Announcement

Collapse
No announcement yet.

Kozhundeesar temple, Thirukottur

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kozhundeesar temple, Thirukottur

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    *129*
    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*


    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*


    *கொழுந்தீசர் கோவில், திருக்கோட்டூர்*


    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதினொன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *இறைவன்:* கொழுந்தீசர், அரம்பேஸ்வரர்.


    *இறைவி:* மதுரபாஷிணி, தேனார்மொழியாள், தேனாம்பாள்.


    *தல விருட்சம்:* வன்னிமரம்.


    *தல தீர்த்தம்:*முள்ளியாறு, சிவகங்கை, பிரம்ம தீர்த்தம், சிவ தீர்த்தம், மண்டை தீர்த்தம், அமுத தீர்த்தம், இந்திர தீர்த்தம், விசுவகன்மம், அரம்பா தீர்த்தம்,


    *திருமேனி:* சுயம்புவானவர்.


    *ஆகமம்:* காமிக ஆகமம்.


    *புராணப் பெயர்கள்:*
    இந்திரபுரம், மேலக் கோட்டூர் கோயில், திருக்கோட்டூர்.


    *ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *பதிகம்;* திருஞானசம்பந்தர்.


    *இருப்பிடம்:*
    மன்னார்குடியில் இருந்து தென்கிழக்கே திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் பதினாறு கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.


    மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.


    இத்தலத்திற்குப் பக்கத்தில் திருக்களர், திருவெண்டுறை ஆகிய பாடல் பெற்ற திருமுறைத் தலங்கள் உள்ளன.


    *அஞ்சல் முகவரி:* அருள்மிகு கொழுந்தீசர் திருக்கோயில்,
    கோட்டூர்.
    கோட்டூர் அஞ்சல்.
    (வழி) மன்னார்குடி
    மன்னார்குடி வட்டம்.
    திருவாரூர் மாவட்டம்.
    PIN - 614 708


    *ஆலயத் திறப்பு காலம்:*
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *கோவில் அமைப்பு:*
    கோட்டூர் இரண்டு பகுதிகளாக கூறப்படுகின்றது.

    ஒன்று, மேலக்கோட்டூர் என்றும், மற்றொன்று கீழக்கோட்டூர் என்றும் கூறப்படுகின்றது.


    மேலக்கோட்டூரிலுள்ள கோவிலே பாடல் பெற்ற சிவஸ்தலம்.


    கோவிலுக்கு முதலாவதாக காட்சிதருகிறது ஒரு நுழைவாயில்.


    அதையடுத்து மேற்கு நோக்கிப் பார்த்த வண்ணம் மூன்று நிலை ராஜகோபுரமும் காட்சி தர......


    *சிவ சிவ"* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.


    இரண்டு பிரகாரத்துடன் விளங்கும் இக்கோவிலின் முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்ததும் கவசமிட்ட கொடி மரமத்தைக் காணப்பெற்றோம்.


    முன் நின்று வணங்கிக் கொண்டோம்.


    அடுத்து பலிபீடத்தின் அருகாக நின்று, நம் ஆணவமலமொழிய பிரார்த்தித்துக் கொண்டோம்.


    அதற்கடுத்து நந்தியை பயபவ்யத்துடன் வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.


    உள்பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு வந்தோம். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.


    மனமுருக பிரார்த்தனை செய்வித்து அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.


    கருவறை கோஷ்டத்தில் இதன் தெய்வங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களைக் கண்டு வணங்கி தொடர்ந்தோம்.


    சண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று, அவருக்குண்டான வர்க்கத்தைச் செலுத்தி வணங்கி நகர்ந்தோம்.


    பின்பு, அம்பிகை தேனாம்பாள் சந்நிதிக்குச் செல்ல, அங்கு அம்பாள் கிழக்கு நோக்கி அருட்காட்சிகளை வழங்கிக் கொண்டிருந்தாள்.


    அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அழகுறக் காட்சி தந்தாள்.


    மாசி மகத்தன்று இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்தால், லிங்கத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவம் தெரிவதை அனைவரும் பார்த்திருக்கின்றேன், நாங்களும் அக்காட்சியினைப் பார்த்லிருக்கிறோம் என்று, எங்களுக்கு முன் வரிசையில் சென்றோர் கூறக் கேட்டோம்.


