Announcement

Collapse
No announcement yet.

Tiruchengodu arthanareeswarar tenor

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tiruchengodu arthanareeswarar tenor

    *அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்*


    *திருச்செங்கோடு, நாமக்கல்*


    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோட்டின் மலையின் மீது அமைந்துள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற கொங்கு நாட்டுச் சிவத்தலமாகும். அறுபத்திமூன்று நாயன்மார்களில் ஒருவரான விரல்மிண்ட நாயனார் பிறந்த பெருமை பெற்றது இத்தலம். சுமார் 1370 ஆண்டுகளுக்கு முன்னரே மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் கொடிமாடசெங்குன்றூர் என்றும், ரிஷிகள், தேவர்களின் இருப்பிடமாக இருந்ததால் திரு என்ற அடைமொழியையும் சேர்த்து திருக்கொடிமாடச்செங்குன்றூர் என்று அழைக்கபட்டது. மேலும், ஆதிசேஷ பாம்பானது மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தில் மலை செந்நிறம் ஆனதால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவர். இந்த திருக்கொடிமாடச்செங்குன்றூர் காலப்போக்கில் மறுவி திருச்செங்கோடு என்று அழைக்கபடுகிறது.


    *கோவில் வரலாறு*


    முன்னொரு காலத்தில் பிருங்கி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிவ பக்தர். அவர் எப்பொழுது கைலாயம் வந்தாலும் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். பார்வதி தேவியை வழிபடமாட்டார். சிவனும் பார்வதியும் ஒன்றாக இருந்தாலும் அவர் வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என சாபமிட்டார். இதையறிந்த சிவன் பார்வதி தேவிக்கு தன் உடலின் இட பாகத்தை கொடுத்து சரி பாதியாக தேவியை தன்னுடன் இணைத்து சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை என்று அவருக்கு கூறினார். இதன் மூலமாக சிவனும் சக்தியும் ஒன்று தான் என்று உலகிற்கும் உணர்த்தினார். இவ்வாறு சிவனும் சக்தியும் இணைந்து உருவான வடிவம் தான் அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கபட்டது.


    *மலை அமைப்பு*


    திருச்செங்கோட்டில் அமைந்துள்ள மலை சிவலிங்க தோற்றத்துடனும், வடமேற்கில் இருந்து பார்க்கும்போது பசுவின் தோற்றத்துடனும், மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும் போது ஆண் உருவம் படுத்து இருப்பதுபோலவும், தென்மேற்கு பகுதியில் இருந்து பார்க்கும்போது பெண் படுத்திருக்கும் தோற்றமும் அமைந்துள்ளது. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஆதிகேசவபெருமாள் ஆலயம், அருள்மிகு செங்கோட்டுவேலவர் ஆலயம் ஆகிய மும்மூர்த்திகளின் சன்னதிகளையும் தனிதனியாய் இந்த மலையின் மீது ஆலயமாக அமைந்துள்ளது. தென்பகுதியில் கஜமுக பிள்ளையாரும், வடபகுதியில் ஆறுமுக சுவாமி ஆலயமும் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முதல் படியானது தொடங்குகிறது.


    *கோவில் அமைப்பு*


    1200 திருபடிகள் வழியாக சென்றால் முதலில் செங்குந்தர் மண்டபத்தையும், அதனை அடுத்து காளத்திசுவாமிகள் மண்டபம், திருமுடியார் மண்டபம் மற்றும் தைலி மண்டபத்தையையும் அடையலாம். தைலி மண்டபத்தில் மேற்குபுறத்தில் 7 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்ட நந்தி ஒன்று ராஜகோபுரத்தை பார்த்தவண்ணம் உள்ளது. இவ்விடத்தில் 60 அடி நீளத்தில் ஆதிசேடன் ஐந்து தலைகளுடன் மிக பிரமாண்டமாய் அமைந்துள்ளது.


    மலையின் உச்சிக்குக் சென்றவுடன் வடதிசையில் 5 நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. கோவிலின் மதில் சுவர் கிழக்கு மேற்காக 260 அடி நீளமும், வடக்கு தெற்காக 170 அடி நீளமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேற்கு கோபுரம் 3 நிலைகளுடன் காட்சி அளிக்கிறது. வடக்கு கோபுர வாயில் வழியாக நுழைந்து 20 படிகள் கீழிறங்கி வெளிப் பிரகாரத்தை அடையலாம்.


    அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கப்படும் மூலவர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி உள்ளது. படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில், பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது.


