Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    184.கறுத்ததலை


    தனத்ததன தனன தனந்த
    தனத்ததன தனன தனந்த
    தனத்ததன தனன தனந்த தனதான




    கறுத்ததலை வெளிறு மிகுந்து
    மதர்த்தஇணை விழிகள் குழிந்து
    கதுப்பிலுறு தசைகள் வறண்டு செவிதோலாய்க்
    கழுத்தடியு மடைய வளைந்து
    கனத்தநெடு முதுகு குனிந்து
    கதுப்புறுப லடைய விழுந்து தடுநீர்சோ
    ருறக்கம்வரு மளவி லெலும்பு
    குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
    உரத்தகன குரலு நெரிந்து தடிகாலாய்
    உரைத்தநடை தளரு முடம்பு
    பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
    உனக்கடிமை படும வர்தொண்டு புரிவேனோ
    சிறுத்தசெலு வதனு ளிருந்து
    பெருத்ததிரை யுததி கரந்து
    செறித்தமறை கொணர நிவந்த ஜெயமாலே
    செறித்தவளை கடலில் வரம்பு
    புதுக்கியிளை யவனொ டறிந்து
    செயிர்த்தஅநு மனையு முகந்து படையோடி
    மறப்புரிசை வளையு மிலங்கை
    யரக்கனொரு பதுமு டிசிந்த
    வளைத்தசிலை விஜய முகுந்தன் மருகோனே
    மலர்க்கமல வடிவு ளசெங்கை
    அயிற்குமர குகைவ ழிவந்த
    மலைச்சிகர வடம லைநின்ற பெருமாளே



    -184 திருவேங்கடம்



    பதம் பிரித்து பத உரை


    கறுத்த தலை வெளிறு மிகுந்து
    மதர்த்த இணை விழிகள் குழிந்து
    கதுப்பில் உறு தசைகள் வறண்டு செவி தோலாய்


    கறுத்த தலை வெளிறு மிகுந்து = கறுப்பு மயிருடன் இருந்த தலை வெள்ளை நிறத்தை மிகுதியாக அடைந்து மதர்த்த = செழிப்புற்று இருந்த இணை விழிகள் குழிந்து = இரண்டு கண்களும் குழி விழுந்து கதுப்பில் உறு =கன்னத்தில் இருந்த
    தசைகள் = சதைகள் வறண்டு = வற்றிப் போய்
    செவி = காதுகள் தோலாய் = தோலாய் மெலிய.


    கழுத்து அடியும் அடைய வளைந்து
    கனத்த நெடு முதுகு குனிந்து
    கதுப்பு உறு பல் அடைய விழுந்து உதடு நீர் சோர


    கழுத்து அடியும் = கழுத்தின் அடிப்பாகம் அடைய
    = முழுமையும். வளைந்து = வளைந்து கனத்த =கனமாக இருந்த நெடு முகுகு குனிந்து = நீண்ட முகுது குனிந்து குறுக. கதுப்பு உறு = தாடையிலிருந்த பல் அடைய = எல்லா பற்களும் விழுந்து ஒழிய உதடு நீர் சோர = உதடுகள் சொள்ளு ஒழுக


    உறக்கம் வரும் அளவில் எலும்பு
    குலுக்கி விடு இருமல் தொடங்கி
    உரத்த கன குரலும் நெரிந்து தடி காலாய்


    உறக்கம் வரும் அளவில் = தூக்கம் வரும் சமயத்தில்
    எலும்பு குலுக்கி விடும் இருமல் = எலும்புகளைஅப்படியே குலுக்கித் தள்ளும் இருமல் தொடங்கி = தொடங்கி உரத்த கன குரலும் நெரிந்து =அழுத்தமான பலத்த குரல் நெரிபட்டு அடக்கம்கொள்ள தடி கால் ஆய் = தடியே கால் போல் உதவ.


    உரைத்த நடை தளரும் உடம்பு
    பழுத்திடு முன் மிகவும் விரும்பி
    உனக்கு அடிமை படும் அவர் தொண்டு புரிவேனோ


    உரைத்த நடை = பலத்த நடை தளரும் உடம்பு =தளர்ந்து போகும் இந்த உடம்பு. பழுத்திடு முன் =பழுத்து மூப்பு முதிர்வதின் முன்பு. மிகவும் விரும்பி = மிக்க நேசம் கொண்டு உனக்கு அடிமை படும் அவர் = உன்னிடம் அடிமை பூண்டுள்ள தொண்டர்களுக்கு தொண்டு புரிவேனோ =தொண்டு புரிய மாட்டேனோ?


