Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    214.எந்தன்சடலம்
    214
    கந்தன்குடி

    ( பேரளம் – காரைக்கால் மார்கத்தில் இருக்கிறது. குமரக்குடி என்றும் அழைக்கப்படுகிறது. முருகனின் நாமம் கல்யாண சுந்தரர் )


    வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ




    தந்தந்தன தந்தந்தன தந்தந்தன தந்தந்தன
    தந்தந்தன தந்தந்தன தனதான


    எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
    யென்றுந்துயர் பொன்றும்படி யொருநாளே
    இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
    யென்றும்படி பந்தங்கெட மயிலேறி
    வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
    மண்டும்படி நின்றுஞ்சுட ரொளிபோலும்
    வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
    வண்டன்தமி யன்றன்பவம் ஒழியாதோ
    தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
    தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு மணியாரம்
    சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
    சம்புந்தொழ நின்றுந்தினம் விளையாடும்
    கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
    கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே
    கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
    கந்தன்குடி யின்தங்கிய பெருமாளே

    - 214கந்தன்குடி



    பதம் பிரித்து உரை


    எந்தன் சடலம் பல பங்கம் படு தொந்தங்களை
    என்றும் துயர் பொன்றும்படி ஒருநாளே


    எந்தன் = என்றன் (என்னுடைய) சடலம் அங்கம் பல = உடலாகிய உறுப்பு பலவகைத்தானபங்கம் படு = இடர்களில் படும். தொந்தங்களை = தொடர்புகளை பொன்றும்படி =ஒழியும்படியான. ஒரு நாளே = ஒரு நாள் உண்டாகுமோ?


    இன்பம் தரும் செம்பொன் கழல் உந்தும் கழல் தந்தும் பி(ன்)னை
    என்றும்படி பந்தம் கெட மயில் ஏறி


    இன்பம் தரும் = இன்பத்தைத் தரும் செம் பொன் = (உனது) செம்பொன்னான கழல் உந்தும் =காலணிகள் பொருந்திய கழல் தந்தும் =திருவடிகளைத் தந்தும் பி(ன்)னை = பின்புஎன்றும்படி = எப்போதும் போல் பந்தம் கெட =பாச பந்தங்கள் அழிய மயிலேறி வந்து = மயில் மேல் ஏறி வந்து.


    வந்தும் பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை
    மண்டும்படி நின்றும் சுடர் ஒளி போலும்


    பிரசண்டம் = வீரத்துடன் (அல்லது)மிக விரைந்து பகிரண்டம் புவி எங்கும் =வெளியிலே உள்ள அண்டங்கள், பூமி எங்கும்திசை மண்டும்படி = திசை எல்லாம் நிறையும்படி. சுடர் ஒளி போலும் நின்றும் =பெருஞ் சோதியைப் போல (தரிசனம் தந்து நீ) நிற்பதால்.


    வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் துகள் என்றும் கொளும்
    வண்டன் தமியன் தன் பவம் ஒழியாதோ


    வஞ்சம் குடி கொண்டும் = வஞ்சகமே குடி கொண்டு திரி = திரிகின்ற நெஞ்சன் = மனத்தை உடையவன் ஆயினும் துகள் என்றும் கொளும் = குற்றமே என்றுமே செய்கின்ற வண்டன் =தீயோனும் தமியன் தன் = தனியேனுடைய பவம் = பிறப்பு ஒழியாதோ = நீங்காதோ.


    தந்தந்தன திந்திந்திமி என்றும் பல சஞ்சம் கொடு
    தஞ்சம் புரி கொஞ்சும் சிறு மணி ஆரம்


    தந்தந்தன...என்னும் = இவ்வாறு. பல சஞ்சம் கொடு = பல விதமான சஞ்சம் என்ற ஒலியுடன்தஞ்சம் புரி = (அடியார்களுக்கு) அடைக்கலம் அளிக்கின்றேன் என்று சொல்லுவது போல்கொஞ்சும் சிறு மணி ஆரம் = கொஞ்சி ஒலிக்கும் சின்ன மணி மாலைகள்.


    சந்த தொனி கண்டும் புயல் அங்கன் சிவனம்பன் பதி
    சம்பும் தொழ நின்றும் தினம் விளையாடும்


    சந்தந் தொனி கண்டும் = சந்த ஒலியைக் கண்டும் புயல் அங்கன் = மேக நிறமுடைய திருமால் சிவனம்பன் = சிவன் என்ற பெரியோன் பதி = (படைப்புத்) தலைவன்சம்பும்= பிரமன் (ஆகிய மூவரும்) தொழ நின்றும் = தொழ விளங்கி நின்று தினம் விளையாடும் = தினந்தோறும் (அடியார் உள்ளத்தில்) விளையாடுகின்ற.


    கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி
    கண்டு உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே


    கந்தன் = கந்தனே குகன் = குகனே (இதய தகராசத்திலிருப்பவனே) என்றன் குரு என்று =என்னுடைய குருவே என்று தொழும் அன்பன் கவி கண்டு = தொழுத அன்பன் புலவனான நக்கீரருடைய பாடலைக் கேட்டு உய்ந்திட =(அவர்) அடைபட்ட குகையினின்றும் பிழைத்து உய்யும்படி அன்று அன்பொடு வருவோனே =அன்று அன்புடன் அவர் முன் வந்தவனே.


    (திருமுருகாற்றுப்படையில் குரு எனும் சொல் வந்ததில்லை. குருவாய் வருவாய் என பாடியவர் அருணகிரியார்தான். விரித்ருணகிரி நாதன் உரைத்த தமிழ் எனும் மாலை போன்ற வழிகளில் தன்னை படர்க்கையாக கூறி இருப்பது போல் தன்னையே அன்பன் எனக் கூறியதாகவும் கொள்ளலாம். –நடராஜனின் ரசபதி விளக்கவுரை)


    கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை
    கந்தன் குடியில் தங்கிய பெருமாளே.


    கண்டின் = கற்கண்டு போல் இனிக்கும் கனி சிந்தும் = பழங்களைச் சிந்துவதால். சுவை பொங்கும் = சுவை மிக்க புனல் தங்கும் சுனை =நீர்ச் சுனைகள் விளங்கும் கந்தன் குடியின் தங்கிய பெருமாளே = கந்தன் குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.







    நடராஜனனின் குகஸ்ரீ ரசபதி விரிவுரை


    எவ்வுயிரும் எவ்வுலகும் எப்பொருளும் முருக மயம். வித்தக அருள் வளம் அவைகளில் இருந்து விளங்குகின்றன. பற்று அற்றவர்க்கு உற்ற உறவினனான பரன், வேத முடிவில் நாதமாக விளங்குகின்றான். சித்த சித்தியுள்ள பக்தர்களுக்கு,அழுக்கு அகற்றும் அருள் அறிவிப்பு புனித நாதமாக பொங்கி எழும்.


    தந்தந்தன - இப்படி ஒரு நேரம்.
    திந்திந்திமி - இவ்வாறு ஒரு சமயம்
    சஞ்சங் - இவ்விதம் ஒரு காலம்
    தஞ்சம்புரி - இப்படி கொஞ்சல் ஒரு பொழுது