    *நாகர் சிலை*


    மலை அடிவாரத்திலிருந்து மலைக்கு மேலே படி வழியாக செல்லும் போது நாம் 60 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாய் ஐந்து தலைகளுடன் அமைந்துள்ள ஆதிசேஷன் உருவத்தை காணலாம். பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்த நாகர் உருவமே நாகர்மலையின் முதலிடம் ஆகும். இந்த நாகருக்கு மக்கள் குங்குமம் தூவி, தீப ஆராதணை செய்து வழிபடுகின்றனர். ராகுதோஷம், நாகதோஷம், காலசர்பதோஷம், களத்திரதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். முன்னர் மக்கள் படி வழியாக சென்று நாகதெய்வத்தை வழிபட்டனர்.


    *செங்கோட்டுவேலவர் சன்னதி*


    முருகன் திருக்கைலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் கோபம் கொண்டு பழனிக்கு வந்தார். அதன்பின் அங்கிருந்து இத்தலத்திற்கு வந்து செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் காட்சி தருகிறார். முருகன் இத்தலத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாதவண்ணம் வலது கரத்தில் சக்தி வேலாயுதத்தையும் இடது கரத்தில் சேவலையும் எடுத்து இடுப்பில் அனைத்த வண்ணம் கம்பீரமாக காட்சி தருகிறார். இங்கு செங்கோட்டுவேலவருக்கு தனி சன்னதியும் உள்ளது. இந்தக் கோவிலில் வடக்குப் பிரகாரத்திலுள்ள கிழக்கு நோக்கி அமைந்த செங்கோட்டு வேலவர் சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இவருக்கு அபிஷேகத்துடன் முதல் பூஜை நடக்கிறது.


    *அர்த்தநாரீஸ்வரர் சன்னதி*


    மூலவர் அர்த்தநாரீஸ்வரர் சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து, பூர்ண சந்திரன் சூடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன், சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும், இடப்புறம் சேலையும் அணிவிப்பர். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது.


    *கோவில் சிற்ப கலைகள்*


    அர்த்தனாரீஸ்வரர் திருக்கோயில் சிறந்த சிற்ப்பகலைக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. இங்குள்ள கற்சிலைகளும், சிற்ப்பங்களும், பெரும்பாலும் சேர, சோழ, பாண்டியர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. இக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலும், தூண்களிலும் வடிக்கப்பட்டுள்ள அழகிய சிற்ப்ப வேலைபாடுகளும் மற்றும் கோயிலை சுற்றி அமைந்துள்ள அற்ப்புதமான கற்சிலைகளும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும்வண்ணம் அமைந்துள்ளன.


    விமானத்தில் (மேற்கூறையில்) எட்டு கிளிகள் எட்டு திக்கும் தலைகீழாக இருப்பது போல் ஒரே கல்லினால் கண்கொள்ளா காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவே அமைந்துள்ள கல்லினால் ஆன தேங்காயை சுற்றினால் அது சுற்றும் வகையில் மிகவும் அழகிய கலைநுட்பத்துடனும், மிகுந்த அறிவுதிறனுடனும் அமைக்கப்பட்டுள்ளது.


    வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும். குறவர் நடனகலையும், சிலந்தியை தேள் கவ்வுவது போல் அமைந்துள்ள சிலை வடிவத்தையும் கலைக்கண்ணோட்டத்தோடு நோக்கின் அதன் பெருமையை அறியலாம். அர்த்தநாரீஸ்வரர் நேரெதிர் உள்ள நிறுத்த மண்டபத்தில் அமைந்த தூண்களில் காளி, ரதிமன்மதன், போன்ற சிற்ப்பங்கள் மிகவும் கலை நுணுக்கத்துடன் அமைந்துள்ளன.


    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், தமிழக சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த உறைவிடமாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் குதிரை அல்லது யாளி மீது உள்ள வீரர்களைத் தாங்கிய சுமார் 30 ஒற்றைக் கற்றூண்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை.


    *சிறப்பம்சங்கள்*


    ★ இங்கு சிவனும் பார்வதியும் சேர்ந்து அர்த்தநாரீஸ்வரராக உள்ளார்.


    *அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் பரிகாரஸ்தலம்*


    கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபடலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.


    *அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் விசேஷ நாட்கள்*


    சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம் சிறப்பாக நடைபெறும்.


    *அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் செல்லும் வழி*


    நாமக்கலில் இருந்து 30கி.மீ ஈரோட்டில் இருந்து 18கி.மீ தூரத்தில் திருச்செங்கோடு உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து 1கி.மீ தூரத்தில் கோயில் அமைந்துள்ளது.


    *தொலைப்பேசி எண்*


    +91 4288 255 925, 93642 29181
Working...
X