Announcement

Collapse
No announcement yet.

Tiruvotriyur adhipureeswarar temple

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruvotriyur adhipureeswarar temple

    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை கு.கருப்பசாமி.*
    *தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*
    (நேரில் சென்று தரிசித்ததைப் போல.............)


    *தேவாரம் பாடல் பெற்ற தல எண்: 209:*
    *பாடல் பெற்ற சிவ தல தொடர்:*
    *சிவ தல அருமைகள் பெருமைகள்:*
    *ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை:*
    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள முப்பத்திரண்டு தலங்களுள் இத்தலம் பத்தொன்பதாவது தலமாகப் போற்றப் படுகிறது.
    *இறைவன்:* ஆதிபுரீஸ்வரர், படம்பக்க நாதர், தியாகராஜர்
    *இறைவி:*வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி.
    *தல விருட்சம்:* மகிழமரம்.
    தல தீர்த்தம்:* பிரம்ம தீர்த்தம்.
    புராணப் பெயர்:* ஆதிபுரி.
    *தேவாரம் பாடியவர்கள்:*
    திருநாவுக்கரசர். ஐந்து பதிகங்கள்.
    திருஞானசம்பந்தர். ஒரே ஒரு பதிகம்.
    சுந்தரர். இரண்டு பதிகங்கள். ஆக மொத்தம் இத்தலத்திற்கு எட்டு பதிகங்கள்.
    *ஆலயப் பழமை:*
    ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.


    இருப்பிடம்:*
    இத்திருத்தலம் சென்னை மாநகரின் வடக்குப் பகுதியில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் எட்டு கி.மி. தொலைவில் அமைந்திருக்கின்றன.


    சென்னை நகரின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் நகரப் பேருந்துகள் வசதிகள் திருவொற்றியூருக்கு இருக்கின்றன.


    புறநகர் ரயில் நிலையமும் திருவொற்றியூரில் இருக்கிறது.


    *அஞ்சல் முகவரி:*
    அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்,
    திருவொற்றியூர்,
    சென்னை,
    PIN - 600 019
    ஆலயப் பூஜை காலம்:*
    இவ்வாலயம் வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்


    பெளர்ணமி நாட்களில் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும்,


    மற்ற நாட்களில் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.


    *கோவில் தல வரலாறு:*
    முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் ஏற்பட்டது.


    பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார்.


    அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது.


    பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு *ஒற்றியூர்* எனப் பெயர் அமையப் பெற்றது.


    மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் *ஒற்றியூர்* என அழைக்கப்பட்டது.


    பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் *ஆதிபுரீஸ்வரர்* என்றும், வாசுகி என்ற பாம்பிற்கு அருள் புரிய புற்று வடிவில் எழுந்தருளி தன்னுள் அடக்கிக் கொண்டதால் *படம்பக்கநாதர்* என்றும் அழைக்கப்படுகிறார்.


    புற்று மண்ணால் ஆன இந்த லிங்கத் திருமேனி வருடத்திற்கு மூன்று நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் லிங்கம் பெட்டி போன்ற அமைப்பில் கவசம் சார்த்தப்பட்டு மூடியே இருக்கும்.


    ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்படும்.


    பெளர்ணமியன்று மாலையில் இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகம் செய்கிறார்கள்.


    தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.


    மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தி விடுவர். இந்த மூன்று நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.


    இறைவன் இங்கு தீண்டா திருமேனியனாகக் காட்சி தருவதால், இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் செய்கின்றனர்.
    *கோவில் அமைப்பு:*
    இந்த ஆலயத்திற்கு சென்றபோது ராஜகோபுரம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளைத் தாங்கியபடி காட்சி கிடைக்க, *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.


    கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருந்தது.


    கிழக்குச் சுற்று வெளிப் பிரகாரத்தின் வலதுபுறம் இறைவி வடிவுடை அம்மன் சந்நிதி அமைந்திருக்கிறது.


    கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நிதி இருக்க.. விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் தொழுது வணங்கிவிட்டு நகர்ந்தோம்.


    அடுத்து, பாலசுப்ரமணியர் சந்நிதி மற்றும் குழந்தையீஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்திருக்க, முன் வந்து நின்று வணங்கிக் கொண்டோம்.


