Announcement

Collapse
No announcement yet.

satgurunathar temple, Idumbaavanam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • satgurunathar temple, Idumbaavanam

    சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை. கு.கருப்பசாமி.*
    _______________________________________
    *126*
    *பாடல் பெற்ற சிவ தல தொடர்.*


    *சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*


    *சற்குணநாதேசுவரர் கோவில், திருஇடும்பாவனம்.*
    ______________________________________
    பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் நூற்று எட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.


    *இறைவன்:* சற்குணநாதேசுவரர்.


    *இறைவி:* மங்களநாயகி.


    *தல விருட்சம்:* வில்வம்.


    *தல தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம்.


    *ஆகமம்:* காமிக ஆகமம்.


    *ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    *திருமேனி:* சுயம்புவானவர்.


    *புராணப் பெயர்கள்:*
    வில்வராண்யம், திருஇடும்பாவனம்.


    *பதிகம்:** திருஞானசம்பந்தர்.


    *இருப்பிடம்:*
    திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.


    திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்து இத்தலத்திற்குச் செல்கிறது.


    முத்துப்பேட்டை வேதாரண்யம் பேருந்து சாலையில் பயணித்தும் இத்தலத்தை அடையலாம்.


    திருக்கடிக்குளம் இத்தலத்திலிருந்து ஒ கி.மி. தொலைவில் உள்ளது.


    *அஞ்சல் முகவரி:* அருள்மிகு சற்குணநாதேசுவரர் திருக்கோயில்,
    இடும்பாவனம்,
    இடும்பாவனம் அஞ்சல்,
    திருவாரூர் மாவட்டம்.
    PIN - 614 703


    *ஆலயத் திறப்பு காலம்:*
    இவ்வாலயம் தினந்தோறும் காலை 7.30 மணி முதல் பகல் 12. 30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *ஆலய தொடர்புக்கு:* சசிசேகர சிவாச்சாரியார், கைபேசி: 9843628109


    *கோவில் அமைப்பு:*
    நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியவை ஆலயத்தின் வெளியே இருக்க முதலில் இவர்களில் குறிப்பிடத்தக்க சென்று வணங்கிக் கொண்டோம்.


    கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்க, *சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.


    கோபுரத் திசை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர மாடத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் விநாயகர் இருந்தனர்.


    நாற்புறமும் அகலமான மதில்கள் சூழப் பெற்று ஆலயம் அமைந்திருந்தது.


    உள்ளே சென்றவுடன் இருபுறமும் முன் வரிசையில் இடும்பன், அகத்தியர், சூரியன், சந்திரன், நால்வர், பைரவ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்களைக் கண்டு ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டோம்.


    ஒரே பெரிய பிராகாரத்துடன் ஆலயம் அமைந்திருந்தன. ராஜகோபுரத்துக்கு நேராக பிரம்மாண்டமான சபா மண்டபமும், மூடுதளமாக உள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சந்நிதி அமைந்திருந்தது.


    சிவ சிவ என்று ஈசனைக்காண அவர் சந்நிதி படியேறினோம்.


    சுயம்பு லிங்கமான மூலவரின் கருவறைக் காட்சி கிடைத்தது. உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டிருந்தது.


    மூலஸ்தானத்தில் இறைவர் கருணையே வடிவாகக் காட்சி தருகின்றார் ஸ்ரீ சற்குணேஸ்வரர்.


    சத்வ குணம் (நல்லியல்புகள்) கொண்ட இவரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறமுடியுமென்று அருகிருந்தோர் கூறக் கேட்டோம்.


    வாழ்வில் ஏற்படக்கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த சற்குணேஸ்வரர். *"இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்"* என்று திருஞான சம்பந்தர் தனது பதிகத்தின் பத்தாவது பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார்.


    லிங்க மூர்த்திக்கு பின்புறம் சுவரில் ஆதி தம்பதியான பார்வதியும் ஈசனும் எழில் வடிவோடு திருமணக் கோலத்தில் தரிசனம் அருளிக்கொண்டிருக்கின்றனர்.


    சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தியாகராஜர் சந்நிதி இருந்தது, முக மண்டபத்துடன் விளங்கும் இவரை அருகில் சென்று கைதொழுது வணங்கிக் கொண்டோம்.


    மனதிருப்தியான தரிசனத்திற்கு பின், அர்ச்சகர் தந்த வெள்ளியவிபூதியைப் பெற்று ஆனந்தமாக வெளிவந்தோம்.


    அடுத்து மங்கள நாயகி அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் சர்வ மங்களங்களையும் அருளும் வல்லமை மிக்கவளாக அருள்பாலித்துக் கொண்டிருந்தாள்.


    இவள் சந்நிதியில், அழகிய தூண்களும், சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன.


    அம்மையைக் கண்டு வணங்கி, மனமுருக பிரார்த்தனை செய்வித்து, அர்ச்சகரிடம் அம்மையின் அருட்பிரசாதமான குங்குமம் பெற்றுக் கொண்டு திரும்பினோம்.


    முறையான சிவாலய கோஷ்ட மூர்த்தங்களோடு, பின்புற வரிசையில் மகாகணபதி, கஜலட்சுமி, சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் திருவடிவங்களை வணங்கிக் கொண்டு, அவரருருள்களை பெற்று நகர்ந்தோம்.


    அடுத்து அங்குள்ள வெண்மை நிறமுடைய சுவேத விநாயகரை மிகவும் பிரசித்தமானவர் என கூறினார்கள். பயபவ்யத்துடன் குனியக் கூறி வணங்கிக் கொண்டோம்.


    அடுத்ததாக கணபதி சந்நிதி, ஆலயத்தின் தென்புறத்திலும், வள்ளி தெய்வானையுடன் கூடிய கந்தன் சந்நிதி வடபுறமும் அமைந்திருக்க இரு ஆலயங்களுக்கும் சென்று வணங்கி வெளிவந்தோம்.


    வெளியே வரவும், ஆலயத்தின் எதிரே பிரம்ம தீர்த்தம் இருக்கக் கண்டோம்.


    எமன் ஏற்படுத்திய எம தீர்த்தம் மற்றும் அகத்திய முனிவர் உண்டாக்கிய அகஸ்திய தீர்த்தம் மேலும் இத்தலத்தின் தீர்த்தங்களாக இருக்கின்றன.


    தல விருட்சமாக வில்வம் விளங்குகிறது.


    சம்பந்தர் இங்கு எழுந்தருளியபோது இவ்வூரின் தல மணலெல்லாம் லிங்கமாகத் தென்பட்டிருக்கிறதாம்.


    ஆதலால் அவர் கரங்களாலே ஊன்றி நடந்து சென்று ஆலயத்தை அடைந்து திருப்பதிகம் பாடியதாகக் கூறப்படுகிறது.


    அப்பரும் தனது ஷேத்திரக் கோவை திருத்தாண்டகத்தில் இத்தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்.


    திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் ஒன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது


    *சிறப்பு*
    அகத்திய மாமுனிவர், இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக இடும்பாவனம் புகழப்படுகிறது.


    இறைவனுக்குப் பின்புறம் கருவறைச் சுவற்றில் இந்த மணவாளக்கோலம் உள்ளதைக் காணலாம்.


    இத்தலம் பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.


    சிவராத்திரியன்று உபவாசம் இருந்து இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சற்குணநாதரை வணங்கினால், முன்னோரது பாவங்கள் நீங்கி அவர்கள் மோட்சம் பெறுவர் என்பது இனாறளவுவரை நம்பிக்கை.


    *மேன்மை:*
    இவ்வுலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் கோபம் என்ற குணம் கண்டிப்பாக இருக்கப் பார்த்திருக்கிறோம்.


    அப்படி கோபப்படாத மனிதரை காண்பது என்பது அபூர்வம்.


    கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு மனிதனிடம் இருந்தால், அந்த கோபம் அம்மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை வெகுவாக ஆலமாக பாதிக்கும்.


    அவரை சுற்றியும், அவரைச் சார்ந்திருப்போர்களையும் அருகருகே உள்ளவர்களையும் பாதிப்புகளை உண்டாக்கும்.


    சமூக நலனில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்.


