனும் எண்ணத்தை அழித்தனை. ஏதும் அறிந்திலம் எனும் எண்ணத்தை எழுப்பினை. அதன் பின் ஓம் பொருள் நுட்பத்தை சிவ போதகமாக கூறாது குறிப்பு உணர்த்திய குரு என உம்மை குரு சம்ப்ரதாயா என்று கூறி உள்ளம் குதுகலிக்கிறதே.


    சிற்ப விதிப்படி சிலைகள் அமையும். அதன் பின் சில சடங்குகள். பிறகு ஸ்தாபனமாகும். வைதீக வேள்விகள் விருவிருப்பாக விளையும். இறுதியில் கும்பாபிஷேகம். எண்ணுவார் அன்பின் எண்ணப்படி எங்குமான உன் சொரூபம் அறிய அம்மூர்த்தியில் ஆவாகனம் ஆகிறது. முதலில் மூர்த்தம். பின் மூர்த்தி. இப்போது மூர்த்தி மான்.இவைகளை எண்ணும் போதே பெருமா, இதயம் நெகிழ்கின்றதே, துரையே.
    அலங்காரம், நைவேதனம் அடுத்து அடுத்து நிகழ்பவை. அதன் பின் அர்ச்சனை. அர்ச்சனா ஆவாகனா என்று உணர்ந்து போற்றி உருகும் என் உள்ளம்.


    ராகஜ கம்பீர வள நாட்டைச் சார்ந்தது வயலூர். அருணகிரி,பாடும் பணியே பணியாய் இரு என எமக்கு பணி கற்பித்த பழந்தலம் அது. பாடும் வரை ஆகாமிய பாவம் இறா. பாட்டின் பொருள் உணர்ந்து பாடப் பாட அப்பொருளாக ஓதுவார் உள்ளம் புகுந்து உறவாடுகின்றீர். நான் வேறு நீ வேறு என என்னாது அபேத பாவனையை அருளுகின்றீர். இப்படி எல்லாம் வழி காட்டி வாழ்விக்கும் உம்மை வயலிக்குள் வாழ் நாயகா என வழுத்துகிறது மனம் ( நாயகன் - நடத்துபவன் ) .


    பிரம்மர்களது தலைகளை மாலையாகத் தரித்தவர் சிவபெருமான். உருத்திர கண் மாலை தரித்த தோளன் நீ. அதனால் தான் புய அக்ஷ மாலா தரா என புனித ஆர்வம் கொண்டு உம்மைப் புகழ்கிறோம்.


    வைதீக ஞான வேலர், வைதீக சேனை அதிபர், வைதீக வேள்வித் தலைவர். வைதீக குரு சம்ரதாயர், வைதீக அர்ச்சனா ஆவாகனர், வைதீக நாயகர், வைதீக ருத்தாக்க மாலையினர் ஆன நீர் குறமங்கை கொங்கர் ஆயினீர் எனில் அதில் ஏதோ ஒரு நுட்பம் இருக்கத்தான் செய்யும்.


    அவதாரம் என்பது ஒரு அருள் நாடகம். வரத முருகனும் வான் மகளும் மான் மகளும் அதற்கு முன்னும் இருந்தனர். அத்தன் இடை இடை சில ஆடல் நிகழ்த்துவான். அவைகளில் ஒன்று மான் மகளை மணந்த வரலாறு.


    அழகோடு பிறந்தேன். அறிவோடு வளர்ந்தேன். அன்பில் சிறந்தேன். அத்தனுக்கு என் மேல் ஆர்வம் அதிகம். இத்தனைக்கும் மாறனவர் நீர் என்று அமிர்தவல்லியை சுந்தரவல்லி வைதாள். அது கேட்டு அமிர்தவல்லி நடுங்கினாள்.
    சுந்தரீ, ஏறுமுகமான நீர் அடுத்தாளைஅவமதித்த அவலத்தால் இறங்குமுகம் ஆயினை, உன் போல்வர் மிருகக்கருவில் இருக்க உரியர்.மானுட சட்டை வாய்க்கும். ஆயினும் மறவர்பதியில் வளர்வை நீ என்று வாய் மலர்ந்தனன் வரத முருகன்.