    மேற்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அண்ணாமலையார் சந்நிதியும், பின்பு வரிசையாக ஜம்புலிங்கேஸ்வரர் சந்நிதி, நாகலிங்கேஸ்வரர் சந்நிதி, காளத்திநாதர் சந்நிதி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதிகள் இருக்க, ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்..


    வடமேற்கு மூலையில் ஒற்றீஸ்வரர் சந்நிதி தனி முகப்பு மண்டபத்துடன் அமைந்திருக்க, சிரமேற் கைகள்குவித்து தொழுது கொண்டோம்.


    வடக்கு வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி, கல்யாணசுந்தரர் சந்நிதிகளுக்கும் சென்று கைதொழுது வணங்கிக் கொண்டோம்.


    பைரவர் வடக்கு நோக்கி நின்ற நிலையில் தனது வாகனமான நாய் இல்லாமல் காட்சி தந்து கொண்டிருந்தார்.


    தலமரமான மகிழமரம் இந்த வடக்கு வெளிப் பிரகாரத்திலே இருந்தது. வணங்கிக் கொண்டோம்.


    *ஆதிபுரீஸ்வரர் சந்நிதி:*
    மூலவர் ஆதிபுரீஸ்வரர் சந்நிதி கிழக்கு ராஜகோபுர வாயிலுக்கு நேரே இல்லாமல் சற்று இடதுபுறமாக தள்ளி அமையப்பெற்றிருந்தது.


    தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் வழியாக மூலவர் கருவறையுள்ள சந்நிதிக்கு வந்து நின்றோம்.


    ஈசனை மனங்குளிர ஆராதித்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.


    தெற்கு வெளிச்சுற்றில் உள்ள வாயில் அருகில் கிழக்கு நோக்கி இருந்த தியாகராஜர் சந்நிதிக்கு சென்று கைதொழுது கொண்டோம்.


    கருவறைப் பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டப்பாறை அம்மன் சந்நிதி வடக்கு நோக்கி இருந்தது.


    அம்மையை மனங்குளிர ஆராதித்து வணங்கி அவளருளைப் பெற்று அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.


    இச்சந்நிதிக்கு நேர் எதிரே உள்ள வாயில் வழியாக வடக்கு வெளிச்சுற்றுப் பிரகாரத்தை அடைந்தோம்.


    வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியவர் கவிச் சக்கரவர்த்தி புகழப்படும் கம்பர் ஆவார்.


    இவர் கம்ப இராமாயணத்தை எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில் வைத்துத்தான்.


    வட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவாராம்.


    அவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.
    *தியாகராஜர் சந்நிதி:*
    தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றயூர் தலமும் ஒன்றாகும்.
    இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம்.
    இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார்.
    *சுந்தரர் திருமணம்:*
    சுந்தரர் திருவொற்றியூர் இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனுக்கு பூமாலை கட்டித் தரும் தொண்டினை செய்து வந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டார்.
    அவளை மணந்து கொள்ள விரும்பி இறைவனை அவளிடம் காதல் தூது செல்லும்படி கேட்டுக் கொண்டார்.
    அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் இறைவன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார்.
    சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.
    ஆகையால் என்னைவிட்டுப் பிரிந்து சென்று விடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார்.
    இறைவன் இதை சுந்தரரிடம் கூறினார். அதற்கு சுந்தரர் இறைவனிடம் "ஊர் ஊராகச் சென்று இறைவனைப் பாடும் நான் ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம் என்றும், இறைவன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது என்பதாலும்" சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நிதியில் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ளும் படியும் கூறினார்.
    இந்த விபரத்தை இறைவன் சங்கிலி நாச்சியாரிடம் போய் கூறிவிட்டார்.எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்டிக் கொண்டார்.
    சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த இறைவனை மூன்று முறை வலம் வந்து *"என்றும் உன்னைப் பிரிய மாட்டேன்"* என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார்.
    இந்த மகிழமரம் வடக்கு வெளிப் பிரகாரத்தில் உள்ளது.
    இந்த சபத நிகழ்ச்சி இன்றும் மாசிப் பெருவிழாவின் போது *"மகிழடி சேவை"* விழாவாக நடைபெறுகிறது.
    வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியது கவிச் சக்கரவர்த்தி என்று புகழப்படும் கம்பர், கம்ப இராமாயணம் எழுதியது இந்த திருவொற்றியூர் தலத்தில்தான்.
    வட்டப்பாறை அம்மனை வணங்கிய பிறகே கம்பர் இராமாயணம் எழுத தொடங்குவாராம்.
    அவர் எழுதுவதற்கு உதவியாக சாதாரண பெண் உருவில் கையில் தீப்பந்தம் ஏந்தி நின்று அருள் செய்தவள் இந்த வட்டப்பாறை அம்மன் என்பது ஒரு சிறப்புக்குரிய செய்தியாகும்.