    தலத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது இங்குள்ள ரம்பையின் உருவம். கண்டு பிரமித்தோம். இவள் முன்னைவிடவும் அதிக ஈடுபாட்டுடன் சிவனை அனுதினமும் பூஜித்து வந்தாளாம்.


    தவம் செய்த அமைப்புடன் காணும் ரம்பையின் உருவச்சிலை காணவேண்டிய ஒன்று.


    மற்றும் *உமாமகேஸ்வரர்,* அற்புதமான *அர்த்தநாரீசுவரர்* ஆகியோர்களின் அமைப்பை அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டியவை.


    இக்கோயிலினுள் உள்ள அமுதக் கிணற்றோடு முள்ளியாறு, சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், விஸ்வகர்ம தீர்த்தம், ரம்பை தீர்த்தம் மற்றும் மண்டை தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் இத்தல தீர்த்தங்களாக உள்ளன.


    *சித்தர்கள் நோக்கிய சீர்வானவை:*


    *''நிலவு செல்வத்தராகி நீள் நிலத்திடை*
    *நீடு புகழ்வாழ்வார் கோட்டூர் நற்*
    *கொழுந்தே யென யெழுவார்களே"*
    - என்றார் கருவூரார்.


    *'வானளவு செல்வத்தை ஈயும் தன்மை யுடையோன்'* எனவும் சித்தர்கள் இத்திருகொழுந்தீசுவரனை தொழுது புகழ்கின்றனர்.


    பிரம்மஹத்தி தோசத்தை முற்றிலுமாய் கலைந்திடும் மூலன் என்றார் அகத்தியர். *"மூலன் ப்ரம்ஹ பீடை காய்ப்பானே"* என போற்றுகின்றார்.


    தேவலோகத்தில் நாட்டிய கலையில் வல்லவரான மங்கை ரம்பை, இந்திரலோகத்தில் செய்திட்ட தவறுக்காக பூமிக்கு செல்லுமாறு சபிக்கப்பட்டார்.


    அத்திரி மகரிஷியின் ஆலோசனையின் பெயரில், இத்திருத்தலம் வந்து இருந்து, கொழுந்தீசுவரனை நோக்கி இடது காலை தரையில் ஊன்றி வலது கால் மடித்து, உள்ளங்காலில் இடது கையை வைத்து, வலது கையை தலைமேல் வைத்து, அக்கினியில் நின்று தவம் செய்து பாவதோஷ நிவாரணம் பெற்றாள்.


    *''கொழுந்தீசனை அக்னி புகுந்தேயெழிலாடலரசி யிடப் பாதந்தரை யிருத்தி யிடக் கரமதனை பாத நடு காட்டி சிரத்தே வலக்கரமிருத்தி தபசு செய"*- என்றார் மூலர்.


    குடும்பத்தில் எத்துணை உழைத்தாலும் மேன்மை இல்லை. குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் கோளாறு இருக்கிறது. தெரியாமல் காரை ஏற்றி நாயைக் கொன்றேன்.


    தெரியாது உயிரினங்களை இம்சை செய்தேன் என வருந்துவோரும், பைரவனின் அம்சமே நாய் இதனை தெரியாது கொன்றாலோ, இம்சை செய்தாலோ, பிரம்மஹத்தி தோஷத்திற்கு சமமான தோஷம் பற்றி, பிறவிதோறும் தொந்தரவு தரும் என்கிறார் திருப்பதஞ்சலி யோகியார் எனுஞ் சித்தர்.


    *''பைரவ வம்சமுடையானை வூளை யிடுவானை நாசஞ் செய்தோர் பிறவிக்கும் வறுத்துமே பீடை யறுபட பில்லி பெருஞ் சூனியமோடு சாபமாயிரத்தெட்டுந் தொலைய வக்கிர பரமேசனை மதிமறைய யந்தியிலாராதிப்ப பலங்கோடி"* - என்றார்.


    கொழுந்தீசுவரருக்கு, அக்ரபரமேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இசையை கற்கவும், இசையில் புகழ் பெறவும், பெருந்திரவியம் சம்பாதிக்கவும், பாடல் பாடி பிறரை மயக்க, பாடல்கள் எழுதி கீர்த்தி பெற அம்பிகை மதுரபாசினியாம் தேனாம்பிகையை முழுமதியாம் பவுர்ணமியில் மாலை வேளை தொழுதுவர சித்திக்கும் என்றார் காகபுசண்ட முனிச்சித்தர்.