    அதன்பயனாக சுந்தரி மான் வயிற்று மகளாகி மறவர் குலத்தில் வளர்ந்தாள். இறைவன் இருபுற தேவியர், அமல விமல அனுபவ நிலையினர். அத்தகையர் மன நிலையில் மாறுபாடு விளைவித்து தவறுடையவர் தண்டனை அடைவர் எனும் தரம சூட்சுமத்தை அறிவித்தான் ஆறுமுக தற்பரன். சிவனார்
    திரு மேனியின் நிழல் சுந்தரர். அணிந்திதையும் மாலினியும் தேவி திருமேனி நிழலினர். இயல்பான அவர்கள் இதயத்தில் காமத்தை ஏற்றி இத்தகையோர்க்கு இங்கு இடம் இல்லை,பூலோகம் தான் புகலிடம், செல்மின்கள் என்று அவர்களை நில உலகிற்கு அனுப்பி வைத்தார் நிமலர். அல்குல் பால் ஆசை நீத்தார்க்கே வீடு எனும் அரிய சூட்சுமத்தை அவர்கள் மூலம் ஆன்மாகட்கு அறிவித்தார். பரவை, சங்கிலியார்,சுந்தரர் மூவரும் போக ரூபத்தில் யோகர்கள் ஆயினர். உலகம் அதை உணர்ந்த பின் அவர்களை கைலைக்கு அழைத்தார் கண்நுதலார் .


    அதுபோல் மான் மகளாகி மறவர் பால் வளர்ந்தாலும் பூர்வீக வாசனைப்படி முருகா முருகா முருகா என்று உந்தியில் பரனை வள்ளியார் போற்றி இருந்தார். உலகம் அதனை உணருமாறு உணர்த்திய பின் அவரை வலிய வந்து ஆட்க் கொண்டார் நமது ஆண்டவர். எந்த அருமையை அறிந்தேகுறமங்கை கோவே என்று கூவி குதுகலிக்கின்றது எங்கள் மனம். ( மங்கை - பரிபக்குவ அறிவிப்பு, கோ - பதி )


    பூதராஜர்கள் இரண்டாயிரம், பூத வெள்ளங்கள், லட்சம் வீரர்கள், நவ வீரர்கள் நடுவில் அயில் ஏந்தி மயில் ஏறிய சௌந்தர்ய சிகரமான சன்னிதானம். அதிக ஆடம்பரமான அனுபவம். ஆம் அது கருதி தான் சித்ர கோலாகலா என்று இறைஞ்சி உம்மை என்ணுகிறோம்.
    அலைமகளானார் திருமகளார், கலைமகளானார் பாரதியார்,மலை மகளான பரமேஸ்வரி வீரமகளாகி விளங்குகிறாள்.வீரலக்ஷfமி ஜாதா என உம்மை அழைத்து வணங்கும் அறிவுடையம் யாம்.


    ஐம் புலன்களுக்கு விருந்தான இன்ப கோல எந்தையே உம்மை ரதா என விளிக்கும் போதே உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றதே .


    பத்து திக்குகளிலும் வாழ்கின்றனர் என்ல் அவர்கட்கு இடையுறு ஒன்றும் நேராத படி பரிபாலிப்பது நீர் தானே. பல திக்கு பாலா என்ற அடியார் உம்மை அழைப்பதில் புனித அனுபவம் பல பொருந்தி உளதே.


    காமியம் முதல் வாதுலம் ஈறாக இருக்கும் ஆகமங்கள் 28. அவைகளை ஓதுவது வேறு உணர்வது வேறு. அகத்தாலும் தூய்மையர், புறத்தாலும் வாய்மையர் அவர்களது புனித உள்ளத்தில் புகுந்தீர். உணருமாறு அவைகளை உணர்த்தினீர். அந்த அருமையை அறிவாரும் இல்லை அறிய முயல்வாரும் இல்லை. அதை யாரிடம் சொல்லி ஆறுவது.சிவாகம தந்த்ர போதா சொல்ல சொல்ல உள் நாவில் நீர் ஊறுகின்றதே.


    சிட்டனே சிவ லோகனே என்று எட்டாம் திருமறை சிவத்தைச் சிந்திக்கச் செய்கின்றது. சிட்டர் என்பவர் மேதகு ஒழுக்க மேன்மையர்கள். ( துஷ்டர் ஷ சிட்டர் ). அத்தகைய பெருமகர்க்கு எல்லாம் நீர் தானே அதிபர். அதனால் தான்சிட்ட நாதா என்று உம்மை சிறந்த யோகியர் சிந்திக்கின்றனர்.