    என்ன அதிசயம் ? யாது இதன் பொருள் ? அறிவிப்பாறும் உளரோ??? அவைகளை வெறும் சந்த பேதம் என்று தள்ளி விடுவது தக்கது அல்லவே. அரிய இவைகளை தெய்வ நாதம் என்று அறிகின்றோமே. இவைகளில் எந்தெந்த மந்திரங்கள் இருக்கின்றனவோ?? யாது யாது குறிப்போ? தந்தந்தன - தம் + தம்+ தனம் = அரிய தம் தம் பரிபாகத்திற்கு உரியது அருட்செல்வம் திம் திம் திமி = அரிய பேரின்பமே அனுபவம், சஞ்சங் = சம் + சங் = நாயகி நாயக பாவனையில் குறிப்பான இன்பம் கொள் தஞ்சம் புரி = அடைக்கல நிலையம் இது. புதிந்து கொள் எனும் பொருள் ஓரளவு இங்கு நமக்கே சிறிது புரிகிறதே.
    திருவடி சிலம்புகள் - கலத்தலை - உணர்த்துமா போல் கல கல என ஆர்த்த கந்தன் வந்தான் என்று அருமைத் தணிகைப் புராணமும் அறிவிக்கின்றதுவே, தஞ்சம் = கல கல கல கலந்து கொள் கலந்து கொள் புரி - புரிந்து கொள் புரிந்து கொள் ஆ என்ன அருமையான குறிப்பு இது. இதை ஊன்றி சிறிது உணரும் போது உள்ளம் பாகாய் உருகுகிறதே யானை வருவது பின்னே மணி ஓசை வருவது முன்னே. சூரியன் வருவது பின்னே சேவல் நாதம் முன்னே. அது போல் அமரன் வருவது பின்னே அருள் நாதம் வருவது முன்னே. தியான கால இந்நாத உட்பொருள், அறிந்து புரிந்து கொண்ட அளவில் திருமாலும் ருத்திரரும் பிரம்ம தேவரும் சம்பு எனும் மகாதேவரும் குதூகலம் கொண்டு கைக் குவித்து கும்பிடும்படி அவரது அகத்தும் புறத்தும் சேவை தந்து நாள் தோறும் அருள் ஆடல் புரிகிறாய் அத்தா என்று ஆர்வம் கொண்டு அழைக்கின்றார் ஓர் அன்பர். அவ்வளவு தானா? மேதகு ஆறு உருவும் ஒன்றான மேனியனே. அகச்சேற்று நாற்றம் அகற்றும் ஞான மண நண்பா,பசுக்களைக் கட்டி வைக்கும் தறி போல் ஆன்ம இனத்தை அகப்படுத்தும் பரி பொருளே எனும் முப்பொருள் குறிப்பில் கந்தா என்று கைக்குவிப்பர் அப்புலவர் பிரான்.
    கந்தன் - ஒருமையன், ஞான மணன், கட்டுத்தறி போல்பவன் என்பது இதன் பொருள், உளமாகிய குகையில் உறவு கொண்டவனே எனும் குறிப்பில் குகா குகேசா என்று கூவி குளிரும் அவர் உள்ளம். அறியாமை இருளகற்றிஅருள் ஒளி வழங்கும் பரம ஆச்சாரியா எனும் பொருளில் எந்தன் குருவேஎன்று ஏத்துபவர் அப்பெரியவர் ( கு = அறியாமை,இருள், ரு = விலக்குபவர் ) நலம் பெருக இப்படி நாள்தோறும் போற்றுபவர் நக்கீரர். கற்கிமுகி எனும் துஷ்ட தேவதையால் ஒரு சமயம் அவர்க்கும் இடையுறு அணுகியதாம். அடனே அவர் பக்தி பரவசத்தோடு திருமுருகாற்றுப்படைதைப் பாடினாராம். -
    அஞ்சல் ஓங்கு ஆதி அறிவல் நின் வரவு - என அதனில் வரும் பல பகுதிகளில் உள்ள மாபெரும் பொருள் நுட்பம் கண்டு மகிழ்ந்து அப்போதேஅவர் துயர் தவிர்க்க ஆர்வம் காட்டி வந்தீராம். அந்த அருமையைஎண்ணும் போதே இதயம் நெகிழ்கிறதே.


    வற்றாது ஊற்றெடுக்கும் வளமான சுனைகள். அதன் களையில் ஏராளமான மரங்கள். அவைகளில் கணக்கில்லாத பழுத்த கனிகள் கற்கண்டு போல இனிப்பவை. அரிய கனிகள் இடை இடை அறுந்து நீரில் விழும். அதனால் சுனை நீரும் சுவை மயம். கனிவிக்கும் மரமுடைய இப்பதியின் பெயர் கந்தன்குடி. பேராலும் இனிய அப்பதியில் என்றும் சானித்தியமாக இருக்கும் பரம, பிரமர் ருத்திரன் முதலோர் சூழ்ந்து நின்னால் சுகம் எய்தினரே. இடர் தவிந்து நக்கீரர் இன்பம் எய்தினரே. சோலையும் சுனையும் பதியும் வளமார் கதி எய்தினரே.
    திக்கற்ற நான் மட்டும் தமியனாகி தவிப்பதுவோ??? நீ திருவுளம் பற்றினால் கடையேன் கடைத்தேற மாட்டேனோ?வினை விலங்கு அறுக்கும் ஐயா, எளியேன் விண்ணப்பம் திருச்செவி ஏற்று அருள்.ஜடமானது இச்சம். இதனில் பல உருப்புகள் இருக்கின்றன. இருந்து என்ன பயன்?.நின்னைக் காணும் நினைவன்றி காணத்தகாதன கண்டு கண்டு கண்கள் மங்கல் ஆவதுவோ ? நின் அருட்புகழ் பரிமளிக்கும் அன்பின்றி செவிகள் செவிடாய் சிதைவதுவோ?. முதிரும் அருள் மணம் முகராமல், மோக்கத்த காதன மோந்து மோந்து நாசி நசிவதுவோ?. பரம, நின்னைப் படும் பயனை அடையாமல் வாய் வளம் வறண்டு போவதோ?பரிசிக்கத் தகாதன பரிசித்து உடல் வளம் சுருங்கி ஒடுங்குவதுவோ? நின் கோயிலைவலம் வர நினையாமல் கண்ட இடமெல்லாம் நடந்து நடந்து கால்கள்தள்ளாடி களைப்பதுவோ? எண்ணத் தகாதன எண்ணி எண்ணி என்னுள்ளம் இருளடைந்து தீருவதுவோ?