    அவர் தம் பாடலில், *''நாரத கான மொப்ப கீர்த்தியுயிசை ஞான மெய்திடவுமே பாவியற்று வண்ணந் திண்ணமேந்த தேனாளை மதுரபாசினியை முழுமதி பற்று... வய்யமே வாழ்த்த கீர்த்தியோடே வாழ..."* என்றார் சித்தர்.


    இத்திருத்தலத்தில் ஒன்பது வகையான தீர்த்தங்கள் உள்ளன.


    இதனை மூலர், *''முள்ளி கங்கை பிரம்ம சிவமண்டை அமுதமிந்திர விசுவகன்ம வரம்பாவில் யட்டமி முழுகி கொழுந்தீசரை கொண்டாடு வார் பொருள் பொன்னில் திளைப்பார் பிசகிலையே"* என்றார்.


    முள்ளியாற்றுத் தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பிரம்மன் தீர்த்தம், சிவ தீர்த்தம், மண்டை தீர்த்தம், அமுத தீர்த்தம், இந்திர தீர்த்தம், விசுவகன்ம தீர்த்தம், அரம்பா தீர்த்தம் ஆகிய ஒன்பது தீர்த்தங்களில் அஷ்டமி திதியில் நீராடி கொழுந்தீசுவரரை கொண்டாடி ஆராதிக்க வற்றாச் செல்வம் வீட்டில் விளங்கும் என்பது முக்காலும் உண்மை.


    இத்தல விருட்சம் வன்னி. சனிக்கிழமைகளில் இத்தல விருட்சத்தை பூஜித்து வந்தால் கண்ணில் ஏற்படும் கோளாறு, பால்யத்தில் தலையில் ஏற்படும் கேசக் கோளாறு (சொட்டைத் தலை) தன்னால் முடி உதிர்தல் போன்றன அகலும் என்கின்றார் பாம்பாட்டி சித்தர்.


    *''ஆடு பாம்பார் வன்னியை வலமே*
    *சுற்றி தொழுவார்* *விழிப்பீடைவேறொடு*
    *சாயுமென வாடு கேசப்பீடை சிரமகலுமென வாடு"*


    *இந்திர புரத்தானை இனியானை
    இனியாயினுந் தொழுவாருக் கேது
    அல்லலே நில்லா வல்லலே" என்றார் பொய்யாமொழிச்சித்தர்.


    இந்திரபுரம் என்ற பெயரும் இத்திருத்தலத்திற்கு உண்டு.


    எப்படிப்பட்ட சோதனை ஆயினும் இக்கொழுந்தீசரை தொழுதக்கால், விலகி ஆனந்தம் சேரும் என்பது சித்தம் தம் வாக்கு.


    ''கும்ப மகத்தே யிறைக்கு யமுது
    பெய்தாராதிக்க யம்மையப்பரை காணப்
    பெற சித்தர்தந் தரிசனமெட்டுமே
    பொய்யாயின் சுட்டிடு யிவ்வேட்டை"
    -என்றார் சுந்தரநந்தனார்.


    மாசி மாதம் மகம் நட்சத்திரத்தன்று இந்த கொழுந்தீசருக்கு, பால் அபிஷேகம் செய்கையில், லிங்கத்தில் அர்த்த நாரீசுவரனை காணலாம்.


    இப்படிப்பட்ட காட்சியைக் கண்டு ஆராதிப்பாருக்கு, சித்தர் தம் தரிசனம் கிட்டும் என்கின்றார் சித்தர்.


    *''ததீசி தண்டு வடமே வலுவாம்*
    *தேவராயுதமுண்டு உரமேறிற்று"* -என்றார் அகத்தியர்.


    இத்தலத்து அகோர வீரபத்திரரை பூஜித்தால், குலதெய்வ பூஜை வழிபாடு செய்யாத குற்றம் அகலும் என்கின்றார் சட்டை முனிச்சித்தர்.


