சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை கு. கருப்பசாமி.*
_*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்.*
(நேரில் சென்று தரிசித்ததைப் போல........)
*தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 205.*
*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*
*சிவ தல அருமைகள் பெருமைகள்.*
வடாரண்யேசுவரர், தேவர்சிங்கப் பெருமான், ஆலங்காட்டுஅப்பர் திருக்கோயில்.*
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பதினைந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது.
மிகப் பெரிய குளமாகிய முக்தி தீர்த்தக் கரையில் நடனமாடித் தோற்ற காளியின் உருவம் உள்ளது.
இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் சித்த வைத்திய சாலை இருக்கிறது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சந்தன மரங்கள் நிறைய உள்ளன.
உள்ளனன்று நிலைகளையுடைய உள் கோபுரத்தில் ஊர்த்தவ தாண்டவம், பிரம்மா, நந்தி மத்தளம் வாசித்தல், காரைக்காலம்மையார் பாடுதல், ரிஷபாரூடர், கஜசம்ஹாரமூர்த்தி, காரைக்காலம்மையார் வரலாறு முதலியவை சுதையில் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
இரத்தின சபையில் உள்ள நடராசர், அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமான் *'ரத்ன சபாபதி'*என்று அழைக்கப்படுகிறார்.
சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும், திருமுறைபேழையும் இருக்கின்றன.
காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர், ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் இறங்கி, அன்று இரவு துயிலும்போது, அவர் கனவில் வந்த ஆலங்காட்டப்பன் "நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு" என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று கோயிலில் இறைவனை பதிகம்பாடி வணங்கினார்.
சுந்தரர் பதிகம் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருப்பதை, சபையை வலம் வரும்போது காணமுடிகிறது.
இரத்தின சபையின் விமானம் செப்புத் தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்களுடன் அமைந்துள்ளது.
கருவறை நல்ல கற்கட்டமைப்புடன் காணக் கிடைக்கிறது.
கோஷ்ட மூர்த்தங்களில் துர்க்கைக்கு பக்கத்தில் துர்க்கா பரமேஸ்வரர் உருவம் ஒன்று கோஷ்டமூர்த்தமாக இருக்கிறது.
இங்கு பஞ்சபூத தல லிங்கங்களும் உள்ளன.
பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து, செட்டிப்பிள்ளைக்குத் தந்த வாக்குறுதியைக் காத்த *'தீப்பாய்ந்த மண்டபம் '* இருக்கிறது.
இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில், யாகம் வளர்த்து இறங்குவதுபோல் இவர்கள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிரில் *'சாட்சி பூதேஸ்வரர்'* சந்நிதியும், தீப்பாய்ந்த இடமும் இருக்கிறது.
தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாள்தோறும் திருவாலங்காடு வந்து இறைவனை தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபை பிற்காலத்தோரும் அறியும் வகையில் *"கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை"* என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற் படியாக வைத்துள்ளனர்.
இம்மரபினரின் கோத்திரமே *'கூழாண்டார்கோத்திரம்'*அதாவது தாங்கள் கூழ் உணவை உண்டு, விளைந்த நெல்லை இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் என்பது பொருளாம்.
*தல அருமை:*
சும்ப- நிசும்பன் என்ற அரக்கர்கள் இரண்டு பேர்கள் நாங்கள் யாருடன் போரிட்டாலும், மண்ணில் விழும் எங்களின் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் ஓர் அசுரன் உருவாக வேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தனர்.
இதனால் அவர்களிருவரும் நிறைய அட்டூழியங்களைச் செய்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஆலமரத்தடியில் சுயம்புலிங்கத்தை பூஜித்துக் கொண்டிருந்த தேவர்களை வதைத்தனர்.
ஏனைய தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி சிவனாரிடம் வந்து முறையிட்டனர்.
இவர்களின் அல்லல் தீர்க்க திருவுளம் கொண்ட சிவனார், தேவியை நோக்கினார்.
ஈசனின் குறிப்பை பார்வதியாளும் புரிந்துகொண்டாள். மறுகணம் தன் பார்வையாலேயே காளி தேவியை உருவாக்கினாள்.
எட்டுக் கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து அசுரர்களை அழிக்கப் புறப்பட்டாள் காளி.
அசுரர்களது இருப்பிடத்தை அடைந்து அவர்களுடன் போரிட்டாள். அவர்களின் ரத்தம் தரையில் சிந்தினால்தானே அதிலிருந்து அசுரர்கள் தோன்றுவார்கள்?!.....