    மேலுரைத்த சூழ்நிலையால் கன்ம மூட்டைகளைக் கட்டுவது தவிர இவ்வாழ்க்கையில் வேறு யாது பயன் கண்டேன்?இவைகளால் விளையும் துன்பங்கள்தான் எத்தனை? எந்தன் சடலம் அங்கம் பல பங்கம் படு தொந்தங்களை என்றும் துயர், அடே அப்பா போதும் போதும் என்று ஆகிறதே.


    சந்தையில் நிறைந்த சத்தம் போல் ஓசை நிறைந்தது இவ்வுலகம். ஓசையுள் சூட்சுமஒலி உள்ளது. ஒலியுள் காரணமானது உன் கம்பீர நாதம். அந்நாதம் உன்திருவடிகளில் உள்ள வீரக்கழலில் இருந்து விளைவது. இதை அறிவாரும் இல்லையே?. ஐயோ, செவ்வேள் பெருமா,உந்தி உந்தி நாதத்தை உலவுகின்ற சிறந்த திருவடி சேவை தா, அதுதானே வளமான இன்ப வாழ்வு. உந்தும் கழல் தந்தும் ஆ , உச்சரிக்கிற போதே உயர்ந்த உவகை ஊறுகிறதே.


    பிறந்த இடத்தில் பந்தம். இறந்து மீட்டும் பிறந்த இடத்திற்கு உரிய சொந்தம் இதுஎன்ன தொல்லை பழைய பிறப்பை மறந்தாலும் விட்ட பிறவிதோறும் பட்ட சுமைபந்தம் மட்டும் என்னை விட்டதில்லையே. விமலா, அரிய உன் சேவையில்அழுந்துவேன் அதன் வழி அப்பந்தமெல்லாம் அழிந்துவிடும். ஆதலின்,என்றும் படி பந்தம் கெட மயில் ஏறி வந்தும் இப்படி ஒரு தடத்த சேவை தாராயா? சேவிக்கும் திருவுருவம் திடீரென்று விஸ்வரூபமாகி விளையாதா?.
    பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும்
    திசை மண்டும்படி நின்றும் அடடா என்ன ஆனந்தமான அனுபவம். அதன் பின்உததி இடைக் கடவு மரகத வருண குல துரக உப லலித கனக ரத சதகோடி சூரியர்கள் உதயமென யுகமுடிவின் இருள் அகல ஒரு ஜோதி வீசுவதும் ஆனதேவருடைய ஒளிப் பிழம்பாம் வித்தக சொரூப சேவை விளையாதா ?


    வஞ்சம் கொண்டு பிறரை வஞ்சிக்க முயன்று என்னையே வஞ்சித்துக் கொண்டநிலை குலைந்த நெஞ்சினேன். வண்டல் என்பது சேறு. குற்றச் சேறே என கொள்ளாலாம். கருவி கரணங்களை பரமாத்திகத்தில் பயிற்றாமல் லௌகீகத்திலேயே அழுந்தி அதனால் அவைகள் காலத்தில் என்னைக் கை விடுகின்றன. திருவடிதொடர்பையும் இழந்தேன். திக்கற்றவன் ஆகினேன். அதனால் பேதையேன் மரண நாளில் தமியன் எனும் பெயரையே தழுவலாயினேன். நலமிகு கருணை நாதம் கேட்டு, கவின் மிகு மயிலின் ஊர் கோலம் கண்டு, விஸ்வரூப சேவை விளங்கப் பொலிந்து,சுடர் ஒளி போலும் சொரூப ஜோதி தரிசனம் கண்டு, அணு அணுவாய் என்பாவப்பிறப்பு அழியாதா? ஒழியாதா? ஐயா ஐயா என்று அலறியபடி



    அன்பன் கவி கண்டுய்ந்திட.... நக்கீரர் வரலாறு கூறப்பட்டுள்ளது.

    மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
    வழிதி றந்த செங்கை வடிவேலா--- திருப்புகழ் முலைமுகந்தி.
Working...
X