    *''குலவிறை விடுத்த தோசமகல குலவிறை கொண்டாடாது விட்ட வபலமகல கோட்டூருறை யகோர பத்திரனை தொழ நன்றாமே* என்று.


    *தல அருமை:*
    விருத்திராசுரன் என்ற அரக்கன் தேவர்களை மிகக்கடுமையாக துன்புறுத்தி வந்தான்.


    இந்திரன், அவனை வெல்வதற்கான வழியைக் கூறும்படி பிரம்மாவிடம் வேண்டினான்.


    ததீசி என்ற முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை வஜ்ராயுதமாக்கி அதன் மூலம் மட்டுமே அரக்கனை கொல்லமுடியும் என்று பிரம்மா இந்திரனிடம் கூறினார்.


    இந்திரனும் அதன்படி முனிவரைக் கொன்று அவரது முதுகெலும்பை வஜ்ராயுதமாக்கி விருத்திராசுரனனைக் கொன்றான்.


    முனிவரை கொன்று முதுகெலும்பை பெற்றதால், இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.


    இந்த தோஷத்தை போக்கிக் கொள்ள தேவகுருவான பிரகஸ்பதியை நாடினான்.


    அவரின் கூறிய ஆலோசனைப்படி இந்திரன் பூவுலகம் வந்து வன்னிமரத்தின் அடியில் இத்தலத்தில் இருக்கும் சிவலிங்கத்தை, ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதனால் அபிஷேகம் செய்து வழிபட்டான்.


    சிவபெருமான் அருளால் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கப் பெற்றான். இந்திரன் பூஜித்ததால் இத்தலம் இந்திரபுரம் என்றும் அழைக்கப்பட்டது.


    இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையும் இத்தல இறைவனை வழிபட்டது.


    தனது தந்தத்தால் பூமியில் கோடு கிழித்ததால் இத்தலம் கோட்டூர் எனப் பெயர் பெற்றது.


    இந்திரன் பூஜித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால், இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்களின் பிரம்மஹத்தி முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.


    *சிறப்புகள்:*
    இந்திரன் சபையில் நடனமாடிய ரம்பா களைப்பால் உறங்க, அவளது ஆடை விலகியிருப்பதைக் கண்ட நாரதர், ஆடை விலகுவது தெரியாமல் ஒரு பெண் தூங்குவதா?" எனக் கோபங்கொண்டு சாபமிட்டார்.


    ரம்பா தன்நிலை உணர்ந்து விமோசனம் வேண்டிட, நீ பூவுலகில் சிவனை ஆராதித்து வந்தால் சாபம் நீங்கும் என்றதால் இங்கு வந்து வழிபட்டார்.


    அப்போது ரம்பா இல்லாதை உணர்ந்த இந்திரன் அவளை அழைத்துவர ஒரு கந்தர்வனை அனுப்பினான்.


    ரம்பையோ, சிவதரிசனம் கிடைக்காமல் அங்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள்.


    அதைக் கேட்ட இந்திரன் ஐராவதத்தை அனுப்பினான்.


    வெள்ளையானை ரம்பாவை தூக்க,......


    ரம்பா சிவலிங்கத்தை கட்டிக்கொள்ள..........


    ஐராவதம் லிங்கத்துடன் ரம்பாவை தூக்க முயற்சிக்க.........


    ஈசன் தோன்றி ஐராவதத்தை உதைக்க....ஐராவதம் இறந்து போனது.


    பின், ரம்பாவிற்கு வரம் தந்து மறைந்தார் இறைவன்.


    இதை அறிந்த இந்திரன் சிவநிந்தை என இங்குவந்து ரம்பாவுடன் சிவனை வழிபட்டு ஐராவதத்தை உயிர்பித்தார்.


    ரம்பையையும் தேவலோகம் அழைத்துச் சென்றான். ஐராவதத்தின் கொம்புகளால் தந்தத்தால் கோட்டால் அகழ்வு செய்ததால் கோட்டூர் எனப் பெயரானது.


    *பிரகஸ்பதியின் சாபம்:*
    தேவ உலகத்தில் ரம்பையும், ஊர்வசியும் நடமாடிக்கொண்டிருந்தார்கள்.


    அப்பொழுது தேவ குருவான பிரகஸ்பதி அங்கு வருகை தந்தார்.