    கோபப்படும்போது, முதலில் மனமும் சிந்தனைகளும் பாதிக்கபடுகிறது.


    இரண்டாவது, உடலில் பாதிப்புகள் உண்டாக்கும்.


    கடைசியில் எச்செயலிலும், குழப்பமான மற்றங்கள் உண்டாகும்.


    கோபத்தில் எவன் தன்னை இழக்கிறானோ, அவன் நரகத்தில் சென்று உழல இடம் பிடித்து விடுவான் என்று ஒரு பழமையான நீதிநூல் கூட கூறியிருக்கிறது.


    வள்ளுவரும் கூட, தனது குறளில் பல இடங்களில் கோபத்தைப் பற்றியும் குறிப்பிட்டு, அதனால் விளையும் தீங்குகளைப் பற்றியும் கூறியுள்ளார்.


    அப்படி கோபப்படும் மனிதனுக்குச் சாந்த குணத்தை அளிப்பதில் தன்னிரகற்ற தலமாக விளங்குவது திருஇடும்பாவனமான இத்தலமாகும்.


    *தல பெருமை:*
    இப்படித்தான்,............
    பிரம்மதேவன் அடிக்கடி கோபப்பட்டான்.


    தன்னிடம் கோபக் குணம் இருப்பதை உணர்ந்த
    பிரம்மா, சிவபெருமானைப் போய் பார்த்து, அவரிடம் அடிக்கடி கோபம் வரும் தனது குணத்தை மாற்றி அருளுமாறு வேண்டினார்.


    இறைவனும், பிரம்மனிடம் அசரீரி வாக்காக, *இடும்பாவனம்* சென்று தன்னையும், அம்பிகையையும் பூஜித்து பலன் அடையும்படி கட்டளையிட்டார்.


    அதன்படி இடும்பாவனம் சென்ற பிரம்மா, வில்வ மரத்தடியில் நீண்ட காலம் தவம் இருந்து வந்தார்.


    பிரம்மாவின் தவவலிமையைக் கண்ட சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகனுடன் பிரம்மாவுக்குத் தரிசனம் தந்து, சாத்வீக குணத்தை பிரம்மாவுக்கு தந்தருளினார். அப்பேற்பட்ட சிறப்புடையது தலம் இந்த *இடும்பாவனம்.*


    பிரம்மன் சாத்வீக குணங்கள் பெறவேண்டி தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால், இத்தல இறைவன் *சற்குணநாதேசுவரர்* என்று அழைக்கப்படுகிறார்.


    கோபமுற்று சிலபல செயல்களை செய்துவிட்டு அல்லது பேசிவிட்டு அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவர்கள் இத்தலம் வந்து சற்குணநாதேஸ்வரரை வழிபட்டால், கோப குணம் நீங்கி சாத்வீக குணத்தைப் பெற்று நலமுடன் வாழ்கின்றனர்.


    மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலின், இத்தலம் இடும்பாவனம் எனப் பெயர் பெற்றது.


    பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன் என்பவன் ஒரு சமயம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான்.


    அப்படி இடமாறிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் இந்த இடும்பாவனத்துக்கு வந்தான்.


    அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய *குன்றளூரில்* இடும்பியைக் கண்டு மணம் புரிந்து கொண்டான்.


    பின்னர் பீமன், இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவனாரை வணங்க மகிழ்ச்சியை பெற்றான்.


    மிகப் பழமை வாய்ந்த இத்தலத்தில் பிரம்மதேவர், ராமபிரான், எமதர்மன் போன்றோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.


    *தேவாரம்:*
    ☘மனமார்தரு மடவாரொடு
    மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
    தனமார்தரு சங்கக்கடல்
    வங்கத்திர ளுந்திச்
    சினமார்தரு திறல்வாளெயிற்
    றரக்கன்மிகு குன்றில்
    இனமாதவ ரிறைவர்க்கிடம்
    இடும்பாவன மிதுவே.


    🏾மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப் பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும்.