ஆனால் காளி, ஒரு துளி ரத்தம்கூட தரையில் சிந்தாமல், தன்னுடைய ஒரு கரத்தில் இருந்த கபாலத்தில் அசுரர்களின் ரத்தத்தை ஏந்தினாள்.
கபாலம் நிரம்பியதும் பருகினாள். தொடர்ந்து சண்டையிட்டாள். போரின் முடிவில் அசுரர்கள் அழிந்தனர்.
ஆனாலும் இன்னொரு பிரச்னை ஆரம்பமானது! அசுர ரத்தத்தைப் பருகியதால் காளிக்கும் அசுர குணம் மேலோங்கியது.
மீண்டும் தேவர்கள் தொல்லைக்கு ஆளானார்கள். காளியைக் கட்டுப்படுத்த வந்த சிவனார், அவளுடன் நடனப்
போட்டியில்
பங்கேற்க நேர்ந்தது.
சிவனாரின் தாண்டவம் தொடர்ந்தது. இவர் ஒரு தாண்டவத்தை ஆடிக்காட்ட, காளிதேவியும் அதே போல் ஆடிக்காட்டினாள்.
பதினேழு தாண்டவங்கள் ஆடி முடித்தாயிற்று. அடுத்த தாண்டவம், தன்னுடைய வலக்காதில் இருந்த குண்டலத்தை கீழே தவறவிட்ட சிவனார், சட்டென்று இடது காலால் அந்தக் குண்டலத்தை எடுத்து, அதே காலை உயரத் தூக்கி, குண்டலத்தை கரத்தில் வாங்கி அணிந்துகொண்டார்.
காளிதேவியால் இப்படி காலை உயரத் தூக்கி ஆட முடியாததால், சிவனார் வெற்றிபெற்றார்.
இந்தப் போட்டி நடைபெற்ற தலம் திருவாலங்காடு என்கிறது புராணம்.
நம்மிடம் ஆணவமலம் இல்லை. இருப்பினும் வணங்கு மரபுப்படி பலிபீடத்தருகாக நின்று, இனியேனும் ஆணவமலம் உருவாகவாதிருக்கும்படி வணங்கி நகர்ந்தோம்.
அடுத்திருந்த கொடிமரத்து முன் நெடுஞ்சான்கிடையாய் விழுந்து, சிரம் கரங்கள் செவிகள் புஜங்கள் பூமியில் புரள வணங்கிப் பணிந்தெழுந்து நிமிர்ந்தோம்.
பின்பு, நந்தி மண்டபத்திலிருந்த நந்தியாரை வணங்கிக் கொண்டு, ஈசனின் தரிசனத்திற்கு அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.
மூன்று நிலைகளுடைய இரண்டாவது கோபுரம் காணக் கிடைத்தது. சிவ சிவ என வணங்கிக் கொண்டோம்.
இந்த கோபுரத்திலும் அழகிய சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
இக்கோபுரத்தை ஒட்டிய மதிற்சுவரின் மேல் இடதுபுறத்தில், காரைக்கால் அம்மையாரின் வரலாற்றையும், வலதுபுறத்தில் மீனாட்சி திருக்கல்யாண வரலாற்றையும் அழகிய சுதை சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டு இருந்தன.
இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றதும், இண்டாவது சுற்றுப் பிரகாரம் இருந்தது.
வலதுபுறத்தில் இறைவி வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில் இருந்தது.
இந்த நுழைவு வாயிலின் மேற்புறத்தில், சிவபெருமானின் ஐந்து சபைகளை, அழகிய சுதைச் சிற்பங்களாக காட்சியாக்கி வைத்திருந்தார்கள்.
ஈசன் முன் பிரசன்னமானோம்.
கருவறையில் இறைவன் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தந்து கொண்டிருந்தார்.
மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.
மூலவரைத் தரிசிக்கும் உள் பிராகாரத்திற்குள்ளாக, சூரியன், அதிகார நந்தி, விஜயராகவப் பெருமாள் தேவியருடன், சண்முகர், அகோர வீரபத்திரர், சப்த கன்னியர், நால்வர், காரைக்காலம்யைார், கார்க்கோடகன், முஞ்சிகேசமுனிவர், பதஞ்சலி, அநந்தர், சண்டேச அநுக்ரஹர், எண்வகை விநாயகர் உருவங்கள் முதலிய சந்நிதிகள் இருந்தன.
ஒவ்வொரு சந்நிதிக்கும் சென்று, நெஞ்சுக்கு நேராக கூப்பி குவித்த கரங்களை இறக்காது, ஒவ்வொருத்தரையும் வணங்கியபடியே நகர்ந்தோம்.
