Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    190. ககனமும்




    190 ககனமும்




    தனதன தனதன தனதன தனதன
    தய்யத் தனாத்த தனதான




    ககனமு மநிலமு மணல்புனல் நிலமமை
    கள்ளப் புலாற்கி ருமிவீடு
    கனலெழ மொழிதரு சினமென மதமிகு
    கள்வைத் ததோற்பை சுமவாதே
    யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
    உள்ளக்க ணோக்கு மறிவூறி
    ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
    லுள்ளத் தைநோக்க அருள்வாயே
    ம்ருகமத பரிமள விகசித நளினநள்
    வெள்ளைப் பிராட்டி இறைகாணா
    விடதர குடிலச டிலமிசை வெகுமுக
    வெள்ளத் தையேற்ற பதிவாழ்வே
    வகுளமு முகுளித வழைகளு மலிபுன
    வள்ளிக் குலாத்தி கிரிவாழும்
    வனசரர் மரபினில் வருமொரு மரகத
    வள்ளிக் குவாய்த்த பெருமாளே



    -190 வள்ளி மலை



    பதம் பிரித்து உரை


    ககனமும் அநிலமும் அனல் புனல் நிலம் அமை
    கள்ள புலால் கிருமி வீடு


    ககனமும் = ஆகாசமும் அநிலமும் = காற்றும்அனல் = தீயும் புனல் = நீரும் நிலம் அமை =மண்ணும் ஆகிய ஐந்து பூதங்களால் ஆனதும்கள்ள = கள்ளத்துக் இடமானதும் புலால் =மாமிசமும் கிருமி = புழுக்களும் உள்ள வீடு =வீடாகிய உடலை.


    கனல் எழ மொழி தரு சினம் என மதம் மிகு
    கள் வைத்த தோல் பை சுமவாதே


    கனல் எழ = தீ எழுவது போல மொழி தரு =பேச்சுக்கள் பிறக்கின்ற சினம் என = கோபம் என்கின்ற மதம் மிகு = ஆணவம் மிகுந்த கள் வைத்த = களவுத் தனம் உள்ள தோல் பை = தோல் பையாகிய உடலை சுமவாதே = நான் சுமக்காமல் ( புலால் நாற்றமுடையது. அது அதில் மறைந்திருக்கிறது. அதனால் ‘கள்ளப்புலால்’)


    யுக இறுதிகளிலும் இறுதி இல் ஒரு பொருள்
    உள்ள கண் நோக்கும் அறிவு ஊறி


    யுக இறுதிகளிலும் = யோகங்கள் அழிந்து போகும் பிரளய காலத்திலும் இறுதி இல் = முடிவில்லாதஒரு பொருள் = ஒப்பற்ற அந்த பேரின்பத்தை உள்ளக் கண் நோக்கு = உள்ளத்தில் கண்டு அறியும் அறிவு ஊறி = ஞானம் பெருகி எழ.


    ஒளி திகழ் அரு உரு எனும் மறை இறுதியில்
    உள்ள அத்தை நோக்க அருள்வாயே


    ஒளி திகழ் = ஒளி வீசுகின்றது என்றும் அரு உரு எனும் = அருவமானது, உருவமானது என்றும்மறை இறுதியில் = வேதங்களின் முடிவில் நிற்பதாய் உள்ள அத்தை = என்றும் அழியாமல் நிற்கும் அந்தப் பொருளை நோக்க அருள்வாயே =நான் காண அருள் புரிவாயாக.

    ம்ருகமத பரிமள விகசித நளின நள்
    வெள்ளை பிராட்டி இறை காணா


    ம்ருகமத = கஸ்தூரியின் பரிமள = வாசனை வீசும்விகசித = மலர்ந்த நளின = தாமரையின் நள் =நடுவில் வீற்றீருக்கும் வெள்ளைப் பிராட்டி =வெள்ளை நிறமுடைய சரசுவதியின் இறை காணா = தலை வனான பிரமன் காண முடியாத.


    விட தர குடில சடில மிசை வெகு முக
    வெள்ளத்தை ஏற்ற பதி வாழ்வே


    விடதர = நஞ்சைக் கண்டத்தில் தரித்தவரும்குடில = வளைந்த சடிலமிசை = சடா பாரத்தின் மீதுவெகு முக = பல முகங்களை உடைய வெள்ளத்தை ஏற்ற = கங்கையை ஏற்ற பதி வாழ்வே =தலைவனான சிவபெருமானுடைய செல்வமே.


    வகுளமும் முகுளித வழைகளும் மலி புன
    வள்ளி குல திகிரி வாழும்


    வகுளமும் = மகிழ மரமும் முகுளித = அரும்புகள் விடும். வழைகளும் = சுர புன்னைகளும் மலி =நிறைந்த புன = தினைப் புனம் உள்ள வள்ளிக் குலத் திகிரி = சிறந்த வள்ளி மலையில் வாழும்.


    வனசரர் மரபினில் வரும் ஒரு மரகத
    வள்ளிக்கு வாய்த்த பெருமாளே.


    வனசரர் = வேடர் மரபினில் வரும் = மரபில் தோன்றி வளர்ந்த ஒரு மரகத = ஒப்பற்ற பச்சை நிறமுள்ள வள்ளிக்கு வாய்த்த பெருமாளே = வள்ளி நாயகியின் தலைவரே.










    விளக்கக் குறிப்புகள்


    1. இது சொல் வளம் நிறைந்த பாடல். ஒவ்வொரு அடியிலும் இறுதியில் உள்ள
    பாகத்தை எடுத்து அமைத்தால் பிறிதொரு பாடல் உண்டாவதை பார்க்கலாம்

    2. வெகுமுக வெள்ளத்தை ஏற்ற....
    கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை
    ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும்
    புனல்பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்
    --- திருநாவுக்கரசர் தேவாரம்


    வள்ளி அவதாரம் செய்த ஸ்தலம் வள்ளிமலை. அவள் பொருட்டு முருகன் பாதங்கள் பல காலம் அங்கு உலாவியது. “வள்ளிக்கணவன் றனையீன்ற வள்ளல் பவனி வரக்கண்டே” – திருஅருட்பா
Working...
X