    ஆனால் அவரை கவனியாது இருவரின் ஆட்டமும் தொடர்ந்ததால், பிரகஸ்பதி ரம்பையையும், ஊர்வசியையும் பூமியில் பிறக்கும் படி சாபம் தந்தார்.


    *இராவணனுக்கு சாபம்:*
    ரம்பை குபேரனின் மகனானநளகூபனின் மனைவி. குபேரனின் மாற்றாந்தாய்க்கு பிறந்தவன் இராவணன்.


    எனவே ரம்பை இராவணனது மருமகளாகிறாள்.


    ஒரு முறை இராவணன் ரம்பையின் அழகில் மயங்கி அவளை நெருங்கினான்.


    தன்னுடைய உறவுமுறையை அவனிடம் விளக்கி விலகுகிறாள் ரம்பை.


    அதையும் கேளாமல் இராவணன் வன்புணர்வு செய்தமையை தன்னுடைய கணவனிடம் நடந்தவற்றைக் கூறுகிறாள்.


    அதையறிந்த நளகூபன் பெண்ணின் அனுமதியின்றி இராவணன் சீண்டினால் அவன் தலை வெடித்துவிடும் என்று சாபமிட்டான்.


    *தேவாரம்:*
    ☘நீல மார்தரு கண்டனே நெற்றியோர்
    கண்ணனே யொற்றைவிடைச்
    சூல மார் தரு கையனே துன்றுபைம்
    பொழில்கள் சூழ்ந்தழகாய
    கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    சால நீடல மதனிடைப் புகழ்மிகத்
    தாங்குவர் பாங்காவே.


    🏾நீலகண்டனே, நெற்றிக்கண்ணனே, ஒற்றைவிடை மீது ஏறி வருபவனே, முத்தலைச்சூலம் ஏந்திய கையனே, செறிந்த பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வதுமாகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர் மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத் தங்குவர்.


    ☘பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு
    மெல்விர லரவல்குல்
    மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென
    மிழற்றிய மொழியார்மென்
    கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு
    அருள்பெறல் எளிதாமே.


    🏾தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும், அரவு போன்ற அல்குலையும் உடையவரும். மயில் குயில் கிளி போன்ற மொழியினரும், மென்மையான தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும் கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர்.


    ☘நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும்
    அடியவர் தமக்கெல்லாம்
    செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர்
    செல்வமல் கியநல்ல
    கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற்
    கொழுந்தே யென்றெழுவார்கள்
    அம்பொ னார்தரு முலகினில் அமரரோ
    டமர்ந்தினி திருப்பாரே.


    🏾நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும் அடியவர்கட்கு நம்பனாரும், செம்பொன்போன்ற மேனியையும் அழகிய நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித் தொழுபவரும், செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார் பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர்.


    ☘பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா
    மாங்கனி பயில்வாய
    கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள்
    அன்னஞ்சேர்ந் தழகாய
    குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற்
    கொழுந்தே யென்றெழுவார்கள்
    நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை
    நீடிய புகழாரே.


    🏾அடியாவர் தமக்கு எல்லாம் நம்பனார் பொன்னுலகில் தேவரோடும் குனிதிருப்பர் பாலச்சுளை, மாங்கனி முதலிய தீங்கனிகளையும் தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும் விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில்களையும், கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வர்.


    ☘உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும்
    அன்பராம் அடியார்கள்
    பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு
    பத்திசெய் தெத்திசையும்
    குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய்
    அவனருள் பெறலாமே.


    🏾உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும், என்றும் தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து, குருகுகள் வாழும் கோட்டூர் நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள் நீங்கும். அவனது திருவருளைப் பெறலாம்.


    ☘துன்று வார்சடைத் தூமதி மத்தமுந்
    துன்னெருக் கார்வன்னி
    பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம்
    புலியுரி யுடையாடை
    கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற்
    கொழுந்தே யென்றெழுவாரை
    என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை
    ஏதம்வந் தடையாவே.