துர்க்கைக்குப் பக்கத்திலேயே துர்க்கா பரமேஸ்வரர் என்ற ஒரு உருவம் ஒன்று கோஷ்ட மூர்த்தமாக இருந்தது. வணங்கிக் கொண்டோம்.
சண்டேசுவரர் சந்நிதிக்குச் சென்று, இவரை வணங்கும் மரபு முறைப்படி வணங்கிக் கொண்டு திரும்பினோம்.
அடுத்து, பஞ்சபூதத் தலத்திற்குரிய லிங்கங்கள் வரிசையாக இருக்க விடாது தொடர்ந்து வணங்கிக் கொண்டோம்.
சஹஸ்ரலிங்கத்தை தரிசித்தோம். மிக மிக நேர்த்தியான அழகு அமைப்பு இது.
சுப்பிரமணியர், கஜலட்சுமி, பாபஹரீஸ்வரலிங்கம் முதலிய சந்நிதிகளும் உள்ளன. வணங்கிக் கைதொழுதோம்.
பைரவரைக் கண்டு வணங்கிக் கொண்டோம். இவர் தனது வாகனமில்லாமல் காட்சி அருளினார்.
பிராகாரத்தில் வலமாக வரும்போது ஆருத்ரா அபிஷேக மண்டபம், இரத்தினசபை வாயிலில் அமைந்திருந்தன.
நடராஜர் அபிஷேகத்தின்போது அனைவருக்கும் அபிஷேகத் தரிசனம் கிடைப்பதற்காக சபைக்கு எதிரில் பெரிய நிலைக்கண்ணாடியை பொருத்தி வைத்துள்ளார்கள்.
அடுத்து சந்நிதிக்கு விரைந்தோம். தெற்கு நோக்கியபடி நின்ற கோலத்துடன் அம்பாள் காட்சியருளிக் கொண்டிருந்தாள்.
மனமுருக பிரார்த்தனை செய்து, பரிபூரணமாக அருளைப் பெற்றுக் கொண்டு, அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்று வெளிவந்தோம்.
அம்பிகை கருவறையில் கோஷ்ட மூர்த்தங்கள் எதுவும்
காணக்கிடைக்கவில்லை.
இருந்தாலும், அம்பாள் சந்நிதியிலுள்ள சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் காணவேண்டியவைகள். மிக மிக அழகுடையதாக இருந்தது.
இரத்தின சபையில் நடராசப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனியை தரிசித்தோம்.
மனதிற்கு இனிமையாக இருந்தது. இவரின் நடனக் கோலத்தைக் கண்டதும், நம் நெஞ்சில் குடியிருந்த மனக்கவலையாவும் தொலைந்தொழிந்து போயிருந்தன.
அருகே, சிவகாமி, காரைக்காலம்மையார் திருமேனிகள் இருந்தன. பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டோம்.
இரத்தின சபையில் பெரிய ஸ்படிகலிங்கமும், சிறிய மரகதலிங்கமும் இருந்தன. இவற்றிற்கு நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது என சொன்னார்கள்.
இரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேசுவரரின் உருவம் இருப்பதைக் கண்டதும், நம் கரங்கள் சிரசின் மேல் உயர்ந்தன.
இரத்தினச் சபையின் விமானம் செப்புத் தகடுகளினால் வேயப்பட்டிருந்தன. இதில் ஐந்து கலசங்களை நிறுவியிருந்தார்கள். கலசத்தை நோக்கி இன்னும் கொஞ்சம் சற்று உயரமாக நம் கைகள் உயர்ந்தன.
*காரைக்காலம்மையார்:*புனிதவதி என்ற அம்மையார், காரைக்கால் எனும் ஊரில் பெருவணிகருக்கு தவப் புதல்வியாய் பிறந்தாள்.
நாகப்பட்டினத்து வணிக நீதிபதியின் மகனான பரமதத்தனுக்கும், புனிதவதிக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதியினறை, தனதத்தர் தனிக்குடித்தனம் அமர்த்தினார்.
பரமதத்தனின் இல்லம் தேடி உதவி வேண்டி வந்தவர் அவரிடம் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அக்கனிகளை அவர் தன் மனையாளிடம் ஒப்படைத்தார். அவ்வேளையில் பரம தத்தனின் இல்லம் தேடி சிவனடியார் ஒருவர் பசி மிகுதியால் அமுதுண்ண வந்தார்.
அவ்வேளையில் அமுதோடு மாங்கனிகளுள் ஒன்றையும் அரிந்து வைத்தார் அவ்வம்மையார்.