    திரிசிரன் வழிபட்ட இடம் திரிசிராமலை. இப்பதியின் தந்தையான தற்பரன் தாயும் ஆயினர். அந்த அப்பருக்கு குருசுவாமியான உம்மை சிராமலை அப்பர் சுவாமி என வினயம் மிகுந்து விளிக்கின்றோம்.


    வைதீக தர்மம் வழுவாதார் கட்டிய தர்ப்பையை கரத்தில் கொண்டவர். ஓயாது வேதங்களை ஓதினோர். வேதம் வேறு தாம் வேறு என ஆகாமல் அவர்கள் வேதியர் என பெயர் பெற்று விளங்குகின்றனர். உத்தம அவர்களது உள்ளம் பிரியாத உம்மை மகாவிரத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே என்று அன்பால் என்றும் அடியேன் உம்மை அழைப்பன்.


    எண்ணத்தக்க ஞான வேல் ஏந்திய உம்மை நமஸ்காரம் ஓம் நமஸ்காரம் எனும் பொருளால் சத்தி பாணி நமோநம என்று ஓத வேண்டும்.
    பந்தத்திலிருந்து விடுவிப்பவனே, ஞானத்தை விளைவிப்பவனே வணக்கம் ஓம் வணக்கம், முத்தி ஞானி நமோநம.
    96 தத்துவங்களும் உம்மிலிருந்து உதிக்கின்றன, உமது அருள் நிழலில் ஒதுங்கும், உட்பொருளாக அவைகளில் உள்ளவனே போற்றி ஓம் போற்றி. தத்வ ஆதீ நமோநம.
    95 - வது தத்துவம் விந்து. 96 - வது தத்துவம் நாதம் இந்த இரண்டுமான திரு மேனி தாங்குபவனே உமக்கே நமஸ்காரம் ஓம் நமஸ்காரம். விந்து நாத சத்து ரூபா நமோநம.
    எந்தனுள் ஏக செஞ்சுடராகி என் கண்ணில் ஆடும் தழல் மேனி எந்தை தந்த மாணிக்க விளக்கான உமக்கே அடைக்கலம் ஓம் அடைக்கலம் ரத்ன தீபா நமோ நம.
    வளரும் சிறப்பு உழைப்பால் வருவது. அது பலர் கை கொடுக்க பரிணமிப்பது. எனினும் அப்புகழ் இருந்து சில நாளில் மறைந்து விடும். உமது புகழோ சுயமாக உருவாவது. என்றும் நிலைப்பது. தற்ப்ரதாபா நமோநம என்று அடைக்கல பாவனை வெளிப்பட உம்மை அர்ச்சிப்பது தான் அறம்.


    அர்ச்சனை பாட்டே ஆகும் என்கிறது பெரிய புராணம். இப்படி பாடி அர்ச்சிக்கும் பத்தர்களே உமது அருளால் உயர்வர் ஆகின்றார். அடியேனோ பலவகை வாசனை திரவியங்களால் கமகமக்கும் நாரியர் புயங்களில் நாட்டம் செய்கிறேன். பட்டி மாடு ( நொண்டி மாடு ) உத்தம பசுக்களோடு ஒருமித்து போகாது. பசுமை கண்ட இடமெல்லாம் பாய்ந்து ஓடும். அடியும் படும். சிறையிலும் அடைபடும். அதன் முட்டாள் தனத்தை அறிந்து கழுத்தில் ஒரு கட்டையை உரியன் கட்டுவான். ஓடும் போது கழுத்துக் கட்டை முழுங்காலை இடிக்கும். உபாதையால் உடல் சிலுக்கும். இப்படியே பட்டு பட்டு புத்தி வந்து வழியே ஏகும். வழியே மீளும்.
    ஆ, இது தானா வாழ்க்கை. இல்லறம் என்பது கழுத்துக் கட்டைதானா ? அந்த வாழ்க்கையிலும் சபலம் எனில் ஆயிரம் துன்பமும் அவசியம் தான். என்றும் உம்மைப் பிரியாமல் இருந்தால் இந்த சங்கடம் இல்லையே.[div6]


    வா ஐயா இதமான இன்பம் தரும் உன் சீர்பாத சேவையைதா ஐயா


    ஒப்புக:


    சோமாசியா குரு...
    முருக வேளுக்கு யாக ரட்சக மூர்த்தி என்ற பெயர் உண்டு.
    அந்தண்மறை வேள்வி காவற்கார......திருப்புகழ், முந்துதமிழ்மாலை
    .
Working...
X