    தியாகராஜர் சந்நிதி:*
    தொண்டை நாட்டில் தியாகராஜர் வீற்றிருக்கும் ஏழு சிவஸ்தலங்களில் திருஒற்றயூர் தலமும் ஒன்றாகும்.


    இத்தலத்தில் தியாகராஜர் ஆடிய நடனம் ஆனந்த நடனம். இவர் ஆனந்த தியாகேசர் என்று அழைக்கப்படுகிறார்.


    இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.


    தேவார மூவர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற சிவஸ்தலங்களுள் திருஒற்றியூர் தலமும் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது.


    27 நட்சத்திரங்கள் இங்கு வந்து நட்சத்திரங்களின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு ஒவ்வொன்றும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன.


    அந்தந்த ராசிக்காரர்கள் பிறந்த நாளில் அந்த ராசி லிங்கத்தை வழிபடுவது இத்தலத்தில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.


    தெற்கு வெளிப் பிரகாரத்தில் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக உள்ளன.


    மகிழ மரமும் சுந்தரர் திருமணத்தால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.


    ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி.


    அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது.


    தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார்.


    இதை கண்ட நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார்.


    இதனால் தனது சக்கரப் படையை ஏவி கருகி கிடந்த அம்பாளின் உடலை பல துண்டுகளாக வெட்டினார்.


    சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் ஒன்றுதான் திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்கிறது புராண கதை.


    இத்தலத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் வள்ளலார். அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றியுள்ளார்.


    மேலும், இறைவன் மீது எழுத்தறியும் பெருமான் மாலை, தியாகராஜப்பெருமான் நடனக்காட்சி பற்றியும் பாடல்கள் இயற்றிய பெருமை உடையது இத்தலம்.


    ஞானசக்தியான வடிவுடை அம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர். கல்வியில் புகழ் அடைவார்கள்.


    *காக்கும் தெய்வம்:*
    சென்னை மாநகரை காக்கக்கூடிய அம்மன்களில் வடிவுடை அம்மனும் உண்டு.


    இந்த வடிவுடை அம்மன் மிக மிக சக்தி வாய்ந்தவள். குழந்தைப் பேறு ம*ற்று*ம் வேறு எந்த விஷயமாக இருந்தாலும் அங்கு சென்று பிரார்த்தனை செய்ய அது நிறைவேறுகிறது.


    குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் மிகவும் விசேஷமாக இருக்கும். நெய் தீபம் ஏற்றி வழிபட்டாலும் சிறப்பாக இருக்கும்.


    *தல பெருமை:*
    மாந்தாதான் என்ற மன்னனுக்கு அதிக வயதாகிவிட்டது.


    ஆனாலும் இறப்பு வரவில்லை. பாவம் செய்தாவது இறந்துபோவோம் என கருதினான்.


    எனவே, அவனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் அநியாய வரி விதித்தான்.


    இது சம்பந்தமான ஓலை சிற்றரசர்களுக்கு அனுப்பப்பட்டது.


    அந்த ஓலையில் யாரும் அறியாமல், *"ஒற்றியூர் நீங்கலாக"* என திருத்தி எழுதினார் சிவன்.


    இதன் பிறகு அந்த மன்னன் இறைவனிடம் மன்னிப்பு கேட்டு வரியை விலக்கினான்.


    நீண்டகாலம் பூமியில் வாழ்ந்தான். எந்தச்சூழ்நிலையிலும் விரக்தி அடையக்கூடாது என்பதை இத்தலம் காட்டுகிறது.


    திருவொற்றியூர் கோயிலுக்கு வெளியே பிரம்மாண்டமான பிரம்மதீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை தலையில் தெளித்தாலே பாவங்கள் நீங்கிவிடும்.


    பாவ மன்னிப்பு கேட்காமலேயே பாவங்களை தீர்க்கும் தலம் திருவொற்றியூர்.


    இவ்வூரில் உள்ள கற்கள் அனைத்தும் லிங்கங்கள் என்றும், சிதறிக்கிடக்கும் மண் திருநீறு என்றும் சொல்லப்படுகிறது.


    பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார். இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும்.


    மாசி மக திருவிழாவின் பத்தாம் நாளில் இந்த சன்னதியில் பதினெட்டு வகை நடனகாட்சி நடக்கிறது.


    வைகுண்டத்தில்எம்பெருமானின் நாபிக்கமலத்திலிருந்து பிறந்த பிரம்மன் உலகைப் படைக்க துவங்கினார்.


    அதற்கு முன்னதாகவே இந்த உலகில் ஒருநகரம் அமைந்திருந்தது. "நான் உலகைப் படைக்கும் முன் இந்த நகரத்தைப் படைத்தது யார்? எனக்கும் மேலே ஒருவரா? யார் அவர்" என்று பரந்தாமனிடம் கேட்டார்.


    அதற்கு மகாவிஷ்ணு, அந்நகரை ஆதிபகவானான சிவன் உருவாக்கினார். அவர் ஆதிபுரீஸ்வரர் எனப்படுவார். அந்நகரத்தின் பெயர் ஆதிபுரி. திருவொற்றியூர் என்றும் அது அழைக்கப்படும்.


    அந்நகருக்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கிவிட்டு, படைக்கும் தொழிலை தொடர்வாயாக" என்றார் பெருமாள்.


    பிரம்மனும் திருவொற்றியூர் வந்து சிவனை வழிபட்டார்.


    உலகை பிரம்மன் படைப்பதற்கு வசதியாக ஆழி சூழ்ந்த கடல் நீரை ஒத்தி (விலகி) இருக்க சிவன் உத்தரவிட்டார். எனவே இவ்வூர் *ஒத்தியூர்* எனப்பட்டது.


    காலப்போக்கில் *ஒற்றியூர்* என மாறியது.


    *சிறப்பு:*
    இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும்.


    பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்தார்.


    இத்தல ராஜகோபுரத்திற்கு வெளியே ஆதிகுரு தட்சிணாமூர்த்தி வடிவுடையம்மனுக்கு குருவாய் அமர்ந்து உபதேசம் செய்யும் நிலையில் திருவருள்பாலிக்கின்றார்.


    *இராமலிங்கர்:*
    வள்ளலார் ராமலிங்கரை உலகப் புகழ் பெறச் செய்தவள் வடிவுடையம்மன். ராமலிங்கர் தினமும் வடிவுடை அம்மன் கோயிலுக்குச் சென்று பல மணிநேரம் அன்னையை பார்த்துக் கொண்டே இருப்பார்.


    அவருக்கு பக்தியில் இருந்த ஈடுபாடு படிப்பில் இல்லை. ஒருநாள் இரவு கோயிலிலேயே அதிக நேரம் பொழுதைச் செலவிட்டார். நடு இரவில் வீடு வந்து சேர்ந்தார்.


    கதவு சாத்தப்பட்டிருந்தது. ராமலிங்கத்திற்கு நல்ல பசி. இந்த இரவில் கதவை தட்டினால் அண்ணிக்குதானே சிரமம் என்று கருதிய அவர், திண்ணையிலேயே பசியோடு படுத்தார்.


    அப்போது, "ராமலிங்கம் எழுந்திரு, சாப்பிடலாம்" என்று அண்ணி தட்டி எழுப்பி வாழை இலையில் உணவு பரிமாறினாள்.

    சாப்பிட்ட பிறகு அந்த திண்ணையிலேயே மீண்டும் தூங்கிவிட்டார் ராமலிங்கம்.


    சில மணிநேரம் கழித்து யாரோ ராமலிங்கத்தை தட்டி எழுப்ப, விழித்தார்.


    அண்ணிதான் நின்றிருந்தாள். ராமலிங்கம் வெறும் வயிற்றோடு தூங்காதே. வந்து சாப்பிடு. என்றாள்.


    இப்போதுதானே சாப்பாடு போட்டீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை என்றார். இல்லை நான் சாப்பாடு போடவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது என்றாள் அண்ணி.


    அண்ணியாக வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்பதை உணர்ந்தார் ராமலிங்கம்.


    அன்னை தந்த உணவு அவருக்கு பெரும் ஞானத்தையும் தமிழ்ப் புலமையையும் தந்தது.


    ராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது. ஞானசக்தியான வடிவுடையம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர் என்பது நிசர்சனமான உண்மை.