பின் கணவன் உணவருந்தும் வேளையில் இன்னொரு கனியை அமுதுடன் பறிமாறினார்.
கனி சுவை மிகுந்து காணப்பட்டதால், மீண்டும் சுவைக்க மற்றொரு கனியையும் அரிந்து தரக் கேட்டார் கணவர்.
செய்வதறியாது திகைத்த அம்மையார், கணவனின் நினைப்பு ஏற்றமாகக் கூடாது என்று, சிவனை வேண்டினார்.
இறைவனருளால் இன்னொரு கனியை இறைவனிடமிருந்து பெற்றாள்.
சுவையின் வேறுபாடு அறிந்த கணவன், இக்கனி எப்படி வந்ததென வினவினான்.
சிவனருளால் கனி கிட்டியதாக அம்மையார் கூறினார்.
அம்மையார் பதிலில் திருப்தியடையாத பரமதத்தன், அப்படியானால்சிவனிடம் மீண்டும் வேண்டி இன்னொரு கனியைப் பெற்றித் தருமாறு கேட்கச் செய்தான்.
இறைவனிடமிருந்து சிவனருளால் மீண்டும் ஒரு கனியைப் பெற்று கணவர் கைகளில் அளிக்க, கணவனின் கைகளில் தோன்றி மறைந்தது.
இதனால், அம்மையாரின் தெய்வீகத் தன்மையை உணர்ந்தான். அவளிடமிருந்து ஒதுங்கி வாழ தீர்மானித்தான்.
அதுமுதல் தன் இல்லற உறவுகளின் தொடர்புகளை அறுத்து வாழ்ந்தான்.
பின்பு, வணிக நிமித்தம் காரணம்கூறி, வெளியூர் சென்ற வேளையில் பாண்டி நாட்டு ஒரூரில் மறுமணம் செய்து கொண்டு அவளுடன் வாழ்ந்தான்.
மறுமண வாழ்க்கையின் மூலம் ஒரு பெண் குழந்தையொன்றை ஈன்றெடுத்தனர். அக்குழந்தைக்கு தன் முதல் மனைவியின் பெயரான புனிதவதியென்று பெயர் சூட்டி அதை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தான்.
பின்பு, புனிதவதியாரின் பெற்றோர்கள், செய்தியறிந்து தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு மருமகனின்
இருப்பிடம் சென்றடைந்தனர்.
பரமதத்தரோ தன் மனைவி மகளுடன் அம்மையாரின் காலில் வீழ்ந்து
வணங்கினார்கள்.
தன்னிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்த கணவனின் செய்கை பிடிக்காத புனிதவதியார், தன் உடலின் பொழிவு ஒழியட்டும் என்று, உடலை வருத்தி இறைவனிடம் பேய் உருவம் கேட்டுக் கொண்டு அம்மையார் தலையால் நடந்து திருக்கயிலாயம் சென்றடைந்தார்.
தலையால் நடந்து வருவதைக் கண்ட அன்னை பார்வதி சிவபெருமானிடம் தெரிவித்தார்.
என்னவரம் வேண்டுமென்று ஈசன் வினவ, அம்மையார், பிறவாமை வரம் வேண்டுமென்றும், மீண்டும் பிறந்தால் உன்னை மறவாதமனம் வேண்டுமென்றும், மேலும் உன் திருவடியின் கீழ் இருக்க வேண்டுமென்றும் வேண்டினாள்.
*'அம்மையாரே நீ திருவாலங்காட்டில் சென்றமர்க'* என்று இறைவன் அருளினார்.
அம்மையாரும் தலையால் நடந்து திருவாலங்காடு சென்றமர்ந்து இறைவனின் புகழ்பாடுகின்றார்.
*மார்கழி சிறப்பு:*
மார்கழி திருவாதிரை இங்கு மிக சிறப்பு. இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.
பங்குனிஉத்திரத்திற்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று காரைக்காள்அம்மையார் ஐக்கிய விழா நடைபெறுகிறது.
*நித்தமும் நடனம்:*
நடராஜபெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் இங்கு இரத்தின சபை ஆகும்.
இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற
காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, சிவனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைக்க அமைந்திருக்கும் திருக்கோயில் இது.
அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடம்.
*ஆலமரம்:*
முன் காலத்தில் ஆலமரக்காடாக இத்தலம் இருந்தது. இதில் இறைவன் சுயம்புவாக தோன்றி, நடனம் செய்த படியால் இத்தல இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
*பிரார்த்தனை:*
நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தும் தலம் இது.
Bookmarks