    ☘மலையார்தரு மடவாளொரு
    பாகம்மகிழ் வெய்தி
    நிலையார்தரு நிமலன்வலி
    நிலவும்புக ழொளிசேர்
    கலையார்தரு புலவோரவர்
    காவன்மிகு குன்றில்
    இலையார்தரு பொழில்சூழ்தரு
    மிடும்பாவன மிதுவே.


    🏾இமவான் மகளாய் மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும் குற்றமற்ற சிவபிரானது வென்றி விளங்குவதும், புகழாகிய ஒளி மிக்க கலை வல்ல புலவர்கள் இடைவிடாது பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம் இதுவேயாகும்.


    ☘சீலம்மிகு சித்தத்தவர்
    சிந்தித்தெழு மெந்தை
    ஞாலம்மிகு கடல்சூழ்தரு
    முலகத்தவர் நலமார்
    கோலம்மிகு மலர்மென்முலை
    மடவார்மிகு குன்றில்
    ஏலங்கமழ் பொழில்சூழ்தரும்
    இடும்பாவன மிதுவே.


    🏾தவ ஒழுக்கத்தால் மேம்பட்ட முனிவர்களால் சிந்தித்து வணங்கப்பெறும் எம் தந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், நிலப்பரப்பினும் மிக்க பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச் சான்றோர்களும், நற்குணங்களும் அழகும் மலர்போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும்.


    ☘பொழிலார்தரு குலைவாழைக
    ளெழிலார்திகழ் போழ்தில்
    தொழிலான்மிகு தொண்டரவர்
    தொழுதாடிய முன்றில்
    குழலார்தரு மலர்மென்முலை
    மடவார்மிகு குன்றில்
    எழிலார்தரு மிறைவர்க்கிடம்
    இடும்பாவன மிதுவே.


    ☘குலைகள் தள்ளிய வாழைகள் செழித்துள்ள பொழில்கள் சூழப் பெற்றதும், அழகு திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால் சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமானகுன்றளூரை அடுத்துள்ள இடும்பாவனம் அழகுக்கு அழகு செய்யும் இறைவர்க்குரிய இடமாகும்.


    ☘பந்தார்விர லுமையாளொரு
    பங்காகங்கை முடிமேல்
    செந்தாமரை மலர்மல்கிய
    செழுநீர்வயற் கரைமேல்
    கொந்தார்மலர் புன்னைமகிழ்
    குரவங்கமழ் குன்றில்
    எந்தாயென விருந்தானிடம்
    இடும்பாவன மிதுவே.


    🏾பந்தாடும் கை விரல்களை உடைய உமையவள் பங்கனே எனவும், கங்கை அணிந்த சடைமுடியோடு செந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய வளமான வயல்களின் கரைமேல் கொத்துக்களாக மலர்ந்த புன்னை, மகிழ், குரா ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற குன்றளூரில் எழுந்தருளிய எந்தாய் எனவும், போற்ற இருந்த இறைவனது இடம், இடும்பாவனம்


    ☘நெறிநீர்மையர் நீள்வானவர்
    நினையுந்நினை வாகி
    அறிநீர்மையி லெய்தும்மவர்க்
    கறியும்மறி வருளிக்
    குறிநீர்மையர் குணமார்தரு
    மணமார்தரு குன்றில்
    எறிநீர்வயல் புடைசூழ்தரு
    மிடும்பாவன மிதுவே.


    🏾தவ ஒழுக்கத்தால் சிறந்த முனிவர்கள், உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும் நினைவுப் பொருளாகி, ஞானத்தால் தொழும் மேலான ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவை நல்கிச் சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள் புரிபவனாகிய சிவபெருமான் இடம், தூய சிந்தனையைத் தரும் மணம் கமழ்கின்ற குன்றளூரில் வரப்பை மோதும் நீர் நிரம்பிய வயல்கள் புடை சூழ்ந்து விளங்கும் இடும்பாவனமாகிய இத்தலமேயாகும்.


    ☘நீறேறிய திருமேனியர்
    நிலவும்முல கெல்லாம்
    பாறேறிய படுவெண்டலை
    கையிற்பலி வாங்காக்
    கூறேறிய மடவாளொரு
    பாகம்மகிழ் வெய்தி
    ஏறேறிய விறைவர்க்கிடம்
    இடும்பாவன மிதுவே.