    பாண்டியன் ஆட்சியின்போது தன் கணவருக்கு அநீதியாக தீர்ப்பு வழங்கியதை அறிந்து கோபம் கொண்டு மதுரையை எரித்துவிட்டு, தனக்கு ஏற்பட்ட துன்பத்துக்கு நியாயம் கேட்க மீனாட்சி அம்மன் எங்கு இருக்கிறாள் என்று தேடிக் கொண்டே திருவொற்றியூருக்கு வந்துவிட்டாள் கண்ணகி.


    அங்கு தியாகராஜனான சிவபெருமானும் அம்பிகையும் தாயக்கட்டம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.


    கண்ணகி ஆவேசமாக அம்மனை நோக்கி வருவதை சிவபெருமான் பார்த்தார்.


    மதுரையை எரித்தது போல் காளியின் ரூபமான கண்ணகி இந்த திருவொற்றியூரையும் எரித்துவிடுவாளோ என்ற எண்ணத்தில் ஈசன் சட்டென்று, விளையாடிக் கொண்டிருந்த தாயக்கட்டையை பக்கத்துக் கிணற்றில் கை தவறியதுபோல நழுவவிட்டார்.


    இதைக் கண்ட கண்ணகி ஏதோ எண்ணத்தில் அந்தக் கிணற்றில் குதித்தாள்.


    இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிய தியாகராஜர், அந்த கிணற்றை வட்டமான ஒரு பாறையால் மூடினார்.


    இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் திருவொற்றியூர் வந்த கண்ணகிக்கு வட்டப்பாறை அம்மன் என்று பெயர் வந்தது என்பர்.


    ஒரு சமயம் கம்பர் சதுரானை பண்டிதர் மூலம் ராமாயணம் கேட்ட பிறகு அதை தமிழில் எழுத சிறந்த இடத்தை தேடினார்.


    அப்போது அவர் மனதில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நினைவுக்கு வந்தது.


    அங்கு இருக்கும் வட்டப்பாறை அம்மன் கருவறைக்குச் சென்று ராமாயண காவியத்தை எழுதத் தொடங்கினார்.


    வெளிச்சம் சரியாக இல்லாததால் கம்பரால் எழுத முடியவில்லை. அதனால் *ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே நந்தாது எழுதுதற்கு நள்ளிரவில் பிந்தாமல் பந்தம்பிடி"*என்று பாடினார்.


    இதை கேட்ட காளியும் கம்பரின் பேச்சை தட்டாமல் அவர் ராமாயண காவியம் எழுதி முடிக்கும்வரை கம்பரின் அருகிலேயே தீப்பந்தத்தை பிடித்துக் கொண்டு நின்றாள்.


    *பட்டினத்தார்:*
    பட்டினத்தார் இத்தலத்தை............
    வாவி எல்லாம் தீர்த்தம்.


    மணலெல்லாம் வெண்ணீறு.