    சிறுத்த செலு அதனுள் இருந்து
    பெருத்த திரை உததி கரந்து
    செறித்த மறை கொணர நிவந்த ஜெயமால் ஏ


    சிறுத்த செலு அதனுள் இருந்து = சிறுத்த மீனுருவம் கொண்டு சிறையிலிருந்து. பெருத்த திரை = பெரிய அலைகள் வீசும் உததி = கடலில்கரந்து = பதுங்கி செறித்த மறை = மறைத்து வைத்த வேதங்களை. கொணர = மீட்டு வர நிவந்த = தோன்றி ஜெய மால் = வெற்றி பெற்ற திருமால்.


    செறித்து அ வளைகடலில் வரம்பு
    புதுக்கி இளையவனொடு அறிந்து
    செயிர்த்த அநுமனையும் உகந்து படையோடி


    ஏ செறித்து = பாணத்தைச் செலுத்தி அ வளை கடலில் = அந்த வளைந்த கடலின் வரம்பு =அணையை புதுக்கி = புதிதாக அமைத்து இளைய வனொடு அறிந்து = தம்பியாகிய இலக்குவனோடு
    இராவணனின் நிலையை அறிந்து செயிர்த்த =கோபித்த அனுமனையும் உகந்து = (இலங்கையில் தீ மூட்டி வந்த) அனுமனுடன் மகிழ்ந்து படை ஓடி = சேனைகளைச் செலுத்தி.


    மற புரிசை வளையும் இலங்கை
    அரக்கன் ஒரு பது முடி சிந்த
    வளைத்த சிலை விஜய முகுந்தன் மருகோனே


    மற புரிசை =வெற்றி மதில்கள் வளையும் இலங்கை அரக்கன் = வளைந்துள்ள இலங்கை அரக்கனாகிய இராவணனுடைய ஒரு பது முடி சிந்த = பத்துத் தலைகளும் அறுபட்டு விழவளைத்த சிலை = வளைத்த வில் ஏந்திய விஜய முகுந்தன் மருகோனே = வெற்றி முகுந்தனாகிய திருமாலின் மருகனே.


    மலர் கமல வடிவு உள செம் கை
    அயில் குமர குகை வழி வந்த
    மலை சிகர வடமலை நின்ற பெருமாளே.


    மலர் கமல வடிவு உள = மலர்ந்த தாமரையின்வடிவு கொண்ட. செம் கை = சிவந்த கையில்அயில் குமர = வேல் ஏந்திய குமரனே குகை வழி வந்த = முன்பு ஒரு காலத்தில் நீ குகை வழியாகவந்து வெளி நின்ற மலைச் சிகர = மலையாகியசிகரங்களைக் கொண்ட வட மலை நின்ற பெருமாளே = வட வேங்கட மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.










    விளக்கக் குறிப்புகள்


    1. உனக்கு அடிமை படும் அவர்.....


    நமக்கு உண்டு கொலோ....
    புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே ----
    ----திருநாவுக்கரசர் தேவாரம்.
    2. செறித்த மறை கொணர நிவத்த ஜெய மாலே...


    சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடத்திருந்த மறை நூல்களைப் பிடுங்கி கடலுள் மறைந்தார். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடலுள் புகுந்து அச்
    சோமுகனைக் கொன்று நூல்களை மீட்டார்.


    ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால்… திருப்புகழ், மேக மொத்த


    3. குகை வழி வந்த மலைச் சிகர வடமலை....


    பார்வதியுடன் மாறுபட்டு முருகவேள் கந்த கிரியை விட்டு பாதாளத்துக்குச் சென்று அங்கிருந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கட மலையில் எழுந்தருளினார் என்பது வரலாறு.


    அண்ட மன்னுயி ரீன்றவ ளுடன்முனி வாகித்
    தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
    மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே
    பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான் -- கந்த புராணம்
Working...
X