    🏾நீறணிந்த திருமேனியராய், விளங்கும் உலகெங்கணும் சென்று, பருந்து உண்ணவரும் தசையோடு கூடிய காய்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அன்பர்கள் இடும் உணவைப்பெற்று உமையம்மையைத் தன் மேனியின் ஒரு கூறாகிய இடப்பாகமாக ஏற்று மகிழ்ந்து விடைமீது வரும் சிவபெருமானுக்குரிய இடமாகிய இடும்பாவனம் இதுவேயாகும்.


    ☘தேரார்தரு திகழ்வாளெயிற்
    றரக்கன்சிவன் மலையை
    ஓராதெடுத் தார்த்தான்முடி
    யொருபஃதவை நெரித்துக்
    கூரார்தரு கொலைவாளொடு
    குணநாமமுங் கொடுத்த
    ஏரார்தரு மிறைவர்க்கிடம்
    இடும்பாவன மிதுவே.


    🏾வானவெளியில் தேர்மிசை ஏறிவந்த ஒளி பொருந்திய வாளையும் பற்களையும் உடைய அரக்கனாகிய இராவணன், சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையின் சிறப்பை ஓராது, தன் தேர்தடைப்படுகிறது என்ற காரணத்திற்காக மலையைப் பெயர்த்துச் செருக்கால் ஆரவாரம் செய்ய, அவன் பத்துத் தலைமுடிகளையும் நெரித்தபின் அவன் வருந்திவேண்ட, கருணையோடு கூரிய கொலைவாள், பிற நன்மைகள், இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக் கொடுத்தருளிய அழகனாகிய இறைவற்கு இடம் இடும்பாவனம்.


    ☘பொருளார்தரு மறையோர்புகழ்
    விருத்தர்பொலிமலிசீர்த்
    தெருளார்தரு சிந்தையொடு
    சந்தம்மலர்பலதூய்
    மருளார்தரு மாயன்னயன்
    காணார்மயலெய்த
    இருளார்தரு கண்டர்க்கிடம்
    இடும்பாவனமிதுவே.


    🏾தருக்கு மிகுந்த மாயனும் அயனும் காணாது மயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும், புகழ்மிக்க அம்மறையோர்களால் தௌந்த சிந்தையோடு பல்வகை நிறங்களுடன் கூடிய மலர்களைத் தூவி வழிபடப் பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம், இதுவேயாகும்.




    ☘தடுக்கையுட னிடுக்கித்தலை
    பறித்துச்சமண் நடப்பார்
    உடுக்கைபல துவர்க்கூறைகள்
    உடம்பிட்டுழல் வாரும்
    மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல்
    மலிநீர்மலர்க் கரைமேல்
    இடுக்கண்பல களைவானிடம்
    இடும்பாவன மிதுவே.


    🏾பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம் கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும், உடுத்துவதற்குரிய காவியுடைகளை அணிந்து திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய், துன்பம் நீக்கி இன்பம் அருளும் இறைவனது இடம், தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை உடைய மடுக்களும், செந்நெல் வயல்களும் சூழ்ந்த, நீர்மலர் மிக்க நீர்நிலைகளின் கரைமேல் விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும்.


    ☘கொடியார்நெடு மாடக்குன்ற
    ளூரிற்கரைக் கோல
    இடியார்கட லடிவீழ்தரு
    மிடும்பாவனத் திறையை
    அடியாயுமந் தணர்காழியுள்
    அணிஞானசம் பந்தன்
    படியாற்சொன்ன பாடல்சொலப்
    பறையும் வினைதானே.


    🏾கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய அழகிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள் வாழும் காழிப் பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத, வினைகள் நீங்கும். தானே - அசை.


    திருச்சிற்றம்பலம்.


    *திருவிழாக்கள்:*
    வைகாசி விசாகம், மற்றும் சிவபெருமானுக்குரிய அத்தனை விசேஷங்களும்.


    *தொடர்புக்கு:*
    91 4369 240 349
    91 4369 240 200


    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *கற்பகநாதர் திருக்கோயில், திருகடிக்குளம்.*
Working...
X