    ஈது சிவலோகமென் என்றே மேய்த்தவத்தேவர்


    ஓதுந் திருவொற்றியூர். என்றார்.
    *சம்பந்தர் தேவாரம்:*
    1. விடையவன் விண்ணுமண்ணுந் தொழ நின்றவன் வெண்மழுவாட்
    படையவன் பாய்புலித்தோ லுடை கோவணம் பல்கரந்தைச்
    சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்கவெண்டோ
    டுடையவன் னூனமில்லி யுறை யும்மிட மொற்றியூரே.
    🏾சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன் . விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி , சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .
    2. பாரிடம் பாணிசெய்யப் பறைக் கட்செறு பல்கணப்பேய்
    சீரொடும் பாடலாட லில யஞ்சிதை யாதகொள்கைத்
    தாரிடும் போர்விடையன் றலைவன்றலை யேகலனா
    ஊரிடும் பிச்சைகொள்வா னுறை யும்மிட மொற்றியூரே.
    �பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .
    3. விளிதரு நீருமண்ணும் விசும் போடனல் காலுமாகி
    அளிதரு பேரருளா னர னாகிய வாதிமூர்த்தி
    களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடணிந்த
    ஒளிதரு வெண்பிறையா னுறை யும்மிட மொற்றியூரே. 🏾ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .
    4 அரவமே கச்சதாக வசைத் தானலர் கொன்றையந்தார்
    விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை மார்பனெந்தை
    பரவுவார் பாவமெல்லாம் பறைத் துப்படர் புன்சடைமேல்
    உரவுநீ ரேற்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.
    🏾சிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .
    . விலகினார் வெய்யபாவம் விதி யாலருள் செய்துநல்ல
    பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
    அலகினால் வீசிநீர்கொண் டடி மேலல ரிட்டுமுட்டா
    துலகினா ரேத்தநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.
    🏾கொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ ஆன்மாக்கட்கு , விதிப்படி அருள்செய்து , சிவபெருமான் நல்ல பல வகையான வாத்தியங்களான மொந்தை , தாளம் , தகுணிச்சம் என்னும் ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும் , தாளத் தோடும் எண்தோள் வீசி நின்று ஆட , உலகத்தோர் அவன் திருவடியில் மலர்களைத் தூவி , தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .
    6. கமையொடு நின்றசீரான் கழ லுஞ்சிலம் புமொலிப்பச்
    சுமையொடு மேலும்வைத்தான் விரி கொன்றையுஞ் சோமனையும்
    அமையொடு நீண்டதிண்டோ ளழ காயபொற் றோடிலங்க
    உமையொடுங் கூடிநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.
    🏾பொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான் , தன் திருவடிகளிலுள்ள கழலும் , சிலம்பும் ஒலிக்கச் சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும் , சந்திரனையும் தாங்கிய , நீண்ட வலிமையான தோளழகு உடையவன் . காதில் பொன்னாலாகிய தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .
    7. நன்றியால் வாழ்வதுள்ளம் முல குக்கொரு நன்மையாலே
    கன்றினார் மும்மதிலுங் கரு மால்வரை யேசிலையாப்
    பொன்றினார் வார் சுடலைப் பொடி நீறணிந் தாரழலம்
    பொன்றினா லெய்தபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.
    🏾உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான் , உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும் , பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர் . நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றினை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .
    8. பெற்றியாற் பித்தனொப்பான் பெரு மான்கரு மானுரிதோல்
    சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க் கண்ணுதன் மேல்விளங்கத்
    தெற்றியாற் செற்றரக்கன் னுட லைச்செழு மால்வரைக்கீழ்
    ஒற்றியான் முற்றுமாள்வா னுறை யும்மிட மொற்றியூரே.
    🏾பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான் , செய்கையால் அறிவில் பெரியவனாவான் . கலைமானின் தோலைச் சுற்றி உடுத்தவன் . சுத்தி , சூலம் என்பன ஏந்தியவன் . நெற்றிக்கண் உடையவன் . கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க , அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு தன் காற்பெருவிரலை அழுத்தியவன் . உலகம் முழுவதையும் ஆட் கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .
    9. திருவினார் போதினானுந் திரு மாலுமொர் தெய்வமுன்னித்
    தெரிவினாற் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து
    பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ
    டொருவனாய் நின்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.
    🏾இலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் , திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக் காணவேண்டும் என நினைத்துத் தம் அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர் . சிவபெருமானின் சிவந்த திருவடிகளை மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப் படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .
    10. தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்
    ஆகமச் செல்வனாரை யலர் தூற்றுதல் காரணமாக்
    கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி னேழுலகும்
    ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட மொற்றியூரே.
    🏾நடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப் பெருக்கிச் செல்லும் சமணர்களும் , துவர் ஆடையைப் போர்த்திய புத்தர்களும் , ஆகமம் அருளிய , ஆகம நெறியில் பூசிக்கப்படும் செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால் , கோட்டான் போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள் கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . ஏழுலகும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .
    11. ஒண்பிறை மல்குசென்னி யிறை வன்னுறை யொற்றியூரைச்
    சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
    பண்புனை பாடல்பத்தும் பர விப்பணிந் தேத்தவல்லார்
    விண்புனை மேலுலகம் விருப் பெய்துவர் வீடெளிதே.
    🏾ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் .


    திருச்சிற்றம்பலம்.


    *திருவிழாக்கள்:*
    மகாசிவராத்திரி,
    மார்கழி திருவாதிரை.
    அருகிலுள்ள பாடல் பெற்ற தலம்:*
    திருவலிதாயம்.
    திருவேற்காடு.
    திருவான்மியூர்.
    திருமுல்லைவாயில்.
    திருமயிலை.
    தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *வலிதாயநாதர் திருக்கோயில், திருவலிதாயம். (சென்னை)*
Working...
X