    🏾நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி, ஊமத்தை, வெள்எருக்கமலர், வன்னியிலை, ஆகியவற்றைச் சூடியும், தலைமாலைகளை மேனியில் அணிந்தும், கையில் கபாலத்தை உண்கலனாக ஏந்தியும், புலித்தோலை இடையில் உடுத்தும், கொன்றை மரங்கள் பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின் திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடியவரை என்றும் வழிபடுவார்க்கு இடம், கேடும் ஏதமும் இல்லை.


    ☘மாட மாளிகை கோபுரங் கூடங்கண்
    மணியரங் கணிசாலை
    பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம்
    பரிசொடு பயில்வாய
    கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    கேட தொன்றில ராகிநல் லுலகினிற்
    கெழுவுவர் புகழாலே.


    🏾மாடமாளிகை, கூடகோபுரம், மணிஅரங்கம், அழகியசாலை, புகழ்தற்குரியமதில், பொன் மண்டபம் ஆகியவற்றோடு, அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே, என்று எழுவார் கேடில்லாதவராய் உலகலொம் விளங்கிய புகழ் உடையவராவர்.


    ☘ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை
    யெடுத்தலும் உமையஞ்சிச்
    சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு
    நாளவற் கருள்செய்த
    குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற்
    கொழுந்தினைத் தொழுவார்கள்
    தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந்
    தவமுடை யவர்தாமே.


    🏾ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட இராவணன் கயிலைமலையை எடுத்தபோது உமையம்மை அஞ்ச, இறைவன் தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில் அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட, அவனுக்கு வாளும் நாளும் அருள் செய்தருளிய, பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத் தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர்.


    ☘பாடி யாடும்மெய்ப் பத்தர்கட் கருள்செய்யும்
    முத்தினைப் பவளத்தைத்
    தேடி மாலயன் காணவொண் ணாதவத்
    திருவினைத் தெரிவைமார்
    கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற்
    கொழுந்தேயென் றெழுவார்கள்
    நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில்
    நிகழ்தரு புகழாரே.


    🏾பாடி ஆடுகின்ற உண்மை அடியார்க்கு அருளும் முத்தும் பவளமும் போன்றவனை, திருமாலும், நான்முகனும் தேடியறிய முடியாத திருவை, மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூரில் விளங்கும் கொழுந்தை வழிபட எழுபவர் நீடிய செல்வமும், உலகெலாம் நிகழும் புகழும் அடைவர்.


    ☘கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற்
    கொழுந்தினைச் செழுந்திரளைப்
    பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா
    மெய்யன்நல் லருளென்றும்
    காண லொன்றிலாக் காரமண் தேரர்குண்
    டாக்கர்சொற் கருதாதே
    பேணல் செய்தர னைத்தொழும் அடியவர்
    பெருமையைப் பெறுவாரே.


    🏾வளைந்த வெண்பிறையை அணிந்த சடைமுடியராகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்திதுசராகிய, செழுமையின் திரட்சியை, மலர்களால் அலங்கரித்து அவர்தம் திருவடிகளைப் போற்றுமின். பொய்யில்லாத மெய்யராகிய அவர்தம் நல்லவருளைக் காணும் நல்லூழில்லாத சமண புத்தர்களின் உரைகளைக்கேளாது அவ்விறைவரை விரும்பித்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவர்.


    ☘பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப்
    பாவையோ டுருவாரும்
    கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற்
    கொழுந்தினைச் செழும்பவளம்
    வந்து லாவிய காழியுள் ஞானசம்
    பந்தன்வாய்ந் துரைசெய்த
    சந்து லர்ந்தமிழ் மாலைகள் வல்லவர்
    தாங்குவர் புகழாலே.


    🏾பந்தாடும் மெல் விரலையும், பவளவாயையும் தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை, கடல் அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்மாலையை ஓதவல்லவர் புகழ்பெறுவர்.


    திருச்சிற்றம்பலம்.


    *திருவிழாக்கள்:*
    வைகாசி விசாகம் பிரமோற்சவம், ஆடிப்பூரம் நவராத்திரி, திருக்கார்த்திகை.


    *தொடர்புக்கு:*
    91 4367 279 781
    97861 51763


    தேவாரம் பாடல் பெற்ற சிவ தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் நாளைய தலப்பதிவு *வெண்டுறைநாதர் திருக்கோயில், திருவெண்டுறை.*


    *அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*
Working...
X